> குருத்து: விசில் சத்தம்

May 5, 2026

விசில் சத்தம்


நேற்று வழக்கமாய் செல்லும் பகுதி டிபன்கடைக்கு சென்ற பொழுது, அந்த கடையை நடத்தும் அந்த அம்மாவிற்கு வயது 50க்கும் மேல். ஊரில் இருந்து அவருடைய அம்மா அழைத்து, ”விஜயை உன் தம்பியை நினைச்சு ஓட்டு போடும்மா!” என பரிந்துரை செய்தார்களாம்.


ஒரு நிறுவனத்தின் லிப்டில் போய் கொண்டிருந்த பொழுது, துடைத்து பெருக்கும் அந்த அம்மாவிற்கு 60 வயதிருக்கும். யாருக்கு ஓட்டு போட்டீங்க! என கேட்டால், ”விசில்” என்றார். ”ஏன்” என கேட்டதற்கு, நான் எப்பொழுதும் உதய சூரியனுக்கு தான் போடுவேன். நிறுவனத்தின் நடுத்தர வயது பெண் முதலாளி விசிலுக்கு வாக்களிக்க சொன்னாராம். அன்று மாலை ஸ்டாலின் தோற்று போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டார்.


அந்த நிறுவனத்தின் நிர்வாகி, 50 வயது கடந்தவர், தேர்தல் முடிவுகள் இனி நடக்க இருக்கும் விளைவுகள் என பேசியே களைத்துப்போனார். அவர் வீட்டில் மொத்தம் நான்கு பேர். இவரும் இவருடைய கணவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் விசிலுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் (பங்காளி குடும்பங்களைச் சேர்த்தால்)  20 வாக்கு சார். பெரும்பாலும் விசிலுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.


திராவிட கட்சிகள் செய்யும் ஊழல், அவர்களுடைய குறைபாடுகள், மாற்று வேண்டும் என மாற்றி குத்திவிட்டார்கள். அவசரகதியான இந்த மாற்றத்தால் உள்ள இந்தியாவின் அரசியல் நிலை, தமிழ்நாட்டின் நிலை இன்னும் கவலைக்குள்ளாகிவிட்டது என நிச்சயமாய் சொல்லலாம். இதன் எதிரொலிப்புகள் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு ஒலிக்கும்.


நேற்று மாலை தெருவில் குடியிருக்கும் ஒரு வீட்டில் இருந்து தொடர்ந்து இரண்டு இள வயது பெண்கள் விசிலை வைத்து அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அமைதியாகி விடுவார்கள் என நினைத்தால், விடவேயில்லையாம். போய் சொன்னாலும் கேட்கவில்லை. அருகில் வயதானவர்கள் இருப்பார்கள். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். எதைப் பற்றிய கவலையும், அக்கறையும் இல்லமல், சொல்லி வந்த பிறகும் நெடுநேரம் விசில் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த விசில் சத்தம் (Noise) தொடர்ந்து கேட்க போகிறது.


நேற்றிரவு வீட்டுக்கு போனதும் எப்பொழுதும் 15, 20 நிமிடத்தில் பேசிவிட்டு தூங்கப் போய்விடுவோம். மகள் இலக்கியா இரண்டு மணி நேரம் தேர்தல் முடிவுகள் குறித்த கவலைகளைப பகிர்ந்துகொண்டாள். தன் நண்பர்களின் மனநிலை குறித்து, இன்று அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து, இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


மக்களின் அரசியல் விழிப்புணர்வு, பண்பாட்டு உணர்வு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் தலைவர்கள் கிடைப்பார்கள் என்பதில் முழு உடன்பாடு. (இப்பொழுது விஜய் ஜெயித்ததால், இதைச் சொல்லவில்லை. ) நாம் மக்கள் இடத்தில் தொடர்ந்து செயல்படுவது அவசியம். வேறு ஏதும் குறுக்கு வழிகள் இல்லை.

0 பின்னூட்டங்கள்: