> குருத்து: To catch the Killer (2023) ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர்

May 25, 2026

To catch the Killer (2023) ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர்


 

அமெரிக்காவின் ஒரு பரபரப்பான பெருநகரம்.  பப்புகளிலும், ஹோட்டல்களின் உச்சிகளில் நடனமும், களிப்புமாக இருக்கின்றன.  திடீரென எங்கிருந்து சுடுகிறார்கள் என தெரியாமலேயே, ஆங்காங்கே சுடப்பட்டு செத்து, செத்து கீழே விழுகிறார்கள். மக்கள் பதறிப்போய் அங்கிருந்து வேகவேகமாய் நகர்கிறார்கள். எங்கிருந்து சுட்டார்களே அந்த இடம் வெடித்து சிதறுகிறது.  எந்த தடயமும் கிடைக்கவில்லை.

 

நாயகி போலீசாக இருக்கிறார்.  அங்கு பார்க்கும் காட்சி கொடூரமாய் இருக்கிறது. FBI வருகிறது. துப்புத் துலக்க ஆரம்பிக்கிறது.  போலீசுகளின் மத்தியில் அதன் முக்கிய அதிகாரி  இது குறித்து பேசுகிறார். யாராவது கருத்து இருந்தாலும் சொல்லுங்கள் என்கிறார்.  நாயகி தன் சக அதிகாரியிடம் “சுட்டவன்  கொசுக்களை சுடுவதாக சுட்டிருக்கிறான்.  அவன் சுட நினைத்திருந்தால், இன்னும் பலரை சுட்டிருக்கலாம்.   அவனுக்கு பசி அடங்கியிருக்கிறது” என்கிறார்.   இதை எதைச்சையாக கேட்ட FBI அதிகாரி நாயகியை தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார்.

 

கொலைகாரன் ஒரு மாலில் வேறு ஒருவரின் துணியை எடுத்துக்கொண்டு விட, சம்பந்தட்ட்டவர் புகார் கொடுக்கிறார். அங்குள்ள பாத்ரூம் வாஷ் பேசினில், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, சாப்பிட்ட தட்டுகளில் இருந்து ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு இருக்கும் பொழுது,  இரண்டு போலீசு வர, களேபரமாகி மீண்டும் சுடத் துவங்குகிறான்.

 

இந்த இரண்டு மாஸ் கொலைகளும் மக்கள் மத்தியில் பதட்டமாக்க, அரசுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என நகர்கிறது.  அதிகாரிக்கும், நாயகி குழுவிற்கும் அழுத்தம் அதிகமாகிறது.

 

அந்த கொலைகாரன் எதற்காக கொலைகள் செய்தான்? அவனை கைது செய்தார்களா? என்ன நடந்தது என்பதை மீதிக்கதையில் பரபரப்பாய் சொல்லியிருக்கிறார்கள்.

 

இந்தப் படம் போலீசு கொலைகாரன் படம் மட்டும் இருந்திருந்தால், ஒரு வழக்கமான படமாக இருந்திருக்கும்.   அமெரிக்காவின் பள்ளிகளில், பொதுவெளிகளில், மால்களில் என அவ்வப்பொழுது யாராவது துப்பாக்கியை தூக்கி வந்து, பலரை சுட்டுக்கொன்றுவிடுவது நடைபெறுகிறது.

 

மனம் பிறழ்ந்தவன் என்றோ, தீவிரவாதி என்றோ கதை எழுதி சட்டென அந்த பைலை மூடிவிடுகிறார்கள்.   அமெரிக்காவில் துப்பாக்கி எளிதாக கிடைக்கிறது என்பது தான் பிரச்சனை என்கிறார்கள். உளவியல் சார்ந்தும் சிக்கல்கள் இருக்கின்றன ஒரு சாரர் பேசுகிறார்கள்.

 

படம் உளவியல் சார்ந்து பேசியது தான் முக்கியம். இதில் நாயகி இளவயதில் வேறு வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு, உடைந்து போய் இருந்தாலும், அதனால் கடுமையான வெறுப்புக்குள்ளாகிவிடாமல், இன்னும் நம்மை சரி செய்துகொள்ளமுடியும். மனிதர்களோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை நாயகிக்கு இருக்கிறது. இதில் சுடுகிறவன்  அந்த கோபத்தை வெளியே காண்பிக்கிறான் என புரிந்துகொள்கிறாள்.

 

மனிதர்கள் மட்டும் உடைந்து போகவில்லை.  ஒரு பக்கம் கொலைகள்.  இன்னொரு பக்கம் ஊடகம், மேலிருந்து அழுத்தம்.  ஆகையால் போலீசு செயற்கையாக ஒரு ஆளை போட்டுத்தள்ளும் இடம் இருக்கிறதே! இந்த சிஸ்டமும் உடைந்து தான் போயிருக்கிறது என்பதை சொல்கிறது.

 

உள்ளுக்குள் உடைந்து போய், தொடர்ந்து விமர்சனம் செய்வதை தாங்கிக்கொண்டு இருக்கும் அந்த பாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார் நாயகி  Shailene Woodley.  Divergent சீரிசில் இவரைப் பார்த்திருக்கிறேன்.   அந்த அதிகாரியும் சிறப்பு.

0 பின்னூட்டங்கள்: