> குருத்து: கவனச் சிதறல்

May 8, 2023

கவனச் சிதறல்


உலகம் முழுவதும் கவனச் சிதறலில் மனிதர்கள் சிரமப்படுகிறார்கள். ஆற்றல் குறைபாடு வருகிறது. வீடுகளில் ஆளுக்கு ஒரு செல்போனை வைத்துக்கொண்டு தனித்தனி உலகில் சஞ்சரிக்கிறார்கள். ஆகையால் குடும்ப ஒழுங்கு கெடுகிறது. இதே தான் அலுவலகங்களிலும் நடக்கிறது. அதைப் பற்றி பல கட்டுரைகள் எழுதுகிறார்கள். விவாதிக்கிறார்கள்.


ஒரு கட்டுரையோ, ஒரு வேலையோ செய்து முடித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் மல்லுக்கட்டும் பொழுது தான் நாம் இயல்பாகவே எவ்வளவு கவனச்சிதறலோடு வாழ்கிறோம் என்பதே நமக்கு நன்றாக உரைக்கிறது.

கவனச்சிதறல் பல நிறுவனங்களில் பெரிய பிரச்சனையாய் மாறியிருக்கிறது. ஆகையால், சில நிறுவனங்களில் செல்போன்களை அலுவகத்தில் உள்ளே நுழையும் பொழுதே, அதற்கான ஒரு ஏற்பாட்டை உருவாக்கி, வாங்கி வைத்துவிடுகிறார்கள். அவசரத்துக்கு அலுவலக போனை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு சில நிறுவனங்களில் நடைமுறையாக பார்த்திருக்கிறேன். இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு அலுவலகத்தில், வேலை நேரங்களில் பர்சனல் போன் பயன்படுத்தக்கூடாது என விதியை அறிவித்தார்கள். அது வேலை செய்பவர்களின் மத்தியில் பெரிய சலசலப்பை உருவாக்கியது. ஒருவர் அதையே காரணம் காட்டி வேலையை விட்டுப் போனார்.

வேலை செய்யும் நபர்களுக்கும், வேலை நேரத்தில் சொந்த அழைப்புகளை அதிகப்பட்சம் தவிர்க்கவேண்டும் என்ற நிதானம் இல்லை. ஆகையால் வேலை கெடுகிறது. வேலையின் தரம் குறைகிறது என்பது நிதர்சனம்.

வளர்ந்த நாடுகளில் இதை எப்படி கையாள்கிறார்கள் என்றால்... வேலை நேரத்தில் சொந்த அழைப்புகளை முற்றிலும் கவனமாக தவிர்த்துக்கொள்கிறார்கள். வேலையை முடித்து அலுவலகத்தை விட்டு நகர்ந்துவிட்டால், அலுவலக அழைப்புகளை முற்றிலும் கவனமாக தவிர்த்துக்கொள்கிறார்கள். பொதுவாக அலுவலத்தில் இருந்து அழைப்பே வராது என சொல்லலாம்.

கவனச்சிதறல் என்பது ஒரு மிகப்பெரிய சிக்கலாக நம் முன்வந்து நிற்கிறது. அதை எதிர்கொள்ளவேண்டும். இதை தனிப்பட்ட நபர்களும், நிறுவனங்களும் ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும்.

உங்கள் தனிப்பட்ட அனுபவம் எப்படி? அலுவலக நிலை எப்படி?

0 பின்னூட்டங்கள்: