> குருத்து

June 2, 2024

Thalavan (2024) மலையாளம்


ஓய்வு பெற்ற ஒரு போலீசு உயரதிகாரி ஒரு தனியார் சானலுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் இருந்த பிரபல வழக்குகள் குறித்து பேசுகிறார்.


அதில் ஒரு வழக்கை எடுத்து பேசும் பொழுது… ஒரு போலீசு இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருக்கிறார். கொஞ்சும் முசுடாகவும் இருக்கிறார். அவருடைய துணைவியாரை வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆள் வந்து கடுமையாக தாக்குகிறான். அவனை கைது செய்து உள்ளே தள்ளுகிறார். தாக்கியவருடைய மனைவி அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து தன் கணவனை மன்னிக்கும்படி, வெளியே வருவதற்கு உதவி செய்யும்படி கெஞ்சுகிறார்.

அவருடைய ஸ்டேசனில் புதிதாக ஒரு உதவி ஆய்வாளராக (SI) பணியில் சேர்கிறார். அவரும் நேர்மையான ஆள். ஆனால் அவருடைய “துடுக்கான” பேச்சால், ஒன்றரை வருடத்தில் ஐந்து மாற்றல்கள் பெற்று, இங்கு வந்துள்ளார். இங்கும் (மேலே சொன்ன) இன்ஸ்பெக்டரோடு முட்டிக்கொள்கிறார்.

இந்த சமயத்தில் திடீரென அந்த பெண் கொலை செய்யப்பட்டு, அந்த இன்ஸ்பெக்டரின் வீட்டு மாடியில், கடுமையாக தாக்கி, கொல்லப்பட்டு ஒரு சாக்கில் கட்டப்பட்டு கிடக்கிறார். இன்ஸ்பெக்டரை கைது செய்து, போலீசு விசாரணையை துவங்குகிறது.

இப்பொழுது இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு. விசாரிக்கும் பொறுப்பு அடுத்த நிலையிலிருக்கும் உதவி ஆய்வாளரிடம் வருகிறது. தொடரும் விசாரணையில் நிறைய புதுப் புது விசயங்கள் வெளியே வருவதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****


ஒரு கொலை. அந்த கொலையை ஒட்டிய விசாரணையை சுவாரசியமாகவும், (மலையாள படங்களுக்குரிய) விறுவிறுப்பாகவும் சொன்னது நன்றாக இருக்கிறது.

போலீசு Vs பொதுமக்கள், போலீசு Vs போலீசு முரணைத் தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் நண்பர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். அங்கு தற்செயலாக வரும் ஒரு போலீசு ”என்னடா இத்தனைப் பேர் ஒரு பெண்ணை தள்ளிக்கிட்டு வந்திருக்கிறீர்கள்?” என கேவலமாய் கேட்பது அங்கு ஏகப்பட்ட களேபரங்களை உருவாக்கும். போலீசு பொதுமக்களை தனக்கு கீழாக தான் பார்க்கிறது. அதே போல தான் நடத்துகிறது. அதனால் தான் ”போலீசு உங்கள் நண்பன்” என பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையிருக்கிறது.

போலீசு பொதுமக்களையே இப்படித்தான் நடத்துகிறது. தன்னுடைய ஸ்டேசனில் மட்டும் சக போலீசை மட்டும் சரியாக நடத்திவிடுமா என்ன? புகைச்சல்களை உருவாக்கிவிடுகிறது. வாய்ப்பு கிடைக்கிற பொழுது சிக்கலில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் பிஜூமேனன் அந்தப் பாத்திரத்திற்கான நடிப்பு, உணர்வுக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறையில் உள்ள சண்டைக்காட்சியில் தமிழ், தெலுங்கு படங்களின் பாதிப்பு நன்றாக தெரிகிறது.

உதவி ஆய்வாளராக வரும் அசிப் அலி நன்றாக செய்திருக்கிறார். முரண்படும் இடங்களில் எல்லாம் நன்றாக கோபப்பட்டுள்ளார். மற்றவர்களும் பொருத்தம் தான். ஜிஸ் ஜாய் இயக்கியுள்ளார்.

தொலைக்காட்சியில் ஒவ்வொரு வழக்காக பேசும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரியை இறுதியில் யாரோ சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். இரண்டாம் பாகத்திற்கு அடி போட்டுள்ளார்கள்.

தமிழகத்தின் திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.

Totally Killer (2023) Slasher comedy movie


அம்மாவை காப்பாற்ற போராடும் மகள்


1987ல் 16 வயது இளம்பெண்கள் மூவர் கொடூரமாக 16 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார்கள். அதற்கு பிறகு அந்த கொலைகள் நின்றுவிடுகிறது. கொலைகாரனை போலீசால் பிடிக்கமுடியவில்லை. அதனால் அந்த ஊரை அந்த கொலைகளின் பெயராலேயே “செல்லமாக” அழைக்கிறார்கள்.


கதை 2023க்கு வந்துவிடுகிறது. நாயகி இப்பொழுது 16 வயதில் பள்ளியில் படிக்கிறாள். அவளுடைய அம்மா முன்பு கொல்லப்பட்ட மூவரின் நெருங்கிய தோழி. அந்த கொலைகளுக்கு பிறகு தற்காப்பு கலைகள் எல்லாம் கற்றுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன் மகளுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

ஒரு ஹாலோவீன் நாளில் நாயகியின் அம்மா பழைய கொலைகளைப் போலவே 16முறை குத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார். நாயகிக்கு தாளமுடியாத துயரம். விசாரணை துவங்குகிறது.

நாயகியினுடைய தோழி ஊரில் இருக்கும் அறிவியல் கண்காட்சியில் காலப்பயணம் மேற்கொள்வதற்கான ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாள். ஒருவேளை இந்த இயந்திரம் வேலை செய்தால், முந்தைய காலத்திற்கு போய், கொலைகாரனை கண்டுப்பிடித்துவிட்டால், இப்பொழுது அம்மாவை காப்பாற்றிவிடலாம் என சிந்திக்கிறாள்.

கொலைகாரன் இப்பொழுது நாயகியையும் துரத்துகிறான். அவள் அந்த இயந்திரத்தில் இருக்கும் பொழுது நடக்கும் களேபரத்தில் இயந்திரம் வெற்றிகரமாக வேலை செய்து அவள் பழைய காலத்திற்கே போய்விடுகிறாள்.

அங்கு அம்மாவும், அவளுடைய தோழிகளும் 16 வயதில் பள்ளியில் ஏக கலாட்டாக்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவள் போய், போலீசில், சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னால், மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.

பிறகு என்ன ஆனது? கொலைகளை தடுக்க முடிந்ததா என்பதை ஏகப்பட்ட கலாட்டக்களுடன், கொஞ்சம் கத்திக்குத்துகளுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
****


நாயகி அங்கு போய் செய்யும் மாற்றங்களினால், நடப்பு நிகழ்வு மாறிக்கொண்டே போவது சுவாரசியம். 2023ல் வாழும் ஒரு பெண், 1987 காலக்கட்டத்திற்கு போகும் பொழுது அங்கிருக்கும் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் எல்லாம் மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. தன் அம்மாவை பார்க்கும் பொழுது அவள் ஆச்சர்யப்படுவதும் சுவாரசியம்.

படத்தில் இந்த கொலைகளுக்கு காரணமாக சொல்லப்படும் - சக மாணவர்களை கிண்டல், கேலி செய்வது, ராக்கிங் செய்வது, நிறவெறி என 80களில் மட்டுமல்ல இன்னும் அமெரிக்க பள்ளி, கல்லூரிகளில் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் யாராவது துப்பாக்கியால் சக மாணவர்களை சுட்டு கொல்கிறார்கள். ஏற்றத்தாழ்வான சமூகம் மறையும் பொழுது தான் இதுவும் முற்றிலுமாய் ஒழியும் என கருதுகிறேன்.

இனி காலப்பயண கதைகள் நிறைய வரும் என்பது மட்டும் நிச்சயம். அதிலும் மொக்கைப் போடாமல், சுவாரசியமான படங்களை எடுத்தால் நன்றாக இருக்கும்.

நாயகி, அவளுடைய தோழிகள் எல்லோருமே கதையில் பொருந்தியிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இயக்குநர் Nahnatchka Khan. பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என தேடினால், பெண் இயக்குநராக இருக்கிறார். பெற்றோர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள்.

பிரைமில் இருக்கிறது. இந்த வகைப் படங்கள் பிடிக்கிறவர்கள் பார்க்கலாம்.

நிழல் (2021) மலையாளம்


நாயகன் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண் மருத்துவர் தோழியாக இருக்கிறார்.


ஒரு பள்ளியில் கதை எழுதுங்கள் என சொல்லும் பொழுது, ஒரு ஏழு வயது பையன் மட்டும் இந்த ஊர், இடம் என அதன் சூழலை விவரித்து, ஒரு கொலை நடந்ததைப் பார்த்தது போல எழுதுகிறான். பள்ளி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியாகிறது. மருத்துவரைப் பார்க்க சொல்கிறார்கள். அவர் நாயகனிடம் சொல்கிறார்.

நாயகன் ஒரு ஆர்வத்தில், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த ஊருக்குப் போய் ஒரு குளத்தில் தேடினால், 30 வருடங்களுக்கு முன், உள்ளூரில் சமூக பிரச்சனைகளுக்கு முன்நின்று போராடிய ஒரு மனிதன், திடீரென காணாமல் போகிறான். அந்த மனிதன் இப்பொழுது எலும்பு கூடாக ஆழத்தில் இருந்ததை கண்டுப்பிடிக்கிறார்கள். செய்தி பரபரப்பாகவிடுகிறது.

எப்படி தெரிந்தது என கேட்கும் பொழுது, வேறு கதை சொல்லி மழுப்பிவிடுகிறார். அந்த பையனைப் பற்றிய செய்தி வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார்.

அந்த பையனுக்கு இந்த கதைகளை சொன்னவர் யார்? ஒரு விபத்தில் செத்துப் போன அப்பாவா? வேறு யார் என உண்மையைத் தேடி அந்த கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார்கள்.
****


அபூர்வமாய் சிலப் படங்களைப் பார்க்கும் பொழுது ஒரு சிறுகதையை குறும்படமாக எடுப்பதை விட்டுவிட்டு, முழு நீளப்படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என தோன்றும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது அப்படித் தோணியது.

பொதுவாக மலையாளப் படங்கள் மெதுவாக செல்லும் தான். ஆனால் இந்தப் படம் அநியாயத்திற்கு மெதுவாக செல்கிறது. அதே போல இந்த கொலை(கதை)களுக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை பின்னால் சொல்வார்கள். அரசியல் அறிந்த இயக்குநர் என்றால், இதைச் சரியாக பயன்படுத்தியிருப்பார். இந்த படக் குழுவினருக்கு அத்தனைத் தெளிவில்லை. வழமையான கதையைப் போல சப்பென முடித்துவிட்டார்.

வணக்கம் என எழுத்துப் போடும் பொழுது, மலையாளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்தார்கள். படம் குறித்த முக்கிய செய்தியாக இருக்கப் போகிறது. அது என்னடா என கூகுள் உதவியுடன் மொழிப்பெயர்த்து பார்த்தால், இந்தப் படத்தில் இத்தனைப் பேர் இத்தனை ஆயிரம் மணி நேரம் வேலைப் பார்த்துள்ளனர் என போடுகிறார்கள். தலையில் அடித்துக்கொண்டேன். ஒரு நல்ல கதை. ஆனால் அதை எடுத்த விதத்தில் சொதப்பியிருக்கிறார்கள்.

நாயகனாக குஞ்சுக்ககோபன், அந்த பையனின் அம்மாவாக நயந்தாரா, மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள். அந்தப் பையன் மலையாளப் பட உலகில் ஒரு சுற்று வருவான்.

பிரைமில் தமிழ் டப்பிங்கிலேயே இருக்கிறது.