> குருத்து: Anweshippin Kandethum (2024)

March 22, 2024

Anweshippin Kandethum (2024)


காலம் 90. கோட்டயம். கல்லூரி சென்று திரும்பிய பெண்ணை காணவில்லை. புகார் வருகிறது. நாயகன் துணை ஆய்வாளராக இருக்கிறார். விசாரணையை துவக்குகிறார். ஒரு மத போதகரின் வீட்டு வாசலில் ஒருவர் கடைசியாய் பார்த்ததாய் சொல்கிறார். ஆனால் உள்ளே சென்று விசாரிப்பதற்கு உள்ளூரில் சிலர் தடுக்கிறார்கள்.


மேலதிகாரி யாரையாவது சிக்கவைக்க காய்கள் நகர்த்துகிறார். நாயகன் வேறு விதமாக யோசித்து உண்மையை நோக்கிப் போகிறார். குற்றவாளியை நெருங்கும் பொழுது, எதிர்பாராத சம்பவத்தால் அவரும் அவருடைய குழுவும் தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்னொரு வாய்ப்பு என இன்னொரு மேலதிகாரி ஒரு வழக்கைத் தருகிறார். ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். ஒரு புகழ்பெற்ற விசாரணை அதிகாரி அவரால் கண்டுபிடிக்க முடியாத விரல் விட்டு எண்ணக்கூடிய வழக்குகளில் இதுவும் ஒன்று. இது தவிர அடுத்து விசாரணை என ஊருக்குள் யார் வந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என உள்ளூர் மக்கள் கடந்த கால விசாரணையின் வெறுப்பில் இருக்கிறார்கள். ”உங்களால் ஏதாவது செய்யமுடிந்தால் செய்யுங்கள். இல்லையெனில் என்ன விசாரித்தீர்களோ! அதை எழுதித் தந்துவிடுங்கள்” என அனுப்பி வைக்கிறார்.

அந்த வழக்கை அவர்கள் விசாரித்து உண்மையை கண்டறிந்தார்களா? என்பதை சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
*****

ஒரு துணை ஆய்வாளருக்கு கிடைக்கும் வெளிச்சம். மேலதிகாரிகளுக்கு கடுப்பாகிறது. படத்தில் அதைத் தாண்டி செல்வதாக காண்பிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அதெல்லாம் சிரமம் தான்.

ஒரு கொலை. அதைத் தொடர்ந்து விசாரணை. கன்னாபின்னாவென்று டீல் செய்ததில், பாடியைப் பார்த்து சொன்ன ஒரு மனுசன், போலீசின் டார்ச்சரில் தற்கொலை செய்துகொள்கிறார். இப்படி போலீசின் அணுகுமுறையே அந்த கொலை வழக்கை கண்டுபிடிப்பதற்கு தடையாய் முன்வந்து நிற்கிறது. தண்டிக்கப்பட்ட நாயகனின் குழுவிலும் ஒரு போலீசு திமிரோடும், எப்பொழுதும் அடித்து நிமிர்த்தும் தன்மையோடு தான் நடந்துகொள்வார்.

இரண்டாவது வழக்கை விட முதல் வழக்கு விசாரணை சிறப்பு. இந்த படத்தின் இயக்குநரான டார்வின் குரியகோஸ்க்கு முதல் படம் என்கிறார்கள். தேறிவிட்டார் என சொல்லலாம். ஆனால் படம் ஆஹோ ஓஹோ என யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

டோவினோ தாமஸ், அவருடன் நடித்த நடிகர்களும் படத்திற்கு துணை நின்றிருக்கிறார்கள். படம் வெற்றி பெற்றதாய் சொல்கிறார்கள். இந்த விசாரணை குழு அடுத்த பாகத்திலும் வருவதற்கு லீட் தருகிறார்கள். சுவாரசியமான கதையோடு வரட்டும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மலையாளத்துக்கு நகர்ந்திருக்கிறார். வாழ்த்துகள்.

நெட் பிளிக்சில் கிடைக்கிறது. பாருங்கள்

0 பின்னூட்டங்கள்: