> குருத்து

April 23, 2020

பொருளாதார நெருக்கடியும் பெருமழையும்!


சென்னையின் புறநகர் பகுதி. மாலை 4 மணி. மெல்ல மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. நேற்று இந்த பகுதியில் நல்ல மழை பெய்ததாக சொன்னார்கள். மழையில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எவ்வளவு விரைவாக கிளம்பவேண்டுமோ, கிளம்பிவிடவேண்டும் என நினைத்தேன்.

அந்த சிறுநிறுவனத்திற்குள் நுழைந்தேன். கடந்த பிப்ரவரிக்கு பிறகு இபோழுது தான் வருகிறேன். கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்த நிறுவனம் ஜி.எஸ்.டி கட்டவில்லை. நிறுவனம் பெரும் பொருளாதார சிக்கலில் இருந்தது. முன்பு, ஜாப் வேலை (Job work) செய்பவர்களுக்கு, வரி இல்லாமல் இருந்தது. ஆகையால், வேலையை செய்து பணம் வரும்பொழுது வாங்கிக்கொண்டு செலவுகளை எதிர்கொண்டார்கள்.

ஜாப் வேலைக்கும் ஜிஎஸ்டி வரி போட்ட பிறகு, மாதம் மாதம் பணம் வரி கட்ட வேண்டியதாகிவிட்டது. வேலை தருபவரோ பணத்தை தாமதமாக தரும் பொழுது, பணம் கட்ட முடியாத சிக்கலுக்கு போய்விடுகிறார்கள். தாமதமாக கட்டினால், ஒரு நாளைக்கு 50ரூபாய் தாமதக்கட்டணமும் கட்டவேண்டியவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நிறுவனம் ஆட்டோமொபைல் தொழில் சார்ந்தது தான். ஆறு மாதத்திற்கு முன்பு வந்த வேலை கூட இப்பொழுது வருவதில்லை. ஆகையால், மாதாந்திரம் எதிர்கொள்ளும் வாடகை, மின்கட்டணம், சம்பளம் போன்ற அடிப்படை செலவுகளை கூட எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகையால், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஸ்டேசனரி கடை போடலாம் என்ற எண்ணத்தில், இந்த பகுதியிலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருப்பதாக சொன்னார்..” அதற்கும் ஜி.எஸ்.டி எடுக்கனுமா?” என்றார். ”வேண்டியதில்லை. இரண்டு மூன்று மாதம் கடையை நடத்துங்கள். அதன் விற்பனை, ஜி.எஸ்.டி எடுக்கலாமா? வேண்டாமா?” என்பதை தேவையிலிருந்து பிறகு முடிவு செய்யுங்கள்” என்றேன். சரி என்றார்.

இவருடைய நிலை மட்டும் இப்படியில்லை. என்னுடைய வாடிக்கையாளர்கள் (Clients) சிலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 100 பேர் வரை வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பி.எப் இன்ஸ்பெக்சன் முடித்த பிறகு, அவரிடம் மிக குறைந்த கட்டணத்தைக் கேட்டு பில்லை நீட்டினால், ”நீங்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்தீர்கள். சரி தான். ஆனால், கம்பெனியை இழுத்துமூடலாமா? என்ற யோசனையில் இருக்கிறேன். வேலை செய்த இடங்களில் எல்லாம், பணம் வரமாட்டேன் என்கிறது. வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை கூட மாதம் இருமுறை தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு நெருக்கடி!” என புலம்பித்தள்ளினார். "எனக்கும் அதே பிரச்சனை தான். ஆகையால், இப்பொழுது இந்த பில்லை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் வரும் பொழுது வாங்கிக்கொள்கிறேன்” என சொல்லிவிட்டு வந்தேன்.

மீண்டும் வந்த வேலைக்கு வருவோம். மார்ச் மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாதமாக கணக்குப் பார்த்து வந்தேன். ஜூலை மாதம் வருவதற்குள் அவர் வங்கியில் வைத்திருந்த பணம் மொத்தமும் தீர்ந்துவிட்டது. அவர் கட்டிய 80000 பணத்திற்கு ரூ. 20000த்திற்கும் மேல் தாமதக்கட்டணம் மட்டுமே செலுத்தினார். இப்பொழுது தாமதமாக வரியைக் கட்டியதற்கு வட்டி (Interest) கூடுதலாக பின்பு கட்டவேண்டியிருக்கும். அது தனி.

நிறுவனத்தை மூடிவிட்டு, வண்டியை இருவரும் எடுக்கும் பொழுது, மழை லேசாக துவங்கியிருந்தது. அவர் எனக்கு ஜனவரியிலிருந்தே கட்டணம் தரவேண்டும். வேலை செய்த பொழுது, என்னுடைய நிலையை கேட்டார். நானும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை சொல்லியிருந்தேன். இப்போதைக்கு ரூ. 10000 தருகிறேன். பிறகு மீதியை தருகிறேன் என்றார். வேறு வழியில்லை. ஏற்றுக்கொண்டேன்.

போக போக மழை கொஞ்சம் பெரிதாக விழத்துவங்கியது. மழையில் நனைவது எனக்கு எப்பொழுதுமே பிரச்சனை. படுக்க வைத்துவிடும். இரண்டு நாட்கள் வேலை எதுவும் செய்யமுடியாது. ஆனால், இப்பொழுது இவரை விட்டுவிட்டால், நாளை காலையில் “வேறொன்றுக்கு பணம் செலவாகிவிட்டது. இரண்டு நாட்களில் பணம் ஏற்பாடு செய்து, தருகிறேன்” என்பார். பின்பு பணம் வாங்குவது பெரிய சிரமமாகிவிடும் எனப்பட்டது. இன்னும் வாடகை, பலசரக்கு கடைக்கு கொடுக்காதது எல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது.

அவரை தொடர்ந்து என் வண்டியில் போகும் பொழுதே, மோடியின் ஆட்சி, பொருளாதார நெருக்கடி, அவருடைய மந்திரிகளின் உளறல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. பெருமழை பெய்தது. தெப்பலாய் நனைந்துவிட்டேன். அவரே பாலத்திற்கு அடியே ஓரங்கட்டி நின்றார். சில நிமிடங்களில். அவரே “முழுக்க நனைந்துவிட்டோம். போய்விடலாமா” என்றார். “நானும் அதைத்தான் நினைத்தேன்” என்றேன். இருவரும் கிளம்பினோம்.

மூன்று கிலோ மீட்டர் போனதும், மழையே எங்கள் மீது இரக்கப்பட்டு நின்றது. சாரல் மட்டும் வீசியது. ஏ.எடி.எம்மை பார்த்து நிறுத்தி உள்ளே நுழைந்தார். பணம் எந்தவித பிரச்சனை இல்லாமல் வந்துவிடவேண்டும் என 'பிரார்த்தனை' செய்தேன். பணத்தை கொண்டு வந்து கையில் தந்தார். நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். மீண்டும் மெலிதாய் மழை பெய்ய துவங்கியது. வீடு வந்து சேர்வதற்குள் இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது.

வாழ்க்கைக்கு தேவையானதை சம்பாதிப்பதற்கு எப்படி எல்லாம் சிமரப்பட வேண்டியிருக்கிறது என நினைத்துக்கொண்டே தூங்கினேன். பல லட்சம் பேருக்கு வேலை இல்லை. வேலை செய்பவர்களும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள். மக்கள் பித்துப்பிடித்துப் போய் அடுத்த ஆட்சியிலும் மோடிக்கே வாக்களிக்கிறார்கள். பதறிப்போய் எழுந்தேன். கனவு என அறிந்து ஆறுதலடைந்தேன். இருப்பினும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகுநேரம் ஆனது.

- முகநூலில் .... (17/10/2019  )

National Treasure (2004)


புதையல் வேட்டை குறித்த முக்கிய படங்களில் ஒன்று!

கதை. நாயகன் குடும்பம் சில தலைமுறைகளாக வரலாற்று வழியில் உருவாக்கப்பட்ட ஒரு புதையலை தேடிக்கொண்டே இருக்கிறது. நாயகனின் அப்பாவோ தன் இளமை காலம் முழுதும் தேடிப்போய் சோர்ந்து, கடுப்பாகி விட்டுவிடுகிறார். நாயகனுக்கு இப்பொழுது ஒரு (வில்லன்) குழு ஆதரவு தர, பனிப்பிரதேசத்தில் மூழ்கி கிடக்கும் ஒரு கப்பலுக்குள் ஒரு துப்பு (Clue) கிடைக்கிறது.

