October 25, 2020
நிசப்தம் (2020)
Midnight Runners (2017) Korean
கதை. போலீஸ் அகாடமியின் பயிற்சியின் பொழுது இருவர் நண்பர்களாகிறார்கள். இரண்டு வருடங்கள் கடக்கின்றன. தங்களுடன் பயிற்சியில் இருக்கும் ஒருவனுக்கு தோழி ஒருவள் இருக்கிறாள். எப்படி என விசாரிக்கும் பொழுது, பப்பில் சந்தித்ததாக சொல்கிறான். இவர்களும் ஆர்வமாக வெளியே வர அனுமதிவாங்கி, பப்புக்கு வருகிறார்கள். நடுநிசி வேளையில் வீடு திரும்பும் பொழுது, ஒரு இளம்பெண் கண்ணில்படுகிறாள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணை காரில் கடத்துகிறார்கள். முயன்றும், அவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை.
ஒருவர் கடத்தப்பட்ட பிறகு வருகிற ஏழு மணி நேரம் என்பது முக்கியமான நேரங்கள் (Critical Hours). அதற்குள் கடத்தப்பட்டவர்களை மீட்டுவிடவேண்டும். இல்லையெனில் சிரமம் என பாடத்தில் படித்திருப்பார்கள். அதனால், உடனடியாக போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் தெரிவிக்கிறார்கள். அவர்களோ வேறு வேறு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இருவருமே தங்கள் கற்றதை வைத்துக்கொண்டு, விசாரித்து, விசாரித்து, கடத்திய பெண்ணை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
அங்கு அந்த பெண் மட்டுமல்ல! நிறைய இளம்பெண்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடத்திய ஆட்களோ ஒரு மாபியா கும்பலாக இருக்கிறது. எதற்காக இளம்பெண்கள் கடத்தப்பட்டார்கள்? அந்த பெண்களை அவர்கள் மீட்டார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****
இரண்டு கத்துக்குட்டிகள். தங்களை விட இளம்வயது பெண் கடத்தப்படுவதைப் பார்த்து பதைப்பதைத்து ஒரு மனிதாபிமானத்துடன் மல்லுக்கட்டுவதை உணர்வுபூர்வமாகவும், காட்சிகளில் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
கற்பது வேறு. நடைமுறை வேறு என்கிற முரண்பாட்டை அவர்கள் உணரும் இடம் முக்கியமான இடம். பெண்ணை கடத்தி சென்றுவிட்டார்கள் என இவர்கள் பதைபதைப்புடன் வந்து சொல்லும் பொழுது, அங்கிருக்கும் ஒரு போலீசு அதிகாரி ”ஒரு பெரிய விஜபியினுடைய பேரன் காணாமல் போய்விட்டான். என்னவென்று உடனே பாருங்கள் என மேலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. மேலிட உத்தரவு ரெம்ப முக்கியம்” என சொல்லி வேகமாக கிளம்பி செல்வார்.
நம்மூரில் எளிய மக்களின் புகாரை போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்வதே பெரிய போராட்டம் தான். பல சமயங்களில் அவர்களை வழக்கை பதிய வைப்பதற்கே, ஒரு வழக்கறிஞரை பார்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்காடி உத்தரவு வாங்கி வரவேண்டியிருக்கும். அப்பவும் போலீசு உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்கமாட்டார்கள். ”உங்க உத்திரவை மதிக்க மாட்டேங்கிறாங்க!” என திரும்பவும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும். இப்படி பல ஆயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன என்பது தனிக்கதை. ஆனால், அதிகாரத்தில், ஆட்சியில், பணம் படைத்தவர்களுக்கு போலீசில் கிடைக்கும் மரியாதை எப்போதும் தனிதான்.
கத்துக்குட்டிகள் இந்த உண்மையை, எதார்த்தத்தை பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே கற்றுக்கொள்வார்கள். பிறகு அதுவே பழக்கமாகிவிடும். பிறகு அந்த உயரதிகாரியை போலவே ”சாமர்த்தியமாக” நடந்துகொள்வார்கள்.
மற்றபடி, கமர்சியலான படம். நண்பர்கள் இருவரும் சிறப்பாக தங்கள் பாத்திரத்தை தாங்கியிருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
படம்_செய்தி :
எதார்த்தம் ஒன்றாகவும், பாடம் நடத்துவது ஒன்றாகவும் இருப்பதைப் பார்த்து ஆசிரியரை உற்றுப்பார்க்கிறார்கள்.
Nightcrawler (2014) English
கதை. நாயகன் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்துவருகிறான். ஒருநாள் இரவு ஒரு விபத்து. அங்கு வந்த ஒரு நிருபர் வேகவேகமாக வந்து அந்த விபத்தை எடுத்துவிட்டு உடனே கிளம்புகிறார். எதையும் வேகமாக கற்கும் திறனுள்ள (பெரும்பாலான திருடர்களுக்கு உள்ள விசேச திறன் அது) அவன் இதன் மூலம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறான்.
கையிருப்பை வைத்து, ஒரு கார், ஒரு கேண்டி கேமிரா, போலீஸ் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வயர்லெஸ் செய்திகளை ஒட்டு கேட்க ஒரு ரேடியோ, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தோடு தொடர்பு என அடிப்படையான அம்சங்களை தயார் செய்து இரவுகளில் அலைய துவங்குகிறான். முதலில் ஏமாற்றம் இருந்தாலும், மெல்ல மெல்ல முன்னேறுகிறான். அவன் தரும் வீடியோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஒரு முன்னாள் திருடன் என்பதால், தன்னுடைய வளர்ச்சி மட்டும் தான் கண்முன்னால் நிற்கிறது. ஒரு பத்திரிக்கையாளனுக்குரிய அறம் என்பதே அவனிடம் இல்லை. அந்த தொலைக்காட்சி சானலின் முதலாளிக்கும் திருடனைப் போலவே தன் வளர்ச்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.
அதற்கு பிறகு அவன் செய்வதெல்லாம் இன்னும் மோசமான கிரிமினல் வேலைகளாக இருக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
*****
தொலைக்காட்சி சானல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றன. பெரும்பாலான தொலைக்காட்சி சானல்கள் பெரும் முதலாளிகளின் சானல்களாக இருக்கின்றன. கட்சிகளுனுடையதாக இருக்கின்றன. எந்த செய்தியை முதன்மைப்படுத்துவது: எதை விடுவது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன. இதில் எந்த ஊடகமாவது ‘’நடுநிலை’ என்று சொன்னால் வாய் கொள்ளாமல் சிரித்துவிடுகிறேன்.
இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு பத்திரிக்கையாளன் தனக்கான அறம் என்பதை கடைப்பிடிக்க இங்கு வாய்ப்பேயில்லை. அப்படி கடைப்பிடித்தால், அவனால் அங்கு நீடிக்கமுடிவதில்லை. சமீபத்திய தமிழகத்து சானல்களில் நடந்துகொண்டிருக்கும் நிலை இதுதான்.
நேர்மையில்லாத பத்திரிக்கையாளன் என்றே நேரடியாக கதையில் சொல்லியிருக்கலாம். அவனை ஏன் ஒரு திருடன் என சொன்னார்கள் என்பது தான் எனக்கு வியப்பு. அவன் திருடன். ஆனால், தொலைக்காட்சி சானலின் முதலாளியின் கூட்டு அருமையாக பொருந்துகிறதே! அது எப்படி? அது தான் கள எதார்த்த நிலைமையாக இருக்கிறது.
இதில் பார்வையாளர்களின் நிலை தான் மிகவும் சிக்கலானது. செய்திகளுக்கு பின்னால் தான் உண்மை இருக்கிறது என்பார்கள். பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தால் தான் நம்மால் உண்மையை கண்டறியமுடியும். இல்லையெனில் நம்மை எல்லாம் இருட்டிலேயே தான் வைத்திருப்பார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
படம் பட்ஜெட் படமாக இருந்தாலும், படம் எடுத்துக்கொண்ட கதைக்கரு என்பது சமூகத்தை பாதிக்க கூடியதாக இருக்கிறது. ஆகையால், இந்தப் படம் கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது.
படத்தின் முடிவும் அத்தனை எதார்த்தம். 'நீதிக்கதை'யை போல அவனை தண்டிக்காமல், மங்காத்தாவின் முடிவு தான். படத்தின் இறுதியில் தனது எல்லைகளை விரிவாக்குகிறான்.
படத்தில் சொற்ப பாத்திரங்கள் தான். ஆனால், எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதில் நாயகனும், அந்த சானல் முதலாளியும், அந்த சானலில் முதன்மை பத்திரிக்கையாளரின் நடிப்பும் சிறப்பு.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.


