> குருத்து: Miss Shetty Mr. Polishetty (2023) – தெலுங்கு

September 17, 2023

Miss Shetty Mr. Polishetty (2023) – தெலுங்கு


Miss Shetty Mr. Polishetty (2023) – தெலுங்கு
”கணவன் வேண்டாம்! விஞ்ஞானத்தின் உதவியால் குழந்தை வேண்டும்”

நாயகியும், அம்மாவும் லண்டனில் வசிக்கிறார்கள். நாயகி ஒரு நட்சத்திர உணவகத்தில் சமையல் நிபுணராக (Chef) இருக்கிறார். அம்மாவிற்கு புற்றுநோய். எப்பொழுது வேண்டுமென்றாலும் வாழ்வு முடிந்துவிடும்.

அம்மாவும், அப்பாவும் நாயகியின் சின்ன வயதில் பிரிந்தது, அதன் கசப்பான நினைவுகள் நாயகிக்கு ஆழமாக பதிகிறது. அதனால் அம்மா பலமுறை, பலவிதங்களில் வலியுறுத்திய பொழுதும் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறாள்.

அம்மாவின் அந்திம காலங்களில் தன் சொந்த ஊரில் வாழவேண்டும் என்கிறார். இந்தியாவிற்கு வருகிறார்கள். சில நாட்களில் அம்மா இறந்துவிடுகிறார். இதுவரை எல்லாமுமாய் இருந்த வந்த அம்மா என்ற உறவு இல்லையென்றதும் தனிமை வாட்டுகிறது.

ஒரு நாள் தானே பிள்ளை பெற்றுக்கொண்டால் என்ன என யோசிக்கிறார். திருமணம் வேண்டாம். யாராவது முகம் தெரியாத நன்கொடையாளர் (Doner) மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்கிறாள்.

மருத்துவமனையில் வரிசையில் உட்கார்ந்திருக்கும் நன்கொடையாளர்களை எல்லாம் பார்க்கிற பொழுது, நமக்கான நபரை நாமே கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் மருத்துவரிடம் சொல்லிவிட்டு தோழியுடன் தேட துவங்குகிறாள்.

நாயகன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, ஓய்வு நேரங்களில் “ஸ்டாண்ட் அப் காமெடியனாக” இருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறன், இயல்பாக பேசுவது, நடவடிக்கைகள் நாயகிக்கு பிடித்துவிடுகிறது. முதலிலேயே விசயத்தைச் சொன்னால், விலகிவிடுவான். ஆகையால் இன்னமும் மற்ற மருத்துவ சோதனைகள், குடும்ப பின்னணி எல்லாம் தெரிந்துகொண்டு பிறகு சொல்லலாம் என அவனோடு பழகுகிறாள். ஆனால், இவளின் அணுகுமுறையால் நாயகன் தன்னை காதலிப்பதாக புரிந்துகொள்கிறான்.

பிறகு விசயம் தெரிந்து வேண்டாம் என நகர்ந்தவன், பிறகு ஒத்துக்கொள்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****


சமீபத்தில் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த பொழுது, “உங்க பொண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்கிறீர்களா” என கேட்டேன். “எங்க சார்! எங்க சொந்தத்தில் கடந்த மூன்று நான்கு வருடங்களில்… மூன்று பெண்களை கட்டிக்கொடுத்தோம். மூன்று பெண்களும் இப்பொழுது கைக்குழந்தையுடன் அம்மா வீட்டில் இருக்கிறார்கள். சண்டையும் சச்சரவுகளுமாய், விவாகரத்து வழக்குமாய் போய்க்கொண்டிருக்கிறது. பசங்க குடும்ப பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என வருத்தமாய் சொன்னார்.

குடும்பம் சுமத்துகிற பொறுப்புகள், எழும் முரண்பாடுகள், அதனால் வரும் கசப்புகள் எல்லாம் சேர்ந்து குடும்ப அமைப்பு கடுமையாக சுமத்துகின்றன. விளைவு – விவாகரத்து, தனித்து வாழ்தல், குழந்தையை தத்தெடுப்பது, விஞ்னானத்தின் வளர்ச்சியில் யாரோ தெரியாத நபர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற நிலைக்கும் இன்று வளர்ந்து நிற்கிறது.

குடும்பம் இன்னும் பழைய விழுமியங்களோடு நீடிக்கமுடியாது. ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி, புரிதல்கள் மூலம், குடும்பம் நகர்த்தப்படவேண்டும். அதெல்லாம் கிடையாது. குடும்பத்தின் பழைய பிற்போக்கு விழுமியங்கள் தான் வேண்டும். அது தான் எனக்கு வசதியாக இருக்கிறது என அடம்பிடித்தால், குடும்பம் சிதைவதை யாராலும் தடுக்க முடியாது.

படம் இடைவேளைக்கு பிறகு, பாசிட்டிவாக நகர்வது நன்றாக இருக்கிறது. இயக்குநர் மகேஷ்பாபுவிற்கு முதல்படம் என்கிறார்கள். படத்தின் கதை கொஞ்சம் பிசகினாலும், ஆபாசமாக நகர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் அந்த கோட்டை தாண்டவேயில்லை. நல்ல வரவு. இன்னமும் நல்ல படங்கள் தருவார் என வாழ்த்துவோம்.

(பாகுபலி) அனுஷ்கா ஒரு இடைவேளைக்கு பிறகு நடுத்தர வயதில் பூசினாற் போல மெழுகு பொம்மையாட்டாம் இருக்கிறார். நாயகனை காதலித்துவிடக்கூடாது ஆகையால் உணர்ச்சி காட்டாமல் நடியுங்கள் என இயக்குநர் சொன்னதை கடைசி வரை கடைப்பிடித்துவிட்டார். அடுத்தடுத்த படங்களில் அனுஷ்கா சரியாகிவிடுவார் என நம்புவோம். நாயகன் நவீன் அந்த போதாமையை தன் கலகலப்பான நடிப்பின் மூலம் சரி செய்துவிட்டார். மொத்தப் படத்தையும் தாங்குவது இவர் தான். மற்றவர்கள் ஜெயசுதா, நாசர் எல்லாம் கெளரவ பாத்திரங்களில் வந்துபோகிறார்கள்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியானது. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுது சென்னையில் சில திரையரங்குகளில் மட்டும் ஓடுகிறது.

நல்ல படம். பாருங்கள். விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும்.

0 பின்னூட்டங்கள்: