> குருத்து: Attam (2023) மலையாளம்

March 22, 2024

Attam (2023) மலையாளம்


கேரளாவைச் சார்ந்த ஒரு நாடகக் குழு. ஒரு மேடை நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அந்த குழுவை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விருந்து தர விரும்புகிறார்கள்.


ஒரு ரிசார்ட்டில் கூடுகிறார்கள். பெரும்பாலோர் தண்ணியடிக்க, விருந்து முடிகிறது. இரவு 2.30 மணியளவில் குழுவில் உள்ள ஒரு பெண் அறையின் சன்னலை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பொழுது, குழுவில் உள்ள ஒருவர் பாலியல் சீண்டல் செய்துவிடுகிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவில் உள்ள தன் ’காதலனிடம்’ சில நாள்கள் கழித்து தெரிவிக்கிறார். குழுவில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சினிமா நடிகர் இருக்கிறார். அவர் போட்டிருந்த சென்ட், உருவத்தைக் கொண்டு அவராகத் தான் இருக்கும் என சந்தேகிக்கிறார். காதலன் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவிலேயே பேசி தீர்த்துவிடுவது நல்லது. வெளியே போலீசு, வழக்கு என போனால், குழுவின் பெயர் கெட்டுப்போய்விடும் என அஞ்சுகிறார்கள்.

குழு கூடுகிறது. அந்த நடிகரால் கலந்துகொள்ள இயலவில்லை. அவரைத் தவிர மற்ற குழு ஆட்கள் விவாதிக்கிறார்கள். பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணையும் அழைக்கிறார்கள்.

ஒரு வீட்டில் கூடி விவாதிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***


படம் எடுத்த விதத்தில் 1950களில் வெளிவந்த “12 Angry Men” படத்தை நினைவுப்படுத்துகிறது. ஒரு வழக்கு குறித்து, 12 ஜூரிகள் விவாதித்து ஒத்த கருத்துக்கு வரவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துவிடும். அவர்கள் விவாதித்து ஒத்த முடிவுக்கு வருவது தான் முழுப்படமும். அருமையான படம்.

ஒரு முக்கியப் பிரச்சனை. கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். காதலனுக்கு இருக்கும் ஒரு மறைமுக அஜண்டாவில் ஒரு முன்முடிவோடு துவங்கும் விவாதம், பிறகு ஒரு திருப்புமுனைக்கு பிறகு அவர்களின் மனநிலை எப்படி சாய்கிறது? எந்த திசையில் விவாதம் செல்கிறது? பெண்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை? எந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பதில் இருந்து நாம் நிறைய புரிந்துகொள்ள முடிகிறது.

படத்தின் இறுதியில் வர்க்க மனநிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தங்களுக்கு வரும் பணபலன்கள், பிற பலன்களுக்கு ஏற்ப கருத்துகளை வளைப்பது, எளிய மக்கள் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கம் மனநிலை தான் பெரும்பாலும் ஊசலாட்டத்துடன் இருப்பதை நான் என் அனுபவத்திலேயே கவனித்திருக்கிறேன். சமூகம் குறித்த அறிவியலும் அதைத்தான் சொல்கின்றன.

ஒரு பெண் தனக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்கும் பொழுது, அவளுடைய உடை, பழக்கவழக்கங்கள் என சிலர் கேள்விக்குள்ளாக்குவது அபத்தம். அப்பொழுதே சிலர் கண்டிக்கிறார்கள். படத்தின் கேரள பின்னணி என்பது இன்னும் சுவாரசியம். இப்படி ஒரு படம் தமிழில் வந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.

திரைப்பட நடிகர்கள், நிஜ நாடக நடிகர்கள் என கலவையோடு படத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். எல்லோருமே கொடுத்தப் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனந்த் ஏகர்ஷி இயக்கியிருக்கிறார்.

இது வழக்கமான படம் இல்லை. இந்த படம் திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்று, இப்பொழுது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளிவந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

0 பின்னூட்டங்கள்: