> குருத்து: Jaane Jaan (2023) இந்தி

September 27, 2023

Jaane Jaan (2023) இந்தி


மேற்கு வங்கத்தில் மலைப்பாங்கான பிரதேசம் கலிம்போங் (Kalimpong). நடுத்தர வயது நாயகி அங்கு ஒரு உணவகத்தில் வேலை செய்கிறார். அவருடைய மகள் உயர்நிலைப் பள்ளியில் படித்துவருகிறார்.


திடீரென நாயகியின் கணவன் 13 ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடி வருகிறான். அவன் ஒரு சப் இன்ஸ்பெக்டர். பொறுக்கி. நாயகியை கல்யாணம் செய்து, ஹோட்டலில் நடனம் ஆட வைத்தவன். அவனிடம் இருந்து விலகி, தூரமாய் வேறு மாநிலத்துக்கு வந்து வேறு ஒரு பெயரில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகள் கழித்து வந்தவன் மகளையும் அம்மாவை இழுத்துவிட்ட அதே தொழிலுக்கு அழைத்து செல்வேன் என்கிறான்.

வாக்குவாதம் முற்றி, கைகலப்பில், எசகு பிசகாக அவனை நாயகியும், மகளும் ஒரு வேகத்தில் கொன்றுவிடுகிறார்கள். போலீசுக்கு போவதா? என்ன செய்வது என மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பக்கத்துவீட்டில், நடுத்தர வயதில் ஒரு கணித வாத்தியார் வசிக்கிறார். கணிதத்தில் தேர்ந்த ஆள். விவரமான ஆளும் கூட. அவருக்கு நாயகியை மிகவும் பிடிக்கும். அதனால் தினமும் அவள் வேலை செய்யும் உணவகத்தில் தான் சாப்பாடு வாங்குகிறார்.


இவர்களின் சிக்கலை உணர்ந்து உதவ முன்வருகிறார். அவர்களுடன் பேசி, சில ஏற்பாடுகளை செய்கிறார்.

காணாமல் போன சப் இன்ஸ்பெக்டரைத் தேடி போலீஸ் விசாரணை செய்கிறது. மொபைல் டவர், அழைப்பு … என தொட்டு தொட்டு நாயகியை விசாரிக்கிறது. அதன்பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

****
The Devotion of suspect X என ஒரு நாவலை தழுவி ஜப்பானில் 2008ல் எடுக்கப்பட்ட படம் Suspect X. அங்கு பெரிய வெற்றி பெற, 2012ல் தென் கொரியாவில் ஒரு படம் எடுத்தார்கள். பிறகு தமிழில் விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த கொலைகாரன் வந்தது. அதன் தொடர்ச்சியில் இப்பொழுது இந்தியில் இந்தப் படம். இந்தக் கதை ஒரு டிரெண்ட் செட்டர் தான். உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு தான் திரிஷ்யமும் கூட!.

கரீனா கபூர் என்ற புகழ்பெற்ற நடிகை இருந்தும் படத்தை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், சிம்பிளாக எடுத்திருந்தார்கள். நன்றாகத் தான் இருந்தது.

அந்த கணித வாத்தியார் ஒரு சுவாரசியமான பாத்திரம். கணிதத்தில் தேர்ந்தவர். நடுத்தர வயதிலும் விடாமல் ஜூடோ கற்று தேர்ந்தவராக இருக்கிறார். பத்து ஆண்டுகள் முயன்று, ஒரு கணிதத்திற்கு விடை கண்டுபிடிக்க… அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் அதே கணிதத்திற்கு விடை கண்டுபிடித்துவிடுகிறார். கணிதத்தின் மீதான பேரார்வத்தைப் பார்த்ததும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கணித மேதை இராமனுஜர் நினைவுக்கு வந்து போனார்.

ஒரு இடத்தில் வாத்தியாருக்கும், விசாரணை அதிகாரிக்குமான கலந்துரையாடலை, இருவரும் கராத்தே சண்டை போடுவதாய் காண்பித்திருந்தார்கள். நன்றாக இருந்தது.

நாயகியாக கரீனா கபூர். பயமும் பதட்டமுமாய் கொடுத்தப் பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். Jaideep Ahlawat தான் ஆசிரியராக வருகிறார். பொருத்தமாக செய்திருக்கிறார். பிறகு அந்த விசாரணை அதிகாரியாக வரும் விஜய் வர்மா. அவரும் சிறப்பு.

நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: