> குருத்து

July 15, 2010

வாங்கப்படாத பிறந்த நாள் கேக்!


மதியம் 2 மணி.நல்ல பசி. அலுவல் வேலை தொடர்பான பயணத்தில் இருந்தேன்.கையில் சாப்பாடு இருந்தாலும், சாப்பிட முடியாது. இன்னும் சாப்பிட ஒருமணி நேரமாவது ஆகும். தற்காலிகமாக பசியை அடக்க வேண்டுமே! என யோசித்த பொழுது... ஒரு பேக்கரி கண்ணில்பட்டது. உள்ளே நுழைந்து.. ஷோகேசில் வரிசையாக இருந்த அயிட்டங்களை நோட்டம் பார்த்த பொழுது.. இரண்டு நாளைக்கு முந்திய (13/07/2010) தேதியிட்ட ஒரு பிறந்த நாள் கேக் தென்பட்டது. பிறந்த நாள் வாழ்த்துடன், 'சுஜிதா' என பெயர் எழுதியிருந்தது. அன்று முழுவதும் அந்த கேக்கும், கேக்குரிய குழந்தையைப் பற்றிய நினைவுகளும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.

ஆர்டர் கொடுத்த கேக்கை ஏன் வாங்கவில்லை? அந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்குமோ? நான் பார்த்திருந்த பிறந்த நாள் கேக்குகளிலேயே அளவில் ஆக சிறியதாக இருந்தது. அங்கிருந்த மற்ற கேக்குகளை விடவும் சிறியதாக இருந்தது. ஆகையால், அது வசதியில்லாத ஒரு தொழிலாளி வீட்டுக் குழந்தையுடையதாக இருக்க நிறைய வாய்ப்புண்டு.நம்முடைய இந்த மோசமான வாழ்க்கை சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை தானா என பெற்றோர்களிடையே சண்டை வந்திருக்குமோ? அல்லது கொண்டாடுவதற்காக ஏதும் பணம் எதிர்ப்பார்த்து... வராமல் போயிருக்குமா?

சென்னைக்கு வந்த புதிதில்... என் நண்பர் ஒருவர் "தன் உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் சும்மா தானே இருக்கிறாய்! வா போய் வரலாம்" என அழைத்தார். நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொள்கிற எளிமையான பிறந்தநாள் நிகழ்வாக இருக்கும் என நினைத்து தான் போனேன்.

ஒரு தரமான ஹோட்டலில் வண்டியை நிறுத்தும் பொழுது கேட்டேன். "இங்க என்ன?" "வா இங்க தான் நிகழ்ச்சியே!" என்றான். திருமணமே நடத்துவதற்கான விசாலமான அறையாக இருந்தது. அந்த ஹாலில் 125 லிருந்து 150 பேர் வரை கூடியிருந்தார்கள். அறை நிறைய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வருவதற்கான முஸ்தீபுகளுடன் அங்கு வந்திருந்தவர்கள் இருந்தார்கள். ஆளுக்கொரு கனமான பரிசு பொருளுடன் இருந்தார்கள். ஒரு வயது குழந்தை என்பதால்.. ஒரு விளையாட்டு பொருளை வாங்கி கையில் வைத்திருந்தேன். அந்த கூட்டத்திலேயே என்னுடைய பரிசு தான் ஆக சிறியதாக இருந்தது.

சாப்பாடு தடபுடல் தான். பபே சிஸ்டம். விசாரித்தால்.. ஒரு சாப்பாடு ரூ. 125/ யாம். வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குத்துமதிப்பாக 125 என எண்ணிக்கை வைத்துக்கொண்டால் கூட...ரூ. 16000/- ஆகிவிடும். இந்த பணம் இருந்தால்.. எங்க பகுதியில் மூன்று வகை கூட்டு, பொரியலுடன், 600 பேருக்கு சாப்பாடு போட்டு ஒரு கல்யாணத்தையே முடித்துவிடலாமே என எண்ணினேன்.

இப்படி அப்பாவித்தனமாய் (!) நினைப்பதற்கு நான் வளர்ந்த வந்த பின்னணியும் ஒரு காரணம். நான் தென் தமிழகத்தில் ஒரு முக்கிய நகரம் சார்ந்தவன். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழும் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு எந்த தொழிலாளி வீட்டிலும் எந்த குழந்தைக்கும் பிறந்த நாள் கொண்டாடி பார்த்தது இல்லை. கேள்விப்பட்டது கூட இல்லை. கேக் என்பது கூட அவர்கள் வாழ்வில் எங்கும், எப்பொழுதும் கடந்து சென்றது இல்லை. அந்த பகுதியில் ஒரு பேக்கரி கூட கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் தேநீர் கடைகள் உண்டு. அங்கு வடை சுடுவார்கள். ஆமை (கடலைப்பருப்பில் செய்யும் ) வடை என்போம். தொழிலாளர்கள் ஒரு வடை சாப்பிட்டு, தேநீர் குடித்தால்.. வேலை நேரத்தில் இரண்டு மணி நேரத்தை எளிதாக கடந்துவிடுவார்கள். மெது(உளுந்த)வடை குறைவாக தான் சுடுவார்கள். பக்கத்து ஏரியா நடுத்தர மக்கள் வாழும் பகுதி. அங்கு நண்பனை பார்க்கும் பொழுது, அங்குள்ள தேநீர் கடைகளில் கவனித்திருக்கிறேன். அங்கு ஆமை வடை குறைவு. மெதுவடை அதிகமாக சுடுவார்கள். வடையில் கூட வர்க்கம் இருக்கத்தான் செய்கிறது.

அங்குள்ள குழந்தைகள் பிறந்த நாள் கேக் எல்லாம், படங்களில் பார்த்தது தான். அங்கு வாழும் யாருக்கும் பிறந்த நாள் என்பதே மறந்து போன ஒன்று. வயது கேட்டால் கூட... குத்துமதிப்பாக தான் சொல்வார்கள். அங்கு வாழும் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் வாழ்வே சிரமமாய் நகரும்பொழுது, பிறந்த நாள் ஏது? கொண்டாட்டம் ஏது? வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்த கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.

கடைசியாய் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் பகுதியில் பேக்கரி ஒன்றைப் பார்த்தேன். காரணம் அவலமானது. எங்கள் பகுதியில் இருந்த லட்சகணக்கான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தொழில் நசிந்து போனதால்.. கரூர், ஈரோடு, வெள்ளக்கோவில், சென்னிமலை என இடம் பெயர்ந்துவிட்டார்கள். இப்பொழுது எங்கள் பகுதி, நடுத்தர மக்களும், கந்துவட்டிக்காரர்களும் வாழும் பகுதியாகிவிட்டது. வசதியுள்ளவர்கள் வந்துவிட்டதால், பேக்கரியும் வந்துவிட்டது.

இப்படி பல லட்சகணக்கான மக்கள் பிறந்ததற்காக வாழ்ந்து தொலைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் தான், பிரமாண்டமான பிறந்த நாள் கொண்டாட்டங்களும், மிக ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிகளும் எந்தவித கூச்சமும், அருவருப்பும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.

பின்னலாடை நகரில் பெருகி வரும் தற்கொலைகள்!

திருப்பூர் : பின்னலாடை உற்பத்தியின் மூலம் அன்னியச் செலாவணியை அதிகளவில் ஈட்டி வரும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தற்போது தற்கொலைகள் பெருகி வருகின்றன.

கடன் தொல்லை, குடும்ப உறவுகளில் விரிசல், கலாசார சீரழிவுகளால் அதிகரித்து வரும் இத் தற்கொலைகளை தடுக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

÷ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி, உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி என பின்னலாடை உற்பத்தி தொழில் மூலம் பெருமளவில் வருவாயைக் குவித்து வரும் திருப்பூர் மாவட்டம் தற்கொலைகளிலும் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் 491 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 307, பெண்கள் 165, மாணவியர் 13, மாணவர்கள் 8 பேர் அடங்குவர்.

சராசரியாக 50 தற்கொலைகள்...: இதேபோல், நடப்பாண்டில் கடந்த ஜூன் வரையிலும் 302 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 183, பெண்கள் 99, மாணவிகள் 14, மாணவர்கள் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி, சராசரியாக மாதம் 40 முதல் 50 தற்கொலைகள் நடைபெறுகின்றன. இது போன்று தற்கொலை செய்யவர்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும், குறிப்பாக ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் மாவட்ட காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ÷மேலும், இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்கள் தூக்கு போடுதல், விஷம் குடித்தல், சாணிப்பவுடர் உள்ளிட்டவற்றையே அதிகளவில் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

÷இதுபோன்ற தற்கொலைகளுக்கான காரணம் குறித்து சேவ் தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஆ.அலோசியஸ் கூறுகையில், தொழில் வளமுள்ள இம்மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வந்து கொண்டுள்ளன. அதில், குறிப்பிடும்படியாக தென் மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமப்புற குடும்பத்தினரே அதிகம்.

கந்து வட்டிக் கொடுமை...: அவ்வாறு, திருப்பூர் நிறுவனங்களில் அவர்கள் இரவு, பகலாக உழைத்துச் சம்பாதித்தாலும் ஈடுகட்டமுடியாத செலவுகளும் இங்கே உள்ளன. ஏற்கெனவே, பல்வேறு கடன் சுமைகளில் திருப்பூர் வந்து வேலை பார்க்கும் அவர்களால் இந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் தோல்வி நிலையை அடைகின்றனர். இதன் விளைவு கந்து வட்டிக் கொடுமை, குடும்பத்தில் விரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி இறுதியில் தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.

÷இது போன்ற தற்கொலைகளை தடுக்க திருப்பூரில் நிரந்தரமாக மனநல ஆலோசனை மையங்கள் துவங்கி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர, அயல்நாடுகளில் உள்ளதுபோல் ஹெலப் லைன் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தி தற்கொலை நிலையில் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கலாம் என்றார்.

அதிகரிக்கும் கள்ளத் தொடர்புகள்...: பெருகி வரும் தற்கொலைகள் குறித்து ஆராய மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

÷இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் மேற்கொண்ட ஆய்வில், பெருகியுள்ள கள்ளத் தொடர்புகள், வறுமை, குடும்ப

உறுப்பினர்களிடையே விட்டுப்போன அன்பு பறிமாற்றம் போன்றவையே தற்கொலைகள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தை குறைக்க...: தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க காவல்துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டன. அம்முகாம்கள் கடந்த பல மாதங்களாக நடத்தப்படுவதில்லை. இப்பிரச்னையின் வீரியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் தற்கொலைகள் தடுப்பு மனநல ஆலோசனை மையங்கள் துவக்கி செயல்படுத்த வேண்டும்.

÷தவிர, தொழிலாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை நல்வழியில் செலவிட்டு மனஅமைதியை ஏற்படுத்திக்கொள்ள திருப்பூர் மாவட்டத்தில்

ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களை கூடுதலாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்பது சமூகநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

நன்றி : என். தமிழ்ச்செல்வன், தினமணி, 13/07/2010

பின்குறிப்பு : கோடிக்கணக்கில் அந்நிய செலாவணி ஈட்டும் திருப்பூரில் தொழிலாளர்கள் தற்கொலையில் சாகிறார்கள் என்றால்.. வலுவான காரணம் இருக்கத்தான் வேண்டும்.

7,8 ஆண்டுகளுக்கு முன்பே, திருப்பூரில் சில காலம் தங்கி இருக்கிறேன். அங்கு உள்ள விலைவாசி பெருநகர சென்னைக்கு ஈடானது. வாடகையும் கூட அப்படித்தான். இப்பொழுது உள்ள விலைவாசி உயர்வு பிரச்சனையில், அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

தமிழகம் தழுவிய அளவில் தலைநகரம் சென்னைக்கு வேலை இல்லாமல் இடம்பெயர்கிறார்கள் என்றால், தென்தமிழக அடித்தட்டு மக்களுக்கு திருப்பூர் தான் கதி.

அங்கு ஒரு சிப்ட் என்பதே 12 மணி நேரம் தான். மற்றபடி கூடுதல் வேலை செய்தால் தான், வாழ்க்கையை ஒட்ட முடியும். தொழிலாளர்கள் இருக்கும் பகுதி என்றாலே, கந்து வட்டி கும்பலும் நிச்சயம் இருக்கும். தொழிலாளர்களின் நெருக்கடியான வாழக்கையில், அவசரத்திற்கு பணம் தருவது. பிறகு, அநியாய வட்டி வாங்குவது என தொடர்வார்கள். கந்து வட்டி கும்பலுக்கு, அனைத்து கட்சி பிரமுகர்கள், போலீஸ் எல்லாம் உடந்தை தான்.

பிரச்சனைக்கு தீர்வு என்பது தினமணி செய்தி சொல்வது போல, ஆலோசனை, ஹெல்ப்லைன் தீர்வாகாது. அதெல்லாம் வெறும் கண்துடைப்பு. தொழிலாளர்கள் சங்கமாய் ஒன்றுப்பட்டு தங்கள் சகல பிரச்சனைகளுக்காகவும் போராடாமல், இந்த தற்கொலைகளை தடுக்க முடியாது. எங்கள் பகுதி நெசவு தொழிலாளர்கள் பகுதி தான். எப்பொழுதெல்லாம், புரட்சிகர அமைப்புகள் பகுதியில் வலுவாக இருந்தனவோ, அப்பொழுதெல்லாம் கந்துவட்டி பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறைவாக இருந்தன.

அங்கு இயங்கும் கழக, போலி கம்யூனிச தொழிற்சங்கங்கள் தொழிலாளர் பிரச்சனைகளை தீர்த்துவிடாது. தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நேர்மையாக போராடக்கூடிய ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தான் அதற்கு ஒரே தீர்வு.

July 13, 2010

மானம் என்ற பெயரில்...

ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்' என்று பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் இந்தக் கணினி யுகத்திலும்கூட மானப் படுகொலைகள் நடக்கிறது என்பது வேதனையான உண்மை.

பாகிஸ்தானில் மிக அதிக அளவில் இந்த மானப் படுகொலை நடைபெறுகிறது. சில ஆயிரம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், இந்தியாவில் அது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் படுகொலைகளில் தெரியவந்துள்ளது.

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதற்காக கொலை செய்யப்பட்டனர். வேறுஜாதியைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண், ஊர் பஞ்சாயத்து உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாள் என்று செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் வடஇந்தியாவில் சுமார் 900 பேரும், தென்னிந்தியாவில் 100 பேரும் குடும்ப மானத்தைக் காரணம்காட்டி கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த மானப் படுகொலையில் பலியாவது 90 விழுக்காடு பெண்கள் மட்டுமே.

இத்தகைய கொலைகள் அண்மையில் பரவலாகவும் அதிக எண்ணிக்கையிலும் நடக்கத் தொடங்கி, அவை பத்திரிகைகளிலும் வெளியாகி வருவதால், இதைத் தடுக்க எத்தகைய சட்டத் திருத்தம் கொண்டு வரலாம் என்பதைப் பரிந்துரைக்க அமைச்சர்கள் குழுவை நியமித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

மானப் படுகொலை என்பது பாகிஸ்தானில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட, தண்டனையில்லாத குற்றமாக இருந்து, தற்போது குறைந்த தண்டனைக்குரிய குற்றமாகத்தான் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஜோர்தான் நாட்டில் இப்போதும்கூட, தன் மனைவியின் கள்ளத்தொடர்பின் காரணமாக கொன்றதாக நிரூபித்தால் தண்டனை கிடையாது. இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பெண்கள் அமைப்பு போராடியும் பயனில்லை. கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து, அவனை மனைவி கொன்றால் மன்னிப்பீர்களா என்ற வாதத்தையும்கூட முன்வைத்தனர். ஜோர்தான் அரசு கொஞ்சம் கூட மாறவில்லை. சிரியா நாட்டில், இத்தகைய மானப் படுகொலைக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

மானப் படுகொலைகளை பொருள்படுத்தாத நிலைமை பிரேஸில் நாட்டில் 1991 வரையிலும், கொலம்பியாவில் 1980 வரையிலும் இருந்தது. ஆனால் நாகரிகம் வளர்ந்ததும், இந்த மானப் படுகொலைகளை வெறும் கொலையாகவே கருதி தண்டனை வழங்கத் தொடங்கி விட்டனர்.

இந்தியாவில் ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் இத்தகைய மானப் படுகொலைகள் ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் நடத்தப்படுகிறது. இது சட்டப்படி கொலை என்று தெரிந்தாலும், புகார் அளிக்கவும், சாட்சி சொல்லவும் அந்த ஊர் மக்கள் முன்வராதபோது இதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையால் முடிவதில்லை என்பதுதான் அரசு இதுநாள் வரையிலும் பொதுவாகக் கூறிவந்த பதில்.

மானப் படுகொலை என்று புகார் வருமேயானால், அதில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அக்கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான குடும்பம் அல்லது ஊர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது என்கிறபடியாக சாட்சிகள் சட்டத்தைத் திருத்தி அமைத்தால் இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று அமைச்சர்கள் குழு கருதுகிறது. அந்த வகையில் முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது இந்தியாவில் நடைபெறும் மானப் படுகொலைகள் பலவும் குடும்பத்தினருக்கோ அல்லது ஊர் பஞ்சாயத்துக்கோ உடன்பாடில்லாத கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் காரணமாகத்தான் நடைபெறுகிறது. இந்தத் திருமணங்கள் பெரும்பாலும், ஊரைவிட்டு வெளியேறிப்போய் செய்துகொள்ளும் திருமணங்களாகவும் சட்டப்படி பதிவு செய்யப்படாத திருமணங்களாகவும் இருப்பதால், இவர்கள் ஜாதிக் கட்டுப்பாடு அல்லது குடும்ப விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்துகொண்டார்கள் என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில், இந்தச் சட்டத் திருத்தமும்கூட எதிர்பார்க்கும் பயனைத் தருமா என்கிற தயக்கம் இருக்கிறது.

இத்தகைய வழக்கில், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளியைச் சார்ந்தது என்று திருத்தம் செய்வதுடன் திருமணப் பதிவுச் சட்டத்திலும் சில திருத்தங்களைச் செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்), கலப்புத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணும் பெண்ணும் 30 நாள்களுக்கு முன்பாக பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறது. இதனை மாற்ற வேண்டும். ஒன்று இந்த நாள்களின் எண்ணிக்கையை சில தினங்களாகக் குறைக்க வேண்டும். அல்லது திருமணப் பதிவு செய்திருந்த நிலையில் கொல்லப்பட்டாலும் அதனை மானப் படுகொலையாகக் கருதி வழக்குப் பதிவு செய்ய வகை செய்ய வேண்டும்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்று பதிவு செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில், "ஏதோ ஒரு ஆத்திரத்தில், கொலை செய்யும் நோக்கமில்லாமல் தாக்கியதில் மனைவி இறந்தார்' என்பதாக குறைந்த ஆண்டுகளே சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்று கொலை செய்தாலும் மானப் படுகொலையாகவே பதிவு செய்து, வழக்கை நடத்த வேண்டும்.

ஒருபுறம் உலகமயம், மேலைநாட்டு மோகம் என்கிற பெயரில் ஒழுக்கக்கேடான இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறத்தில், கற்கால மனிதர்களிடமும் கல்வி அறிவேயில்லாத அநாகரிக சமுதாயத்திலும் மட்டுமே காணப்படும் மானப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடையாளங்கள் பங்குச்சந்தையும் இரண்டு இலக்க வளர்ச்சி விழுக்காடும் அல்ல, பகுத்தறிவும் அடிப்படை மனித தர்மமும் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை நெறியே. மானப் படுகொலைகள் என்பது தேசிய அவமானம்!

நன்றி : தினமணி தலையங்கம்....14/07/2010

பின்குறிப்பு :
// "தற்போதைய சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்), கலப்புத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணும் பெண்ணும் 30 நாள்களுக்கு முன்பாக பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறது."//

தற்பொழுது தமிழக அரசு அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வது அவசியம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதனால், சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டியவர்களும் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே திருமணத்தை பதிவு செய்யலாம். ஆனால், திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்வது அவசியம்.

கூடுதலாக ஒரு கொசுறு தகவல் : சமீபத்தில் ஒரு நண்பரின் பதிவு திருமணத்திற்காக பத்திர அலுவலகத்திற்கு விசாரிக்க சென்றிருந்தேன். அங்கு காத்திருந்த வேளையில்.. நான்கைந்து ஜோடியினர் சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்களை புகைப்படங்களோடு ஒட்டி வைத்திருந்தார்கள். அத்துடன் ஒரு கடிதமும் ஒட்டியிருந்தார்கள்.

கடிதத்தின் சாரம் இதுதான் :

எங்களுடைய நன்றாக படித்த பெண்ணை, படிக்காத ஒரு டிரைவர் ஒருவன் உடன் அழைத்து சென்றுவிட்டான். அவர்கள் திருமணம் முடித்தால்... அந்த பெண் வாழ்க்கை வீணாக போய்விடும். ஆகையால், பதிவு செய்ய வந்தால்...பதிவு செய்யாமல்.. எங்களுக்கு தெரிவியுங்கள் என பெயர், ஊர் என பல தகவல்களுடன் இருந்தது. அந்த கடிதம் மிகுந்த கோபத்துடனும், வன்மத்துடனும் இருந்தது. கூடுதலாக, சார் பதிவாளர் ஒப்புகையுடன், அரசு முத்திரையும் இருந்தது. தமிழகத்தின் எல்லா பதிவு அலுவலங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும். இதற்கும் அரசே ஊக்குவிக்கிறது.