> குருத்து

October 22, 2021

ஆதுரசாலை - நாவல் - ஒரு பார்வை


போரூரில் நண்பர் ஒருவர் அக்குபஞ்சர் மருத்துவராக இருக்கிறார். இந்த நாவலைப் படியுங்கள் என பரிந்துரைத்தார். ஆதுரசாலை என்றால்... மருத்துவமனை என அர்த்தமாம்.


நாவல் வெப்பம், குளிர்ச்சி என இரண்டு பாகங்களாக பிரித்து எழுதியுள்ளார். முதல் பாகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யும் லேப்பில் (Lab) நடக்கும் சில அறம் சார்ந்த, அறிவியல் சார்ந்த கோளாறுகளை விளக்குகிறார். அதில் முதன்மையானது மருத்துவர்கள் தனது நோயாளிகளை சோதனைக்கு அனுப்புவதால் அதற்கு தரும் கமிசன். இந்த செய்தி உண்மை.

1990களில் மருந்து கடையில் சில காலம் வேலை செய்ததின் அனுபவத்தில் எனக்கே இந்த அனுபவம் உண்டு. மருத்துவர்களுக்கு லேப் நடத்துகிறவர்களும், ஸ்கேன் செண்டர் வைத்திருப்பவர்களும் தொடர்ந்து கமிசன் கொடுப்பது உண்டு. மதுரையில் அந்த பிரபல ஸ்கேன் மையத்தில் நண்பர் வேலை செய்த பொழுது, அந்த கமிசனின் அளவு தெரிந்த பொழுது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ரூ. 7000 என்றால், ரூ. 3500 வரைக்கும் கூட ’கமிசனாய்’ தருவார்கள். லேப்பும், ஸ்கேன் சென்டர்களும், மருத்துவர்களும் மக்களிடமிருந்து அடிக்கிற கொள்ளை இது. விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள் மட்டும் தனக்கு கமிசன் தேவையில்லை. அதை நோயாளிடம் குறைத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்பார்களாம். ஒரு ஆறுதல்.

அந்த ஸ்கேன் மையத்தில் இந்த கமிசனை மருத்துவர்களுக்கு கொடுப்பதற்கென்றே பல பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். மருத்துவம் சேவைத்துறை என்பார்கள். மருத்துவம் வணிகமாகி பல ஆண்டுகளாகிவிட்டது. அங்கு வேலை செய்த மருத்துவர்களில் ஒருவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்துப்போய், இங்கிலாந்தில் அரசே இலவசமாக மருத்துவம் பார்ப்பதால், அங்கு மருத்துவ துறையில் ஊழல் இல்லை என தெரிந்துகொண்டு, அங்கு வேலைக்கு போய்விட்டார். (இப்பொழுது நிலைமை அங்கும் மாறிவிட்டதாக தகவல் வருகிறது!)

இரண்டாம் பாகமான குளிர்ச்சி பகுதியில், லேப் விசயங்களில் நாவலின் நாயகன் அதிருப்தியாகி, ஒரு மருத்துவரிடம் வந்து சேர்கிறார். அந்த மருத்துவர் அலோபதி மருத்துவம் படித்து, பிறகு அதில் அதிருப்தியாகி இப்பொழுது சித்த மருத்துவம் பார்த்துவருகிறார். அவரிடம் உதவியாளராக சேர்கிறார்.

இந்த பகுதியில் சித்த மருத்துவத்தின் சிறப்பு, மற்ற மருத்துவ முறைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படி அலோபதி மருத்துவம் முன்னுக்கு வந்தது என்பதை வரலாற்று வழியிலும், வேறு சில அம்சங்களையும் சொல்லி செல்கிறார்.

நாவலாசிரியர் நாவலைப் பற்றி சொல்லும் பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவ துறை சார்ந்த நாவலாக ’சாந்தி நிகேதனம்’ என்ற பெயரில் வெளிவந்த வங்காள நாவலும் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சுளுந்தீ” நாவலும் இந்த நாவலை எழுத தூண்டியதாக சொல்கிறார்.

நிலவுகிற அலோபதி மருத்துவ துறை வணிகம் சார்ந்ததாக, லாப வெறிகொண்ட துறையாக மாறிவிட்டது. ஆகையால், முடிந்த மட்டிலும் கொள்ளையடி என்கிற அளவுக்கு வந்துவிட்டார்கள். உலகை உலுக்கிய கொரானா காலங்களில் தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் இருந்த சேமிப்பை எல்லாம் அடித்த கொள்ளையை ஊரேப் பார்த்தது.

அலோபதி தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மக்கள் மற்ற மருத்துவ முறைகளான சித்தா, ஹோமியோ, யுனானி வகைகளை அணுகிவருகிறார்கள். குறைவான கட்டணம் போன்ற காரணங்களால் மக்களிடம் மெல்ல மெல்ல செல்வாக்கு பெற்று வருகிறது. ஆனால், அந்த மருத்துவ முறைகள் வளர்ச்சியடையாமல் ஒரு நிலையிலேயே இருப்பது ஒரு பெரிய குறை. மற்ற மருத்துவ முறைகள் அலோபதி மருத்துவ முறையை, கொள்ளையை தொடர்ந்து தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பல மருத்துவ முறைகள் குறித்து வளர்ந்த நாடுகளில் கல்வி, அறிவு, அனுபவம் காரணமாக அதன் தன்மைகளை, சிறப்புகளை புரிந்துகொண்டு கையாண்டுவிடுகிறார்கள். நம்மை போன்ற பின்தங்கிய நாட்டில் மக்கள் பல்வேறு மருத்துவ முறைகள் சொல்லும் வழிமுறைகள் குறித்து குழம்பிபோய்விடுகிறார்கள்.

நெருங்கிய சொந்தத்தில் ஒருவர் இருதய நோய் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்தார். மீண்டும் அந்த பிரச்சனை வராமல் இருக்க மருந்துகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். யாரோ ஒருவர் ”அந்த மருந்துகள் எடுத்துக்கொண்டால், இன்னும் சிக்கலாகிவிடும். ஆகையால் மருந்து சாப்பிடாதீர்கள்” என போகிற போக்கில் சொல்ல, அவர் சில காலம் மருந்துகள் எடுத்துகொள்ளவேயில்லை. வீட்டில் உள்ளவர்களும், நானும் சந்திக்கும் பொழுதெல்லாம் சொல்லியும் மருந்துகள் எடுத்துகொள்ள மறுத்துவிட்டார். பிறகு மீண்டும் இதயம் சிக்கலான பொழுது தான் தொடர்ந்து மருந்து எடுத்துகொண்டார்.

ஆக, நிலைமை போகிற போக்கைப் பார்த்தால்…வருங்காலங்களில் இந்த சிக்கல் இன்னும் கடினமாகும் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. இதற்கு தனிப்பட்ட முறையில் தீர்வுகளை கண்டறிய முடியுமா என்றால் சாத்தியமில்லை.

சித்தா, ஹோமியோ, அக்குபஞ்சர், யுனானி என எல்லாமும் மனித சமூகத்தின் செல்வங்கள் தான். ஆகையால் எல்லா மருத்துவங்களின் மீதான சரியான அம்சங்களை கணக்கில் கொண்டு மக்களுக்கு பயன்படல்வேண்டும். மக்கள் நலன்கள் மீது அக்கறை கொண்ட அரசு இருந்தால் தான் இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என துறைசார் வல்லுநர்களை கொண்டு ஒரு சுமூகமான, சரியான தீர்வை நோக்கி கொண்டு செல்லமுடியும் என தோன்றுகிறது.

மோடி மாதிரியான ஆட்கள் தொடர்ந்து ஆண்டால் என்ன செய்வது? ’விநோதய சித்தம்’ சமூத்திரக்கனி வழியில் சொல்வதென்றால், நரகத்திலிருந்து சொர்க்கம் நோக்கி காலன் கைப்படித்து நடக்கவேண்டியது தான்.

பக்கங்கள் : 375
விலை : ரூ. 400
நாவல் ஆசிரியர் : அ. உமர் பாரூக்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

October 17, 2021

விநோதய சித்தம் (2021) ஒரு பார்வை


முகநூலில் இந்தப்படத்தைப் பற்றி சிலர் பாராட்டி எழுதியிருந்தார்கள்.  Zee5 தயாரித்து, இயக்குநர் சமுத்திரகனி இயக்கிய படத்தை தங்கள் சானலிலேயே வெளியிட்டும் இருக்கிறார்கள்.
 
கதையை ஒரு பறவைப் பார்வை பார்த்தால்…. 50+ ஐ கடந்த நாயகன் ஒரு பெரிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு 20+ வயதில் பையன். இரண்டு பெண்பிள்ளைகள்.  எப்பொழுதும் பிசியாக இருக்கிறார்.  தான் இல்லாமல் நிறுவனத்திலோ, வீட்டிலோ அசையாது என்ற ‘நம்பிக்கையில்’ இருக்கிறார்.
 
