> குருத்து: 12th fail (இந்தி)

May 27, 2024

12th fail (இந்தி)


மத்தியப் பிரதேச சம்பல் பள்ளத்தாக்கு பகுதி. நாயகன் +2 படிக்கிறார். மாணவர்கள் காப்பியடிக்க அந்த பள்ளி தலைமையே அனுமதிக்கிறது. அதிகாரிகள் சோதிப்பதில் கூண்டோடு பிடிபடுகிறார்கள்.


நாயகனுக்கு ஒரு போலீசு அதிகாரியின் அதிகாரம், நேர்மை பிடித்துப்போகிறது. பள்ளியே காப்பியடிக்க அவர் மட்டும் தெரிந்ததை எழுதி தோல்வியடைகிறார். அப்பா உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவரால் பழிவாங்கப்பட்டு வேலையை இழக்கிறார். மீண்டும் வேலையை பெற முயற்சி செய்கிறார். தொடர்ந்து படிக்கிறார்.

குடும்பத்தை வறுமை வாட்டுகிறது. இருப்பினும் வைராக்கியமாக போலீசு தேர்வுக்கு படிக்க கிளம்புகிறார். மாநில அரசு போலீசு தேர்வுகளை அப்பொழுது நிறுத்தி வைக்கிறது.

ஆகையால், தில்லிக்கு குடிமைப் பணி தேர்வுக்கு நகர்கிறார். கிடைத்த கடுமையான வேலையில் ஒட்டிக்கொண்டு படிக்கிறார். மொத்தம் நான்கு முயற்சிகள் தான். அதற்குள் தேர்ச்சியடைய வேண்டும். இல்லையெனில் பெட்டியை கட்டிக்கொண்டு ஊர்பக்கம் கிளம்பவேண்டியது தான்.

இடையில் காதல் வருகிறது. சோதனைகள் வருகின்றன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, படிப்பை முடித்தாரா என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***


உண்மை கதை. இப்பொழுது மும்பையில் போலீசில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். படம் வெளிவந்து, வெற்றி பெற்று, பலரும் அருமை என எழுதிவிட்டார்கள்.

ஒரு படத்தில் விளையாட்டாக சொல்வார்கள். காதலர்கள் ஊரைவிட்டு அல்லது அந்த சூரியன் அந்தியில் மறையும் பொழுது அவர்களும் ஒரு புள்ளியாக மறைந்துபோகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என யாரும் கவலைப்படுவதில்லை!

படத்தின் இறுதியில், நாயகனை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவர் சொல்வார். ”இந்த சிஸ்டத்துக்கு இப்படியும் நபர்கள் வேண்டும்” என்பார். அது ஒரு முக்கியமான வசனம்.

அரசு, அரசாங்கம் இருக்கிறது. கார்ப்பரேட், பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் தான் பின்னிலிருந்து இயக்குகிறார்கள் என யாராவது சொன்னால், எப்படி என நீண்ட நாட்கள் மண்டையை குழப்பிக்கொண்டிருந்தேன். லஞ்சம் வழியாக தான் இவர்கள் அந்த சிஸ்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என ஜெர்மனிய தாடிக்காரன் தான் தெளிவித்தான்.

சகாயம் ஐ.ஏ.எஸ். சந்தித்த சவால்கள் என தன் அனுபவங்களை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். அதிகாரமும், லஞ்சமும் இந்த சிஸ்டத்தை எப்படி ஆக்டோபஸ் போல பிடித்திருக்கிறது என புரிந்துகொள்ளமுடியும். அவர் பலமுறை அதில் சிக்குண்டு, மயிரிழையில் தப்பி வெளியே வந்ததை எழுதியிருப்பார்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு குரூப் 4 தேர்வில் தேர்வாகி, பத்திர பதிவில் வேலைக்குச் சேர்ந்தான். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அவனுடைய பங்காக ரூ. 300 கொடுத்துள்ளார்கள். மறுத்துவிட்டான். அடுத்த பத்து ஆண்டுகளில் சென்னையில் லஞ்சம் இல்லாத ஒரு இடத்துக்கு நகர்த்திவிட்டார்கள் அல்லது நகர்ந்துவிட்டான். ஏதாவது ஒரு விசேசத்தில் சந்தித்தால், நேர்மையாக இருப்பதால் வரும் பிரச்சனைகளை கதை கதையாக நொந்து சொல்வான். இப்பொழுது அந்த வேலையை உதறிவிட்டு, வழக்கறிஞராக பணிபுரிகிறான்.

ஒரு சிஸ்டம் லஞ்சத்தில் திகழும் பொழுது, நேர்மையாக ஒரு அதிகாரி அதன் பகுதியாக இருக்கிறார் என்பது எவ்வளவு சிரமம் என்பதை மனோஜ் சர்மாவிடம் இப்பொழுது கேட்டால், கதை, கதையாய் சொல்வார். அது தான் சுவாரசியமான, விறுவிறுப்பான சொல்லப்படாத உண்மைக் கதையாக இருக்கும். இந்த மோசமான சிஸ்டம் எத்தனை நேர்மையான மனிதர்களை வதைத்திருக்கிறது. அதிகப்பட்சம் கொன்றிருக்கிறது என்பதை பல உண்மை சம்பவங்களைப் பட்டியலிட்டு சொல்லமுடியும்.

இதை எதிர்மறையாக சொல்லவில்லை. இந்த சிஸ்டம் எத்தனை கோளாறாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்காக சொல்கிறேன். இதை ஒரு புலம்பலாக கூட சொல்லவில்லை. இதை மாற்றுவதற்கு எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

மற்றபடி படம் எனக்கு பிடித்திருந்தது. முன்னாபாய், 3 இடியட்ஸ் திரைக்கதைகளில் பங்குபெற்று, தயாரித்த வினோத் சோப்ரா தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நல்ல படம். ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள். அதற்கு பிறகு கொஞ்சம் அசைபோடுங்கள்.

0 பின்னூட்டங்கள்: