> குருத்து: ஏன் வாசிக்கவேண்டும்? ஆர். அபிலாஷ் – புத்தகம் - ஒரு பார்வை.

October 23, 2021

ஏன் வாசிக்கவேண்டும்? ஆர். அபிலாஷ் – புத்தகம் - ஒரு பார்வை.


”கால்கள்” நாவலுக்காக யுவபுரஸ்கார் விருது பெற்றவர். ஆங்கில பேராசிரியராக பணிபுரியும் எழுத்தாளர் அபிலாஷ் கடந்த பத்தாண்டுகளில் வெவ்வெறு சூழலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

கடந்த சில ஆண்டுகளாக காட்சி படிமங்களின் ஆதிக்கம் வந்த பிறகு, பொதுவாக படிப்பதை விட பார்ப்பது என்பதாக நிலைமை மாறிவிட்டது, பெரும்பாலான இளைய தலைமுறைக்கு படிப்பது என்பது பாடத்திட்டம் தவிர்த்து வேறு எதையும் படிப்பது என்பது மிக மிக குறைந்துவிட்டது.

நானெல்லாம் படிப்பு தவிர பொதுவாக படிப்பது என்பது நான்காவது வகுப்பிலேயே துவங்கிவிட்டேன். தேநீர் வாங்க கடைக்கு போகும் பொழுது, அங்கு தினத்தந்தியில் சிந்துபாத் கதை படிக்க துவங்கி, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி திரும்பும் வழியில் ஒரு கடையில் வாடகைக்கு புத்தகம் தருவார்கள். ஒரு புத்தகத்திற்கு 25 பைசா. அங்கு தான் அம்புலிமாமா, பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் என படிக்க துவங்கினேன். பிறகு ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாக இராஜேஷ்குமார் நாவல் படிக்க துவங்கி, பட்டுக்கோட்டை, சுபா, சுஜாதா, பாலகுமாரன் என படிக்க துவங்கி…. நண்பர்களின் தொடர்பால் கணேசலிங்கன், மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் என துவங்கிவிட்டேன்.

என்னைப் போலவே அல்லாமல், அவர்களது சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்களோடு பொதுவாக வாசிப்பதை பலரும் துவங்கியிருப்பார்கள். இப்பொழுது அப்படி ஒரு பழக்கம் குழந்தைகளிடம் மிக மிக கவனம் கொடுத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும். முடியாமலும் போகலாம். என் பொண்ணுக்கு படிப்பதை மிகுந்த கவனம் கொடுத்தோம் என சொல்லமுடியாது. ஆனால் எங்களால் இயன்ற அளவு முயன்றோம். பழக்கப்படுத்த முடியவில்லை. ஆனால், உலகப் படங்களை குறிப்பிட்ட வயதில் இருந்தே எங்களுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

ஆக, சமகாலத்தில் ஏன் வாசிக்கவேண்டும்? என்பது பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் இந்தப் புத்தகம் அதற்கு துணை செய்கிறது.

வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியம்? வாசித்தால் என்ன கிடைக்கும்? வாசிப்பு குறைந்துள்ளதா? ஆங்கிலத்தில் வாசிப்பது, தத்துவ வாசிப்பை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது? உளவியல் நூல்களை எங்கிருந்து எப்படி வாசிப்பது? என மொத்தம் 22 தலைப்புகளில் விரிவாக விவாதித்துள்ளார்.

எனக்கு பலருடைய பரிந்துரை பட்டியல் எப்பொழுதும் பொருந்தியதில்லை. அதில் ஆசிரியரும் உடன்படுகிறார். அதை சொல்லும் பொழுது, “புத்தக தேர்வு என்பது நண்பனை, காதலியை தேர்வு செய்வதைப் போன்றது” என்கிறார். உண்மை தான்.

எனது இணையரும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். இரண்டு பேரும் சேர்ந்து புத்தகம் வாங்கினாலும், எனக்கான ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! அவருடைய ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! எனக்கான புத்தகங்களை குறித்துவைத்துக்கொண்டு வாங்கிவிடுவேன். அவருக்கென சிறப்பு தேர்வுகள் பல சமயங்களில் இருந்ததில்லை. வீட்டில் புத்தகங்களுக்காக ஒரு பீரோ இருக்கிறது. ஒருநாள் திடீரென வந்து “பெரும்பாலான புத்தகங்கள் உங்களுக்கானதாக இருக்கின்றன. என் டேஸ்டுக்கு எதுவும் இல்லை” என அலுத்துக்கொண்டார்.

பாத்ரூமில் புத்தகம் வாசிக்கும் உங்களுக்கு பழக்கம் உண்டா? எனக்கு இருக்கிறது. “பாத்ரூம் வாசிப்புக்கு உகந்து வராத புத்தகங்கள் இலக்கியத் தகுதியற்றவை” என்கிறாராம் அமெரிக்க நாவலாசிரியர் ஹென்ரி மில்லர்.

படிக்காமல் டிஜிட்டல் உலகில் நம் நேரத்தை தொலைக்கிறோமோ? இல்லை என்கிறார் ஆசிரியர். அந்த நேரம் என்பது நண்பர்களுடன் சுற்றுவதற்கு, கதையளப்பதற்கு, தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு, சொந்தங்களின் வீட்டு சடங்குகளுக்கு போன நேரம் என்கிறார். அந்த நேரத்தை எல்லாம் அபகரித்துவிட்டதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்? பேஸ்புக்கால் வாசிக்க அல்ல, “வாழத்”தான் நேரமில்லாமல் போகிறது!” என்கிறார்.

இப்படி பல விசயங்களை போகிற போக்கில் சொல்லி சொல்கிறார். மற்றபடி, ஏன் வாசிக்கவேண்டும்? என்கிற கேள்விக்கு ஆசிரியர் வேறு வேறு பதில் சொன்னாலும் பொதுவாழ்வில் ஈடுபடுபவருக்கு கீழே உள்ள பதில் பொருத்தமாக இருக்கிறது.

”கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”. பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும்”

- தோழர் மருதையன்.

(ஒரு நீண்ட கட்டுரையிலிருந்து அங்காங்கே வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். உங்களுக்கு அந்த நீண்ட கட்டுரையின் சுட்டியை பின்னூட்டத்தில் தருகிறேன்.)

மற்றபடி, அபிலாஷ் அவர்களுடைய எழுத்து விரைந்து வாசிக்கும் அளவிற்கு இருக்கிறது. தொடர்ச்சியாக முகநூலில் புழங்குவதால், வெகுஜனத்திற்கு புரியும்படி எழுதுகிறார். ஆகையால், நான்கு நாட்களில் 75%க்கும் மேலாக முடித்துவிட்டேன். கொஞ்சம் இடைவெளி விட்டு, மீதி 25% முடித்துவிட்டேன்.

வாசிக்க வேண்டிய புத்தகம். படியுங்கள்.

#ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
#விலை ரூ. 200

0 பின்னூட்டங்கள்: