> குருத்து: வீடு!

March 5, 2017

வீடு!

திடீரென தெருவில் தோன்றிய
பெரியபூனை, குட்டிப்பூனை இரண்டும்
பத்து நாட்களாக வீடு தேடி அலைகின்றன!

ஆபத்து காலத்தில்
எங்க முருங்கை மரத்தில்
ஏறிக்கொள்கிறது குட்டிப்பூனை!
எதனுடனோ சண்டை போட்டு
உடம்பெல்லாம் காயம்.
முனகலோடு சுற்றிவருகிறது
பெரியபூனை!

வாடகை, காற்றோட்டம், நீர்
வீட்டுக்காரர் என எல்லாம்
பொருந்தி வருவது
வரன் அமைவது போல
ஆக சிரமமான காரியம்!

வீட்டில் செல்லப்பிராணிகள்
வளர்த்ததில்லை
உங்களுக்கு சோறுபோடுவதே
பெரிய விசயம்டா என்பார் அம்மா.

அடைக்கலம் கொடுக்கலாம் என்றால்
வீட்டில் உள்ளவர்களுக்கோ
பூனை அலர்ஜி!
மீறி சேர்த்தால்
நானும் பூனைகளுடன்
தெருவில் சுற்றவேண்டியிருக்கும்

நிம்மதில்லாத பூனைகளுடன்
என் நினைவுகளும்
அலைந்துகொண்டேயிருக்கின்றன.

தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதால்
சின்னம்மாவிடம் பூனைகளை தரலாம்
என தோன்றுகிறது!
பேச்சுத்துணைக்கு ஆகும்!

0 பின்னூட்டங்கள்: