> குருத்து: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - பொதுக்கூட்டம்!

December 10, 2009

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த தொழிலாளர்களே! உழைக்கும் மக்களே!

வெளிச்சத்தின் அருமை இருளில் தெரியும் ! நிழலின் அருமை வெயிலில் தெரியும் ! சிறிது நேரம் விளக்குகள் எரியாவிட்டால் குருடர்களாகிப் போகிறோம். மின் விசிறி சுற்றாவிட்டால் வியர்த்துப் போகிறோம். ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே அனைத்தும் செயலிழந்தது போலாகிவிடுகிறது. இப்படி வீட்டை,ஊரை, நாட்டை அனைத்தையும் இயக்கும் மின்சாரத்தை தயாரிப்பது என்பது, சுவிட்சைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல் அவ்வளவு எளிமையானது அல்ல! எங்கோ சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பதில் இருந்து, நம் தெருக்களில் மின் கம்பங்களில் ஒயர்களை இழுப்பது வரை அனைத்திலும் பல லட்சம் தொழிலாளிகளின் இரவு, பகல் பாராத இரத்தமும், வியர்வையும் சிந்தும் உழைப்பு உறைந்து கிடக்கிறது.

தங்களுடைய உழைப்பின் மூலம் வெளிச்சத்தை படைக்கும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கையோ இன்னும் இருளில் தான் உள்ளது. நெய்வேலியின் சுரங்கத் தொழிலாளி முதல், வட சென்னையின் அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழொலாளிகள் வரை இது தான் நிலைமை. ஏனென்றால் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள் !

ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல், 1970 என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஒரு ஆலையில் உற்பத்திக்கு தேவையான வேலையில் வருடம் முழுவதும் ஈடுபடும் தொழிலாளிகள், நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் உரிமைகள் அனைத்தையும் பெறும் தகுதியுடையவர்கள் என்று சொல்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தைப் போட்ட அரசின் பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் தான், இந்த சட்டத்தை மீறி இந்தியாவிலேயே அதிகமான அளவில் ஒப்பந்த தொழிலாளிகளை பயன்படுத்துகின்றன.

சிந்தித்துப்பாருங்கள்! கரியை வெட்டி எடுக்காமல், கரியை அள்ளிப்போடாமல் அனல் மின் நிலையம் எப்படி மின்சாரம் தயாரிக்க முடியும் ? ஆனால் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் உரிமை கேட்க முடியாத ஒப்பந்தத் தொழிலாளிகள் என்கின்றன அனல் மின் நிலைய நிறுவனங்கள்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகளாக 300 பேர் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து வருகிறோம். எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி தான், எமது உழைப்பால் தான் இந்த நிறுவனத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் குறைந்த கூலியில் வேலை உத்திரவாதம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளிகளாக உரிமைகளின்றி இருக்கிறோம். இந்நிலையில் தான், உழைப்பது மட்டுமல்ல, உரிமைகளுக்காக போராடுவதும் தான் தொழிலாளிகளின் பண்பு, கடைமை என்று உணர்ந்து கொண்டோம்.

ஆகவே நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் துவங்கியுள்ளோம். இதுவரை தொழிலாளிகளாக மட்டும் இருந்த நாங்கள், தற்போது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட படையணியில் இணைந்துள்ளோம். தொழிலாளர் உரிமைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் தோளோடு தோள் சேர்த்து நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளோம்.

உழுது பயிரிட்ட விவசாயிகளின் உழைப்பு உணவாக, நெசவாலைத் தொழிலாளிகளின் உழைப்பு மானமாக, கட்டுமானத் தொழிலாளிகளின் உழைப்பு கூரையாக என உழைக்கும் மக்களின் உழைப்பே உலகை இயங்க வைக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்பட்டுள்ளது.‌ உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, உரிமையை நிலைநாட்ட நடக்கும் அரசியல் போராட்டங்களில் முன்நிற்போம்.

அந்த அடிப்படையிலேயே, “உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்” என்று முழங்கும் நக்சல்பாரி அரசியல் வழியில் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துள்ளோம்

மண்ணுக்கடியில் கிடக்கும் கரி தான் வெட்டியெடுத்தால் மாபெரும் மின் சக்தியை கொடுக்கிறது. உழைத்துக் காய்த்த கரங்கள் அனைத்தும் திரண்டெழுந்தால் நாம் தான் மாபெரும் அர‌சியல் சக்தி.
தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வோம். தொழிற்சங்கத்தில் ஒன்றிணைவோம். உழைக்கும் மக்களுடன் திரண்டெழுவோம், அனைவரும் வாரீர் என அறைகூவி அழைக்கிறோம்.

வட சென்னை அனல்மின் நிலைய (NCTPS) ஒப்பந்த‌ தொழிலாளர்களின் தொழிற்சங்க துவக்க விழா.

நிகழ்ச்சி நிரல்

சங்கத் துவக்க விழா

நாள் 11. 12 .09
மாலை 4.00 மணி
NCTPS ஆலைவாயில்

தலைமை
தோழர் சி.மோகன், NCTPS கிளை
கொடியேற்றுபவர்

தோழர் அ.முகுந்தன்
மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு

பெயர்ப்பலகை திறப்பவர்
தோழர் பா.விஜயக்குமார்
மாநிலப்பொருளால‌ர், பு.ஜ.தொ.மு

பொதுக்கூட்டம்


மாலை 6.00 மணி
அத்திப்பட்டு புது நகர்
இரயில் நிலையம் அருகில்

முன்னிலை
தோழர் எம். மதியழகன்
தலைவர், NCTPS கிளை

தலைமை
தோழர் ம.சி.சுதேக்ஷ் குமார்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,பு.ஜ.தொ.மு.

சிறப்புரை
தோழர் சு.ப.தங்கராசு
மாநில பொதுச்செயலாளர்,பு.ஜ.தொ.மு.




ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி.

அனைவரும் வருக‌

தோழமையுடன்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
NCTPS கிளை.

தொடர்புக்கு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அ.முகுந்தன்,110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 24

9444834519, 9444442374

- நிகழ்ச்சிக்கான துண்டறிக்கையிலிருந்து...

நன்றி : சர்வதேசியவாதிகள்

1 பின்னூட்டங்கள்:

kalagam said...

இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை....


http://kalagam.wordpress.com/