அடுத்த துப்பு அமெரிக்க சுதந்திர பிரகடனத்தின் பின்னால் இருப்பதாக அறிகிறார்கள். ஆய்ந்து பார்க்க அமெரிக்க அரசு அனுமதிக்காது. ஆகையால் வில்லன் திருடுவோம் என்கிறான். அரசின் முக்கியமான வரலாற்று ஆவணம். ஆகையால், நாயகன் வேண்டாம் என மறுக்கிறான். இருவரும் சண்டை போட்டு பிரிந்துவிடுகிறார்கள்.

வில்லன் குழு திருடிவிட்டால், ஆவணத்தை அழித்துவிடுவார்கள். ஆகையால், அதைக் காப்பாற்ற நாமே திருடுவோம் என நாயகன் தன் நண்பனுடன் முடிவெடுக்கிறான். பல்வேறு பாதுகாப்பு, கட்டுப்பாடு, களேபரங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நாயகன் திருடியும் விடுகிறான், ஒருபக்கம் வில்லன் குழு துரத்த, இன்னொரு பக்கம் அமெரிக்க போலீஸ் (FBI) துரத்த, நாயகன் குழு புதையலை கண்டுபிடித்தார்களா என்பதை பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

*****

புதையலை தேடி வந்த ஹாலிவுட் படங்கள் அதிகம். அதில் சுவாரசியமாகவும், வெற்றிப் பெற்ற படங்களும் மிக குறைவு தான். புதையல்னா சும்மாவா! அதில் முக்கியமான படம் இது என்கிறார்கள்.

ஒரு துப்பு. அதைத் தொடர்ந்து போனால், இன்னொரு துப்பு. போங்கய்யா நீங்களும் உங்க துப்பும். ”என் வாழ்க்கையை போச்சு” என நாயகனின் அப்பா சொல்வதை தான்… படத்தில் ஒன்றைத் தொட்டு, இன்னொன்றை தொட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். சுவாரசியமாக தான் இருக்கிறது.
சுதந்திர பிரகடனத்தின் முக்கியத்துவத்தை பலமுறை சொல்வதால், நமக்கே ஒரு கட்டத்தில் அதற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என பதட்டப்படுகிறோம்.

துப்பு ஒரு பக்கம் சுவாரசியம் என்றால், வில்லன், FBI துரத்தலும் ஒரு ஆக்சன் படமாகவும் ஆக்கிவிடுகிறது.

நாயகன் நிக்கோலஸை முன்பு 8MMல் பார்த்தேன். அதற்கு பிறகு இந்த படம். மற்றவர்களும் அருமை. புதையல் குறித்தான படங்களை சொல்லும் பொழுது இந்தப் படத்தையும் பலரும் சொல்கிறார்கள். ஆனால், தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என தேடினால், காணோம். ஏன்? புரியவில்லை.
படத்தின் தயாரிப்பாளருக்கு இந்த படம் ஒரு புதையல் தான். இரண்டாம் பாகம் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். மூன்றாவது பாகம் இந்தா, அந்தா என இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நிக்கோலஸ்க்கு வயதாகிவிடும் போலிருக்கிறது. இப்பொழுதே 55-ல் இருக்கிறார்.

 2004ல் வந்த படம். இப்பொழுது பார்த்தாலும் புதிதாக தான் இருக்கிறது. தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

பாடலாசிரியர் ராபர்ட் ரங்கா சாப்பாட்டுக்கடை!

நேற்று மதியம் 3.30 மணியளவில் கோடம்பாக்கம் பக்கம் வேலை விஷயமாக சுற்றிக் கொண்டிருந்தேன். சாப்பிட கடை தேடினேன்.

டிரஸ்ட்புரம், புலியூர் முதன்மை சாலையில் ஒரு சின்ன கடையில் "#முதியவர்களுக்கு சாப்பாடு இலவசம்! #மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலை" என போர்டு போட்டிருந்தது.

இப்படி எழுதியிருப்பதால், மோசமான சாப்பாடாக இருக்காது என்ற நம்பிக்கை வந்தது. சாப்பாடு தீர்ந்து போனதால் மீண்டும் சூடாக வடித்து கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு, சாம்பார், குழம்பு, பீட்ரூட் பொரியல், காராமணி கூட்டு நன்றாக இருந்தது. விலையும் அதிகமில்லை 40 ரூபாய் தான்.

சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன் "இப்படி போடு வெச்சிருக்கீங்களே தினமும் நிறைய பேரு வந்துட்டா என்ன செய்வீங்க!" என்றேன்.

"கடவுள் நம்மல அந்தளவுக்கு சோதிக்கலை! தினம் ஒரு ஆளு, இரண்டு ஆளு அனுப்பி வைக்கிறார்" என்றார்.

"நம்ம ஊர்ல ஆதரவற்ற வயசானவங்க அதிகமாச்சே! இலவசம்னா தொடர்ந்து வருவார்களே!" என்றேன்.

"அவங்களுக்கு ஒரு தெளிவு இருக்குது. ஒரு படத்துல (பாய்ஸ்) செந்தில் சொல்வாரே எங்கெல்லாம் இலவசமா சாப்பாடு தருவாங்களோ! அவங்களுக்கு தெரியுது. ஒருத்தர் இன்னைக்கு வர்றார்னா ரெண்டு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவார்" என்றார்.

"எத்தனை வருஷமா இந்த கடைய நடத்துறீங்க?

"2002ல் இருந்து நடத்துறேன் தம்பி" என்றார்.

"எப்படி இப்படி உதவனும்னு தோணுச்சு?"

"நமக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப்பார்னு கடவுள் சொல்றாரே!"

"நீங்க எந்த சாமி கும்பிடுறீங்க!"

"நாங்க சபையில் இருக்கோம்"

"சபைன்னா பெந்தகோஸ்தேங்களா"

"ஆமாம் தம்பி"

அவரின் துணைவியாரும் கடையில் இருந்தார்.

"உங்களுக்கு எத்தனை பசங்கம்மா?"

'நாலு பசங்க. மூணு பசங்க வேலைக்கு போறாங்க. ஒரு பையன் படிக்கிறான்"

"மூத்தவருக்கு என்ன வயசு என்றேன்?"

"28 ஆயிருச்சு!"

"இன்னுமா கல்யாணம் செய்யல!"

"பொண்ணு பக்கத்திலேயே கிடைக்குது! நாங்க கொஞ்சம் தள்ளி பெருங்களத்தூர், செங்கல்பட்டுன்னு தேடுறோம்."

"பக்கத்தில் இருந்தா நல்லது தானே!"

"பொசுக்குன்னு பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போயிருவாங்க. அதுக்குத்தான்" என்றார்.

புன்னகை தான் வந்தது.

இடையில் வெளியே போனவர் திரும்ப வந்தார்.

"சினிமாவில இரண்டு பாட்டு எழுதியிருக்கேன் தம்பி. இவைகள் தான்!" என தட்டச்சு செய்து இருந்ததை காண்பித்தார்.

"என்ன படம்?"

"அளவுகோல்" னு ஒரு படம். சிங்கப்பூர் இசையமைப்பாளர். புதுமுகம் ஹீரோ"
"படத்தில் என்ன பின்னணியில் இந்த பாட்டுக்கள் வருகிறது?"

"ஒரு பாடல் - மனிதன் படத்தில் " வானத்தைப் பார்த்தேன். பூமியைப் பார்த்தேன் போல!

இன்னொரு பாடல் - மலையடிவாரத்தில் சாலை போடும் தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தில் சந்தோசமாக பாடும் பாடல்"

பாடல்களைப் படித்துப் பார்த்தேன். அவரும் ராகமாய் பாடிக்காண்பித்தார். நன்றாக இருந்தது. அவரிடமும் சொன்னேன்.



"படம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கு?"

"80% வளர்ந்திருச்சு. சீக்கிரம் முடிஞ்சு வெளிவந்திரும்"

"இவ்வளவு வயசு வரை ஏன் காத்திருந்தீங்க?"

"இளவயசுல பசங்க சின்ன பசங்க! குடும்பத்துக்காக உழைக்க வேண்டியிருந்ததால சினிமால கவனம் செலுத்த முடியல! பசங்க வளர்ந்திட்டாங்க! இப்ப ப்ரீ ஆயிட்டேன். முயற்சி செய்றேன்" என்றார் முக மலர்ச்சியுடன்!

"வாழ்த்துக்கள். தொடர்ந்து இந்த சாப்பாடு உதவியை செய்யுங்கள். தொடர்ந்து பாட்டு எழுதுங்கள்"

ஒரு புகைப்படம் எடுக்கட்டுமா? என்றேன். புன்னகைத்துக் கொண்டே போஸ் கொடுத்தார்.

வீட்டிற்கு வந்து யூடியூப்பில் தேடிப்பார்த்தேன். படம் குறித்து ஒரு பாடலை விளம்படுத்தியிருந்தார்கள்.