> குருத்து

August 4, 2009

'எங்கேயாவது போயிடுங்க: விமான டிக்கெட் இலவசம்" - அமெரிக்க அவலம்!


வீடற்றவர்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களை வேறு இடங்களுக்கு விரட்ட புதிய சலுகை திட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.

என்ன சலுகை தெரியுமா? நகரை விட்டு போய்விடுவதாக சொன்னவுடன், உடனே விமான டிக்கெட் இலவசம்.

அமெரிக்காவில், சில மாநிலங்களில் வீடற்றோர் அதிகரித்து வருகின்றனர். நிதி நெருக்கடி காரணமாக வேலை வாய்ப்பு இல்லாததால், சமீப காலமாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களிலும் இவர்கள் எங்கும் பரவியுள்ளனர்.
இவர்களுக்காக தனி முகாம்களை நியூயார்க் அரசு நிர்வாகம் அமைத்துள்ளது.

சமீப காலமாக வீடற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால், அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி விட முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

நியூயார்க்கில் இருந்து வெளியேற, விரும்பும் குடும்பங்களுக்கு இலவச விமான டிக்கெட் அளிக்கப்படும். அவர்கள், உறவினர் நண்பர் உள்ள இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். செலவுகளை முழுமையாக நிர்வாகம் ஏற்கும் என்று நியூயார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நியூயார்க்கில், வீடற்றோருக்கான முகாம்கள், கடந்த இரண்டாண்டாக அதிகரித்து வருகின்றன. இவர்களுக்கு பல கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. 2007, ஆண்டுக்குப் பின் 550 குடும்பத்தினர் இங்கு முகாமிட்டு உள்ளனர்.

சலுகை திட்டத்தை சிலர் தான் ஏற்றுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமக நிதி நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவில், பல மாநிலங்களிலும் உள்ள பலர் வேலையிழந்து விட்டனர். அவர்கள், அரசு தரும் வேலையற்றோர் உதவித்தொகையை வைத்துத்தான் நாட்களை கடத்துகின்றனர்.

நன்றி :
தினமலர் - 05/08/2009

தொடர்புடைய பதிவுகள் :

New York gives homeless people a one-way ticket to leave city

August 3, 2009

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!


நன்றி : உறையூர்காரன்

முன்குறிப்பு : அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் வாழ்வது... உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதற்கு சமம். அமெரிக்காவில் மருத்துவத்திற்கான காப்பீடுத்தொகை மிக மிக அதிகம். வேலை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் தனது ஊழியர்களுக்கு காப்பீடு எடுத்து விடுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால், நிறுவனங்கள் கோடிகளில் தொழிலாளர்களை வெளியே பிடித்து தள்ளிவிட்டது. இதனால் தொழிலாளர்களும், பொதுமக்களில் பலரும் மருத்துவ காப்பீட்டை புதுப்பிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் சுகாதார கொள்கைப் பற்றிய பேச்சு, கடந்த தேர்தலிலேயே எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக, ஒபாமா அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பொழுது... அமெரிக்காவில் மருத்துவம் மிக செலவு பிடிக்கிறது என்றார். கடந்த ஜூனிலும் அமெரிக்காவில் மருத்துவ செலவு வெடிகுண்டைப் போல ஆபத்தானதாக தோற்றமளிப்பதாகவும், மருத்துவ துறையை சீரமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது தான் உண்மையான அமெரிக்கா!

****

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் எவ்வளவு அதிகம்? மருத்துவ காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன? வல்லரசு அமெரிக்காவில் மக்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள்? கனடா, பிரான்ஸ், பிரிட்டன், கியூபா நாடுகளில் மருத்துவ நிலைமைகளை மைக்கேல் மூர் எடுத்த சிக்கோ என்ற ஆவணப்படம் விரிவாக விவரிக்கிறது. பதிவர் உறையூர்காரன் அந்த படத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் தந்திருக்கிறார். படியுங்கள்.

****


சமீபத்தில் மைக்கேல் மூர் ((Michael Moore) என்பவர் இயக்கிய‌ சிக்கோ (Sicko) என்கிற ஆவணப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. Health Insurance என்கிற பெயரில் அமெரிக்க
மருத்துவத்துறை எப்படி வணிகமயமாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது அந்த ஆவணப் படம். பீட்டர் என்கிற அமெரிக்கர் தன் காயங்களுக்கு தையல் போடும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த படம்.

அமெரிக்க பிரஜையான பீட்டர் தன் காயத்திற்கு மருத்துவம் பார்க்க மருத்துவரிடம் செல்ல முடியாது. ஏனென்றால் அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லை. ஆனால் இந்த திரைப்படம் பீட்டர் போன்றவர்களைப் பற்றியது அல்ல‌ என்கிறார் இயக்குனர்.அடுத்து ரிக் என்பவர் தன்னுடைய இயந்திர வாள் பட்டறையில் வேலை செய்யும்போது அவருடைய நடுவிரலும் மோதிர விரலும் துண்டாகி போய்விடுகிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மோதிர விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 18000 டாலரும் நடு விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 60000 டாலரும் செலவாகும் என்கிறார்கள். அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லாததால் தன்னிடம் இருந்த சேமிப்பின் மூலம் 18000 டாலர் கொடுத்து மோதிர விரலை மட்டும் ஒட்டிக் கொள்கிறார். அவருடைய நடு விரல் இங்குதான் உறங்குகிறது என்று ஒரு குப்பைமேட்டை காட்டுகிறார். அமேரிக்காவில் சுமார் ஐந்து கோடி பேருக்கு காப்பீடு இல்லை. ஆனால் இந்த ஆவணப் படம் அவர்களைப் பற்றி இல்லை என்கிறார்.

அடுத்து லாரி மற்றும் டானா ஸ்மித் என்கிற முதிய தம்பதியினர் டென்வர் (கொலராடோ) நகரத்தில் உள்ள தங்கள் மகளின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பொருள் வைக்கும் அறையில் தங்குகின்றனர். டானா ஒரு பத்திரிக்கை நிருபராகவும் லாரி ஒரு இயந்திர வல்லுனராகவும் பணிபுரிந்து நல்ல பொருளாதார நிலையில் இருந்து அவர்களது ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்கள். இதற்கிடையில் லாரிக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, அடுத்து டானாவை புற்றுநோய தாக்கியது. இவர்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் Co-pay, deductables என்று அபரிமிதமான பொருளாதார சுமையால் தங்கள சொந்த வீட்டை விற்று தங்கள் மகளின் வீட்டில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.தங்கள் மருத்துவ செலவை சமாளிக்க தள்ளாத வயதிலும் உழைக்கும் ஒரு பெரியவர், ஒல்லியாக இருந்ததால் மருத்துவ காப்புரிமை மறுக்கப்படும் ஒருவர், அதேபோல குண்டாக இருந்ததால் காப்புரிமை மறுக்கப்படும் இன்னொரு பெண்மணி, விபத்தில் சிக்கியபின் ஆம்புலன்ஸ் செலவை தர மறுக்கும் காப்புரிமை நிறுவனம், மனசாட்சிக்கு விரோதமாக காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிக்க நிர்பந்தபடுத்தப்பட்டதால் பணியை விட்டு விலகும் ஒரு காப்பீட்டு நிறுவன ஊழியர் என பலரின் அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர். சிறுநீரகத்தில் புற்றுநோய் வந்த ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரக தானம் செய்ய முன்வந்தும், காப்பீட்டு நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படும் என்று அவரது அறுவை சிகிச்சைக்கு Experimental என்ற காரணம் கூறி காப்பீடு தரமுடியாது என மறுக்கிறது காப்பீட்டு நிறுவனம். உரிய‌நேர‌த்தில் சிகிச்சைய‌ளிக்க‌ப் ப‌டாம‌ல் அவ‌ர் இறந்துவிடுகிறார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த சிறுநீரக நோயாளியின் மனைவி மருத்துவத்துறையில் பணி புரிபவர் என்பதுதான். ம‌ருத்துவ‌த்துறையில் பணிபுரிப‌வ‌ரின் க‌ண‌வ‌ருக்கே இந்த‌ அவ‌ல நிலையென்றால் சாமானிய‌ர்க‌ளின் நிலையை சற்று நினைத்துப் பாருங்க‌ள்.

அமெரிக்காவின் அண்டைநாடான க‌ன‌டாவிலோ நிலைமை முற்றிலும் த‌லைகீழாக‌ இருக்கிற‌து. அங்கு ம‌ருத்துவ‌ரிட‌ம் செல்வ‌த‌ற்கு நோயாளியாக‌ இருந்தால் ம‌ட்டும் போதும், ப‌ண‌க்கார‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. மிசிகன் (Michigan) மாநில‌த்தில் வ‌சிக்கும் ஒரு பெண் த‌ன் குழ‌ந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் எல்லைத் தாண்டி க‌ன‌டாவிற்கு சென்று ம‌ருத்துவ‌ம் பார்த்துக் கொள்கிறார். சில‌ அமேரிக்க‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ செல‌வை ச‌மாளிக்க‌ க‌ன‌டிய‌ர்க‌ளை திரும‌ண‌ம் செய்துக்கொள்வ‌தாக‌ அவ‌ர் கூறுகிறார். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளான அமேரிக்க அரசியல்வாதிகள், கனடாவில் பை பாஸ் அறுவை சிகிச்சைக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என புரளிகளை கிளப்பி பொது நல்வாழ்வு திட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு ஆப்பு வைக்கிறார்கள்.

அடுத்து இய‌க்குன‌ர் பிரிட்ட‌னுக்கு செல்கிறார். அங்கு ம‌க்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌சமாக‌ அளிக்க‌ப் ப‌டுவ‌தை உண‌ருகிறார். பிரிட்ட‌னில் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணிபுரியும் ஒருவ‌ரைப் பேட்டி காண்கிறார். அவ‌ர் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ளைப் போல‌வே வ‌ச‌தியாக‌ வாழுவ‌தையும் சுட்டிக் காட்டுகிறார். அடுத்து ஒரு ம‌ருந்த‌க‌த்திற்கு செல்கிறார். அங்கு ஒரு ம‌ருந்து சீட்டைக்
காட்டி இத‌ற்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும் என்று கேட்கிறார். அத‌ற்கு ம‌ருந்த‌க‌ உழிய‌ர் 6.60 ப‌வுண்டுக‌ள் ஆகும் என்கிறார். 60 மாத்திரைக‌ள் வாங்கினால் எவ்வ‌ள‌வு ஆகும் என்கிறார்?. அத‌ற்கும் அதே ப‌தில்தான் வ‌ருகிற‌து. 90, 120, 180 என்று எவ்வ‌ள‌வு வாங்கினாலும் 6.60 ப‌வுண்டுக‌ள்தான் ஆகும் என்கிறார். அந்த‌ நோயாளி ப‌தினெட்டு வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌வ‌ராக‌வோ அல்ல‌து வேலையில்லாத‌வ‌ராக‌வோ இருந்தால் அந்த‌ 6.60 ப‌வுண்டுக‌ள் கூட‌ க‌ட்ட‌வேண்டாம்.

அடுத்து ஒரு ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்கிறார். அங்கு குழ‌ந்தைப் பெற்று விடுபெற்று வ‌ரும் ஒரு த‌ம்ப‌தியிட‌ம் இந்த‌ பிர‌ச‌வ‌த்திற‌கு எவ்வ‌ள‌வு செல‌வான‌து என‌க் கேட்கிறார். அவ‌ர்க‌ள் ஒரு ப‌வுண்டு கூட‌ த‌ங்க‌ள் கையிலிருந்து செல‌வாக‌வில்லை என்கிறார்க‌ள். அந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணிபுரியும் ஒரு ம‌ருத்துவ‌ரிட‌ம் நீங்க‌ள் ஒரு நோயாளிக்கு சிகிச்சைய‌ளிக்கும் முன்ன‌ர் அந்த‌ நோயாளியின் காப்பீட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் அனும‌தி பெற‌வேண்டுமா என‌ கேட்ட‌தும் அப்ப‌டியெல்லாம் ஏதுமில்லையென்றே ப‌தில் வ‌ருகிற‌து. அந்த‌ ம்ருத்துவ‌ம‌னை முழுதும் அலைந்து திரிந்து Cashier என்று எழுதியிருக்கும் ஒரு இட‌த்தை க‌ண்டுப்பிடிக்கிறார். அங்கு இருப்ப‌வரிட‌ம் சென்று இந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனைத்து வித‌மான‌ சிகிச்சைக‌ளும் இல‌வ‌ச‌ம் என்னும்ப‌ட்சத்தில் எத‌ற்காக‌ ஒரு காசாள‌ர் என வின‌வுகிறார். "உட‌ல் நிலை மிக‌வும் மோச‌மாக‌ இருக்கும் சில‌ர் ம‌ருத்துவம‌னைக்கு வாட‌கையுந்தில் வ‌ந்தால் அந்த‌ வாட‌கையுந்திற்கு அவ‌ர்க‌ள் செல‌வ‌ழித்த‌ ப‌ண‌த்தை அவ‌ர்க‌ளுக்கு திருப்பித் த‌ர‌வே இங்கு நான் உள்ளேன்" என்கிறார் அந்த‌ காசாள‌ர்.

அமெரிக்காவில் ப‌ணிப்புரிந்த‌ ஒரு பிர‌ஞ்சு பிர‌ஜையின் க‌தையை அடுத்த‌தாக‌ விவ‌ரிக்கிறார் இய‌க்குனார். ப‌திமூன்று ஆண்டுக‌ளாக‌ அமெரிக்காவில் பணிபுரிந்த‌ அவ‌ரிட‌ம் அமெரிக்க‌ ம‌ருத்துவ காப்பீடு எதுவும் இருக்க‌வில்லை. ஒருநாள் அவ‌ர் புற்றுநோயால் தாக்க‌ப்ப‌டுகிறார். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற‌முடியாம‌ல் பிரான்சுக்கு திரும்புகிறார். அவ‌ர் பிரெஞ்சு அர‌சுக்கு வ‌ரியென்கிற‌ பெய‌ரில் ஒரு சென்ட் கூட‌ செலுத்திய‌தில்லை. அவ‌ரிட‌ம் பிரெஞ்சு ச‌மூக‌ பாதுகாப்பு எண் கூட‌ இருக்க‌வில்லை. ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு ம‌ருத்துவ‌ம‌னையில் இலவசமாக சிகிச்சைய‌ளிக்கப்ப‌டுகிற‌து. மூன்று மாத தீவிர சிகிச்சைக்கு பிற‌கு அவ‌ருடைய‌ ம‌ருத்துவ‌ரை சந்திக்கிறார். இப்போது நீங்க‌ள் ப‌ணிக்கு திரும்ப‌ இய‌லுமா என்று ம‌ருத்துவ‌ர் வின‌வ‌, அத‌ற்கு சிறிது கால‌ம் என‌க்கு ஒய்வு தேவைப்ப‌டும் என‌ அவ‌ர் கூற‌. உட‌னே அந்த‌ ம‌ருத்துவ‌ர் அந்த‌ நோயாளிக்கு மூன்று மாத‌ ஒய்வு தேவைப்ப‌டும் என்று குறிப்பெழுதி அர‌சுக்கு அனுப்புகிறார். அவ‌ர‌து மூன்று மாத‌ ஒய்வுகால‌த்தில் அவ‌ர‌து ச‌ம்ப‌ள‌த்தின் 65 ச‌த‌விகித‌த்தை அர‌சு அவருக்கு வ‌ழ‌ங்குகிற‌து.

இன்னொரு பிரெஞ்சு பெண்ம‌ணிக்கு அவ‌ர‌து பிர‌ச‌வ‌த்திற்கு பிற‌கு செவிலியாக‌ ஒரு பெண்ணை பிரேஞ்சு அர‌சே நிய‌மிக்கிற‌து. வார‌த்திற்கு நான்கு ம‌ணிநேர‌ம் அந்த‌ செவிலிப்பெண் அந்த‌ தாய்க்கு உத‌வி புரிகிறார்.

அடுத்து வருவதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல் காயிதா தீவிரவாதிகளாக் நியூயார்கின் வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்கிற காரணத்தினால் அவர்களது மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாண அரசுகள் மறுத்துவிடுகின்றன. அதேசமயத்தில் 9/11 சதிவேலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலையில் சர்வதேச தரமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன.

இயக்குனர் மூர் இந்த தன்னார்வலர்களை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு குவான்டனாமோ பேயிற்கு புறப்படுகிறார். குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலை எல்லையில் நின்று இவர்கள் 9/11 தாக்குதலின்போது சேவை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கைதிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையை அளியுங்கள் என்று கூக்குரலிடுகிறார். ஆனால் பாவம் கேட்பார் யாருமில்லை.

அவர்கள் நால்வரும் எல்லைதாண்டி க்யூபாவிற்குள் நுழைகிறார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அங்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி
மட்டும் பதிவேட்டில் எழுதிவிட்டு இலவசமாக சிகிச்சையளிக்கிறார்கள். மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்த கம்யூனிச தேசம்தான் அமேரிக்கர்கள் மத்தியில் ரவுடி தேசம் அமேரிக்க அரசியல்வாதிகளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதை உணர்கிறார்கள்.அடுத்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்குகிறார்கள். அமேரிக்காவில் 120 டால்ருக்கு விற்கப்படும் ஒரு மருந்து அங்கு வெறும் 5 சென்டுக்கு கிடைப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சேவை அமெரிக்காவில் மட்டும் ஏன் வியாபார மயமாக்கப்பட்டது என்கிற கேள்வியுடன் முடிகிறது இந்த ஆவணப்படம்.இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஒடும் இப்ப‌ட‌த்தின் ஒரு சில‌ முக்கிய‌ ப‌குதிக‌ளையே நான் ப‌திந்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் முழுப் ப‌ட‌த்தையும் பாருங்க‌ள்.அமேரிக்கா போன்ற வ‌ல்ல‌ர‌சு நாட்டில் வாழ்வ‌தைவிட‌ பிரான்சு, க்யூபா போன்ற‌ ந‌ல்லர‌சு நாட்டில் வாழ்வதே ம‌னிதாபிமான‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளின் விருப்ப‌மாக‌ இருக்க‌க்கூடும்.

***

பின்குறிப்பு : இந்த படம் ஜுன் 2007ல் வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி துவங்குவதற்கு முன்பே அமெரிக்காவில் இந்த நிலைமை என்றால்... தொடங்கிய பிறகு நிலைமையை நம்மால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.



தொடர்புடைய பதிவுகள் :







July 31, 2009

காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்கள்!

நன்றி : Lightink

முன்குறிப்பு : பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் காங்கிரசுகார்களிடம் கைமாறிய பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக பெரும்பான்மையான காலங்களில்... மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி ஆண்டிருக்கிறது.
அவர்களுடைய இந்த 60 ஆண்டு கால சாதனை பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அரிசிக்காக கைஏந்த வைத்தது தான். இப்பொழுது அதிலும் தில்லு முல்லு பண்ணுகிறார்கள் அயோக்கியர்கள்.

நாம் கையேந்தும் வரைக்கும் தான் அவர்கள் இப்படி தில்லு முல்லு காட்டுவார்கள். நாம் விளைவித்த நம் தானியங்களை கிடங்குகளில் உள்ளே புகுந்து நாம் கைப்பற்றும் காலம் என்றைக்கு வரப்போகிறதோ?

****
காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்களை பதிவர் லைட்ங்க் விரிவாக பதிவு செய்துள்ளார். படியுங்கள்.
****
காங்கிரஸ் கட்சியானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, கிலோ 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இப்போது ஆட்சிக்கும் வந்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைநோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ஆட்சியாளர்கள் இப்போது ஒரு புதிய சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு கடைப்பிடித்த தன் விளைவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்.

தேசிய மாதிரி சர்வேயானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை மாற்றியமைத்துவிட்டது. இதன்படி, 1993-94இல் 36 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 1999-2000இல் 26.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது ஐந்தாண்டுகளுக்குள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாம். இது அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ள புதுச்சரடு. மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறு இருக்க முடியாது.

அரசாங்கம் அமைத்திட்ட அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மக்கள், அதாவது 83.6 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானமின்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த 20 ரூபாயில் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வில் என்ன செய்ய முடியும்?

பருப்பு, தானியங்கள், சமையல் எண் ணெய்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை என
அனைத்துப் பொருள்களின் விலைகளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறைந்துவிட்டதாக, அரசு அறிவிக்கிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பதற்குக் காரணம், அரசு அளித்திட இருப்பதாகக் கூறும் சுகாதார இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெரும் பகுதி மக்கள் பெற முடியாமல் செய்வதற்கே யாகும்.

இந்தியாவில் ஏழைகளின் நிலைமை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களில் 42 சதவீதத்தினர் உலக அளவில் கணக்கிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக அது குறிப்பிட்டிருக்கிறது. அதன் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகத்தில் பட்டினியால் வாடுவோரில் 50 சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் உடல் நலத்திற்குத் தேவையான உணவு விகிதத்தில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உண்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும், ரத்தச் சோகையாலும் பீடிக்கப்பட்டவர்கள். கர்ப்பிணிப்பெண்களின் ரத்தச்சோகையால், பிறக்கும் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு, மேலே கூறியவாறு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கதைவிடுகிறது.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வறுமைக் கோட்டைக் கணக்கிடும்போது ஒரு நபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு 2400 ஆக இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு வந்தார்கள். அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது. அதாவது 2400 கலோரி உணவு உட்கொள்ள ஒருவருக்கு 567 ரூபாய் தேவைப்படும் என்றால், 2100 கலோரி உணவுக்கு 327 ரூபாய் போதுமானது. உண்மையில் இந்த 327 ரூபாய் கணக்கு என்பது 1868 கலோரி உணவுக்காகத்தான் வருகிறது.

இவ்வாறு புள்ளிவிவர பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை, ஏழை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தமிழக திமுக அரசு ஆதரித்து நிற்பது கேலிக் கூத்தாகும்

தொடர்புடைய பதிவுகள் :

இந்திய வளர்ச்சியின் உண்மையான நிலை - அர்ஜூன் சென்குப்தா

வறுமை கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்