> குருத்து: சுற்றுலா எல்லோருக்கும் எப்பொழுது சாத்தியமாகும்?

May 12, 2023

சுற்றுலா எல்லோருக்கும் எப்பொழுது சாத்தியமாகும்?




மே மாதம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் ஊர்ச்சுற்ற கிளம்பிவிட்டார்கள். கிளம்பவில்லையென்றால், கடுமையான வெயிலே ஓடு ஓடு என விரட்டுகிறது. வார இறுதி நாட்களில் எல்லா சுற்றுலாத் தளங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது என செய்திகளில் தொடர்ந்து சொல்கிறார்கள்.


ஏன் வாரத்தின் இடையில் இந்த செய்திகள் வருவதில்லை. ஏனென்றால், பிள்ளைகளுக்கு தான் பள்ளி, கல்லூரி விடுமுறை. வேலை செய்கிற அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ வார இறுதியில் தானே வாய்ப்பு.

ஒரு மனிதன் வருடம் முழுவதும் வேலை செய்துக்கொண்டே இருக்கவேண்டுமா? தொடர்ச்சியாக ஒரே வேலையில் ஈடுபடும் ஒரு மனிதன் உண்மையில் என்ன ஆவான்? சலிப்படைய மாட்டானா? வழக்கமாக வேலையை உற்சாகமாக செய்யும் மனநிலை வருமா? அந்த மனிதன் எப்பொழுது தன் குடும்பத்துடன் நான்கு வெளியிடங்களுக்கு பயணிப்பது? ஒரு மனிதன் மாதாந்திர அடிப்படை தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் பொழுது எப்படி சுற்றுலாவிற்கென பணம் ஒதுக்கமுடியும்?

எனக்கு தெரிந்த ஒரு தணிக்கையாளர் இருக்கிறார். தன் நிறுவனத்தில் வேலை செய்கிற மூவருக்கு கோடை கால விடுமுறையும் கொடுத்து, சுற்றுலா செலவுகளுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார். இப்படி எத்தனை நிறுவனங்களில் கொடுக்கிறார்கள்? அல்லது அது பற்றி சிந்திக்கிறார்கள். அந்த தணிக்கையாளர் வருடத்திற்கு இரண்டு முறை தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா என இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளுக்கு தொடர்ந்து பயணித்து வருகிறார். அதனால் அவருக்கு தன் தொழிலாளர்களும் பயணிக்கவேண்டும் என தோன்றியிருக்கிறது. கொடுக்கிறார்.

வரி ஆலோசகர்களுக்கென ஒரு சொசைட்டி ஒன்றில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த ஆண்டு, அந்த சொசைட்டிக்கான ஆண்டு விழாவிற்கு ஒரு சென்னை புறநகரில் உள்ள ரிசார்ட்டில் ஒரு நாள் சந்தித்தோம். கலந்து பேசினோம். விளையாடினோம். கிளம்பும் பொழுது … அடுத்த ஆண்டு நிகழ்வுக்கு ஏற்காடு போகலாம் என சிலர் உற்சாகமாக பேசினார்கள். அப்படி என்றால் பணம் ஒரு பிரச்சனையாகிவிடும். ஆகையால் அதற்கு ஒருவரை பொறுப்பாக போட்டு, மாதம் மாதம் ஒரு நிதியை கொடுத்துவைப்போம். அப்பொழுது தான் அடுத்த வருடம் சிக்கல் இல்லாமல் சென்று வரலாம் என பேசிக்கொண்டார்கள். வரி ஆலோசகர்கள் என்பவர்கள் தனிப்பட்ட முறையில் சுய தொழில் செய்பவர்கள் என்ற கணக்கில்
வருவார்கள். அவர்களுக்கே இது தான் நிலைமை.

ருசியாவில் புரட்சி 1917ல் வெற்றியடைகிறது. அதற்கு பிறகு சோவியத்தின் சாதனைகள் உலகம் அறிந்தவை. மக்களின் மனநிலையும் ஆரோக்கியமும் மிக கவனத்துடன் பராமரிக்கிறார்கள். சோவியத் குறித்த ஒரு கட்டுரையில் இப்படி ஒரு செய்திப் படித்த நினைவுக்கு வருகிறது.

தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு இப்படி ஒரு மெமோ வருகிறது.

“நீங்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல விடுமுறையும், நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. பிறகு ஏன் தொடர்ந்து வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை. உடனே வந்து விளக்கவேண்டும்”.

அப்படிப்பட்ட சமூகம் தான் மீண்டும் எழவேண்டும். அதற்காக நாம் சிந்திக்க வேண்டும். செயலாற்றவேண்டும்.

கடந்த காலங்களில் நான் பயணித்த சில இடங்களின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். இதில் ஒகெனக்கலும், ஊட்டி ரயிலும் பாக்கியிருக்கின்றன.

புகைப்படங்கள் உபயம்: இணையம்

0 பின்னூட்டங்கள்: