> குருத்து: பகுதி பிரச்சனை!

May 6, 2023

பகுதி பிரச்சனை!


நான் இருக்கும் பகுதி சென்னையின் புறநகர் பகுதி. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுது, வாடகையும் அப்படித்தான் இருந்தது. சாலை வசதி, தண்ணீர் வசதி எல்லாம் அதற்கு ஏற்றப்படித்தான் இருந்தது. சாலைகளில் வண்டிகளில் சென்றால், குதிரையில் போவது போல ஒரு உணர்வு வரும்!


அதற்கு பிறகு எல்லா வசதிகளும் வந்து சேரும் பொழுது, மாநகராட்சி தனக்குள் இழுத்துக்கொண்டது. அதற்கு பிறகு வாடகையெல்லாம் எகிறிப்போய்விட்டது. திரும்பவும் எளிய மக்கள் அடுத்த புறநகர் தாண்டி போகும் அளவுக்கு நெருக்கடி வந்துவிட்டது.

எங்கள் பகுதி Lower Income group வகையைச் சார்ந்தது. ஒரு படுக்கையறை, ஒரு சின்ன சமையலறை. ஒரு ஹால். அவ்வளவு தான். அதற்கு இப்பொழுது ரூ. 7000, ரூ. 8000 என்கிறார்கள்.

தெருக்கள் என சொல்ல முடியாது. சந்து என்று தான் சொல்ல முடியும். வீடுகளை ஏழைகளால் எங்கு வாங்க முடிகிறது? ஆகையால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் அங்கு வீடு வாங்குவார்கள். சின்ன இடத்தை வாங்கி, இரண்டு மாடி மேலே எடுத்து கட்டுவார்கள். இதில் பலர் வீடு வாடகைக்கு விடுவார்கள். சின்ன சந்தில் எத்தனை வண்டி நிற்க வைக்கமுடியும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட சில வீட்டுக்காரர்கள் காரசாரமாய் சண்டையிட்டுக்கொள்வார்கள்.

சாலை போடும் பொழுது அடுத்தடுத்து சாலையை உயர்த்திக்கொண்டே செல்வதால், புதிதாய் வீடு கட்டுபவர்கள் ஐந்து படிக்கட்டுகள் வைத்து பாதுகாப்பாக கட்டுவார்கள். ஆனால் அந்த படிக்கட்டுகள் சந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டுவார்கள். இது தவிர சிலர் திண்ணை கட்டிக்கொள்வார்கள். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், ஆம்புலன்சோ, ஆட்டோவோ கூட உள்ளேயே நுழைய முடியாது. இதை எல்லாம் யோசிக்கிறார்களா அல்லது பார்த்துக்கலாம் என யோசிப்பார்களா என தெரியாது.

இன்னும் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி அடைந்தால், கார் வாங்குவார்கள். அதை பகுதிக்குள் ஏதாவது ஒரு பொது இடத்தில் நிறுத்தி பாதுகாப்பார்கள். அதற்குள் சண்டைகள் எழும். இன்னும் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி அடைந்தால், வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு பகுதிக்கு இடம் பெயர்வார்கள்.

இதில் தெருவில் வாழும் நாய்களின் பங்கும் உண்டு. ஒரு தெருவிற்கு எத்தனை நாய்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் வரம்பு கிடையாது. எங்கள் பகுதியில் ஒரே தெருவில் மன்னிக்கவும் சந்தில் 15 நாய்கள் கூட இருக்கும். புதிதாய் யார் வந்தாலும் குலைத்து ஊரை கூட்டிவிடும். சிலரை கடித்துக்கூட வைத்திருக்கிறது. சின்ன பசங்க நாய் குலைக்கிறது என பயந்து நகர்வார்கள். விடாமல் துரத்தி இன்னும் அலற வைத்து பயங்காட்டும்.

இதில் நாய் மீது கரிசனம் உள்ளவர்களும் உண்டு. நாய்கள் தெருக்களை அசுத்தப்படுகின்றன, மனிதர்களை கடிக்கின்றன என நாய் வெறுப்பாளர்களும் உண்டு. இரண்டு குழுக்களுக்கும் அவ்வப்பொழுது சண்டைகள் எழும். இந்த ஊரில் எல்லா ஜீவராசிகளுக்கும் வாழ இடம் உண்டு நினைப்பவன் நான். நாய்கள் தரும் “தொல்லையை” பொறுத்துக்கொள்வேன். எதிர்த்தவீட்டு அம்மா, நம் பொறுமையை சோதிக்கும்படி நடந்துகொள்வார்கள்.

இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சின்ன தெருவில் சில நூறு வீடுகள் கட்டி பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்கிறோம். பெரிய பங்களாவில் ஒரு குடும்பம் வாழும் வீடுகளும் சென்னையில் நிறைய உண்டு தானே! இந்தியாவின் சொத்து மதிப்பில் சமூகத்தில் வாழும் ஒரு சதவிகித பெரும் பணக்காரர்கள் 48% சொத்தை வைத்திருக்கிறார்கள் என செய்தியைப் படிக்கும் பொழுது சமூகம் பயங்கர ஏற்றத்தாழ்வுகளோடு தானே இருக்கமுடியும். அதை மாற்றத்தான் அத்தனைப் பேரும் சிந்திக்கவேண்டும். அதை விட்டு விட்டு சின்ன சின்ன சணடைகள் நமக்குள் போட்டுக்கொண்டால் எப்படி?

உங்கள் பகுதியில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்களா?

0 பின்னூட்டங்கள்: