> குருத்து

December 9, 2008

‘பந்தய ஒப்பந்தங்களின்’ தன்மை



தோழி ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஒரு நிறுவனம். அதில் கணிப்பொறி வல்லுநர்கள் 10 பேர் வேலை செய்தார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பின்பு, 7 வல்லுநர்களை தூக்கி கடாசிவிட்டார்கள். குறைந்த பட்சம் 3 நபர்கள் இருந்தால் தான் நிறுவனம் இயங்கமுடியும் என்பதால், விட்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த 3 பேரில் ஒருவர் காலையில் வேலைக்கு கிளம்பும் பொழுது, தன் துணைவியாரிடம் “இப்ப வேலை இருக்கு என்ற நம்பிக்கையில் கிளம்புறேன். மாலை வரும்பொழுது வேலையில்லாமல் கூட போகலாம்” என சொல்லி பதட்டத்துடன் தான் தினம் விடை பெற்று போகிறாராம்.

இப்படிப்பட்ட கதைகள் இப்பொழுது அமெரிக்காவில் எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏற்கனவே தற்கொலைகள் நிறைய நிகழ்கிற பூமி. இப்பொழுது, இன்னும் பல நிகழும்.

*****

பந்தய ஒப்பந்தங்கள் என்றால் என்ன? பந்தய ஒப்பந்தங்கள் எதில் போடப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். சரக்கை பாதிக்கிறதா? இல்லையா எனப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக... பந்தய ஒப்பந்தங்களின் தன்மை என பார்க்கலாம்.

1900 காலத்தில் நிதி மூலதனம் தேசிய அரசுகளின் அடிப்படையில் அமைந்து, அவற்றால் வளர்க்கப்பட்ட ஒன்று.

வங்கி மூலதனம், தொழில் மூலதனம் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைப்பு.

இத்துடன், நவீன காலத்தில் பல புதிய மூலதன நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவைகள் காப்பீட்டு கம்பெனிகளின் நிதி, ஓய்வூதிய நிதிகள், நல நிதியங்கள் (Mutual Funds), வேலியிடப்பட்ட நிதியங்கள்.

இன்று, நிதி மூலதனமானது, எந்த நாட்டுக்கானது என்ற முத்திரையின்றி, ஒரு சில ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவோடு மட்டுமே இயங்குகிறது என்பதோடல்லாமல் ஒரு சர்வதேச தன்மையுடன் விளங்குகிறது.

அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிதியை தங்குதடையின்றி உறிஞ்சுகிறது. நொடிக்குள் அது உலகின் எந்தப் பகுதிக்கும் செல்கிறது. பிரமாண்டமான அளவுகளில் நடக்கிறது. குறுக்கும் நெடுக்கும் பரந்து விரிந்து அதிகமான ஓட்டமும் சுழற்சி கொண்டதாக, பரபரப்பும் அலைபாயும் தன்மையும் கொண்டதாக, வெள்ளப்பெருக்கு போல எதிர்வருவனற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகும் ஆற்றல் கொண்டதாக, திடீர் திடீரென ஏறி இறங்கும் இயல்பு கொண்டதாக (Volatile) இருக்கிறது.

சில தேசிய அரசுகளின் வருமானத்தை விட் அதிக தொகை கொண்டதாகவும், செயற்கைக் கோள் – கணிப்பொறி போன்ற நவீன சாதனங்களால் உலகளாவிய இணைப்பும் கொண்டதாக இருக்கிறது.

December 3, 2008

என்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்



ஒரு மாபெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் பொழுது, தவறுதலாய் ஒரு குண்டு வெடிக்கும் அல்லவா!

அதுபோல, மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு வெள்ளோட்டமாக இருந்தது என்ரான் திவால்.

****

அமெரிக்காவில், இன்றைக்கு பல முதலீட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் திவலாகி விட்டன. மேலும், பல நிறுவனங்கள் மஞ்சள் கடிதாசி கொடுக்க தீவிரமாய் பரிசீலித்து வருகின்றன.

அமெரிக்க “தேசிய பொருளாதார குழு” நிலைமையை ஆய்வு செய்து, இரண்டாம் உலகப்போருக்கு பின், 70, 80 களில் இருமுறை (சமாளிக்க கூடிய) நெருக்கடியை அமெரிக்கா சந்தித்தது. இப்பொழுது நிகழ்ந்திருக்கிற சரிவு மிகப்பெரிய சரிவு. இப்பொழுது தொடர்கிற மந்தநிலை அடுத்த ஆண்டு (2009 ) மத்தியில் வரை நீடிக்கும் என அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

இந்த அறிக்கையை வெள்ளை மாளிகையும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. (2, டிசம். 2008)

இந்த அறிக்கை பங்குதாரர்களுக்கு ஒரு ஆறுதல் அளிப்பதற்காக தான். அடித்த கொள்ளை கொஞ்சமா! இன்னும் பல மாதங்கள் நீடிக்கும்.

****

இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என தேடுகிற பொழுது, 2001-2002ல் நிகழ்ந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘என்ரான் திவால்’ பின்னணி இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

என்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளும், கணக்கீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டு வங்கிகளும் கூட்டுச் சேர்ந்து பல சித்து வேலைகள் செய்து நிறைய கொள்ளையடித்து தான் திவாலாக்கியிருக்கிறார்கள்.

தில்லுமுல்லு வேலைகள்

என்ரானின் நிர்வாகிகள் தங்களது துணைக் கம்பெனிகளின் வரவு செலவு அறிக்கைகளை, அடுத்தடுத்து என்ரானின் வரவு-செலவு அறிக்கையிலிருந்து நீக்கினார்கள். இதன் மூலமாக தமது பிரமாண்டமான கடன் பொறுப்புகளை மூடி மறைத்து, தமது வருவாய்களை ஊதிப் பெருக்கி காட்டினார்கள்.


அமெரிக்காவில் முதன்மையான கணக்கீட்டு (ஆடிட்டர்) நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சன் என்ற நிறுவனம் இந்த மோசடிகளை கணக்கு புத்தகங்களில் இருந்து மறைத்து சான்றிதழ் வழங்கியது. இதற்காக இவர்கள் பெற்று கொண்ட வருமானம் – வாரத்திற்கு பத்து இலட்சம் டாலர்கள்.



லாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது. இந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் சம்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.



அமெரிக்காவின் நம்பர் ஒன் என அழைக்கப்படும் சிட்டி குரூப், நம்பர் 2 யாய் திகழ்ந்த ஜே.பி. மார்கன் சேஸ் மற்றும் மெரில் லின்ச் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த கடன்கள் 800 கோடி டாலர்கள். இந்த மிகப்பெரிய கடனை தனது கணக்கேடுகளில் கடனாக காட்டாமல் கொள்முதலாக காட்டினார்கள்.

இந்த முதலீட்டு வங்கிகள் இப்படி பல கூட்டு சதி வேலைகளை செய்ததற்காக இவர்கள் பெற்ற ‘சன்மானம்’ ரூ. 20 கோடி டாலர்கள்.

இவர்கள் செய்தது மோசடி. இதை விட மோசடி என்னவென்றால், என்ரான் வீழப்போவது மற்றவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்திருந்தால், கையில் வைத்திருந்த என்ரானின் கடன் பத்திரங்களை பெருமளவில் நல்ல விலைக்கு விற்று தள்ளிவிட்டார்கள்.

இவர்களால் இப்படி ஏமாற்றப்பட்ட பல ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் இந்த மூன்று முதலீட்டு வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றக் குழு மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்படியாக 7000 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்டிருந்த என்ரான் என்ற நிறுவனத்தை பூஜ்ய நிலைக்கு கொண்டுவந்து கவிழ்த்துவிட்டார்கள். இதில் பல கோடி கொள்ளையடித்தவர்கள் – என்ரானின் முதன்மை நிர்வாகிகள், கணக்கீட்டு நிறுவனம், முதலீட்டு நிறுவனங்கள்.

பணத்தை இழந்து போண்டியானவர்கள் - தனது சேமிப்பு பணம், ஓய்வூதிய பணத்தையெல்லாம் பங்குகளாய் வைத்திருந்த தொழிலாளர்கள் (என்ரான் இல்லாமல் போனதால், வேலையும் இல்லை) மற்றும் இதன் பங்குகளை நம்பி வாங்கி ஏமாந்து போன பொதுமக்கள்.

இந்த மோசடிக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா! கிடைத்தது! எப்படி?

என்ரான் மோசடியில் ஈடுபட்டு பல கோடி சுருட்டிய நிர்வாகிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவிவிட்டார்கள்.

பல கோடி வருவாய் அடைந்த ஆர்தர் ஆண்டர்சன் கணக்கீட்டு நிறுவனத்தை ஊத்தி மூடிவிட்டார்கள். வேறு பெயரில் அவர்கள் புதிய நிறுவனத்தை தொடங்கி விட்டார்கள்.



பல கோடி லாபம் பார்த்த முதலீட்டு வங்கிகள் தான் இன்றைக்கு மஞ்சள் கடிதாசி கொடுத்து இருக்கின்றன. இப்படிபட்ட “நல்ல” நிறுவனங்களை கைதூக்கி விடுவதற்காக தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து 70000 கோடி டாலர் கொடுக்க ‘மக்கள் பிரதிகள்” ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அமுல்படுத்தியும் வருகிறார்கள்.

(முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக்கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன? என்று கேட்டார் மார்க்ஸ்.
மார்க்ஸின் கூற்றை நீருபித்துவிட்டார்கள்)

உண்மையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்களுக்கு.... பட்டை நாமம்.

இது அநீதி என்கிறீர்களா?

இது தான் முதலாளித்துவ நீதி.


ஆதாரம் :

ராபர்ட் பிரென்னர் – “அகெய்ன்ஸ்ட் த கரண்ட்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய “ஊதிப் பெருக்கப்பட்ட என்ரான்: ஊழல்களும் பொருளாதாரமும்” கட்டுரையிலிருந்து.

நன்றி :

“இந்திய பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற பத்திரிக்கை வெளியிடும் “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக்குழு, மும்பை.

தமிழாக்கம் – புதிய ஜனநாயகம்.

December 2, 2008

பெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி!

கச்சா பேரல் விலையை தீர்மானிப்பதில் வாஷிங்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள இரண்டு சந்தைகள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த சந்தையை நிதிமூலதன கும்பல்கள் தான் ஆட்டி படைக்கின்றன. கச்சா பேரல் விலையில் ஊக வணிகம் விளையாடுகிறது என்பதை சமீபத்தில் சிதம்பரம் ஒப்புக்கொண்டார்.

உலக சந்தையில் கச்சா பேரல் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் பாதிக்காமல் இருக்க... அரசு பெட்ரோல் விலையை முன்பு நிர்ணயம் செய்தது. இடைக்காலத்தில் அதில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, உலக சந்தையில் என்ன விலை விற்கிறதோ அதற்கேற்றார் போல விலை நிர்ணயம் செய்யும் நிலை வந்தது. 160 டாலருக்கும் மேல் விற்ற கச்சா பேரல் விலை இன்றைக்கு 50 டாலருக்கும் கீழே விற்கிறது. நடப்புக் கொள்கைப் படி கூட இந்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க மறுக்கிறது.

ஏறியிருக்கும் பொழுது, நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தன. இறங்கி நிற்கும் பொழுது, இந்திய அரசு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.

****

தொடரும் கட்டுரை "லைட் லிங்க்" என்பவர் எழுதியுள்ளார்.

முதலாளிகளுக்கு ஒரு சிரமம் என்றால், அரசு பதறுகிறது. விலையை குறைக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு சிரமம் என்றால், அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

****

முதலாளிகளுக்கு உதவும் பொருட்டு விமான எரிபொருள் விலையை சரிபாதிக்கும் கீழாக குறைத்துள்ள மன்மோகன் சிங் அரசு, சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாடத் தேவைகளுள் ஒன்றான பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க மறுத்துவருகிறார்.இவருக்கும், சிதம்பரத்திற்க்கும் இந்திய ஏழைகள் கண்ணுக்கு தெரிவதே இல்லை. இவர்கள் போட்டுள்ள கண்ணாடிகளின் சிறப்பம்சம்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையிலும் கூட உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க மன்மோகன் சிங் அரசு மறுத்து வருகிறது. கடந்த வாரத்தில் சர்வதேச எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்கும் கீழாக வீழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 123 டாலரை தொட்ட போது, உள்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை பேரல் ஒன்றுக்கு 67 டாலர் அளவிற்கே இருக்கிறது என்ற உண்மையை அரசே ஒப்புக் கொண்ட போதிலும் கூட, சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மறுப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் 5 முறை, விமான போக்குவரத்து நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் (ஏவியேசன் டர்பைன் ஆயில்) விலையை மன்மோகன் சிங் அரசு குறைத்துள்ளது. ஒரு கிலோ லிட்டர் (1000 லிட்டர்) ரூ.71,000 ஆக இருந்த விமான எரிபொருள் விலை தற்போது கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.43,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான எரி பொருளுக்கு இறக்குமதி வரி 5 சத வீதத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி தனியார் விமான கம்பெனிகளுக்கு மிகப்பெரும் அளவில் சலுகை அளித்திருப்பதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகள் சந்திக்கும் மிகப் பெரும் இழப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கோ, நிதியமைச்சரோ யோசிக்க தயாராக இல்லை.

ஆனால் அதே நேரத்தில் மன்மோகன் சிங் அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், அதையொட்டி அனைத்து விதமான பொருட்களின் விலை உயர்வாலும் மிகக் கடுமையான துயரத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் தரும் பொருட்டு, பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மறுப்பதன் மூலம் ஒரு ஈன அணுகுமுறையை பின்பற்றுகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பதே நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல பலனை ஏற்படுத்தும்; அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளையும் குறைக்க உதவும்.

உலகெங்கும் பெட்ரோல் விலை குறைப்பு

உலக நாடுகள் பலவும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலையைக் குறைத்துள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மட்டும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ), பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, கென்யா போன்றவையும் பெட்ரோல் விலையைக் குறைத்த நாடுகளின் பட்டியலில் அடங்கும். பெட்ரோல், டீசல் விலையை மலேசியா கடந்த செவ்வாயன்று மேலும் குறைத்தது. கடந்த ஆகஸ்ட்டுக்குப் பின் மலேசியா பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பது இது ஆறாவது முறையாகும்.

பாகிஸ்தானில் பெட்ரோல் 13 சதவீதமும், டீசல் 11.6 சத வீதமும் குறைக்கப்பட்டது.
வங்கதேசம் முறையே 10.3 சத வீதமும் 12.7 சதவீதமும் குறைத்தது.

இலங்கையில் நவம்பர் முதல்வாரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 30 ரூபாயும் பெட்ரோல் விலை 15 ரூபாயும் குறைக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸில் கடந்த அக்டோபருக்குப் பின் ஐந்து முறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
கென்யாவில் பெட்ரோல் 5 சதவீதம் டீசல் 4 சதவீதமும் குறைக்கப்பட்டது.

அயர்லாந்தில் பெட்ரோல் விலை 3 சதவீதம் குறைக்கப் பட்டது.

கென்யாவிலும் அயர்லாந்திலும் கூட சில்லரை விற்பனை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பெட்ரோல் - டீசல் விற்பனை செய்யும் தனியார் கம்பெனிகள் நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலேயே எண்ணெய் உற்பத்தி நாடுகளும், பெட்ரோல் சில்லரை விற்பனை விலையைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

துபாயில் டீசல் விலை காலனுக்கு 60 திர்ஹம் (துபாய் நாணயம்) குறைக்கப்பட்டது. கடந்த ஜூலைக்குப் பின் 10 முறை எரிபொருள் விலை இங்கு குறைக்கப்பட்டது!

கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் அக்டோபருக்குப் பின் பெட்ரோலியப் பொருட்களின் விலை 16.7 சதவீதம் குறைக்கப்பட்டது!

சீனாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை விலை குறையத் தொடங்கியது.
உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சாதனையை உலகிலுள்ள எந்த நாடும் நிகழ்த்தியதில்லை.

நன்றி : http://lightlink.wordpress.com