மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு இளம் தொழில் முனைவோர் சந்தித்தார். முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனால், அவர் சொன்ன அனுபவங்களைக் கேட்டதும், "தொழில் தொடங்குவது எளிது; தவறுகளைச் சரிசெய்வதே பெரிய தொழில்!" என்று தோன்றியது.
"ஆர்கானிக் பொருட்களை வாங்கி, இயந்திரத்தில் அரைத்து, அழகாக டப்பாவில் அடைத்து விற்கலாம் என்று நினைத்தோம். அதற்காக முதலில் ஸ்டிக்கர் அச்சிட வேண்டும். ஸ்டிக்கரில் GSTIN இருக்க வேண்டும். அதனால் அவசரமாக GST பதிவு வாங்கிவிட்டோம்.
பிறகுதான் கணக்கு போட ஆரம்பித்தோம்.
ஆர்கானிக் பொருட்களின் விலை...
இயந்திரங்கள்...
சோலார் ட்ரையர்...
தொழிலாளர்கள்...
பேக்கிங்...
சந்தைப்படுத்தல்...
எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், லாபம் மட்டும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு 'என்னைத் தேடிப் பாருங்கள்!' என்று விளையாடிக் கொண்டிருந்தது.
'இந்த தொழில் வேண்டாம்!' என்று முடிவு செய்து விட்டோம்.
அதுவரை நான்கு, ஐந்து மாதங்கள் Nil Return மட்டும் தாக்கல் செய்து வந்தோம். 'சரி... GST-யை சரண்டர் செய்து விடலாம்' என்று விண்ணப்பித்தோம்.
அங்குதான் கதை இரண்டாம் பாகம் ஆரம்பித்தது.
'ஆறு மாதமாக என்ன செய்தீர்கள்? வங்கி கணக்கு கொண்டு வாருங்கள்... ஆவணங்கள் கொண்டு வாருங்கள்...' என்றார்கள். இரண்டு முறை அலுவலகத்திற்குப் போனேன். இரண்டு முறையும் Assistant Commissioner மட்டும் இல்லை!
நான் போகும் நேரத்தைப் பார்த்து அவருக்கே வேறு வேலை வந்ததோ என்னவோ!" அதற்குள் வாழ்க்கை இன்னொரு திருப்பம் கொடுத்தது.
"₹35 லட்சம் கடன் வாங்கலாம் என்று வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அங்கிருந்தே ஒரு வரி ஆலோசகரை தொலைபேசியில் பேச வைத்தேன். அவர் சொன்னது ஒன்று.. ஆலோசகர் புரிந்துகொண்டது ஒன்று...
இறுதியில், வருட வருமானம் ₹4,90,000 என்று Income Tax Return தாக்கல் செய்து விட்டார்கள். அந்த ரிட்டனை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போனால்...
'இந்த வருமானத்தை வைத்து இந்தக் கடன் தர முடியாது!' என்று ஒரே வரியில் தீர்ப்பு."
இதற்குப் பிறகாவது அமைதி வந்ததா?
எங்கே...
"எனக்குத் தெரிந்த வேலை Civil Contract தான். எங்கு டெண்டர் கேட்டாலும், 'GST இருக்கிறதா?' என்பதே முதல் கேள்வி.
சரி... மீண்டும் புதிய GST பதிவு வாங்கலாம் என்று நினைத்தோம்.
வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளர் பெயரில். மின்சார ரசீது அவருடைய துணைவியார் பெயரில். இரண்டையும் ஆலோசகரிடம் கொடுத்தேன்.
அவரும் அப்படியே பதிவேற்றிவிட்டார். இப்போது Portal-க்கு சந்தேகம். 'இரண்டு பெயரும் ஏன் வேறு?' என்று விளக்கம் கேட்டிருக்கிறார்கள்."
அதுமட்டுமல்ல...
"ஏற்கனவே ஒரு GST பதிவு சரண்டர் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. முதலில் அதை முறையாக முடித்து, இறுதி ரிட்டன் எல்லாம் தாக்கல் செய்து வாருங்கள். அதற்குப் பிறகுதான் இதைப் பார்க்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்."
அவர் பேசிப் முடித்ததும் நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.
ஏனென்றால், தொழிலில் ஏற்பட்ட இழப்பை விட, தவறான ஆலோசனைகளால் ஏற்பட்ட சுற்றுலாப் பயணங்கள்தான் அவரை அதிகம் சோர்வடையச் செய்திருந்தன.
இறுதியில், அவர் எங்களிடம் வந்தார். ஒவ்வொரு முடிச்சாக இருந்த பிரச்சினையையும் அவிழ்த்தோம். எந்த விண்ணப்பம் எப்படி முடிக்க வேண்டும்... எந்த ஆவணம் திருத்தப்பட வேண்டும்... எந்த பதிவு முதலில் நிறைவு பெற வேண்டும்... எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி சரி செய்து கொடுத்தோம்.
அவர் கிளம்பும்போது சொன்ன ஒரு வரி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.
"சார்...
தொழில்
தொடங்குவது
கஷ்டமில்லை.
சரியான
ஆலோசகரை
முதல்
நாளிலேயே
தேர்ந்தெடுப்பதுதான்
பெரிய
முதலீடு
போலிருக்கிறது!"
- இரா. முனியசாமி
0 பின்னூட்டங்கள்:
Post a Comment