> குருத்து: கூடங்குளம் மக்களின் அளப்பரிய தியாகம்! உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்க!

October 10, 2012

கூடங்குளம் மக்களின் அளப்பரிய தியாகம்! உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்க!

செப். 9, 10 அணு உலை முற்றுகையின் பொழுது, 10ந்தேதி கண்ணீர்புகை குண்டு, தடியடி என அவிழ்த்துவிடப்பட்ட வெறிநாய்களைப் போல, காவல்துறை மக்கள் மீது பாய்ந்தது.  வைராவிக்கிணறு, இடிந்தகரை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.  இடிந்தகரை போராட்ட மேடையில் மாதா சிலையை உடைத்தார்கள்.  பேனர்களை கிழித்தெறிந்தார்கள்.  அங்கேயே சிறுநீர் கழித்தார்கள். இதையெல்லாம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இதே வேளையில் கூடங்குளம் மொத்த மக்களும் ஒன்றுகூடி இந்த வெறித்தாக்குதலை கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக்கோரி அணு உலை எதிரே ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  அங்கும் சென்ற காவல்துறை "உங்களுக்கும் இடிந்தகரை மக்களுக்கும் நெடுங்கால பகை உண்டு (இந்து நாடார்கள் Vs கிறிஸ்துவ மீனவர்கள்)  அதனால், அவர்களுக்கு என்ன நடந்தால் என்ன? கலைந்து செல்லுங்கள்!" என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்திருக்கின்றனர். கூடி நின்ற மக்களோ "அதெல்லாம பழைய கதை.  இப்பொழுது அணு உலையை எதிர்த்து ஒற்றுமையாய் போராடுகிறோம்!" என காவல்துறையின் மீது காறி உமிழ்ந்தனர் மக்கள்.

காவல்துறை உடனே கண்ணீர்புகை, தடியடி என ஆரம்பித்துவிட்டது.  20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தியை மீண்டும் காவல்துறை அரங்கேற்றியது.  ஏழு வயது பையனை லத்தியால் அடித்து, கை பெரிதாய் வீங்கிவிட்டது.  நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு, வந்து படுத்திருந்தவரை அடித்து, கைது செய்திருக்கிறார்கள்.  30 பைக்குகளுக்கும் மேலாக திருடி சென்றுவிட்டார்கள்.  40 பைக்குகளுக்கும் மேலாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதப்படுத்தியிருக்கிறார்கள். தங்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த ஜீப்களையும், தொழிலுக்காக வைத்திருந்த லாரியையும் நொறுக்கிவிட்டார்கள். தேர்வுக்கு கிளம்பிய எம்.பி.ஏ மாணவனை நடுமண்டையில் அடித்து, ரத்தத்துடன் கைது செய்து சென்றிருக்கிறார்கள்.  ஆக்கி வைத்திருந்த சோற்றை கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள்.  வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் ஒன்றுவிடாமல் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.   பெண்களை "உதயகுமாரோடு தான் படிப்பியா! எங்க கூட படுக்க மாட்டியா!" என கேவலமாக பேசியிருக்கிறார்கள்.  லத்திக்கம்பைக் கொண்டு பெண்ணுறுப்பில் குத்தியிருக்கிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தோழர்கள் "உண்மை அறியும் குழு"வாக சென்ற பொழுது, இதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் சொன்னதில் ஒரு பகுதி தான். இந்த கொடூரமான காவல்துறையின் அட்டகாசத்தின் நோக்கம் இனி, இந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கூடங்குளம் கிராமத்து மக்கள் கலந்து கொள்ள நினைக்ககூடாது!".

"இத்தனை மோசமாக இழிவுப்படுத்தியிருக்கிறார்கள்! கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்! இனி போராடுவீர்களா?" என கூடங்குள பெண்களிடம் தோழர்கள் கேட்டப்பொழுது,   "அணு உலை எங்கள் உயிர் போகும் பிரச்சனை.  இப்பொழுது குடும்பம், குடும்பமாய் போராடுவது போல, இறுதிவரை போராடுவோம்!" என உறுதியாய் கூறியிருக்கிறார்கள்.

இடிந்தகரை, வைராவிக்கிணறு பகுதியில் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான காவல்துறை அந்த மக்களை குதறிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு,  படையில் பாதியை நம் பக்கம் திருப்புவோம் என ஊர்கூடி முடிவு செய்து, போராட்டம் செய்திருக்கிறார்கள். என்ன ஒரு உயரிய நோக்கம்! 

மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் இடிந்தகரை மக்களிடம் இந்த போராட்டத்தின் நோக்கத்தையும், பாதிப்பையும் பகிர்ந்த பொழுது, இடிந்தகரை, வைராவிக்கிணறு மக்கள் உள்ளம் நெகிழ்ந்து போனார்கள்.


உழைக்கும் மக்கள் போராட்டக்களத்தில் உறுதியோடு தொடர்கிறார்கள்.  அவர்களின் போராட்டம் வெல்லட்டும்!

இந்த தாக்குதலுக்காக நீதி விசாரணை வேண்டி, நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

****

டிஸ்கி : கடந்த பிப்ரவரியில் அணு உலை எதிர்ப்பு பிரச்சாரத்தை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்தில் செய்துகொண்டிருந்த பொழுது,  ஒரு நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர், "அவங்க (நாடார்களும், கிறிஸ்துவர்களும்) எந்த காலத்திலும் ஒண்ணு சேர மாட்டாங்க சார்!"  இந்த போராட்டம் தோத்துத்தான் போகும்!" என திரும்ப, திரும்ப ஆதங்கத்தோடு சொல்லிக்கொண்டே இருந்தார்.   இதோ மக்களின் போராட்டப் பாதையில், இழப்புகளை தாங்கிகொண்டு, இணைய முடியாத (!) அவர்கள், இணைந்துவிட்டார்கள்.

0 பின்னூட்டங்கள்: