> குருத்து

May 2, 2024

No tears for the dead (2014) தென்கொரியா


"பாவம் செய்வதில், ஒவ்வொரு மனிதனும் அனைவருக்கும் எதிராகப் பாவம் செய்கிறான், ஒவ்வொரு மனிதனும் மற்றொருவரின் பாவத்திற்காக குறைந்தபட்சம் ஓரளவு குற்றவாளி. தனித்த பாவம் இல்லை

-          எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி

 

பணத்துக்காக கொலை செய்கிற ஆள் நாயகன்.  அப்படி ஒரு ”வேலையாக” கொலைகள் செய்யும் பொழுது, தவறுதலாக ஒரு எட்டு வயது சின்னப் பெண்ணையும் தவறுதலாக சுட்டுக்கொன்றுவிடுகிறான்.

அதனால் ஏற்படுகிற குற்ற உணர்வு அவனை வாட்டுகிறது.  அதற்கு பிறகு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறான். அவனின் பாஸ் அவனை விடுவதாயில்லை. 

இவன் மறுத்தாலும், அவனை மிரட்டி இன்னொரு வேலையை கொடுக்கிறான்.   அது அவன் ”கொலை” செய்த  அந்த பெண்ணின் அம்மாவை கொலை செய்வது!

வேண்டா வெறுப்பாக போகிறான். அவளைச் சந்திக்கிறான். அங்கு ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கின்றன.  பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

 


கொரியப் படங்கள் எவ்வளவு பரபர சண்டைப்படமாக இருந்தாலும் சரியான விகிதத்தில் உணர்வுகளையும் கலந்துகொடுத்துவிடுகிறார்கள். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.

 

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) படத்தைப் பார்த்துவிட்டு, தனது பாணியில் படம் எடுத்தது போல இருந்தது இந்தப் படம்.   இரண்டுப் படங்களின் ஒன் லைனும் ஒன்று தான்.  கதையும், காட்சிகளும் தான் வேறுவேறு.

 

தான் கொன்ற அந்த சின்ன பையனின் கண் தெரியாத குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற பரிதவிப்பையும், அந்தப் போராட்டத்தையும், மிஷ்கின் கடத்தியிருப்பார்.

 

அந்த குற்ற உணர்வுக்கு அடிப்படை என்ன என்பதையும், அவனுடைய சிறு பிராயத்து சில காட்சிகளை பொருத்தமாக வைத்திருப்பார்கள்.

 

குற்றவுணர்வில் அலையும் நாயகன், மகளின் நினைவில் வாடும் அம்மா, இரு பாத்திரங்களும் முக்கியப் பாத்திரங்கள். மற்றவை எல்லாம் அதகள காட்சிகளில் வருபவர்கள் தான். எல்லோரும் சரியாக பொருந்திருக்கிறார்கள்.

 

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும்  இல்லை. நான் முன்பு வைத்திருந்த பட்டியலில் வைத்திருந்த படம். வேறு வகைகளில் முயலுங்கள்.

 

May 1, 2024

Gyeongseong creature (2023) தென்கொரியா


1940களில் நடக்கும் கதை. ஜப்பான் காலனிய ஆட்சி செய்த நாடுகளில் கொரியாவும் ஒன்று. அங்கு ஒரு மருத்துவமனை கட்டி, அந்த மருத்துவமனையின் கீழ் ஜப்பானின் இராணுவம் ஒரு விநோதமான ஆய்வில் ஈடுபடுகிறது. அதற்கு அங்கு வாழும் அப்பாவி மக்களை சட்ட விரோதமாக கைது செய்து, அவர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்கிறது. இதில் பலரும் கொல்லப்படுகிறார்கள்.


மனிதர்களின் உடலில் நாஜின் என்ற கிருமியை செலுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு ஏற்படுகிற வலியில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதில் ஒரே ஒரு பெண்மணி பிழைத்துக்கொள்கிறார். அவருடைய உடலுக்குள் புகுந்த அந்த உயிரினம், அவருடைய மூளையும் கட்டுப்படுத்துகிறது. மனிதனை விட பலசாலியாய், தனக்கு ஏற்படுகிற காயங்களை தானே குணப்படுத்துகிற, நிலைமைகளை புரிந்துகொண்டு கையாள்கிற ஒரு விநோத ஜந்துவாய் பெரிதாய் வளர்ந்து நிற்கிறது.

அந்த பகுதியில் நாயகன் ஒரு பெரிய அடகுகடை ஒன்றை நடத்துகிறார். பொருளாதாரத்தில் வலுவாக இருப்பதால், அதிகாரத்திலும் சமூகத்திலும் ஒரு அந்தஸ்து இருக்கிறது. அதைப் பயன்படுத்தி மேலும் தன்னை வளர்த்துகொள்கிறார். ஆட்களைப் பற்றிய தகவல்களையும் சேகரித்து தருகிறார். அதற்கான பலனையும் பெற்றுக்கொள்கிறார்.

இப்பொழுது அவருக்கு ஒரு ஆபத்து வருகிறது. தலைமை போலீசு அதிகாரியின் காதலி ஒருத்தி நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தவள் திடீரென காணாமல் போகிறார். நாயகனை அழைத்து ”அவளை கண்டுப்பிடித்து தரவேண்டும். இல்லையெனில் கட்டாய இராணுவ சேவைக்கு அனுப்பிவிடுவேன். போர்க்காலம் என்பதால், சாவு நிச்சயம். மேலும் போராளிகளுடம் கூட்டு வைத்திருந்ததாக சொல்லி, உன் அனைத்து சொத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன். இந்த வசந்த காலம் முடிவதற்குள் செய்ய வேண்டும்” என மிரட்டுகிறான்.


நாயகியின் அம்மா பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென காணாமல் போகிறார். அதனால், நாயகியும், அவளுடைய அப்பாவும் வெவ்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து தேடுகிறார்கள். இதில் காணாமல் போனவர்கள் பற்றி யாராவது தேடச் சொன்னால், அதையும் செய்கிறார்கள். இவர்கள் அந்த பகுதிக்கு வர, நாயகனை சந்திக்கிறார்கள். அவன் காணாமல் போன பெண்ணைப் பற்றி தேடித்தர சொல்கிறான்

நாயகன் தேடும் பெண், நாயகி தேடும் அம்மா, அந்த பகுதியில் காணாமல் போகும் மக்கள் என எல்லாவற்றிக்கும் காரணமாய் அந்த மருத்துவமனையாய் இருக்கிறது. இவர்கள் உள்ளே போகிறார்கள்.

அதற்கு பிறகு நடக்கும் களேபரங்களும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் தான் முழு நீளக்கதை.

போர்க்கால பின்னணி என்பதால், கதை கொஞ்சம் அழுத்தமாய் வந்திருக்கிறது. 1945 காலத்தில் ஜப்பான் ஏகாதிப்பத்தியம் தோல்வி முகத்தில் இருந்த கால கட்டம். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற மனநிலையில் இருந்த அதன் பின்னணியில் தான் இப்படி பொருத்தமான கதையை தீர்மானித்திருக்கிறார்கள்.

நாயகனின் அம்மா, போலீசின் பிடியில் கொல்லப்படுகிறார். கொல்லப்படுவதற்கு முன்பு, ”எப்படியாவது பிழைத்துக்கொள்” என அந்த பையனிடம் செல்கிறார். அந்த ஒத்தச் சொல்லைப் பிடித்துக்கொண்டு பொருளாதாரத்தில் மேலே மேலே வந்துவிடுகிறார். அந்த அதிகாரி கொடுக்கும் நெருக்கடி, நாயகியைப் பார்த்து, காதல் வந்த பிறகு, அவருடைய எண்ணம், செயல்பாடு எல்லாம் மெல்ல மெல்ல மாறுவதை நன்றாக காட்டியிருக்கிறார்கள்.

அம்மாவை தேடும் நாயகி. எந்த ஆபத்தான இடமென்றாலும், பூனையைப் போல நுழைந்துவிடும் லாவகம், எதிரியை எதிர்கொண்டால், சாவதற்கெல்லாம் துளிகூட பயம் இல்லாது துணிவோடு எதிர்கொள்வது, எங்கேயும் தன்னை விட்டுக்கொடுக்காது நகரும் குணம், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அருமையாய் பொருந்தியிருக்கிறார்.

ஜப்பான் ஏகாதிப்பத்தியம் மற்ற ஏகாதிப்பத்தியங்களை விட மிகவும் கொடூரமானவர்கள் என வரலாறு படிக்கும் பொழுது உணரமுடியும். சீனாவைச் சேர்ந்த மாவோ சீனாவில் அவர்கள் எவ்வளவு கேவலமாகவும், கொடூரமாக ஆட்சி செய்தார்கள் என்பதையும் பதிந்திருக்கிறார். அதை இந்த சீரிசிலும் சரியாக பதிந்திருக்கிறார்கள்.

அந்த கிரியேச்சர் தான் கதையை பேண்டசி ஆக்குகிறதே தவிர, அதைத் தூக்கிவிட்டால், ஒரு அருமையான சுதந்திர போராட்ட கதையாய் மலர்ந்திருக்கும்.

சின்ன சின்ன கதாப்பாத்திரங்களை கூட கவனமாய் எழுதியிருக்கிறார்கள். பலரும் நினைவில் நிற்கிறார்கள். சிஜி தொழில்நுட்பம் உட்பட எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதல் சீசனில் மொத்தம் பத்து அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மணி நேரம் நீள்கிறது. சில நேரங்களில் மட்டும் கொஞ்சம் தொய்வடைகிறது. ஏழு அத்தியாயங்களை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இந்த தொடர் வெற்றி பெற்றதால், அடுத்த தொடரை எடுத்துக்கொண்டிருக்கிறாரகள். விரைவில் வெளியாகும்.

2023ல் தொலைக்காட்சிகளில் வெளியாகி, இப்பொழுது நெட்பிளிக்சில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

April 20, 2024

Porter லில் உள்ள சிரமம்


ஒரு சொசைட்டி என் வழியாக என் பகுதியில் இருக்கும் தணிக்கையாளர் ஒருவருக்கு ஒரு பொருளை அனுப்ப கொடுத்தனுப்பியது. போர்ட்டரை தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.


என் வீட்டில் இருந்து அவருடைய அலுவலகம் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. அவர்களுடைய ஆப்பில் அடிப்படை விவரங்களை கொடுத்ததும்.. அதற்கான கட்டணம் என ரூ. 25ஐ காட்டியது. குறைவாக காட்டுகிறதே என மனதில் பட்டது. நீண்ட நாட்கள் கழித்து பயன்படுத்துவதால், தள்ளுபடியில் தருவதாக நினைத்துக்கொண்டேன்.

பைக்கில் ஒருவர் வந்து அந்த பொருளை வாங்கும் பொழுது... ”பணம் நீங்கள் தருகிறீர்களா?” என கேட்டார். ”நீங்கள் பொருளைக் கொடுப்பவரிடம் வாங்கி கொள்ளுங்கள்” என்றேன். சரி என்றார்.

சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 25 என கட்டணம் காட்டிய தகவலை அனுப்பிவிட்டு மறந்துபோனேன். சரியாக 45 நிமிடங்கள் கழித்து ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. போர்ட்டலில் இருந்து ஒரு இளம்பெண் பேசினாள்.

“என்ன சார்? 25ரூ தான் சார்ஜ் கொடுத்திருக்கிறீர்கள்?” என கேட்டார். ”நான் ஏதும் சார்ஜ் தீர்மானிக்கவில்லையே! உங்களுடைய ஆப் தான் இவ்வளவு கட்டணம் என காட்டியது!” என்றேன். தங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட அநீதி குறித்து கேள்வி கேட்பதாக அவளின் குரல் ஓங்கி இருந்தது. “அது எங்கள் ஆப் காட்டியது இல்லை! கூகுள் மேப் குறைவான தூரத்தைக் காட்டுகிறது.” என்றாள். “கூகுள் மேப் காட்டும் தூரத்தை வைத்து விலை தீர்மானிப்பது உங்கள் ஆப் தானே! நானில்லையே” என்றேன். இருவர் பேசும் பொழுது, கொண்டுப் போய் சேர்த்த நபரும் லைனிலேயே இருந்தார். அவருடைய பொது அறிவில் அது என் மேல் தவறு இல்லை. போர்ட்டர் ஆப்பில் தான் தவறு இருக்கிறது! புரிந்துகொண்டார். பிறகு ஒருவழியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. அந்த பெண்ணால் அது என் பிரச்சனையில்லை, தங்களுடைய நிறுவன ஆப்பில் உள்ள பிரச்சனை என்பதை கடைசிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

சென்னையில் பொருளை எடுத்து செல்லும் பல வாகனங்களில் போர்ட்டர் விளம்பரத்தைப் பார்க்கிறேன். அப்படி ஒரு பெரிய நெட்வொர்க்கில் அடிப்படையாக இப்படி ஒரு பிரச்சனை இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது.

ஆகையால் போர்ட்டரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாய் இருங்கள். இல்லையெனில் இப்படியொரு சிக்கலை நீங்களும் எதிர்கொள்வீர்கள்.