> குருத்து: கொசு தொல்லை தாங்க முடியலை!

November 25, 2022

கொசு தொல்லை தாங்க முடியலை!



உலக அளவில் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன.


****


வீட்டில் ஒரு வேலையை நிம்மதியாக செய்யமுடியவில்லை. ஆழ்ந்து… மன்னிக்கவும் நிம்மதியா தூங்கவே முடியவில்லை. ஒழுங்காக தூங்காததால் அலுவலகம் போனால் நாள் முழுவதும் சோர்வாக இருக்கிறது. கடிக்கும் கொசுக்களை ஷாக் அடிக்க வைத்து பழிவாங்குவோம் என கொசு பேட் வாங்கினோம். கொசு கடிக்கிறது. ஆனால் கொசுவை அடிக்க முடியவில்லை. கண்ணில்படாத அளவிற்கு மிகச் சிறியதாக இருக்கிறது. ஓடோமஸ் தடவினால், ஒரு அரை மணி நேரம் தான் தாங்குகிறது. லிக்யூட் வாங்கி மாட்டலாம் என்றால், நமக்கு அலர்ஜி பிரச்சனை இருக்கிறது.

எங்கள் பகுதி பரவாயில்லை. வேலை நிமித்தமாக வேறு வேறு பகுதிகளுக்கு போனால், அங்கெல்லாம் கொசுக்கள் பெரிது பெரிதாக வளர்ந்திருக்கின்றன. ஒரு கொசு கடித்தால், சில நிமிடங்களுக்காவது சுளீரென வலிக்கிறது. பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு படிக்க போனால், கொசுப் படையே வந்து கடிக்கிறது. பத்து நிமிடத்திற்கு மேல் வேறு வழியே இல்லாமல் ஓடியே வந்துவிட்டேன். வயதானவர்கள் என்ன செய்வார்கள். குழந்தைகள் என்ன ஆவார்கள். டெங்குக்கு மருந்து இல்லை எனவும் சொல்லி பதறவைக்கிறார்கள்.

இதோ தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்ததும், வடகிழக்கு பருவ மழை என்பது கனமழையாக தொடர்ச்சியாக பெய்துவருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கொசுக்களில் 3 முக்கியமான வகைகள் உள்ளன. மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’ இந்தக் கொசு நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. அதிகாலையிலும், மாலை நேரத்திலும் மனிதர்களைக் கடித்து ‘பிளைஸ்மோடியம்’என்ற நோய்க் கிருமியைப் பரப்பி, நோய் உண்டாக்குகிறது. மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்தசோகை ஏற்படுகிறது.

இரண்டாவது ‘ஏடிஸ் இஜிப்டி’ கொசு. இது தேங்கியுள்ள தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு கடிப்பதால், வைரஸ் நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் பரவி, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

மூன்றாவது ‘கியூளக்ஸ் குன்கிபேசியேட்டஸ்’ கொசு. இது சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து கடிக்கத் தொடங்குகின்றன. அப்போது நுண்ணிய நாடாப்புழுவை வெளியிடுகின்றன. அவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவி, யானைக்கால் நோயை உருவாக்குகிறது. பகலில் இந்த நாடாப்புழுக்கள் மனிதர்களின் முதுகெலும்பில் ஒளிந்துகொண்டு, இரவில் மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்கள் வீங்கி, மரக்கட்டைபோல காணப்படும்.

கடந்த 2020-ல் தமிழகத்தில் 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் இந்த வருடம் ஆகஸ்டு வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பகுதியில் சுகாதார ஊழியர் தொடர்ச்சியாக கொசுவை கட்டுப்படுத்துவதற்காக பினாயில் போல ஒரு மருந்தை வாரத்திற்கு ஒருமுறை வந்து, கிணற்றில், நீர்த் தொட்டியில் ஊற்ற தருவார். போன மாதம் அவரிடம் ”நீங்கள் கொடுப்பதை நானும் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். கொசு அதிகமாகி கொண்டே போகிறதே! மருந்து ரிவர்சில் வேலை செய்கிறதோ” என கிண்டலாகத்தான் கேட்டேன். ”சென்னை மாநகராட்சி தளத்தில் புகார் செய்யலாம் என நினைக்கிறேன்” என சொன்னதும், சுதாரித்து, ”அந்த புகார் எங்க சுகாதார அதிகாரிக்கு தான் வரும். அவரிடமே பேசுங்களேன்” என மொபைல் எண் தந்தார். உருப்படியான பதில் எதுவும் சொல்லப்போவதில்லை என அழைக்கவேயில்லை.

வழக்கம் போல இந்த வாரமும் வீட்டுக்கு வந்த பொழுது, ”கொசு அதிகமாகி கொண்டே போகிறதே மாநகராட்சி சார்பில் என்ன செய்கிறீர்கள்?” என கேட்டேன். “வெளிப்படையாக சொல்கிறேன் சார். இந்த மருந்தெல்லாம் சும்மா சார். ஏகப்பட்ட கமிசன். இந்த மருந்துக்கு எல்லாம் கொசு கட்டுப்படாதுன்னு எங்களுக்கே தெரியும். மக்களிடம் எதையாவது கொடுத்தால் தானே, பேச முடியும். ஒவ்வொரு வீடாக ஏறி தண்ணீர் தேங்குகிற மாதிரி எதையாவது வைத்திருக்கிறார்களா என சோதித்துத்தான் வருகிறேன்.” என்றார். இப்படி சொல்கிறவர் எங்க வீட்டிற்கு மாடியில் வந்து சோதித்ததே இல்லை. யார் வீட்டிலும் ஏறி நான் பார்த்ததும் இல்லை.

சென்னை மாநகராட்சி சாலைகளில் தண்ணீர் தேங்குவதை எல்லாம் இப்போதைக்கு கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை என புரிந்துகொண்டு எல்லோருக்கும் கொசுவலை கொடுப்பது என முடிவு செய்து, துவக்கமாக நீர்நிலைகளை ஒட்டி வாழும் மக்களுக்கு விலையில்லாமல் கொசுவலைகள் தந்துகொண்டிருக்கிறார்கள். பிறகு மற்ற பகுதிகளுக்கும் தரப்போவதாக சொல்கிறார்கள்.

இது தமிழகம் தழுவிய பிரச்சனை மட்டுமில்லை! இந்திய அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் திகார் ஜெயிலில் உள்ள ஒரு கைதி ”கைதிகள் அனைவருக்கும் கொசுவலை தரவேண்டும்” என உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் கேட்டால், ”அதெல்லாம் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்கள். நம் சிறைகளில் காசு கொடுத்தால் ”சகலமும்” கிடைக்கும். ஊர் அறிந்த விசயம் தான். காசு இல்லாதவர்கள் கொசுக்கடியில் சிக்கி, டெங்கு வந்து சாகவேண்டியது தான்.

உலக அளவில் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. மக்கள் கொசுவிடமிருந்து தற்காலிகமாக தப்பிக்க பேட், ஓடோமஸ், ஆல் அவுட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். கொசுவை ஆக்கப்பூர்வமாக கட்டுப்படுத்துவதற்கு முதலாளித்துவ உலகம் முயல்கிறதோ இல்லையோ, கொசுவை வைத்து பல்லாயிரம் கோடி கல்லாக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த கொசுவர்த்தி புகை, ஆயில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால், 75 சிகரெட் புகைத்தால் எவ்வளவு கேடு வருமோ அவ்வளவு கேடுகளை மனிதனுக்கு உண்டாக்குகின்றன என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வேங்கடபதி.

அவரே தற்காலிக தீர்வாக, ”கொசுக்களைக் கட்டுப்படுத்த ரசயானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக தாவர பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது என்கிறார்கள். தாவரப்பூச்சி கொல்லி என்றாலே, நமக்கு நினைவுக்கு வருவது இந்திய பாரம்பரியம் கொண்ட வேப்பமரம். மருத்துவக் குணம் கொண்டதாகவும், இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் உதவுகிறது. வேப்பமரத்தின் இலை, காய்கள், பழங்கள், கொட்டை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் பூச்சிக்கொல்லியாக விளங்குகின்றன. வேப்ப எண்ணெயிலும் கொசுவை ஒழிக்கும் தன்மை உள்ளது. வேப்ப எண்ணெயை தண்ணீரில் தெளிக்கும்போது, இதனுடைய மூலக்கூறுகள் கொசுக்களை ஊடுருவி, தாக்கி அழிக்கிறது. தும்பை, துளசி போன்ற மூலிகைச் செடிகளும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. நெல்லிச்சாறு, முருங்கைச்சாறு போன்றவற்றையும் தண்ணீரில் தெளிக்கும்போது, கொசுப்புழுக்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சாணம் போன்ற நுண்கிருமிகளும் அழிந்து, தண்ணீரும் தூய்மையாகிறது. கொசுக்களை வேப்ப இலை, தும்பை துளசி, பேய் முரட்டி போன்ற இலைகளைக் கொளுத்தி, புகை எழுப்பி, விரட்டலாம். ஒரு சொட்டு வேப்ப எண்ணெய் மற்றும் பத்து சொட்டு தேங்காய் எண்ணெயியை உடம்பில் தேய்த்து, கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும், கொசுக்களின் வாழ்க்கை சுழற்சியை அழிக்கலாம்.” என ஆலோசனை சொல்கிறார்.

கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான ஆய்வுகள் ஒருபுறம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் ஆண் கொசுக்களைப் பிடித்து மலட்டுத் தன்மையை உருவாக்கி மீண்டும் வெளியே உலவ விடுவதன் மூலம் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் பின்விளைவுகள் என்ன ஆகும் என்பதையும் சூழலியலாளர்கள் கவலை கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சோதனை முயற்சிகளையும் ஆப்பிரிக்காவின் பின் தங்கிய நாடுகளில் செய்ய முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டும் இருக்கின்றன.

கொசு பிரச்சனை குறித்து சூழலியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சமீபகாலங்களில் கொசுக்கள் அபரிமிதமாக பெருகியிருப்பதற்கு சூழலியலாளர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். நீர்நிலைகளில் கலக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கொசுக்களையும் அவற்றின் லார்வாக்களையும் உண்டுவாழும் நீர்நிலவாழ் உயிரினங்களை அழித்தது கொசுக்களின் பெருக்கத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்று புவி வெப்பமாதலும் கொசுக்களின் பெருக்கத்துக்கு சாதகமானதாக ஆய்வாளர்களால் முன்வைக்கப் படுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்தவோ அல்லது முழுவதுமாக ஒழிக்கவோ உலகெங்கும் பலவிதமான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இதுவரை எங்கும் முழுமையான சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பான வெற்றிகரமான முறைகள் என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கொசுக்களையோ அல்லது பூச்சிகளையோ ஒழிப்பது என்பது சாத்தியமற்றது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக என்னதான் வயலில் பூச்சிகளை ஒழிக்க தினமும் புதுப்புதுவிதமான பூச்சிக் கொல்லிகளை உருவாக்கினாலும் நம்மால் இதுவரை எந்தப் பூச்சியினங்களையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதோடு அவை நாளுக்குநாள் வீரியமடைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைவிட பெரிய அபாயமாக மாறியிருக்கின்றன. கொசுக்களை கட்டுப்படுத்துவது அவசியமே எனினும் அவற்றை அழிப்பதுபோன்ற முயற்சிகள் பல்லுயிரின சமநிலையை வெகுவாக பாதிக்கும். கொசுக்களை முக்கிய உணவாகக் கொள்ளும் பூச்சிகள் அவற்றை உண்ணும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் நலம் நமது சூழலைக்காக்க மிகவும் அவசியம்.” என்கிறார்கள்.

ஆக ஒன்று புரிகிறது. ஒன்றை தொட்டு, ஒன்றை தொட்டுத் தான் சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. மொத்த உலகமும் சுற்றுச் சூழலை சமூக அக்கறையோடு இயங்கினால் தான், கொசுவை கூட கட்டுப்படுத்த முடியும் என புரிகிறது. உலகம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் ஆட்சி செய்வது முதலாளித்துவ சர்வாதிகாரம் தான். முதலாளித்துவம் தான் எதிர்கால கண்ணோட்டம் இல்லாமல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை இல்லாமல் இயற்கை சூழலை கடுமையாக சிதைக்கிறது. ஆக கொசுவை கட்டுப்படுத்தி உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாக வாழவேண்டுமென்றால் கூட, காலாவதியாகிப் போன முதலாளித்துவத்தை சவக்குழிக்குள் அனுப்பினால் தான் சாத்தியம் என்கிற முடிவுக்கு தான் வரமுடிகிறது.



0 பின்னூட்டங்கள்: