> குருத்து: அனுபவம்
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

July 15, 2026

"கடந்த கால அனுபவங்கள்…!"

 


மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு இளம் தொழில் முனைவோர் சந்தித்தார். முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனால், அவர் சொன்ன அனுபவங்களைக் கேட்டதும், "தொழில் தொடங்குவது எளிது; தவறுகளைச் சரிசெய்வதே பெரிய தொழில்!" என்று தோன்றியது.

 

"ஆர்கானிக் பொருட்களை வாங்கி, இயந்திரத்தில் அரைத்து, அழகாக டப்பாவில் அடைத்து விற்கலாம் என்று நினைத்தோம். அதற்காக முதலில் ஸ்டிக்கர் அச்சிட வேண்டும். ஸ்டிக்கரில் GSTIN இருக்க வேண்டும். அதனால் அவசரமாக GST பதிவு வாங்கிவிட்டோம்.

 

பிறகுதான் கணக்கு போட ஆரம்பித்தோம்.

ஆர்கானிக் பொருட்களின் விலை...

இயந்திரங்கள்...

சோலார் ட்ரையர்...

தொழிலாளர்கள்...

பேக்கிங்...

சந்தைப்படுத்தல்...

எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், லாபம் மட்டும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு 'என்னைத் தேடிப் பாருங்கள்!' என்று விளையாடிக் கொண்டிருந்தது.

'இந்த தொழில் வேண்டாம்!' என்று முடிவு செய்து விட்டோம்.

 

அதுவரை நான்கு, ஐந்து மாதங்கள் Nil Return மட்டும் தாக்கல் செய்து வந்தோம். 'சரி... GST-யை சரண்டர் செய்து விடலாம்' என்று விண்ணப்பித்தோம்.

 

அங்குதான் கதை இரண்டாம் பாகம் ஆரம்பித்தது.

 

'ஆறு மாதமாக என்ன செய்தீர்கள்? வங்கி கணக்கு கொண்டு வாருங்கள்... ஆவணங்கள் கொண்டு வாருங்கள்...' என்றார்கள். இரண்டு முறை அலுவலகத்திற்குப் போனேன்.  இரண்டு முறையும் Assistant Commissioner மட்டும் இல்லை!

 

நான் போகும் நேரத்தைப் பார்த்து அவருக்கே வேறு வேலை வந்ததோ என்னவோ!" அதற்குள் வாழ்க்கை இன்னொரு திருப்பம் கொடுத்தது.

 

"₹35 லட்சம் கடன் வாங்கலாம் என்று வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அங்கிருந்தே ஒரு வரி ஆலோசகரை தொலைபேசியில் பேச வைத்தேன். அவர் சொன்னது ஒன்று.. ஆலோசகர் புரிந்துகொண்டது ஒன்று...

 

இறுதியில், வருட வருமானம் ₹4,90,000 என்று Income Tax Return தாக்கல் செய்து விட்டார்கள். அந்த ரிட்டனை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போனால்...

'இந்த வருமானத்தை வைத்து இந்தக் கடன் தர முடியாது!' என்று ஒரே வரியில் தீர்ப்பு."

 

இதற்குப் பிறகாவது அமைதி வந்ததா?

எங்கே...

"எனக்குத் தெரிந்த வேலை Civil Contract தான். எங்கு டெண்டர் கேட்டாலும், 'GST இருக்கிறதா?' என்பதே முதல் கேள்வி.

 

சரி... மீண்டும் புதிய GST பதிவு வாங்கலாம் என்று நினைத்தோம்.

வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளர் பெயரில். மின்சார ரசீது அவருடைய துணைவியார் பெயரில். இரண்டையும் ஆலோசகரிடம் கொடுத்தேன்.

 

அவரும் அப்படியே பதிவேற்றிவிட்டார். இப்போது Portal-க்கு சந்தேகம். 'இரண்டு பெயரும் ஏன் வேறு?' என்று விளக்கம் கேட்டிருக்கிறார்கள்."

 

அதுமட்டுமல்ல...

"ஏற்கனவே ஒரு GST பதிவு சரண்டர் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. முதலில் அதை முறையாக முடித்து, இறுதி ரிட்டன் எல்லாம் தாக்கல் செய்து வாருங்கள். அதற்குப் பிறகுதான் இதைப் பார்க்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்."

 

அவர் பேசிப் முடித்ததும் நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

 

ஏனென்றால், தொழிலில் ஏற்பட்ட இழப்பை விட, தவறான ஆலோசனைகளால் ஏற்பட்ட சுற்றுலாப் பயணங்கள்தான் அவரை அதிகம் சோர்வடையச் செய்திருந்தன.

 

இறுதியில், அவர் எங்களிடம் வந்தார். ஒவ்வொரு முடிச்சாக இருந்த பிரச்சினையையும் அவிழ்த்தோம். எந்த விண்ணப்பம் எப்படி முடிக்க வேண்டும்... எந்த ஆவணம் திருத்தப்பட வேண்டும்... எந்த பதிவு முதலில் நிறைவு பெற வேண்டும்... எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி சரி செய்து கொடுத்தோம்.

அவர் கிளம்பும்போது சொன்ன ஒரு வரி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.

 

"சார்... தொழில் தொடங்குவது கஷ்டமில்லை. சரியான ஆலோசகரை முதல் நாளிலேயே தேர்ந்தெடுப்பதுதான் பெரிய முதலீடு போலிருக்கிறது!"

 

-          இரா. முனியசாமி

May 27, 2026

நீச்சல் நல்லது!

 


வீட்டின் அருகே ஒரு நீச்சல் பயிற்சி பள்ளி இருக்கிறது. இலக்கியா பள்ளி படிக்கும் பொழுது, சேர்த்துவிடவேண்டும் என்ற விருப்பத்தில்… போய் விசாரிக்கும் பொழுது, சமீபத்தில் ஒரு குழந்தை இறந்து போன தகவலை கேட்டேன். அப்படியே பின்வாங்கிவிட்டேன்.

 

இன்று அதே நீச்சல் பள்ளிக்கு போயிருந்தேன்.  50 பேருக்கும் மேலாக பரபரவென இருந்தது. அலுவலகத்தில் விசாரித்தால்… 15 நாட்களுக்கு ரூ. 5500.  15 நாட்களில் கற்றுக்கொள்ளமுடியுமா? என்றேன்.  பெண்களுக்கான பெண் கோச் இருக்கிறார்.  நிச்சயம் முடியும் என நம்பிக்கையளித்தார்.

 

காலையில் ஆறு முதல் 9 மணி வரை.  மாலை 3 முதல் 6வரை.  ஆறு மணி நேரத்திற்குள் ஒரு மணி நேரம் வரலாம் என்றார்கள்.   திங்கள் மட்டும் விடுமுறை. பணம் கட்டியாச்சு. நாளையில் இருந்து பயிற்சிக்கு இலக்கியா செல்லவேண்டியது தான்.

 

நீச்சலுக்குரிய உடை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றார்கள்.  டெக்கத்லான் போய் வாங்கவேண்டும். அதுவும் அருகிலேயே இருக்கிறது.

 

நானெல்லாம் கண்மாய், வைகை ஆறு, பச்சைக் கிணறு, கால்வாய் என நல்ல நீரிலேயே குளித்து வளர்ந்த ஆள். ஆகையால் நீச்சல் குளம் கொஞ்சம் ஒவ்வாமை தான். அதன் உப்பு நீரும். கண் எரியும் குளோரினும்!  நாம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏகாட்டூரில் நன்னீர் நீச்சல் குளத்தில் நிறைய நேரம் குளித்தது நினைவுக்கு வருகிறது.

 


உடற்பயிற்சிகளிலேயே நல்ல பயிற்சி மொத்த உடம்புக்கும் நல்லது நீச்சல் என்பார்கள்.  இந்த வெயில் காலத்தில் குளத்தில் கிடந்தால் சுகமாக தான் இருக்கும்.  என்னை மாதிரி நீச்சல் தெரிந்தவர்களுக்கு, என்ன நேரம் என்றால், காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும் என்கிறார்கள். நீயெல்லாம் வந்தா என்ன? வராமல் இருந்தால் என்ன? என்கிற மாதிரி ஒரு நேரத்தை நியமித்திருக்கிறார்கள்.  சோகம்.

 

நீச்சல் ரெம்ப நல்லது. குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.  நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.

 

-         இரா. முனியசாமி

 

 

October 24, 2025

சமகால பணியிட சவால்கள்: வரி ஆலோசகர்களும், தணிக்கையாளர்களும் புதிய தலைமுறையை (Gen-Z) கையாள்வது எப்படி?


பணியிடங்கள் விரைவாக மாற்றமடைந்து வருகின்றன. மனிதர்களின் எதிர்பார்ப்புகளும், மதிப்பீடுகளும் தொடர்ந்து உருமாற்றம் கொள்கின்றன. இருப்பினும், பணியிடங்களில் எதிர்பார்க்கப்படும் அடிப்படைத் தேவைகளான பொறுப்புணர்வு, நேரக் கடைப்பிடிப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை இன்னும் அப்படியே இருந்து வருகின்றன. இந்த முரண்பாட்டில்தான் உண்மையான சவால் தொடங்குகிறது.

 

பழைய தலைமுறைகளைச் சேர்ந்த 40, 50 அல்லது 60 வயதுடையவர்களுக்கு வேலை என்பது ஒரு கடமையாகவும், கட்டாயமான பொறுப்பாகவும் தோன்றுகிறது. அவர்களின் மனதில் சுயமரியாதை என்பது தங்கள் செயல்களின் மூலம் உருவாகும் ஒன்று. "இதைச் செய்ய வேண்டும்" என்ற உள்ளார்ந்த உந்துதல் அவர்களை இயக்குகிறது. ஆனால், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த Gen-Z தலைமுறைக்கு வேலை என்பது வெறும் கடமை அல்ல; அது *தங்களின் உள்ளார்ந்த திருப்தி, மரியாதை மற்றும் தனிப்பட்ட விருப்பத்துடன் இணைந்திருக்க வேண்டும். அவர்களின் மனதில் சுயமரியாதை என்பது வெளியிலிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தால் உருவாகும். இந்த அடிப்படை வேறுபாட்டிலிருந்தே பணியிடங்களில் உரசல்கள் தொடங்குகின்றன.*

 

*ஏன் இந்தப் புதிய தலைமுறையை கையாள்வது இவ்வளவு சவாலாக இருக்கிறது?*

 

இதற்கு ஆழமான சமூக, உளவியல் பின்னணி உண்டு. முந்தைய தலைமுறைகள் கடினமான வாழ்க்கைச் சூழல்களில் வளர்ந்தனர்; போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவர்களை ஒழுக்கமும், உழைப்பும் கொண்டவர்களாக வடிவமைத்தன.

ஆனால், Gen-Z தலைமுறை பாதுகாப்பான, தொழில்நுட்பம் நிரம்பிய சூழலில் வளர்ந்தது. இதனால், அவர்கள் வாழ்க்கையை "உணர்ந்து தேர்வு செய்வது" என்பதை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இதை Dr. Jean Twenge தனது "Generations" (2023) நூலில் தெளிவாக விளக்குகிறார்: "முந்தைய தலைமுறையின் வாழ்க்கை கடினமாக இருந்தது; அதனால் ஒழுக்கம் அவர்களுக்கு இயல்பாக வந்தது. ஆனால் புதிய தலைமுறை பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது, எனவே அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து தேர்வு செய்வது அவசியமாகிவிட்டது."

 

நாம் வளர்ந்த சமூகம் "நீ செய்ய வேண்டும், பேசாமல் செய்" என்ற கட்டளை மனப்பான்மையை வலியுறுத்தியது. ஆனால், *அவர்கள் வளர்ந்த சமூகம் "ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தம் என்ன?" என்ற கேள்விகளை ஊக்குவிக்கிறது. இதனால், சொல்லாமல் செய்யும் மனிதர்கள் படிப்படியாக குறைந்து வருகின்றனர்; அதற்கு பதிலாக, தாங்கள் செய்யும் செயலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஈடுபடும் மனிதர்கள் அதிகரித்து வருகின்றனர்*. இதுவே தலைமுறை மாற்றத்தின் மையக் கருத்து.

 

பெரு நிறுவனங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் இவைதான்:

 

பணியில் நிலைத்திருப்பது குறைந்துள்ளது: Gen-Z ஊழியர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்குவதை விரும்புவதில்லை. அவர்களுக்கு பணி திருப்தி இல்லையென்றால், உடனடியாக வேறு வாய்ப்புகளைத் தேடுகின்றனர்.

 


நேரக் கடைப்பிடிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது: பாரம்பரிய நேர அட்டவணைகள் அவர்களுக்கு இறுக்கமாகத் தோன்றுகின்றன; நெகிழ்வுத்தன்மை இல்லாத போது, அவர்கள் விலகிவிடுகின்றனர்.

செயலில் ஆழ்ந்த ஈடுபாடு அரிதாகிவிட்டது: கவனச் சிதறல் அதிகம்; சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பம் அவர்களை தொடர்ந்து திசை திருப்புகின்றன.

சிறிய அழுத்தத்திலேயே பின்வாங்குதல்: மன அழுத்தம் அதிகரித்தால், அவர்கள் விரைவில் சோர்ந்து போகின்றனர் அல்லது விட்டுவிடுகின்றனர்.

நம்பிக்கை இல்லையென்றால் உடனடி மாற்றம்: பணியிடத்தில் தங்கள் மதிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்ற உணர்வு வந்தால், அவர்கள் வேறு இடம் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.

 

இதை Simon Sinek தனது "The Millennial Question" உரையில் சுட்டிக்காட்டுகிறார்:

"இந்த தலைமுறை 'வேலை'யை விட 'வேலை செய்யும் போது உணரும் அர்த்தம்' முக்கியமென நம்புகிறது." இந்த பிரச்சனைகள் பணியிட உற்பத்தித்திறனைப் பாதிக்கின்றன.

 

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இந்த சவால்களை எப்படி கையாள்கின்றனர்? அவர்கள் மனிதர்களின் உளவியல் தேவைகளை மையமாகக் கொண்டு தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்:

 

• *வேலை + கற்றல் மாதிரி (Work + Learning Model):* வேலை செய்யும் போதே தொடர்ச்சியான கற்றலை ஊக்குவிக்கின்றனர். பயிற்சிகள் (Training) ஒரு ஒருமுறை நிகழ்வு அல்ல; அது தொடர்ச்சியான செயல்முறை. *"என்ன செய்ய வேண்டும்?" என்று கூறுவதற்கு பதிலாக, "ஏன் செய்கிறோம்?" என்று விளக்குவதில் தொடங்குகின்றனர்*. இது ஊழியர்களுக்கு அர்த்தத்தை உணர்த்துகிறது.

 

• *வழிகாட்டி அமைப்பு (Mentor System)*: புதிய ஊழியருக்கு ஒரு அனுபவமிக்க நபரை "ஆதரவு நபராக" நியமிக்கின்றனர். *இது வெறும் உத்தரவுகளை அல்ல, "கேட்டு புரிந்து வழிகாட்டும்" பாணியைப் பின்பற்றுகிறது.*

 

• *கருத்துப் பரிமாற்ற கலாச்சாரம் (Feedback Culture)*: ஆண்டுக்கு ஒரு மதிப்பீடு (Appraisal) போதாது; வாராந்திர சிறிய, நேர்மையான உரையாடல்களை ஊக்குவிக்கின்றனர். இது உடனடி திருத்தங்களை சாத்தியமாக்குகிறது.

 

• *உளவியல் பாதுகாப்பு* (Psychological Safety): பிழை செய்தால் திட்டுவதற்கு பதிலாக, திருத்தி வழிகாட்டுகின்றனர். "பிழை = கற்றல் = முன்னேற்றம்" என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.

 

இந்த அணுகுமுறைகளின் அடிப்படை உண்மை: *"மனிதரை மாற்ற முடியாது, ஆனால் அவர்களின் மனதைத் திறக்கச் செய்யலாம்."*

இந்திய சூழலில் இந்த சவால்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வழிகள் இவை:

 


1. உத்தரவாக அல்ல, நோக்கத்தை விவரிக்கவும்: "இதை 5 மணிக்குள் முடி" என்று கூறினால் முரண் எழும். அதற்கு பதிலாக, *"இதை 5 மணிக்குள் செய்ய வேண்டும், ஏனெனில் தணிக்கை (Audit) தாமதமானால் வாடிக்கையாளருக்கு அபராதம் அதிகரிக்கும்" என்று விளக்கினால், புரிதல் உருவாகும். Harvard Business Review கூறுவது போல, "நோக்கம் பொறுப்புணர்வை உருவாக்குகிறது."*

 

2. பெரிய வேலையை சிறிய பகுதிகளாக உடைக்கவும்: Gen-Z தலைமுறை பெரிய சுமைகளை ஒரே நேரத்தில் தாங்க மாட்டார்கள். 10 பக்க அறிக்கையை 10 தனித்தனி 1-பக்க பகுதிகளாக பிரித்துக் கொடுங்கள். இது அவர்களுக்கு சாத்தியமானதாகத் தோன்றும்.

 

3. திட்டும்போது அல்ல, பேசும்போது கற்றல் ஏற்படுகிறது: "நீங்கள் சரியாகச் செய்தால் நானும் நிம்மதியாக இருப்பேன்" போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகள் அவர்களின் இதயத்தில் ஊறும். இது உறவை வலுப்படுத்தும்.

 

4. வளர்ச்சி உணர்வை தெளிவாகக் காட்டுங்கள்: அவர்களுக்கு வளர்ச்சி பாதையை ஒரு வரைபடமாக விவரிக்கவும்: உதாரணமாக, உதவியாளர்மூத்த உதவியாளர்மேலாளர்வாடிக்கையாளர் கையாளுதல்தலைமைப் பொறுப்பு. வளர்ச்சி தெரிந்தால், அவர்கள் நிலைத்திருப்பார்கள்.

 

5. *சிறு முயற்சிக்குக் கூட பாராட்டுங்கள்: அவர்கள் வாழ்க்கை முழுக்க "லைக்குகள்" மற்றும் உடனடி அங்கீகாரங்களுடன் வளர்ந்தவர்கள்.* "நீ நேற்று தயாரித்த குறிப்பு மிக அழகாக இருந்தது; நல்ல கவனம்" என்ற ஒரு வாக்கியம் அவர்களை மூன்று மாதங்களுக்குத் தாங்கும். Ken Blanchard-இன் "The One Minute Manager" நூல் கூறுவது போல, "மக்கள் அங்கீகரிக்கப்படும் நடத்தையைத் திரும்பச் செய்வார்கள்."

 


இறுதியாக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை: *புதிய தலைமுறை மோசமானவர்கள் அல்ல; அவர்கள் வேறுபட்டவர்கள். நாம் சந்தித்த காயங்கள், கஷ்டங்கள் அவர்களுக்கு இல்லை. ஆனால், அவர்கள் தேடுவது உணர்வின் அர்த்தம், தனித்தன்மையின் மதிப்பு மற்றும் உண்மையான மனித உறவுகள்.*

 

Carl Rogers, மனவியல் அறிஞர் கூறியது போல, "*ஒருவரை மாற்ற முயலாதீர்கள். அவரைப் புரிந்துகொள்ள முயலுங்கள். புரிதல் இருக்கும் இடத்தில் இயங்கும் சாத்தியம் உருவாகும்."*

 

*புதிய தலைமுறையை கையாள்வது வெறும் வேலையல்ல; அது ஒரு கலை. அவர்களை குறை சொல்வதை விட, காரிய சாத்தியமான இந்த கலையை நாம் கற்றுக்கொள்வோம்

அவர்களை மாற்ற முயற்சி வேண்டாம். அவர்களை வழிநடத்த வேண்டும்.

நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியது:

நாம் உங்களைப் புரிந்துகொள்கிறோம்.

ஆனாலும் பணிக்கு ஒரு ரிதம் வேண்டும்.

அந்த ரிதத்தை உங்களுக்கு நாங்கள் கற்றுத்தருகிறோம்.

நீங்கள் வளருங்கள்.

வளர்ந்து நம்மை அனைவரையும் உயர்த்துங்கள்.”

 

- இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இ.எஸ்.ஐ, பி.எப் ஆலோசகர்

9551291721


(பின்குறிப்பு : ஊழியர்கள் மட்டும் என்றில்லை. இந்த கட்டுரை நமது பிள்ளைகளை புரிந்துகொள்வதற்கும் பொருந்தும் தானே!)