தொழில் விசயமாய் வெளியூர் போயிருக்கும் பொழுது, ஒரு மோசமான விபத்து ஏற்படுகிறது. அதில் இறந்துவிடுகிறார்.  ’உயிரை’ எடுத்துக்கொண்டு போக காலன் வருகிறார்.  இன்னும் தன் பிள்ளைகள் யாருக்கும் திருமணம் செய்யவில்லை. ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. இப்போதே அழைத்துக்கொண்டு போனால் எப்படி? என காலனிடம் பதைபதைப்புடன் சண்டையிடுகிறார். (அவர் மூலம் மக்களுக்கு பல விசயங்கள் சொல்லலாம் என்ற காலனின் முடிவால்) எவ்வளவு காலம் வேண்டும் என பேரத்தில், 90 நாட்கள் என முடிவு செய்கிறார்கள்.
 
இந்த 90 நாட்களில் என்ன ஆனது? என்பதை நகைச்சுவையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.
 
நேரம் இல்லை. நேரம் இல்லை என சொல்லிக்கொண்டு நிகழ்கால கணத்தை ‘ரசிக்காமல்’ கடப்பது!  மனிதர்கள் எல்லாம் தன்னால் தான் எல்லாம் நடக்கின்றன என ‘அப்பாவித்தனமாய்’ நம்பிக்கொண்டிருப்பது! பிள்ளைகளிடம் அன்பாய், மதித்து நடக்காமல் இருப்பது என இந்த கதையின் மூலம் சொல்லப்படுகிறது.   இப்படி சில நல்ல விசயங்களை படம் முழுவதும் தூவியிருக்கிறார்கள். அதைத்தான் பலரும் பாராட்டி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
 
படத்தின் அடிநாதம் அதுவல்ல! காலனாக வருபவர் அழுத்தம் கொடுத்து துவக்கத்திலிருந்து சொல்வது!  இந்த பூமியில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு ‘கணக்கு’ இருக்கிறது. நாயகனுக்கு கணக்கு முடிந்துவிட்டது.  அந்த பாரில் மொடா குடியாய் குடித்துக்கொண்டிருக்கும் மது பிரியருக்கு இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ்வு இருக்கிறது என்கிறார்.   உங்களுக்கு ஒரு நல்ல வேலை வைத்திருந்தோம்.  ஆனால், நீங்கள் மோசமாய் ஒருவரை ஏமாற்றி, அந்த வேலையை பெற்றுக்கொண்டீர்கள். உங்களால் ஏமாற்றப்பட்ட அந்த ஏழை ஐயங்கார் அதற்கு பிறகு உங்களை விட 100 மடங்கு பணமும், புகழும் சம்பாதித்தார். அவருடைய பையன் உங்களுக்கு மேலே உயரதிகாரியாய் வந்து அமர்ந்தார்.  ஆக, எல்லாமே கணக்கு தான்.  அது தெரியாமல் மனிதர்கள் தைய்யா, தக்கா என குதித்துகொண்டிருக்கிறீர்கள் என படம் போதித்து கொண்டேயிருக்கிறது.
 
இங்கு எல்லாமேகணக்குதான். யார் யாரை எங்கு வைக்கவேண்டும் என சொல்லும் பொழுது, நமக்கு சட்டென்று தோணவில்லையா? இந்த குரல் தமிழக மண்ணில் இரண்டாயிரம் வருடமாய் சமூகத்தில் எங்கெங்கு திரும்பினாலும் ஒலித்துக்கொண்டிருக்கும் மனுதர்மத்தின் குரல் அல்லவா! இது தானே சாதிய கட்டுமானத்தை நியாயப்படுத்துகிறது. இது தானே எல்லா சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்தை ஒன்று சேர்க்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.
 
கதையை ஸ்ரீவத்சன் எழுதி, மேடை நாடகமாக பலமுறை மேடை ஏறியிருப்பதாக சொல்கிறார்கள். இதில் சமுத்திரக்கனி உள்ளே புகுந்து நல்ல விசயங்களை தூவி, பலருக்கும் சென்று சேரும்படியான படமாக சேர்த்திருக்கிறார்.   ’ஸ்ரீவத்சன்கள்’ எப்பொழுதும் ’கவனமாக’ தான் நமக்கு கதை சொல்கிறார்கள். நாம் தாம் ’கவனமில்லாமல்’ விழுந்துவிடுகிறோம்.

October 15, 2021

The Flight (2012)



நாயகன் ஒரு திறமையான விமானி. அதே வேளையில் மொடா குடிகாரன். கூடுதலாக போதைப் பொருளும் பயன்படுத்துகிறவன். அன்று வானிலை சாதகமாக இல்லை. மோசமாக இருக்கிறது. விமானத்தில் தொழில்நுட்ப ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு, ஒரு வழியாக திறமையாக சமாளித்து, யாருமில்லாத ஒரு நிலத்தில் விமானத்தை இறக்குகிறான். விமான பணியாளர்கள் இருவரும், பயணிகளில் நால்வரும் என மொத்தம் ஆறு பேர் இறந்துவிடுகிறார்கள்.


நாயகன் காயங்களுடன் தப்பித்துவிடுகிறான். தேறி, வீட்டிற்கு வந்து எல்லா மதுவையும் கீழே கொட்டுகிறான். குடிக்க கூடாது என முடிவெடுக்கிறான். தரையில் திறமையாக இறக்கியதால், பெரும்பாலோர் தப்பித்துவிட்டதால், விமானியை ஒரு பக்கம் பாராட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், விபத்துக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். ஊடகங்களும் விமானியை பேச வைக்க துரத்துகின்றனர். இந்த மன அழுத்தத்தால் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறான்.


மருத்துவமனையில் ஒருத்தி அறிமுகமாகி, பிறகு அவனுடனேயே வாழத்துவங்குகிறாள். அவளும் அவன் குடியை மறக்க மருத்துவம் எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறாள். ஆனால், தன்னாலேயே சமாளிக்க முடியும் என்கிறான்.

பிறகு என்னானது என்பதை உணர்வுபூர்வமாக முடித்திருக்கிறார்கள்.
****

குடி எத்தனை திறமைசாலியையும் காலி செய்துவிடும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். குடி நோயாளிகளை காப்பாற்றுவதில் பெரும்பங்கு குடும்பத்தினருக்கு தான். குடிகாரர்கள் முதலில் தனிமைப்படுவது தன் வீட்டில் தான். படத்தில் நாயகன் திருமணமாகி பள்ளிச் செல்லும் வயதில் மகன் இருந்தாலும், குடியால் தன் குடும்பத்தை இழக்கிறான். தன் காதலியோடும் முரண்பட்டு தனியாக நிற்கிறான்.

இந்தக் கதை தமிழ்நாட்டுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆண்டு தோறும் அரசு நடத்தும் சாராயக்கடைகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. விற்பனையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. விளைவு குடிநோயாளிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். குடி ஒருத்தரின் ஆளுமையை சிதைக்கிறது. வேலை செய்யும் திறனை காலி செய்துவிடுகிறது. குடும்பத்தை சிதைக்கிறது. நமது ’அரசு’ போதையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தான் மதுவிலக்கு துறையே வைத்திருக்கிறது. இப்பொழுது அந்த துறை சாராயக்கடைகளை முறைப்படுத்துவதற்கு தான் மும்முரமாக வேலை செய்கிறது.

தமிழக அரசு எத்தனை மக்கள் நல பணிகளை செய்தாலும், சாராயக்கடைகள் விளைவிக்கும் விளைவை ஈடுசெய்யவே முடியாது. எத்தனை கண்ணீர் கதைகள்”? எவ்வளவு இழப்புகள்? தினசரியை திறந்தால், ஒரு செய்தியாவது சாராயக்கடையால் வந்த பாதிப்பால் தான் இருக்கின்றன.

ஒரு அரசு சாராயக்கடை வருமானம் தான் தனக்கு முதன்மையான வருமானம். மூடிவிட்டால், அரசை எப்படி இயக்குவது? என கேட்டால்.. மக்களை தினந்தோறும் பலிகொடுத்து, அப்படி ஒரு ஆட்சி ஆளவே தேவையில்லை. வீட்டுக்கு போய்விடலாம் என்பேன்.

மற்றபடி படம் நல்லபடம். டென்சில் வாசிங்டன் நாயகன் பாத்திரத்தில்
அருமையாக
பொருந்தியிருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். Forrest Gump, Cast away – புகழ்பெற்ற படங்களை இயக்கிய Robert Zemeckis தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

“I choose to drink! And I blame myself! I am happy to! And you know why? Because I choose to drink! I got an ex-wife and a son I never talk to! And you know why? Because I choose to drink!”