> குருத்து

June 11, 2022

Strangers (2008) American Psychological Horror Movie


நாயகனும், நாயகியும் ஒரு விசேசத்துக்கு போய்விட்டு, அந்த வீட்டுக்கு விடிகாலை நான்கு மணிக்கு வந்து சேர்கிறார்கள். அந்த வீடு கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டிருக்கும் வீடு.


அவர்களுக்குள் ஏதோ பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அவன் சோர்வாக இருக்கிறான். அவள் கண் கலங்கி இருக்கிறாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. இந்த நேரத்தில் யார் என கேள்வியோடு போய் பார்த்தால், ஒரு பெண் இருட்டிற்குள் நின்று கொண்டு “இன்னார் இருக்கிறாரா?” என கேட்கிறாள். இவன் இல்லை என்றதும், அங்கிருந்து நகர்ந்துவிடுகிறாள்.

அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு இதோ வந்துவிடுகிறேன் என நாயகன் வெளியே போகிறான். ஆனால் அடுத்தடுத்து அந்த வீட்டிற்கு வெளியிலும், உள்ளுக்குள்ளம் விநோதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. சன்னல் திரையை விலக்கிப் பார்த்தால், அங்கு முகமூடி போட்டுக்கொண்டு ஒருவன் நிற்கிறான். திடீரென பார்த்ததும் பயத்தில் அலறிவிடுகிறாள். இவள் பாதுகாப்புக்கு கத்தியை எடுத்து வைத்துக்கொள்கிறாள். அந்த சமயத்தில் நாயகன் வந்துவிடுகிறான். போனை கவனமாக திருடிவிடுகிறார்கள்.

பிறகு இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடர, நாயகன் அப்பாவின் துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிகாரனைப் பார்த்து சுடவும் செய்கிறான். முகமூடிக்காரன் அங்கிருந்து விலகிவிடுகிறான். நாயகன் சுட தயாராக காத்திருக்கும் பொழுது, இந்த சமயத்தில் நாயகனின் நண்பன் அவர்களை அழைத்துச் செல்வதற்காக உள்ளே வருகிறான். அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்கிறான்.

அங்கிருந்து அவர்கள் உயிரோடு தப்பித்தார்களா என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***


படம் துவங்கும் பொழுது அமெரிக்காவின் FBI கணக்குப்படி, ஆண்டுக்கு 1.40 மில்லியன் (Violent Crimes) வன்முறை நிகழ்வுகள் நடப்பதாக எழுத்தில் போடுகிறார்கள். அதில் ஒரு துளி தான் இந்த சம்பவம். (inspired from true events)

உலக நாடுகளில் எல்லாம் புகுந்து ரவுடித்தனம் செய்யும் அமெரிக்காவின் உள்ளுக்குள் இப்படித்தான் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு. அங்கு ஓய்வுக்கு வரும் ஒரு குடும்பம். ஒரு கும்பல் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்யும். அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை சில படங்களில் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையும் அப்படி துவங்கினாலும், முடிக்கும் பொழுது வேறு வகையில் முடித்திருப்பது தான் வித்தியாசம்.

சுப்பிரமணியப்புரத்தில் சிறைக்குள் இருக்கும் சசி, ஜெய்யிடம் “ஏன் இந்த கொலை?” என கேட்கும் பொழுது “பழக்கத்துக்காக” என சகஜமாய் சொல்வார்கள். அதை கேட்கும் நாம் அதிர்ந்து போவோம். அது போல இந்தப் படத்திலும் ஒரு வசனம் வரும். அது தான் நம்மை தொல்லைப்படுத்தும்.

குறைவான பாத்திரங்கள். குறைவான வெளிச்சம். ஒன்றரை மணி நேரமும் காப்பாற்றுவது நடித்தவர்களும், இசையும், எடுத்தவிதமும் தான்.

Justwatch தளத்தில் தேடிப்பார்த்தால், இந்தப் படமும் அமேசானில் மட்டும் வாடகைக்கு இருப்பதாக சொல்கிறது. வேறு வகைகளில் தேடிப்பாருங்கள்.

June 8, 2022

Sympathy for lady vengeance (2005) தென்கொரியா

 


19 வயது அப்பாவியான உங்களை ஐந்து வயது பையனை கொன்றதாக  சிறையில் பதிமூன்று வருடம் உள்ளே தள்ளினால் எப்படியிருக்கும். கொதித்துபோய்விடமாட்டீர்கள். இருடா வர்றேன்ன்னு கொலைவெறியோடு தானே வெளிவருவீர்கள். அது தான் ஒன் லைன்.
 
நடுத்தர வயது ஆசிரியன் அவன். பிள்ளைகளை கடத்தி கொல்கிறவன். ஒருமுறை ஒரு 19 வயது பெண்ணான நாயகியை மாட்டிவிடுகிறான். அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால், கைக்குழந்தையாய் உள்ள உன் பெண் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறான். தனக்கு இருக்கிற ஒரு சொந்தத்தை இழக்க விருப்பம் இல்லாமல் அவள் பழியை ஏற்றுக்கொள்கிறாள்.
 
சிறை ஒரு வதை முகாம். போலீசும் வதைக்கும். சக கைதிகளும் வதைப்பார்கள். அப்படி வதைபடும் சக கைதிகளை நாயகி உதவி செய்து காப்பாற்றுகிறாள். 13 வருடம் கழித்து வெளியே வருகிறாள். ஆஸ்திரேலியா தம்பதிகளால் தத்து எடுக்கப்பட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளையை போய்ப் பார்க்கிறாள். அழுது பிடித்து அம்மாவுடன் வந்துவிடுகிறாள். இனி தன் சக ஜெயில் தோழிகளைப் போய் பார்க்கிறாள். அவர்களால் முடியும் உதவிகளைப் பெறுகிறாள்.
 
தன் வாழ்வை சீரழித்தவனை என்ன செய்தாள் என்பதை கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அனுப்புகிறார்கள்.
 
ஒரு செயல். சில நாட்களுக்கு நினைவில் இருக்கும் பொழுதே, எத்தனை கொடூரமாய் சமூகத்தில் வெளிப்படுகிறது. சில நாட்களுக்கு பதிலாக 13 வருடங்கள் என்றால், எவ்வளவு கொடூரமாய் வெளிப்படும். அதை சொன்னவிதத்தில், எடுத்தவிதத்தில் ஈர்க்கிறார் இயக்குனர். நான் பார்த்த படங்களில் தென்கொரிய இயக்குநர்கள் உணர்வுகளை காட்சிகளோடு அத்தனை அருமையாக இணைக்கிறார்கள். ஆனால் ஏன் வாளி, வாளியாக ரத்தத்தை ஊற்றி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் ரத்தம் கொட்டுவது அதிகமாகிகொண்டே தான் போகிறது. குறைவேனா என்கிறது.
 
 
இந்தப் படமும், இதன் இயக்குநரும் உலகப்புகழ் பெற்றவர்கள். பழிவாங்கலை அடிப்படையாக கொண்டு மூன்று படங்களை வரிசையாக எடுத்தார். Sympathy for Mr. Vengenance (2003), Old boy (2003), Sympathy for lady vengeance (2005) இதில் Old boy மிகவும் புகழ்பெற்ற படம். மூன்று படங்களையும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பார்த்திருக்கிறேன். மூன்றுமே நல்ல படங்கள்.
 
இந்தப் படத்தைத் தழுவி தான், 22 Female Kottayam என மலையாளத்தில் எடுத்து இருக்கிறார்கள் என பளிச்சென தெரிகிறது. அவர்கள் படம் போடுவதற்கு முன்பு அத்தனை பேருக்கு நன்றி சொல்வார்கள். இந்த படத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்றால், பல லட்சங்கள் கொடுக்கவேண்டும் என்பதால், வசதியாக மறந்துவிட்டார்கள் போல! மலையாளப் படத்தின் வெற்றியில், தமிழில் இயக்குநர் ஸ்ரீபிரியா மீண்டும் எடுத்தார். அதற்காக சில லட்சங்கள் வாங்கியிருப்பார்கள். இப்படி கலாய்த்திருப்பார்களோ! “ஏம்பா நீயே கொரிய படத்தைத் தான் சுட்டிருக்க! கேட்கிற காசுக்கு கொடுத்துட்டு போப்பா!” 🙂
 
இப்பொழுது Notify me தளத்தில் மட்டுமே இருப்பதாக Justwatch தளம் சொல்கிறது. வேறு வகைகளில் முயலுங்கள்.

தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியின் (PF) வட்டிக் குறைப்பு

 




தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எனப்படும் இபிஎப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டியை குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வட்டியாகும்.
 
தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக 1952 ம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் இது.
 
நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் 6.12 கோடி பணியாளர்களை சந்தாதாரர்களாக கொண்ட பி.எப் திட்டத்தில் தற்பொழுது 14 லட்சம் கோடி வைப்பு நிதியாக சேர்ந்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால சேமிப்பு மீதான வட்டி விகிதம், 8.10% என குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது.
2020-21ம் ஆண்டில் நாடு ஊரடங்கில் மூழ்கி இருந்த பொழுது கூட 8.5% என நீடித்தது. இப்பொழுது நிலைமை சரியாகி வரும் பொழுதும். வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக லாபம் ஈட்டியுள்ள நிலையிலும், 44 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்கு வட்டி விகிதத்தை கொண்டு சென்றிருக்கிறது.
 
வங்கியில் பொதுமக்களால் வைக்கப்படும் வைப்புத்தொகைகளுக்கு தரப்படும் வட்டிவிகிதம் என்பது 6.5%க்கு கீழாக தருகிறார்கள். அதோடு ஒப்பிட்டு இப்படி குறைப்பது என்பது அபத்தமானது. இந்த அரசு தொழிலாளர்களின் நலத்திட்டமான வைப்பு நிதிக்கும், பொதுமக்களின் வைப்பு தொகைக்கும் (Fixed Deposit) ஒப்பிடுகிறது என்றால், நாம் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மனநிலையை புரிந்துகொள்ளவேண்டும்.
 
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் ஒன்றிய அரசு முதலாளிகளின் நலனுக்காக வெட்டி சுருக்கிய நிலையில் தான் இப்பொழுது தொழிலாளர்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை வரலாறு காணாத வகையில் குறைத்திருக்கிறது. தொழிலாளர்கள் இதன் அபாயத்தை உணர்ந்து, உடனடியாக போராட்டத்தில் இறங்கவேண்டும். இல்லையெனில், ஒன்றிய அரசு இன்னும் வட்டியை குறைக்கும் நடவடிக்கையில் தைரியமாக இறங்குவார்கள். தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் தான் தொழிலாளர் விரோத அரசை பணிய வைக்கும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.