> குருத்து

April 25, 2025

மறக்கப்படும் நினைவுகள்


இருபது வயதில் பழகிய சில மனிதர்களை இப்பொழுது நினைத்தால், சுத்தமாக நினைவில் இருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களோடு ஒரு அலுவலகத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்திருக்கலாம். அவர்களோடு மூன்று மாதம் ஒரு கோர்ஸ் ஏதாவது இணைந்து படித்திருக்கலாம். இப்பொழுது யோசித்தால் அந்த முகங்கள் மெல்ல மறந்து போயிருக்கின்றன. அதே போல அவர்கள் தொடர்பான நினைவுகளும்! எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் நினைவுக்கு வருவதில்லை.


குமரவேல் என ஒரு நண்பர். வானவியல் குறித்த விசயங்களில் நிறைய ஆர்வமுள்ளவர். இது குறித்து நிறைய சில நாட்கள் சில மணிநேரங்கள் விவாதித்து இருக்கிறோம். அதற்கு பிறகு கேரளாவிற்கு பணி நிமித்தமாய் மாற்றாலாகி போன நினைவு. இப்பொழுது அவரை நினைத்தால்… முகம் சுத்தமாக நினைவில் இல்லை. இது எனக்கு மட்டும்தானா! பலருக்குமா என தெரியவில்லை.

என் சின்ன அக்கா சிறு வயது நினைவுகளைப் பற்றி, பழகிய மனிதர்களைப் பற்றி பல விசயங்களை கடந்த ஆண்டு நடந்தது போல நினைவுகளை பகிர்வார். அவரிடம் ஒன்றை கவனித்திருக்கிறேன். எப்பொழுதும் கடந்த கால நினைவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம், தனது உறவுகளிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருவேளை மீண்டும் மீண்டும் நினைவுகளை மங்க விடாமல் தூசித் தட்டி புதுப்பித்துக்கொள்கிறார் என இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது.

இப்பொழுது ஏன் இதை எழுதுகிறேன். மனிதனின் வாழ்வு என்பது நினைவுகளால் நிரம்பியது தானே! ஏதோ ஒரு விபத்தில் சிக்கி, நினைவுகள் எல்லாம் அழிந்து போனால், ஒரு மனிதன் என்ன ஆவான்? அப்படித்தான் நினைவுகள் மங்கலாகி, மறக்கும் பொழுது… ஏதோ ஒன்று கைநழுவி போவதாக படுகிறது. அன்றைக்கு ஒரு நடுத்தர வயது பெண்ணை எதைச்சையாக ஒரு பழக்கடையில் பார்க்கிறேன். இவரிடம் பழகியிருக்கிறேன் என தெரிகிறது. எந்த அலுவலகம், எந்த இடம் என மறந்துபோய்விட்டது. அந்த நினைவை மீட்டுக்கொண்டு வரும் வரை ஒரு பதட்டம் வருகிறதே! அது தாங்க முடியாததாக இருக்கிறது.

இனி வாழ்வில் எதிர்கொள்ளும் சில நபர்களைப் பற்றி, சில நிகழ்வுகளைப் பற்றி, சில விசயங்களைப் பார்க்கும் பொழுது, பழைய நினைவுகள் மேலெழும்பி வருவதைப் பற்றி எழுதுவது, பகிர்வது என்பதை எனக்காகவாவது கவனமாக செய்யவேண்டியிருக்கிறது.

நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!


ஆறு மாதத்திற்கொருமுறை செல்லும் அந்த அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பொழுது, புதிதாய் ஒருவர் இருந்தார். முதலாளியிடம் பேசிக்கொண்டிருந்தார். புதியவரும் எனக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. இது மண்டையை குடைகிற விசயம். கண்டுபிடிக்கும் வரை சிரமம் தான்.


இந்த அவஸ்தைக்கு அவரிடமே கேட்டுவிடலாம். உங்களை நான் பார்த்திருக்கேன். ஆனால் எங்க பார்த்தேன் என தெரியவில்லை என பட்டென கேட்டுவிட்டேன்.

”நான் உங்க டாலி பார்ட்னர் நிர்மல்” என அவர் சொன்னதும்… சடாரென மண்டையில் உரைத்தது. ”ஸாரி நிர்மல் சார்!” என சமாளித்தேன். மாதம் ஒருமுறையாவது அவரிடம் போனில் பேசிவிடுகிறேன். ஆனால் பார்த்து மூன்று, நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மேலும் சமீபத்தில் மொட்டை போட்டு, முடி வளர்த்திருக்கிறார்.

வேறு இடத்தில் கேட்டால் கூட பரவாயில்லை. அந்த நிறுவனத்தில் கேட்டது இன்னும் சங்கடம். அவர் டாலி (Tally) குறித்து நன்றாக சப்போர்ட் தருவார் என அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் முதல் நாள் தான் வாய் மொழியாக சான்றிதழ் கொடுத்திருந்தேன். இப்பொழுது அவர்கள் முன்னாலேயே இப்படி கேட்டது இன்னும் சங்கடம்.

பிறகு பேசி சமாளித்து வந்துவிட்டேன். இதிலிருந்து அறிவது என்னவென்றால், கொஞ்சம் நிதானித்து பேசியிருந்தால்.. இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டிருக்காது. ஏன் அத்தனை அவசரம் என யோசித்துப் பார்த்தேன்.
வேறு என்ன காரணம். பலரும் புலம்புகிற மண்டையை பிளக்கிற வெயில் தான்.

ஆட்டோ பயணமும் சங்கடங்களும்!


ஓலா, ஊபர் ஆகியவை பல் போன நிறுவனங்களாகி விட்டன. அவர்கள் தயவில் வண்டி ஓட்டுபவர்கள் இருந்தது போய் வண்டி ஓட்டுபவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்கள். செயலியில் காட்டும் கட்டணம் எல்லாம் சும்மாங்காட்டிக்குத்தான். போன் செய்து இண்டர்வியூவில் வெற்றி பெற்றால்தான் சவாரியே கிடைக்கும். டிரைவர் மீது புகார் சொல்லலாம் என்றால் செயலியில் காட்டும் வாகனமும் வரும் வண்டியின் எண்ணும் வேறு வேறாக இருக்கும். ஒரே ஓட்டுநர் மூன்று நான்கு மொபைல் போன்களை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார். இங்கே இன்னொரு பிரச்னையும் உள்ளது. பெண்கள் அல்லது முதியவர்கள் தனியாக செல்லும்போது இந்த வாகனத்தில்தான் செல்கிறார்கள் என்று செயலி அனுப்பும் செய்தி தவறானதாக இருக்கும். இவை அனைத்தும் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தங்கள் பங்கு வந்தால் போதும் அவர்களுக்கு.

***
கடந்த சனி, ஞாயிறு தஞ்சையில் இரண்டு நாட்களில் ஆறுமுறை பயணித்தோம். ஆறு ஆட்டோ ஓட்டுநர்களும் சொல்லி வைத்தாற் போல இருந்தார்கள்.

ஒரு கி.மீட்டரோ அல்லது இரண்டு கிமீட்டரோ எல்லாவற்றிக்கும் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 100 என அவர்களுக்குள் பேசி முடிவு செய்து கறாராக கேட்டு வாங்கிறார்கள்.

ஒரு ஆட்டுநர் அரண்மனையில் இருந்து நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் 3 கி.மீ. ரயில்வே நிலையத்துக்கு ரூ. 100. அதையும் தாண்டி போக வேண்டியிருப்பதால் ரூ. 150 கேட்டார். அதற்கான தூரம் 400 மீட்டர் தான். 🙁 பிறகு ரூ. 100க்கு வேறு ஒரு ஆட்டோ பிடித்து போய் சேர்ந்தோம்.

விசாரித்த பொழுது ஓலா அங்கு வேலை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட 2 கிமீ தூரத்திற்கு ரூ. 45 என காட்டியது. அதற்கு வந்த டிரைவர் ஆப்பில் குறைவாக காட்டும் என சொல்லி ரூ. 100 வாங்கிகொண்டார்.

சென்னையில் நட்சத்திரங்கள் இடச் சொல்லி வலியுறுத்தும் ஓலா ஆப், தஞ்சையில் கவனமாய் ஆப் செய்யப்பட்டிருந்தது. 🙂