> குருத்து: நிதி மூலதனம்
Showing posts with label நிதி மூலதனம். Show all posts
Showing posts with label நிதி மூலதனம். Show all posts

October 19, 2010

தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை சூறையாட துடிக்கும் "மக்கள் நல அரசு"!



தொழிலாளர்களின் சேமிப்பு பணமான வருங்கால வைப்பு நிதியின் (Provident Fund - PF) இன்றைய கையிருப்பு ரூ. 5 லட்சம் கோடிகள். இந்த பணத்தை பங்கு சந்தை சூதாட்டத்தில் இறைக்க சொல்லி, மத்திய அரசு தனது நிதி அமைச்சகம் மூலமாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை வற்புறுத்துகிறது.

கடந்த 58 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி பணத்தை அரசு வங்கியான எஸ்.பி.ஐ. தான் நிர்வகித்து வந்தது. இவ்வளவு பணமும் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதே என நினைத்த மன்மோகன்சிங் அரசு, 2008ல் முதன்முறையாக பி.எப். பணத்திலிருந்து 2.5 லட்சம் கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ புரூடன்சியல், HSBC போன்ற தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தூக்கி தந்தது. அந்த பணத்தின் கதியே இன்றைக்கு என்ன நிலை என்று தெரியவில்லை.

அந்த சமயத்தில், நாடு முழுவதும், தொழிற்சங்கங்கள் தனது எதிர்ப்பை காட்டின. இப்பொழுது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மீதியுள்ள பணத்தையும் பங்கு சந்தையில் கொட்ட காய் நகர்த்துகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், "பங்குச் சந்தையில் போடலாம்! ஆனால், அப்படி போடுகிற பணத்திற்கு அரசு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது" என்று பி.எப். நிதியை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் வாரியம் அரசுக்கு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் நிதி மூலதன சூதாடிகள் பந்தய ஒப்பந்தங்கள் மூலமாகவும் பல்வேறு வகைகளில் விளையாடி தான், உலகமே நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. அதிலிருந்தே முதலாளித்துவ உலகம் மீளமுடியாமல் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறது. சீட்டு விளையாடுபவன் விளையாடி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கை நடுங்கும் அல்லவா! அது போல உலகம் முழுவதுமே நிதி மூலதன சூதாடிகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக பணம் இருக்கிறதே அதையெல்லாம் பங்குச்சந்தையில் கொட்டு என எல்லா அரசுகளையும் மிரட்டி வருகிறார்கள். இந்தியாவில், மன்மோகன் சிங் தான் நிதிமூலதன சூதாடிகளுக்கு நல்ல விசுவாசமான ஆள் அல்லவா! அதனால், பி.எப். நிதியை சூறையாட துடியாய் துடிக்கிறார்.

இதன் அபாயத்தை தொழிலாளர்கள் உணர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். ஏற்கனவே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் "உத்திரவாதம் தா!" என பேச வைத்திருக்கிறது. ஆகையால் தொழிலாளர்கள் இறுதிவரை தொடர்ந்து போராட வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் :

அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது: மத்திய தொழிலாளர் நலத்துறை

January 29, 2010

ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்!


பாகம் 1
பாகம் 2
பாகம் 3

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.

இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.

லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.

கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.

- நன்றி - புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

January 20, 2010

துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! பாகம் 3


பாகம் - 1
பாகம் - 2

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு : 'முதல் நாள் வரை சொர்க்கம். அடுத்த நாள் நரகம்" என மாறி நிற்கிறது துபாய். வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 50% தொடும் என்கிறார்கள். துபாயின் நெருக்கடியில் வேலை இழந்தவர்களின் கதி என்ன? 'சொர்க்கத்தை' எண்ணி வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் கதி என்ன? என்பதையும், "வாயை திறந்து உண்மையை பேசவே கூடாது" என ஊடகங்களுக்காக ஒரு சட்டமே போடப்பட்டிருப்பதையும் இந்த பகுதி விவரிக்கிறது.

****

எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.

மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சகணக்காணோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து
செய்யப்படும். ஒருமாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கத்தேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முடுவதும் அடிமையாக வெலை செய்துதான் கடனை அடைக்கவேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டை விட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு, எவரிடமும் விற்கமுடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடைமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன். வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.

"இருப்பினும் இது தற்காலிக நெருக்கடி தான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டுவிட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்" என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக்கூடாது. மீறினால், இலட்சகணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன.

தொடரும்..

நன்றி : புதிய ஜனநாயகம் - ஜனவரி 2010

January 9, 2010

துபாய் : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! - பாகம் 2!


பாகம் 1
தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு : இந்த நெருக்கடி குறித்து இணையத்தில் தமிழில் தேடிய பொழுது கிடைத்த செய்திகள் மிக குறைவாகவே இருந்தன. ஆங்கிலத்தில் கிடைத்தன. பணிச்சுமையில் என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீளம் கருதி மூன்று அல்லது நான்கு பாகங்களாக பகிர்கிறேன்.
****

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ரஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் துவங்கிவிட்டதால், வீட்டுமனைத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் துபாய் அதிக அழுத்தம் கொடுத்தது.

கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தின் நடுவேயுள்ள முகாம்களில் வாழும் ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்தேர்ச்சி பெற்று அதிக சம்பளம் வாங்கி நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடும்பத்தோடு வாழும் நடுத்தர வர்க்கத்தினர், கோடானு கோடிகளை முதலீடு செய்துள்ள உலகின் பணக்கார வர்த்தகர்கள் எனப் பல்வேறு பிரிவு வெளிநாட்டவர்கள் துபாயில் குடியேறியுள்ளனர். துபாயின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 80 சதவீதம். துபாயில் கட்டப்படும் ஆடம்ப்ர வீடுகளை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்று அரசு ஆசை காட்டியது. இதனால் நடுத்தர வர்க்கமும் பெரும் வர்த்தகர்களும் உல்லாசிகளும் இத்தகைய புதிய ஆடம்பர வீடுகளை வாங்கப் போட்டி போட்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கியில் கடன் வாங்கியாவது வீடு வாங்க முண்டியடித்தனர்.

கடல் நடுவே பேரீச்சை மர வடிவில், உலக வரை பட வடிவில் என்றெல்லாம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டித்தரும் திட்டங்களை பன்னாட்டுக் கட்டுமானக் கம்பெனிகள் அறிவித்தன. கட்டடங்களை எழுப்பும் முன்னரே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுகணக்கில் காத்திருக்க வேண்டும். நம்ம ஊரில் தேக்குப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ஒரு மோசடித் திட்டத்தை அறிவித்து, இதோ உங்கள் தேக்கு கன்று வளர்ந்து வருகிறது என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி ஏய்த்ததைப் போலத்தான், வெறும் கட்டடப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை வீட்டுக்காகப் பலரும் பணத்தைக் கட்டினர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்கிக் கட்டினர்.

"இன்றைய உலகில் வீட்டுமனை-கட்டிடத் தொழிலில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது. வீடுகளின் விலை குறைந்ததாக வரலாறில்லை" என்ற பங்குச் சந்தை சோதிடர்கள் கூறும் அருள்வாக்கை பலரும் நம்பினர். பங்குச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டு வீட்டுமனை விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்த அனைத்துலக ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோடிகோடியாகக் கொள்ளையடித்த பிறகு, உண்மை மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. முதலீடு செய்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வரப் போகும் வீழ்ச்சியை அறிந்து முன்கூட்டியே தமது முதலீடுகளை திரும்ப எடுத்து சென்றன. இதனால், கடன் சுமை அதிகரித்து துபாய் வேர்ல்டு என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் திவாலாகியது.

தொடரும்..

January 5, 2010

துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு :
துபாயில் பொருளாதார நெருக்கடி என ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. வழக்கம் போல இந்த நெருக்கடியால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டனர்.

துபாயில் வேலை செய்யும் ஆசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகம். பக்ரீத் மற்றும் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர்களுக்கெல்லாம்... "வீட்டிலேயே இருங்கள். வந்துவிடாதீர்கள்" என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மெயில் அனுப்பின; தொலைபேசியில் செய்தி சொல்லின.

இந்த நெருக்கடி குறித்து இணையத்தில் தமிழில் தேடிய பொழுது கிடைத்த செய்திகள் மிக குறைவாகவே இருந்தன. ஆங்கிலத்தில் கிடைத்தன. பணிச்சுமையில் என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீளம் கருதி மூன்று அல்லது நான்கு பாகங்களாக பகிர்கிறேன்.
****

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல் அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் "ஜுமெரா பாம்" எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலை ஏற்றுமதி மையம் - எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்த என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரக சமஷ்டி கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம் தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீஸ்வரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர்.

ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "துபாய் வேர்ல்ட்" என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. நகீல் என்ற அரசின் துணை நிறுவனம் இத்திட்டத்திற்கான கடன் பத்திரங்களை "சுகுக் பாண்டுகள்" என்ற பெயரில் 2004-ல் வெளியிட்டது. அது 2009-ல் முதிர்வடைவதால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டும் ஆனால், நகீல் நிறுவனத்தால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை.

துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது.

இந்தச் செய்தி பரவி, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதும் தட தட வென ஆரம்பித்து விட்டது சரிவு. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அவசரமாக திரும்ப எடுத்துச் செல்ல தொடங்கின. முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும் பொழுது மீண்டும் சரிவு ஏற்பட்டது.

தொடரும்..

November 22, 2009

பொருளாதாரம் - சில குறிப்புகள்

பொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.

பொருளாதார செய்திகளை பல தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.

இதற்கு முன்பாக பொருளாதாரம் தொடர்பாக, கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுதும், வேறு சில பதிவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நன்றி சொல்லி வெளியிட்ட பொழுதும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் நண்பர்களும், தோழர்களும் தெரிவித்திருந்தார்கள்.

குருத்து தளத்தில் அரசியல், திரைப்படம், பண்பாடு என தலைப்புகளில் எழுதினாலும், கூடுதலாக பொருளாதார விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். (நமக்கு எது உருப்படியாக வருகிறதோ அதையே செய்வோம் என்ற நல்லெண்ணம் தான்) உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக படிக்கும் விதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

கட்டுரைகளின் தலைப்புகளை கிளிக்கினால், அந்தந்த கட்டுரைகளுக்கு இட்டுச்செல்லும்.

கடந்த பதிவுகளில்... எழுதப்பட்ட பொருளாதார கட்டுரைகள்:

* பணவீக்கம் என்றால் என்ன? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* வறுமைக்கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவ பொருளாதாரம்

* பங்குச்சந்தை சூதாட்டம்

* பங்கு சந்தையும் குரங்கு கதையும்

* டாலர் யானை புகுந்தாலும் நட்டம்; வெளியேறினாலும் நட்டம்

* ஊக வணிகம் - பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?

* கொள்ளையடிப்பது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!

* பந்தய ஒப்பந்தங்கள் - சில குறிப்புகள்

* பெட்ரோலில் முடிந்தமட்டும் கொள்ளையடி! - பதிவர் லைட்ங்க்

* என்ரான் ஊழல் - அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்!

* பந்தய ஒப்பந்தங்களின் தன்மை

* இந்திய வளர்ச்சியின் உண்மைநிலை - டாக்டர் அர்ஜூன் சென்குப்தா - மொழிபெயர்ப்பு - லைட்ங்க்

*. அந்நிய முதலீடு - சில குறிப்புகள் - பதிவர் லைட்ங்க்

* அமெரிக்க திவால் - பொன் முட்டை இடும் வாத்து" திட்ட ஊழல்

* அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவம் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.

* அமெரிக்க திவால் - மார்க்சியமே உரைகல் - புதிய ஜனநாயகம்

* சத்யம் கம்யூட்டர்ஸ் - இன்னொரு என்ரான் ஊழல்

* கார்ப்பரேட் கிரிமினல்கள் - பதிவர் லைட்ங்க்

* பற்றி பரவுகிறது வர்க்கப் போராட்டம், அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்.

* நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால் - தட்ஸ்தமிழ்

* காங்கிரசு அரசின் புள்ளிவிவர பித்தலாட்டங்கள் - பதிவர் லைட்ங்க்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும் - பாகம் 2

* தங்கம் விலை எகிறுவது ஏன்? -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால்? - தினமணிக்கதிர்

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2 - தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 3 - தங்கம் எதற்காக? கட்டுரையின் தொடர்ச்சி - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

January 6, 2009

அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”


இன்றைக்கு அமெரிக்க பொருளாதார திவாலுக்கு பிறகு, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஏற்கனவே பலமுறை பேசி, பேசி ஓய்ந்து புளித்துப்போன விசயங்கள். முதலாளித்துவம் அதன் தலை முதல் வால் வரை அனைத்தும் அழுகிவிட்டது.

மீண்டும் மீண்டும் எழும் பொருளாதார சுனாமியைத் தவிர்க்க இதோ மார்க்சியம் தீர்வு சொல்கிறது.

"உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு".

மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். நன்றாக படிக்கட்டும்.

இனி மார்க்சியம் தான் உலகை ஆளும்.


October 20, 2008
Banking crisis gives added capital to Karl Marx’s writings
Roger Boyes in Berlin


Bankers of the world, unite! You have nothing to lose but your bonuses, houses in Esher, holidays in the Caribbean and your Jermyn Street shirts. The upside is that you have the time, at last, to read the complete works of Karl Marx.
The prophet of revolutionaries everywhere, the scourge of capitalism, is enjoying a comeback.
In Germany Das Kapital, which for the past decade has been used mainly as a doorstop, is flying off the shelves as the newly disenfranchised business class tries to work out the root of the present crisis.
“Marx is fashionable again,” declares Jörn Schütrumpf, head of the Berlin publishing house Dietz, which brings out the works of Marx and his collaborator Friedrich Engels. Sales have trebled – albeit from a pretty low level – since 2005 and have soared since the summer.... continues.
http://business.timesonline.co.uk/tol/business/economics/article4974912.ece
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி தொடர்கிறது)

மார்க்சியமே உரைகல்


"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.

ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.

பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட்டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.

இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி
டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.

ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!

• செல்வம்

நன்றி :
புதிய ஜனநாயகம் – நவம். 2008

January 2, 2009

வங்கிகளின் ‘சேவை’த் தரம்?


பாரத ஸ்டேட் பாங்கு (SBI) வங்கிக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் கோபபட்டிருப்பீர்கள் அல்லது புலம்பியாவது இருப்பீர்கள். உண்மையா? இல்லையா?

இந்தியாவின் முன்ணணி வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர் சேவையில் எரிச்சல் தான் ஊட்டுகின்றன.


***

இந்த பதிவிற்கான தேவை - எஸ்.பி.ஐ. இன்றைக்கு தந்திருக்கிற நாளிதழ்களில் ஒரு விளம்பரம் தந்திருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி தனது 11,111 வது வங்கி கிளையை அசாம் மாநிலத்தில் சோனாபூரில் துவக்கி வைக்க.. உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களை அழைத்து இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் “வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே நேசமிகு நெருக்கத்தை பராமரித்து வருகிறது” என வாசகம் வருகிறது.

எஸ்.பி.ஐ - அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் வழங்குவது என அரசினுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும், இந்தியாவில் நிறைய கிளைகள், நிறைய ஏடிஎம் மையங்கள் அதிகம் வைத்திருப்பது எஸ்.பி.ஐ தான். இதனால் எப்பொழுமே கூட்டம் நிரம்பி வழிகிறது.

பணம் கட்ட, டிடி எடுக்க என டோக்கன் வாங்கினால் குறைந்த பட்சம் நமக்கு முன்னால் 50
பேர் காத்திருக்கிறார்கள். விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் போனால்.... 100 க்கும் குறையாமல் காத்திருக்கிறார்கள். கிட்டதட்ட அந்த வேலையை முடிக்க அரை நாள் ஆகிவிடுகிறது. காத்திருக்கும் பொழுதில் அங்கு அமர்ந்திருக்கிற எல்லா வாடிக்கையாளர்களுமே புலம்பித்தள்ளுவார்கள். டென்சனுடன் அமர்ந்திருப்பார்கள்.

மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என தேவையான ஆட்களை நியமிக்காமல், வங்கிக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களையும் காக்க வைப்பது மக்களின் நேரத்தை மதிக்காத போக்குதான்.

எஸ்.பி.ஐ மட்டுமில்லை ஐ.சி.ஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களை பல்வேறு வேலைகளில் அலைகழிக்கிறார்கள்.

எப்பொழுதும் கூட்டமாய் இருக்கிற எங்கள் பகுதியில் உள்ள இரண்டு இந்தியன் வங்கி-களில்
பியூனே நியமிக்காமல், வாடிக்கையாளர்களையே அங்கே போய் கையெழுத்து வாங்கி வாருங்கள் என பியூனாக பயன்படுத்திக்கொள்வார்கள். இதை அங்குள்ள வங்கி சீனியர் மேனேஜரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறேன். நேரிடையாக பதில் சொல்லாமல், மழுப்பலாய் பதில் சொன்னார்.

இதுதவிர, வாடிக்கையாளர்களை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பார்த்து, இவர்கள் கையாளுகிற விதம் மக்களைவிட “தாம் மேம்பட்ட மக்கள்” என்கிற போக்கு தெரிகிறது. இதற்கு பல்வேறு உதாரணங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

சமகால நிலைமை என்னவென்றால், இந்திய அரசு பல வழிகளில் நிதிமூலதன கும்பல்களுக்காக வங்கி நடவடிக்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

உதாரணமாய், வருங்கால வைப்பு நிதி பணத்தை எஸ்.பி.ஐ. வங்கி தான் பாரமரித்து வந்தது. பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அரசு அதை கண்டுகொள்ளாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியை சரி செய்கிறேன் என்ற பெயரில், வைப்புநிதியை கையாள ஐசிஐசிஐ, ஹச்.எஸ்.பி.சி, ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்து கொடுத்தது.

இந்த போக்கு தொடரும் பட்சத்தில்... ஒருநாள் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் போல தேசிய வங்கிகளும் மற்ற வங்கிகளும், திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை வந்தாலும் வரலாம்.

மக்கள் தான் மகத்தானவர்கள். மக்களோடு ஐக்கியப்பட்டு அரசு செய்யும் தில்லுமுல்லுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி போராட்டங்களை கட்டியமைத்தால் மட்டுமே இந்த நிலை வராமல் தடுக்க முடியும். இல்லையெனில், இந்த வங்கி ஊழியர்கள் தனிமைப்பட்டு வேலை இழந்து தெருவில் நிற்கும் காலம் வெகுதூரமில்லை.

December 30, 2008

முதலாளித்துவம் - ஆளும் தகுதியை இழந்துவிட்டது!

சென்னையில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள 30 பேர் வேலை செய்யும் அந்த சிறிய தொழிற்சாலையின் நிர்வாகியை வேலை நிமித்தம் சந்திக்க சென்றிருந்தேன். அங்கே ஒரு தொழிலாளி அவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தார்.

“திடீரென வேலையை விட்டு நிற்க சொன்னால் எப்படி சார்? வெளியில பல கம்பெனிகளில்ல லே-ஆப் விட்டுட்டாங்க! எங்கே போய் வேலை தேடுவேன்?”

“நம்ப கம்பெனி நிலைமை உனக்கே தெரியும். இரண்டு மாசமா சம்பளத்தை ரெண்டா பிரிச்சு தர்றாங்க! நீயாவது இந்த மாசம் சம்பளம் வாங்கிட்ட! எனக்கு இன்னும் தரவேயில்ல! வர்ற மாசம் இன்னும் மோசமாகும். அதனால் தான் இப்பவே சொல்றேன்”

“எதுக்கு என்னை நிப்பாட்டிறீங்க! வேலை அதிகமா இருந்தப்ப நீங்க எப்பவெல்லாம் ஓவர் டைம் பார்க்க சொன்னப்ப எல்லாம் தட்டாம பார்த்தேன். இப்ப போக சொன்ன எப்படி சார்?”

“இது உனக்கு மட்டுமல்ல! ஏற்கனவே வேலை இல்லாம 7 பேரை அனுப்பியாச்சு. அடுத்த மாசம் என்னையே போக சொல்லக்கூட வாய்ப்பு இருக்கு! இதுக்கு மேலே நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!”

அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல், கண்கலங்கி நின்றிருந்தார்.
***

இந்த காட்சி, மார்க்சிய ஆசான்கள் சொன்னதை நினைவுப்படுத்தியது.
1600-h/marx_engels.jpg">
“ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் அழித்திட விரும்புகிறோம்”

- மார்க்ஸ், எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. பக். 67 -1847ம் ஆண்டு.
***

இந்தியாவில் உலகளாவிய பொருளாதார சரிவினால் பாதிப்பு இந்தியாவிற்கு கொஞ்சம் தாமதமாக தெரியும் என்றார்கள். நன்றாகவே தெரிய தொடங்கிவிட்டது. இப்பொழுதே பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்திக்கொண்டேயிருக்கின்றன. அமெரிக்காவில் வேலை இழந்தவர்களின் எண்ண்க்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. தொட்டிருக்கிறது. நம் நாட்டில் ஏற்கன்வே வேலையில்லா திண்டாட்டம் நிறைய. இப்பொழுது பல கோடிகளாக நிலை மோசமடைந்திருக்கிறது.

வாகன தொழில்

அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் தொடங்கி, இந்தியாவில் டாடா மோட்டார்ஸ்,
ஹீண்டாய், அசோக் லேலேண்ட் நிறுவனங்கள் தயாரித்த வாகனங்கள் விற்காமல் செட்டிலேயே தூங்குவதால் மாதத்தில் பாதி நாள் தான் இயங்குகின்றன.

அரசு கலால் வரியை 4% குறைத்து இருக்கிறது. எல்லா கார் நிறுவனங்களும் விலையிலிருந்து 20
ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை குறைத்து இருக்கின்றன. இருந்தும் விற்பனையில் பெரிய முன்னேற்றமில்லை.

இதை நம்பிக்கொண்டிருந்த பல நூறு சிறு தொழிலகங்கள் இயங்க முடியாமல் மூடப்பட்டு விட்டன. அப்படியே சில வேலைகள் செய்தாலும், வேலை தருகிற நிறுவனங்கள் முன்பெல்லாம் 1 மாதத்தில் பணம் தருவார்கள். இப்பொழுது 3 மாதங்கள் ஆகும். இந்த நிபந்தனையில் செய்வதானால் செய். இல்லையென்றால் விடு என்கிறார்களாம்.

மென்பொருள் துறை

உலக வங்கிக்கான பணிகளை சத்யம் கம்யூட்டர்ஸ் செய்துவந்தது. கடந்த வாரம், தனது பணிகளை உடனே நிறுத்த சொல்லியும், மேலும் 8 ஆண்டுகளுக்கு தடைசெய்திருக்கிறது. டேட்டா பேஸ் திருடு போனதாய் குற்றசாட்டும் சொல்லியிருக்கிறது. இதனால் சத்யம் கலகலத்துப் போயிருக்கிறது.

யாஹீ சர்வதேச அளவில் 10% வேலை நீக்கமும், இந்தியாவில் 3% வேலை நீக்கமும் செய்திருக்கிறது.

இப்படி மென்பொருள் துறையில் தினமும் பலரை வீட்டுக்கு அனுப்பி வைத்துகொண்டிருக்கிறார்கள். பல கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

இது தவிர வேலையில் இருப்பவர்களுக்கு... போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, விடுப்பு சரண்டர் கிடையாது என சலுகைகளை வெட்டுகிறார்களாம். சில நிறுவனங்கள் உணவுக்கு கூட சம்பளத்தில் பிடித்துகொள்கிறார்களாம்.

எல்லா ஊழியர்களும் திட்ட மேலாளர் (Project leader), குழு மேலாளர் (Team Leader) மனம் கோணாமல் நடந்துகொள்கிறார்களாம்.

இது தவிர, செயற்கை வைர பட்டை தீட்டலில் தொழில் பாதிப்பில் 1 லட்சம் பேர் வரை வேலை இழந்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா துறைகளிலும் வேலை நீக்கப் பட்டியல் நீள்கிறது.

பாரளுமன்றத்தில் வேலை இழப்பு பற்றி ஒரு கேள்வி பதிலில் கடந்த ஆகஸ்ட்- அக்டோபர் வரை மட்டும் 65500 பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர்கள் எல்லாம் புள்ளிவிவரத்தை தான் அறிவிக்கிறார்கள். இதற்கான மாற்றுத்திட்டம் என்ன என்பதெல்லாம் அவர்கள் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு வேறு முக்கிய அலுவல்கள் இருக்கிறது.

இந்த மோசமான நிலைக்கு யார் காரணம்?

நிதிமூலதன கும்பல்களும், இதை ஆட்டி வைத்த முதலாளிகளும், பங்குச்சந்தை சூதாடிகளும், இதற்கு வழிவகுத்த முதலாளித்துவ அரசுகள் தான் காரணம். தாராளமயம், தனியார்மயம், உலகமய கொள்கைகள் தான் காரணம்
.



20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிதிமூலதனம் பற்றி லெனின் ஆய்ந்து சொல்லியிருக்கிறார்.

நிதிமூலதனத்தின் வேர் முதலாளித்துவத்தின் உபரி உற்பத்தியில் இருந்து தான் எழுகிறது. சமூக உற்பத்தியில் எழும் மூலதனம், உபரி உற்பத்தியால் மீண்டும் மூலதனம் போட வழி இல்லாமல் நிலை உருவாகுகிற பொழுது, மூலதனத்தை பெருக்குவதற்காக மூலதனம் நிதி மூலதனமாக உருவெடுக்கிறது.

மீண்டும் மீண்டும் இப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எழும் பொருளாதார நெருக்கடி சமூகத்தை அநாகரிக நிலைக்கு தள்ளிவிடுகிறது. கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும், முதலாளித்துவம் பல இலட்சகணக்கான உழைக்கும் மக்களின் உயிர்களை கொன்று குவிக்கிறது.

முதலாளித்துவம் என்றைக்கோ வரலாற்று அரங்கில் காலாவதியாகிவிட்டது. இன்றைக்கு முதலாளித்துவம் அதன் தலையில் தொடங்கி வால்வரை அழுகி நாறி போய்விட்டது. அதற்கு ஒரு பாடைகட்டி புதைகுழியில் தள்ளும் வேலை மட்டும் பாட்டாளிகள் செய்ய வேண்டும்.

அதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், தேசிய முதலாளிகள் என அனனவரும் ஒரு புரட்சிகர கட்சியில் ஒன்றிணைந்து வேலை செய்வது தான் முதன்மையானது.


பின்குறிப்பு : இந்த மோசமான நிலைமையில் சந்தோசப்படுகிற ஒரே நபர் மின்சார துறை
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை மே 2009ல் தரப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அவரால் பிப்ரவர் 1ந் தேதி முதலே தடையில்லா மின்சாரம் தந்துவிடமுடியும். எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

தொழில்கள் முடங்கி, தமிழ்நாட்டில் பாதி சுடுகாடாய் மாறும் பொழுது, எதற்கு மின்சாரம் தேவைப்படும்?

இன்றைய அமெரிக்காவின் நிலை!


இதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

(டிசம்பர் 6ந்தேதி நிலவரப்படி)

America isn't working: jobless total rockets to a 34-year peak
• In one month, 533,000 people join unemployed
• Wall Street pins its hopes on more Fed intervention


“Yesterday's announcement brings the jobless total to 10.3 million people out of a workforce of 154.6 million”

from :

http://www.guardian.co.uk/business/2008/dec/06/usemployment-useconomy

ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா! இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.

இப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.

தொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்

இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க
வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் ""தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?

அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ""நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

""வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்
பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள ""சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!

• செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 29, 2008

அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!

மருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடுத்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.

‘நீங்கள் பங்குச்சந்தை முகவரா?’

‘ஆம்’ என்றார்.

'அமெரிக்கா - மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே! என்ன காரணம் சார்?'

‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.

‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்? ’

‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.

****

இந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.

திவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.

மக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்

லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,
வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.

உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்
திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக
அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.

இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.

இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.

என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், ""தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.

- செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 26, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!

அமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கென்று இலவச உணவு தரும் ஒரு விடுதி இருக்கிறது. தினமும் 1250 நபர்களுக்கு மட்டும் உணவு தருகிறது.

அமெரிக்க திவாலுக்கு பிறகு இன்றைக்கு அந்த விடுதியில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் . தினமும் 1600 பேருக்கு மேலாக குவிகிறார்களாம். சமாளிக்கமுடியவில்லை என அந்த விடுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

- நன்றி - ‘மக்கள் செய்திகள் – 26.12.2008

****

அமெரிக்க மக்களின் நிலை இப்படி பரிதாபமாய் இருக்கிறது. இவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அமெரிக்க அரசு, பல தில்லுமுல்லுகளால் திவாலாகிப் போன அல்லது திவால் நோட்டீஸ் கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து அரசிடம் (மக்களின் வரிப் பணத்தை) நிதி கேட்கும் பல்வேறு முதலீட்டு வங்கிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களளை கை தூக்கி விடுவதற்காக 70000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளித்தர முடிவு செய்திருக்கிறது.

அதில் நடக்கும் தில்லு முல்லுகளை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. முதல் பாதி ஏற்கனவே பதிவில் போட்டாயிற்று. இரண்டாம் பகுதி தொடர்கிறது.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.

பேய் அரசாண்டால்...


இந்த "நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச "நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary)
நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த "வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். (படத்தில் புஷ்யுடன் இருப்பவர்)

1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு
அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.

பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து
கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார்.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.

வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், "பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ""வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.

இந்தச் சட்டம், "மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், "பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை "பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.

இந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக,
நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.(படத்தில் இருப்பவர்)

அமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 23, 2008

இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை!


என்னுடைய பள்ளி பருவ காலத்தில் அம்மாவிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். “அம்மா! ஒரு நாய் வளர்க்கலாம்மா!”

எங்களுடைய மொத்த குடும்பமும் உழைப்பில் ஈடுபட்டாலும், வறுமையில் உழல்கிற குடும்பம்.

அம்மாவிடம் கேட்டதும், உடனே பதில் வரும்.

“உங்களுக்கே சோறு போட முடியல! இதுல அது வேற!”

“எதிர்வீட்டில் இரண்டு நாய் வளர்க்கிறார்களே!” என்பேன்.

“அது ஊரை கொள்ளையடிச்சு கந்து வட்டி-ல வர்ற பணம்டா!. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க!” என்பார் கோபமாய்.

****

இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் மக்களின் நிலை பரிதாபகரமான நிலை.

தங்களுடைய சேமிப்புகளை தொலைத்து, இருக்கிற வேலை இழந்து நிற்கும் அவர்களால் தங்களுடைய செல்ல வளர்ப்பு பிராணிகளை முன்பை போல ஆரோக்கியமான முறையில் கவனிக்க முடியவில்லை.


ஆகையால், பணம் செலுத்த முடிகிறவர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெருவில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுகிறார்கள்.

இந்த வளர்ப்பு பிராணிகள் சாப்பிடும் அளவு மற்றும் கலோரியின் அளவு எவ்வளவு தெரியுமா?

ஓரளவு வசதிப்படைத்த இந்தியர் சாப்பிடும் உணவை விட மூன்றுமடங்கு அளவும், கலோரியும் கொண்டவை.

மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து தங்களுடைய சொந்த நாட்டு மக்களை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொண்டது. மக்களும் நிறைய செலவு செய்து பகட்டாய் வாழ்ந்தார்கள்.

அங்கு கடித்து, இங்கு கடித்து இறுதியில் தன் சொந்த நாட்டு மக்களையே முதலாளித்துவம் கடித்து குதறிவிட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இனியாவது, ஏகாதிபத்திய நாடுகளான தங்கள் நாடுகள் பல்வேறு நாடுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

December 21, 2008

அமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை!

நிதிமூலதன கும்பல்கள் விளையாடி, தங்களுடைய சேமிப்பை எல்லாம் பங்கு பத்திரங்களாக வாங்கி வைத்திருந்து.. இப்பொழுது மதிப்பிழந்து குப்பை காகித பத்திரங்களாக மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கும் அமெரிக்க நடுத்தர வர்க்கம், பல்வேறு தில்லுமுல்லுகளால் செயற்கையாக விலை பன்மடங்கு ஏற்றப்பட்டு, வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்ட அமெரிக்க அடித்தட்டு மக்களின் இன்றைய யதார்த்த நிலை என்ன வென்று தெரியுமா?

ஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே! அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.

பெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்... இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.

(நன்றி – தினமணி கதிர் - 21.12.2008)

ஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? மேலே படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.


நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன "பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.


அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்

1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான "டெரிவேட்டிவ்'' (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு
செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து
கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் "லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்'' என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.


அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "எல்லாம் நானே'' என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.

அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.

இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, ""அனைவருக்கும் வீடு'' என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

பின்குறிப்பு : இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடப்படும்.

December 17, 2008

அந்நிய முதலீடு – சில குறிப்புகள்!



முன்குறிப்பு:

அமெரிக்க திவால் தொடர்பான தேடலில் இந்த கட்டுரை ‘அந்நிய முதலீடு’ பற்றிய சிறு புரிதலை தருகிறது. படியுங்கள்.
***

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகள் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

இந்த கொள்கைகளின் அடிப்படையில்.. அந்நிய முதலீடுகளை இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பல ஆண்டுகளாக வரவேற்று கொண்டிருக்கிறார்கள். இப்படி உள்ளே வருகிற அந்நிய முதலீடுகள் பல்வேறு வழிகளில் தங்களுடைய முதலீட்டை விட அதிகமாய் நாட்டை விட்டு கடத்திவிடுகின்றன.

பல நாடுகளில் இப்படி நிகழ்ந்திருப்பதை, தரவுகளுடன் தொடர்கிற கட்டுரை விளக்குகிறது.

****
இந்த கட்டுரையை லைட்லிங்க் என்ற பதிவர் எழுதியுள்ளார்.
***

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறிய வல்லரசாக வேண்டுமா? வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? தொழில் நுட்பம் தரமாக வேண்டுமா? பொருளாதார முன்னேற்றம் வேண்டுமா? வேண்டும் என்றால் நீங்கள் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த வாசகத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.

முதலில் அன்னிய நேரடி முதலீடு பற்றி பார்ப்போம். ஒரு அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (FDI ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்த பணத்தை முதலீடு செய்வதில்லை.

எந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனவோ, அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்கின்றன.ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அரசு அந்த நிறுவனத்திற்கு மாத மாதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனால் உள் நாட்டில் உள்ள அன்னிய செலாவணி வெகுவாக விரைவில் கரைந்து போய்விடும். இவ்வாறு அன்னிய நேரடி முதலீட்டை காலியாக்கப்படும் அன்னிய செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமகா இருந்தால் அது நாட்டின் வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?

1995-2003 ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால், காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் முதலிய வடிவங்களில் அன்னிய செலாவணியாக வெளியேறிய மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்!

காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். தென் அமெரிக்க நாடான பிரேசிலும் இது தான் நடந்தது. அன்னிய நேரடி முதலீடு பெருக பெருக, நாட்டின் அன்னிய செலாவனி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ.148 கொடியாக இருந்தது. 1998-இல் இது ரூ.28,000 கோடியாக உயர்ந்தது.

(ஆதாரம்: UNCTAD அறிக்கை,2005)



அமெரிக்க என்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய வங்கிகளில் கடன் வாங்கியது. மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க 40% மூலதனத்தை இந்திய வங்கிகளில் கடனை வாங்கியது. அமெரிக்க பங்கு சந்தையில் நடத்திய மோசடி காரணமாக அந்த நிறுவனம் திவாலாகி போனது, அந்த நிறுவனம் இந்தியாவில் வாங்கிய கடன் இந்திய மக்களின் தலையில் விழுந்தது.

அது மட்டுமல்ல இந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பே காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அந்த நிறுவனம் மாதம் தோறும் ரூ. 95 கோடியை விழுங்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்பபடி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீடு நிறுவனங்களால் கிடைத்த தொகையை விட அந் நிறுவங்களுக்கு இந்திய அரசு கொடுத்த காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் அன்னிய செலவாணியே அதிகமாக உள்ளது.

அன்னிய நேரடி முதலீடுகள் இதோடு நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டின் முதலீடு செய்த மூலதனத்தையே படிப் படியாக கடத்திச் சென்று விடுகின்றன.
பன்னாட்டு கம்பெனிகளால் ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு 1,20,000 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுகிறது.

உலகின் மிகப் பெரிய எண்ணை நிறுவனமான எக்சான் தென் அமெரிக்க
நாடான சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்த நிறுவனம் இன்றைக்கும் லாபம் இட்டவில்லையாம் அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில் நடத்துகிறது என்ற கேள்வியெல்லாம் நீங்கள் கேட்க கூடாது.

அன்னிய முதலீடுகள் வேலை வாய்ப்பு பெருகும் என்கிறார்கள். இதுவும் அப்பட்டமான புளுகு. இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவனங்கள் முதலீடுகளாகவும் - பங்கு சந்தை முதலீடுகளாகவும் இருப்பதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. சேவை துறையிலும், உற்பத்தி துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலை வாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமே தங்கள் வேலையை முடித்து கொள்கின்றன.

இவ்வகை அன்னிய முதலீடுகள் பங்கு சந்தையில் புள்ளிகளை ஏற்றினாலும் திடீர் ஒருநாள் சரிவதும் பின்பு ஏறுவதும் (அப்பட்டமான) சூதாட்டம் தான் என மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறது. இதையும் மீறி சிலர் உடல் உழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தங்கள் வாழ்க்கையை (சேமிப்பைத்) தொலைத்து விடுகின்றனர். மும்பை பங்கு சந்தை அமைந்துள்ள அதே மகாராஷ்டிராவில் விதார்பா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த உண்மை நிலவரங்ளையெல்லாம் மூடிமறைத்து விட்டு, நமது அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு அந்நிய முதலீட்டை ஆதரிக்கின்றன.

நன்றி :

from : http://lightlink.wordpress.com

December 9, 2008

‘பந்தய ஒப்பந்தங்களின்’ தன்மை



தோழி ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஒரு நிறுவனம். அதில் கணிப்பொறி வல்லுநர்கள் 10 பேர் வேலை செய்தார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பின்பு, 7 வல்லுநர்களை தூக்கி கடாசிவிட்டார்கள். குறைந்த பட்சம் 3 நபர்கள் இருந்தால் தான் நிறுவனம் இயங்கமுடியும் என்பதால், விட்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த 3 பேரில் ஒருவர் காலையில் வேலைக்கு கிளம்பும் பொழுது, தன் துணைவியாரிடம் “இப்ப வேலை இருக்கு என்ற நம்பிக்கையில் கிளம்புறேன். மாலை வரும்பொழுது வேலையில்லாமல் கூட போகலாம்” என சொல்லி பதட்டத்துடன் தான் தினம் விடை பெற்று போகிறாராம்.

இப்படிப்பட்ட கதைகள் இப்பொழுது அமெரிக்காவில் எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏற்கனவே தற்கொலைகள் நிறைய நிகழ்கிற பூமி. இப்பொழுது, இன்னும் பல நிகழும்.

*****

பந்தய ஒப்பந்தங்கள் என்றால் என்ன? பந்தய ஒப்பந்தங்கள் எதில் போடப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். சரக்கை பாதிக்கிறதா? இல்லையா எனப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக... பந்தய ஒப்பந்தங்களின் தன்மை என பார்க்கலாம்.

1900 காலத்தில் நிதி மூலதனம் தேசிய அரசுகளின் அடிப்படையில் அமைந்து, அவற்றால் வளர்க்கப்பட்ட ஒன்று.

வங்கி மூலதனம், தொழில் மூலதனம் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைப்பு.

இத்துடன், நவீன காலத்தில் பல புதிய மூலதன நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவைகள் காப்பீட்டு கம்பெனிகளின் நிதி, ஓய்வூதிய நிதிகள், நல நிதியங்கள் (Mutual Funds), வேலியிடப்பட்ட நிதியங்கள்.

இன்று, நிதி மூலதனமானது, எந்த நாட்டுக்கானது என்ற முத்திரையின்றி, ஒரு சில ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவோடு மட்டுமே இயங்குகிறது என்பதோடல்லாமல் ஒரு சர்வதேச தன்மையுடன் விளங்குகிறது.

அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிதியை தங்குதடையின்றி உறிஞ்சுகிறது. நொடிக்குள் அது உலகின் எந்தப் பகுதிக்கும் செல்கிறது. பிரமாண்டமான அளவுகளில் நடக்கிறது. குறுக்கும் நெடுக்கும் பரந்து விரிந்து அதிகமான ஓட்டமும் சுழற்சி கொண்டதாக, பரபரப்பும் அலைபாயும் தன்மையும் கொண்டதாக, வெள்ளப்பெருக்கு போல எதிர்வருவனற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகும் ஆற்றல் கொண்டதாக, திடீர் திடீரென ஏறி இறங்கும் இயல்பு கொண்டதாக (Volatile) இருக்கிறது.

சில தேசிய அரசுகளின் வருமானத்தை விட் அதிக தொகை கொண்டதாகவும், செயற்கைக் கோள் – கணிப்பொறி போன்ற நவீன சாதனங்களால் உலகளாவிய இணைப்பும் கொண்டதாக இருக்கிறது.

December 3, 2008

என்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்



ஒரு மாபெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் பொழுது, தவறுதலாய் ஒரு குண்டு வெடிக்கும் அல்லவா!

அதுபோல, மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு வெள்ளோட்டமாக இருந்தது என்ரான் திவால்.

****

அமெரிக்காவில், இன்றைக்கு பல முதலீட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் திவலாகி விட்டன. மேலும், பல நிறுவனங்கள் மஞ்சள் கடிதாசி கொடுக்க தீவிரமாய் பரிசீலித்து வருகின்றன.

அமெரிக்க “தேசிய பொருளாதார குழு” நிலைமையை ஆய்வு செய்து, இரண்டாம் உலகப்போருக்கு பின், 70, 80 களில் இருமுறை (சமாளிக்க கூடிய) நெருக்கடியை அமெரிக்கா சந்தித்தது. இப்பொழுது நிகழ்ந்திருக்கிற சரிவு மிகப்பெரிய சரிவு. இப்பொழுது தொடர்கிற மந்தநிலை அடுத்த ஆண்டு (2009 ) மத்தியில் வரை நீடிக்கும் என அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

இந்த அறிக்கையை வெள்ளை மாளிகையும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. (2, டிசம். 2008)

இந்த அறிக்கை பங்குதாரர்களுக்கு ஒரு ஆறுதல் அளிப்பதற்காக தான். அடித்த கொள்ளை கொஞ்சமா! இன்னும் பல மாதங்கள் நீடிக்கும்.

****

இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என தேடுகிற பொழுது, 2001-2002ல் நிகழ்ந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘என்ரான் திவால்’ பின்னணி இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

என்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளும், கணக்கீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டு வங்கிகளும் கூட்டுச் சேர்ந்து பல சித்து வேலைகள் செய்து நிறைய கொள்ளையடித்து தான் திவாலாக்கியிருக்கிறார்கள்.

தில்லுமுல்லு வேலைகள்

என்ரானின் நிர்வாகிகள் தங்களது துணைக் கம்பெனிகளின் வரவு செலவு அறிக்கைகளை, அடுத்தடுத்து என்ரானின் வரவு-செலவு அறிக்கையிலிருந்து நீக்கினார்கள். இதன் மூலமாக தமது பிரமாண்டமான கடன் பொறுப்புகளை மூடி மறைத்து, தமது வருவாய்களை ஊதிப் பெருக்கி காட்டினார்கள்.


அமெரிக்காவில் முதன்மையான கணக்கீட்டு (ஆடிட்டர்) நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சன் என்ற நிறுவனம் இந்த மோசடிகளை கணக்கு புத்தகங்களில் இருந்து மறைத்து சான்றிதழ் வழங்கியது. இதற்காக இவர்கள் பெற்று கொண்ட வருமானம் – வாரத்திற்கு பத்து இலட்சம் டாலர்கள்.



லாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது. இந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் சம்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.



அமெரிக்காவின் நம்பர் ஒன் என அழைக்கப்படும் சிட்டி குரூப், நம்பர் 2 யாய் திகழ்ந்த ஜே.பி. மார்கன் சேஸ் மற்றும் மெரில் லின்ச் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த கடன்கள் 800 கோடி டாலர்கள். இந்த மிகப்பெரிய கடனை தனது கணக்கேடுகளில் கடனாக காட்டாமல் கொள்முதலாக காட்டினார்கள்.

இந்த முதலீட்டு வங்கிகள் இப்படி பல கூட்டு சதி வேலைகளை செய்ததற்காக இவர்கள் பெற்ற ‘சன்மானம்’ ரூ. 20 கோடி டாலர்கள்.

இவர்கள் செய்தது மோசடி. இதை விட மோசடி என்னவென்றால், என்ரான் வீழப்போவது மற்றவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்திருந்தால், கையில் வைத்திருந்த என்ரானின் கடன் பத்திரங்களை பெருமளவில் நல்ல விலைக்கு விற்று தள்ளிவிட்டார்கள்.

இவர்களால் இப்படி ஏமாற்றப்பட்ட பல ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் இந்த மூன்று முதலீட்டு வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றக் குழு மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்படியாக 7000 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்டிருந்த என்ரான் என்ற நிறுவனத்தை பூஜ்ய நிலைக்கு கொண்டுவந்து கவிழ்த்துவிட்டார்கள். இதில் பல கோடி கொள்ளையடித்தவர்கள் – என்ரானின் முதன்மை நிர்வாகிகள், கணக்கீட்டு நிறுவனம், முதலீட்டு நிறுவனங்கள்.

பணத்தை இழந்து போண்டியானவர்கள் - தனது சேமிப்பு பணம், ஓய்வூதிய பணத்தையெல்லாம் பங்குகளாய் வைத்திருந்த தொழிலாளர்கள் (என்ரான் இல்லாமல் போனதால், வேலையும் இல்லை) மற்றும் இதன் பங்குகளை நம்பி வாங்கி ஏமாந்து போன பொதுமக்கள்.

இந்த மோசடிக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா! கிடைத்தது! எப்படி?

என்ரான் மோசடியில் ஈடுபட்டு பல கோடி சுருட்டிய நிர்வாகிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவிவிட்டார்கள்.

பல கோடி வருவாய் அடைந்த ஆர்தர் ஆண்டர்சன் கணக்கீட்டு நிறுவனத்தை ஊத்தி மூடிவிட்டார்கள். வேறு பெயரில் அவர்கள் புதிய நிறுவனத்தை தொடங்கி விட்டார்கள்.



பல கோடி லாபம் பார்த்த முதலீட்டு வங்கிகள் தான் இன்றைக்கு மஞ்சள் கடிதாசி கொடுத்து இருக்கின்றன. இப்படிபட்ட “நல்ல” நிறுவனங்களை கைதூக்கி விடுவதற்காக தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து 70000 கோடி டாலர் கொடுக்க ‘மக்கள் பிரதிகள்” ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அமுல்படுத்தியும் வருகிறார்கள்.

(முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக்கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன? என்று கேட்டார் மார்க்ஸ்.
மார்க்ஸின் கூற்றை நீருபித்துவிட்டார்கள்)

உண்மையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்களுக்கு.... பட்டை நாமம்.

இது அநீதி என்கிறீர்களா?

இது தான் முதலாளித்துவ நீதி.


ஆதாரம் :

ராபர்ட் பிரென்னர் – “அகெய்ன்ஸ்ட் த கரண்ட்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய “ஊதிப் பெருக்கப்பட்ட என்ரான்: ஊழல்களும் பொருளாதாரமும்” கட்டுரையிலிருந்து.

நன்றி :

“இந்திய பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற பத்திரிக்கை வெளியிடும் “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக்குழு, மும்பை.

தமிழாக்கம் – புதிய ஜனநாயகம்.