> குருத்து

January 9, 2009

சத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”


இந்தியாவின் கணிப்பொறி நிறுவனங்களில் 4 வது இடத்தில் இருந்தது “சத்யம் கம்யூட்டர்ஸ்”. கடந்த பல ஆண்டுகளாக சத்யத்தில் நடந்த 8000 கோடி ஊழலால் கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை கதிகலங்கி போயிருக்கிறது. சத்யம் எல்லா சானல்களிலும் பிரேக்கிங் நியூஸில் தவறாமல் இடம்பெறுகிறது.

இன்றைக்கு ஆந்திர அரசு சத்யத்தின் இயக்குநர் ராஜூவை கைது செய்வதற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது.

ரூ. 200 ஐ தொட்டுக்கொண்டிருந்த சத்யத்தின் பங்குகள் வீழ்ச்சியாகி, நேற்று ரூ. 40க்கும் கீழே சரிந்துவிட்டன. சத்யம் பங்குகளை வாங்கி வைத்திருந்த பங்குதாரர்கள் போண்டியாகி போனார்கள்.

66 நாடுகளில் வேலை செய்யும் 53000 ஊழியர்களில் அடுத்த மாதம் 10000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என செய்திகள் வருகின்றன.

இனி விரிவாக பார்க்கலாம்.

****

உலக வங்கி வேலை ரத்து


உலக வங்கிக்கான வேலைகளை சத்யம் செய்துகொண்டிருந்தது. இரண்டு வாரத்திற்கு முன்பு உலக வங்கி, தனது வேலைகளை 8 ஆண்டுகளுக்கு நிறுத்த சொல்லி உத்தரவிட்டது.

காரணம் - தனது டேட்டா பேஸை திருடிவிட்டதாகவும், தனது டாக்குமெண்டுகளை சரியாக ஒப்படைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. அப்பொழுதே அதன் இயக்குநர் ராஜூ ராஜினாமா செய்வார் என பேசப்பட்டது. ஆனால் விலகவில்லை.

சத்யம் இயக்குநர் ராஜூ ராஜினாமா


கடந்த டிசம். 7ந்தேதி ராஜூ ஒரு ஒப்புதல் வாக்குமூலமாய் 5 பக்க அளவில் தயாரித்து சத்யத்தின் போர்டு இயக்குநர்கள் குழாமிற்கும் (Board of Directors), பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி (SEBI), ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பினார்.

தான் செய்த தவறுகளை பட்டியலிட்டு, தான் அதற்காக பொறுப்பேற்பதாகவும், சட்டரீதியாக தான் எதிர்கொள்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கணக்கு வழக்குகளில் நடந்த தில்லுமுல்லுகளில் சில

• நல்ல மதிப்பு வருவதற்காக லாபத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 2212 கோடிக்கு பதிலாக 2700 கோடி (செப். 2008 – 6 மாத வரவு செலவு அறிக்கைபடி)

• பணம் கையிருப்பை அதிகமாக்கி காட்டியிருக்கிறார்கள். ரூ. 5361 கோடி கணக்கில். உண்மையில் 300 கோடி தானாம்.


• செலுத்த வேண்டிய கடனை குறைத்து காட்டியிருக்கிறார்கள்.

• வர வேண்டிய கடனை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

ராஜூ இது தவிர தனது இரண்டு மகன்கள் நடத்திவந்த இரண்டு கட்டுமான (Maytas infra. Ltd, Maytas properties ) நிறுவனங்களை சத்யம் கம்யூட்டர்ஸ் வாங்குவதற்கு எல்லா வேலைகளையும் முடித்து, முதலீட்டாளர்களின், பங்குதாரர்களின் எதிர்ப்பால் கடைசி நேரத்தில் ரத்து செய்திருக்கிறார்.

நடவடிக்கைகள், கண்டனங்கள், வழக்குகள்


பங்குகள் மதிப்பு சரிந்ததால், மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையிலிருந்தும் நிறுவனங்களின் பட்டியலிருந்து சத்யத்தை தூக்கி கடாசிவிட்டார்கள்.

சத்யத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த பிரைஸ்வாட்டர் கூப்பர் ஆடிட்டிங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்திய தணிக்கையாளர்களுக்கான அமைப்பு அறிவித்திருக்கிறது.

“இது எப்படி சாத்தியம்?” என செபி அதிர்ச்சி ஆகியிருக்கிறதாம்.

“நிர்வாக குளறுபடி தான் காரணம்” என இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்கிறார்.

“இந்திய கணிப்பொறி நிறுவனங்களின் மீது ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது. அதை மூலதனமாக வைத்து ராஜூ விளையாடிவிட்டார்” என டெக் மஹிந்திரா நிர்வாகம் கோபப்பட்டிருக்கிறது.

'சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மிகப்பெரிய சந்தேகத்தை விதைக்க அவரது மோசடி காரணமாகிவிட்டது” என்கிறார் நாஸ்கம் தலைவர் கணேஷ்.

போர்டும், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்-ம் தனது ஆர்டர்களை கைமாத்திவிட்டதாம்.

சத்யத்தில் தங்கள் பணத்தைப் போட்டிருந்த முதலீட்டாளர்கள் அபர்தீன், விஸாட், ஜேபிமோர்கன், எல்.ஐ.சி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

பங்கு பத்திரங்களை வாங்கி ஏமாந்த அமெரிக்கர்கள் சத்யத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

கூட்டுக் களவாணிகள்


ராஜூ தான் எழுதிய கடிதத்தில் தான் செய்த இமாலய தவறுகள் வேறு யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டிருக்கிறார். இது கடைந்தெடுத்த பொய்.


நிர்வாக இயக்குநர்கள் குழாம், தணிக்கை நிறுவனம், அதனுடைய சி.எப்.ஒ. எல்லோரும் கூட்டாய் தான் கொள்ளையடித்திருக்கிறார்கள். நிறுவன நடைமுறைகளில் இப்படி தனியாக கொள்ளையடிப்பது சாத்தியமில்லை. கூட்டாகத்தான் கொள்ளையடிக்க முடியும்.

இந்தியாவில் 4வது இடத்தை பிடித்திருக்கிற சத்யத்தில் இப்படி ஊழல் நடப்பது சாத்தியப்படுகிறது என்றால், அவ்வளவு கோளாறுகள் இங்கு இருக்கின்றன என்று தானே அர்த்தம்.

செபி இன்றைக்கு ஹைதாரபாத்துக்கு தனது அதிகாரிகளை சோதனைக்கு அனுப்பியிருக்கிறதாம். செத்தப்பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய செபி எதற்கு?

முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு ஏமாற்று

அமெரிக்க திவாலைப் பற்றி தொடர் கட்டுரைகள் எழுத தொடங்கும் பொழுது, முதல் கட்டுரையாக முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிப் பார்த்தோம்.

//1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு//

.இது எவ்வளவு போலியானது என அந்த கட்டுரையில் விளக்கியிருந்தேன். இன்றைக்கு அதற்கு ஒரு நல்ல உதாரணம் “சத்யம்”.

அரசு உதவி பெறுகிற சதி

இந்த ஊழல் கடந்த பல ஆண்டு காலமாக நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது ஏன் ராஜூ அறிவித்தார் என ஒரு கேள்வி எழுகிறது.

“சந்தை பொருளாதாரம் தான் எல்லாவற்றையும் தூக்கி நிறுத்தும்” என தேனெழுக பேசிய முதலாளித்துவவாதிகள் பல தில்லுமுல்லுகள் மூலம் வால்ஸ்டீரிட்டையே தலைகுப்புற கவிழ்த்தார்கள். பிறகு, கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் தங்களை காப்பாற்றுமாறு அரசிடம் கையேந்தி நின்றார்கள்.

அமெரிக்க அரசு மக்கள் நலம் நாடு அரசா என்ன? முதலாளிகளின் அரசு தானே! தாராளமாய் உடனே 70000 கோடி டாலரை தூக்கிக்கொடுத்தது.

நம்மை விட பெரிய திருடன்கள் எல்லாம் சுதந்திரமாய் வரும் பொழுது, நாம் வலம் வருவதற்கு என்ன? என்ற எண்ணம் தான் ராஜூவுக்கு தெம்பை கொடுத்திருக்கும். அது அவர் எழுதிய கடித்ததிலேயே நன்றாக தெரிகிறது.

இந்திய அரசு சத்யத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என ஏதேனும் அரசு பணத்தை தூக்கி கொடுத்தால், மக்கள் தான் இதற்கு எதிராய் போராடவேண்டும்.

January 6, 2009

அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”


இன்றைக்கு அமெரிக்க பொருளாதார திவாலுக்கு பிறகு, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஏற்கனவே பலமுறை பேசி, பேசி ஓய்ந்து புளித்துப்போன விசயங்கள். முதலாளித்துவம் அதன் தலை முதல் வால் வரை அனைத்தும் அழுகிவிட்டது.

மீண்டும் மீண்டும் எழும் பொருளாதார சுனாமியைத் தவிர்க்க இதோ மார்க்சியம் தீர்வு சொல்கிறது.

"உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு".

மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். நன்றாக படிக்கட்டும்.

இனி மார்க்சியம் தான் உலகை ஆளும்.


October 20, 2008
Banking crisis gives added capital to Karl Marx’s writings
Roger Boyes in Berlin


Bankers of the world, unite! You have nothing to lose but your bonuses, houses in Esher, holidays in the Caribbean and your Jermyn Street shirts. The upside is that you have the time, at last, to read the complete works of Karl Marx.
The prophet of revolutionaries everywhere, the scourge of capitalism, is enjoying a comeback.
In Germany Das Kapital, which for the past decade has been used mainly as a doorstop, is flying off the shelves as the newly disenfranchised business class tries to work out the root of the present crisis.
“Marx is fashionable again,” declares Jörn Schütrumpf, head of the Berlin publishing house Dietz, which brings out the works of Marx and his collaborator Friedrich Engels. Sales have trebled – albeit from a pretty low level – since 2005 and have soared since the summer.... continues.
http://business.timesonline.co.uk/tol/business/economics/article4974912.ece
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி தொடர்கிறது)

மார்க்சியமே உரைகல்


"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.

ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.

பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட்டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.

இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி
டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.

ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!

• செல்வம்

நன்றி :
புதிய ஜனநாயகம் – நவம். 2008

January 2, 2009

வங்கிகளின் ‘சேவை’த் தரம்?


பாரத ஸ்டேட் பாங்கு (SBI) வங்கிக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் கோபபட்டிருப்பீர்கள் அல்லது புலம்பியாவது இருப்பீர்கள். உண்மையா? இல்லையா?

இந்தியாவின் முன்ணணி வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர் சேவையில் எரிச்சல் தான் ஊட்டுகின்றன.


***

இந்த பதிவிற்கான தேவை - எஸ்.பி.ஐ. இன்றைக்கு தந்திருக்கிற நாளிதழ்களில் ஒரு விளம்பரம் தந்திருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி தனது 11,111 வது வங்கி கிளையை அசாம் மாநிலத்தில் சோனாபூரில் துவக்கி வைக்க.. உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களை அழைத்து இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் “வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே நேசமிகு நெருக்கத்தை பராமரித்து வருகிறது” என வாசகம் வருகிறது.

எஸ்.பி.ஐ - அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் வழங்குவது என அரசினுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும், இந்தியாவில் நிறைய கிளைகள், நிறைய ஏடிஎம் மையங்கள் அதிகம் வைத்திருப்பது எஸ்.பி.ஐ தான். இதனால் எப்பொழுமே கூட்டம் நிரம்பி வழிகிறது.

பணம் கட்ட, டிடி எடுக்க என டோக்கன் வாங்கினால் குறைந்த பட்சம் நமக்கு முன்னால் 50
பேர் காத்திருக்கிறார்கள். விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் போனால்.... 100 க்கும் குறையாமல் காத்திருக்கிறார்கள். கிட்டதட்ட அந்த வேலையை முடிக்க அரை நாள் ஆகிவிடுகிறது. காத்திருக்கும் பொழுதில் அங்கு அமர்ந்திருக்கிற எல்லா வாடிக்கையாளர்களுமே புலம்பித்தள்ளுவார்கள். டென்சனுடன் அமர்ந்திருப்பார்கள்.

மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என தேவையான ஆட்களை நியமிக்காமல், வங்கிக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களையும் காக்க வைப்பது மக்களின் நேரத்தை மதிக்காத போக்குதான்.

எஸ்.பி.ஐ மட்டுமில்லை ஐ.சி.ஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களை பல்வேறு வேலைகளில் அலைகழிக்கிறார்கள்.

எப்பொழுதும் கூட்டமாய் இருக்கிற எங்கள் பகுதியில் உள்ள இரண்டு இந்தியன் வங்கி-களில்
பியூனே நியமிக்காமல், வாடிக்கையாளர்களையே அங்கே போய் கையெழுத்து வாங்கி வாருங்கள் என பியூனாக பயன்படுத்திக்கொள்வார்கள். இதை அங்குள்ள வங்கி சீனியர் மேனேஜரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறேன். நேரிடையாக பதில் சொல்லாமல், மழுப்பலாய் பதில் சொன்னார்.

இதுதவிர, வாடிக்கையாளர்களை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பார்த்து, இவர்கள் கையாளுகிற விதம் மக்களைவிட “தாம் மேம்பட்ட மக்கள்” என்கிற போக்கு தெரிகிறது. இதற்கு பல்வேறு உதாரணங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

சமகால நிலைமை என்னவென்றால், இந்திய அரசு பல வழிகளில் நிதிமூலதன கும்பல்களுக்காக வங்கி நடவடிக்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

உதாரணமாய், வருங்கால வைப்பு நிதி பணத்தை எஸ்.பி.ஐ. வங்கி தான் பாரமரித்து வந்தது. பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அரசு அதை கண்டுகொள்ளாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியை சரி செய்கிறேன் என்ற பெயரில், வைப்புநிதியை கையாள ஐசிஐசிஐ, ஹச்.எஸ்.பி.சி, ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்து கொடுத்தது.

இந்த போக்கு தொடரும் பட்சத்தில்... ஒருநாள் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் போல தேசிய வங்கிகளும் மற்ற வங்கிகளும், திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை வந்தாலும் வரலாம்.

மக்கள் தான் மகத்தானவர்கள். மக்களோடு ஐக்கியப்பட்டு அரசு செய்யும் தில்லுமுல்லுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி போராட்டங்களை கட்டியமைத்தால் மட்டுமே இந்த நிலை வராமல் தடுக்க முடியும். இல்லையெனில், இந்த வங்கி ஊழியர்கள் தனிமைப்பட்டு வேலை இழந்து தெருவில் நிற்கும் காலம் வெகுதூரமில்லை.