> குருத்து: Thalavan (2024) மலையாளம்

June 2, 2024

Thalavan (2024) மலையாளம்


ஓய்வு பெற்ற ஒரு போலீசு உயரதிகாரி ஒரு தனியார் சானலுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் இருந்த பிரபல வழக்குகள் குறித்து பேசுகிறார்.


அதில் ஒரு வழக்கை எடுத்து பேசும் பொழுது… ஒரு போலீசு இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருக்கிறார். கொஞ்சும் முசுடாகவும் இருக்கிறார். அவருடைய துணைவியாரை வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆள் வந்து கடுமையாக தாக்குகிறான். அவனை கைது செய்து உள்ளே தள்ளுகிறார். தாக்கியவருடைய மனைவி அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து தன் கணவனை மன்னிக்கும்படி, வெளியே வருவதற்கு உதவி செய்யும்படி கெஞ்சுகிறார்.

அவருடைய ஸ்டேசனில் புதிதாக ஒரு உதவி ஆய்வாளராக (SI) பணியில் சேர்கிறார். அவரும் நேர்மையான ஆள். ஆனால் அவருடைய “துடுக்கான” பேச்சால், ஒன்றரை வருடத்தில் ஐந்து மாற்றல்கள் பெற்று, இங்கு வந்துள்ளார். இங்கும் (மேலே சொன்ன) இன்ஸ்பெக்டரோடு முட்டிக்கொள்கிறார்.

இந்த சமயத்தில் திடீரென அந்த பெண் கொலை செய்யப்பட்டு, அந்த இன்ஸ்பெக்டரின் வீட்டு மாடியில், கடுமையாக தாக்கி, கொல்லப்பட்டு ஒரு சாக்கில் கட்டப்பட்டு கிடக்கிறார். இன்ஸ்பெக்டரை கைது செய்து, போலீசு விசாரணையை துவங்குகிறது.

இப்பொழுது இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு. விசாரிக்கும் பொறுப்பு அடுத்த நிலையிலிருக்கும் உதவி ஆய்வாளரிடம் வருகிறது. தொடரும் விசாரணையில் நிறைய புதுப் புது விசயங்கள் வெளியே வருவதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****


ஒரு கொலை. அந்த கொலையை ஒட்டிய விசாரணையை சுவாரசியமாகவும், (மலையாள படங்களுக்குரிய) விறுவிறுப்பாகவும் சொன்னது நன்றாக இருக்கிறது.

போலீசு Vs பொதுமக்கள், போலீசு Vs போலீசு முரணைத் தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் நண்பர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். அங்கு தற்செயலாக வரும் ஒரு போலீசு ”என்னடா இத்தனைப் பேர் ஒரு பெண்ணை தள்ளிக்கிட்டு வந்திருக்கிறீர்கள்?” என கேவலமாய் கேட்பது அங்கு ஏகப்பட்ட களேபரங்களை உருவாக்கும். போலீசு பொதுமக்களை தனக்கு கீழாக தான் பார்க்கிறது. அதே போல தான் நடத்துகிறது. அதனால் தான் ”போலீசு உங்கள் நண்பன்” என பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையிருக்கிறது.

போலீசு பொதுமக்களையே இப்படித்தான் நடத்துகிறது. தன்னுடைய ஸ்டேசனில் மட்டும் சக போலீசை மட்டும் சரியாக நடத்திவிடுமா என்ன? புகைச்சல்களை உருவாக்கிவிடுகிறது. வாய்ப்பு கிடைக்கிற பொழுது சிக்கலில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் பிஜூமேனன் அந்தப் பாத்திரத்திற்கான நடிப்பு, உணர்வுக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறையில் உள்ள சண்டைக்காட்சியில் தமிழ், தெலுங்கு படங்களின் பாதிப்பு நன்றாக தெரிகிறது.

உதவி ஆய்வாளராக வரும் அசிப் அலி நன்றாக செய்திருக்கிறார். முரண்படும் இடங்களில் எல்லாம் நன்றாக கோபப்பட்டுள்ளார். மற்றவர்களும் பொருத்தம் தான். ஜிஸ் ஜாய் இயக்கியுள்ளார்.

தொலைக்காட்சியில் ஒவ்வொரு வழக்காக பேசும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரியை இறுதியில் யாரோ சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். இரண்டாம் பாகத்திற்கு அடி போட்டுள்ளார்கள்.

தமிழகத்தின் திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: