> குருத்து: பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 2

September 25, 2009

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 2


அப்படியென்றால், பணத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

அந்த மதிப்பு என்பது சம்பந்தபட்ட பொருளை உற்பத்தி செய்வதற்குச் செலவாகும் மனிதர்களின் உழைப்பை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்த உழைப்பின் மதிப்பே சமுதாய மதிப்பாக தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருளை வாங்கவும் விற்கவும் ஒரு பொருள் ஊடகமாக தேவைப்படுகிறது. அதுதான் பணம். (அதாவது மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு எப்படி ஒரு மொழி தேவைப்படுகிறதோ அதை போன்றே) இதன் மதிப்பு என்பது நீண்ட நாள் நீடித்து இருக்ககூடிய - மாறாமல் இருக்கக் கூடிய - தகுதி வாயந்ததாகவும் இருக்கக் கூடிய பொருளைத்தான் பயன்படுத்த துவங்கினர். இதை கணக்கில் கொண்டு தான் தங்கத்தை உலக நாடுகள் அனைத்தும் பொருட்களை வாங்கவும், விற்கவும் பரிமாற்றிக் கொள்ளவும் ஒரு பொருளாக ஊடகமாகப் பயன்படுத்த துவங்கினர்.

துவக்கத்தில் தங்க காசுகளைத்தான் நாணயமாக தயாரித்து வணிகத்திற்கு பயன்படுத்தினர். அதாவது ஒரு அரசு தனது நாட்டில் உள்ள தங்கம் முழுவதையும் தன்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறது. பின்பு ஒரு தங்க காசுக்கு (நாணயத்திற்கு) 1/4 அவுன்ஸ்-க்கான தங்க மதிப்பாக தயாரிக்கிறது.

அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு ரூ. 1000 என்றால் 1/4 அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு ரூ. 250 என்று வைத்துக்கொள்வோம். அரசு 1/4 அவுன்ஸ் தங்க நாணயத்தை மக்களிடம் கொடுத்து அதற்கானப் பொருளைப் பெற்றுக்கொள்கிறது. இந்த அடிப்படையில் காசுகளை தயாரித்து மக்களிடம் புழக்கத்தில் விடுகிறாது.

புழக்கத்தில் விட்ட தங்க காசுகளை வரி மூலம் திரும்ப பெற்று அரசின் தங்கத்தின் கையிருப்பை உறுதி செய்கிறது. அதாவது எவ்வளவு தங்கம் கையிருப்பு இருக்கிறதோ, அதற்கேற்ப தான் நாணயம் தயாரிக்க முடியும் என்பது நியதி.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்..

நாட்டின் மொத்த உற்பத்தியைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப தங்க நாணயங்களை தயாரித்து புழக்கத்தில் விடுதல். அதாவது 500 டன் தங்கத்தின் மதிப்பிற்கு பொருள்களின் உற்பத்தி இருக்கும் பட்சத்தில் 500 டன் தங்கத்தின் மதிப்பிற்கு 1/4 அவுன்ஸ் எடை கொண்ட தங்க காசுகளை தயாரித்து வெளியிடுவர்.

அதாவது,

1/4 அவுன்ஸ் எடை கொண்ட (ரூ. 250 மதிப்புள்ள) தங்க காசிற்கு ஒரு பசு மாட்டை வாங்க முடியுமென்றால், ஒரு பசுவின் விலை ரூ. 250. (பழைய லண்டனின் நாணயம் 1/4 அவுன்ஸ் - ஒரு தங்க காசு)

அரசினால் தங்கத்தை அதிகரிக்க முடியாத சூழலில், பொருளுற்பத்தியை அதிகரிக்க முடியாத சூழலில் அல்லது வேறு சில காரணங்களால் அரசானது தங்க காசுகளை (நாணயங்களை) அதிகரிக்க நினைக்கிறது. அப்பொழுது புழக்கத்திலுள்ள 500 டன் எடையுள்ள தங்கத்திற்கேற்ப 1/4 அவுன்ஸ் எடையுள்ள தங்க காசுகளை 1/8 அவுன்ஸ் எடையுள்ள தங்க காசுகளாகத் தயாரித்து வெளியிடும்.

இதன் விளைவு, தங்க காசின் மதிப்பு 50% குறைந்து விட்டதால், ஒரு காசு கொடுத்து வாங்கிய பசுவை இனி இரண்டு தங்க காசுகளைக் கொடுத்து வாங்க வேண்டியது வரும்.

இது முந்தைய காலங்களில்... நவீன காலங்களில் எப்படி?

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 1

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

ஏகலைவன் said...

சிறப்பான பதிவு தோழர். உங்களது வழக்கமான பாணியில் எளிமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சிக்கவி said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள். இந்த மாதிரி பொருளாதார விடயங்களை நீங்கள் விளக்கினால், எங்களால் புரிந்து கொண்டு, எதற்கெடுத்தாலும், "எகனாமி" என்று பீட்டர் விடும் அதியமான் வகையறாக்களை இன்னும் அம்பலப்படுத்த முடியும்.