> குருத்து: 50 புத்தகங்கள்
Showing posts with label 50 புத்தகங்கள். Show all posts
Showing posts with label 50 புத்தகங்கள். Show all posts

November 7, 2017

சகாயம் சந்தித்த சவால்கள் - ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் தான் நேர்மையான நபர் என்பதை  பக்கத்துக்கு பக்கம் சொல்கிற பொழுதே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டமும் கோளாறு தான்!

ஆனந்தவிகடன் வெளியீட்டிருக்கிறது.  விலை ரூ. 95 பக்கங்கள் : 96

நூலை எழுதிய ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம் (இப்பொழுது சன் தொலைக்காட்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்)

August 29, 2017

ஹாரி பாட்டரும் ரசவாத கல்லும்!


2001ல் ஹாரி பாட்டர் முதல் பாகத்தை ஆச்சர்யத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். மந்திர தந்திர பள்ளி, மாயாஜாலங்கள், பறக்கும் துடப்பங்கள், மறையும் அங்கி, உயிரோட்டம் கொண்ட புகைப்படங்கள், நல்லவைக்கும், தீயவைக்கும் நடக்கும் போராட்டம் என நிறைய ஆச்சர்யங்கள். 

இப்படி பார்க்க துவங்கி, என் பொண்ணுடன் 2011ல் இறுதிப் பாகத்தை இணைந்து பார்த்தேன். சில படங்கள் தமிழில் டப்பாகி வரும். சில படங்கள் தமிழில் வராது. தொலைக்காட்சிகளில் பாட்டர் படங்களை போடுவதால், இப்பொழுது எல்லா பாகங்களும் தமிழில் டிவிடிகளாக கிடைக்கின்றன.  இடையிடையே நானும் என் பெண்ணும் பாட்டர் படங்களை பார்ப்பதுண்டு. துணைவியாருக்கு இந்த மாதிரி படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இல்லையென்பதால் கடுப்பாவார். ஒண்ணும் செய்யமுடியாது.

400, 800 பக்க நாவல்களை இரண்டரை மணி நேர படமாக்குவதால், சில இடங்களை வெட்டி சுருக்குவதால், நமக்கு சில இடங்கள் புரியாது. படத்தை திரும்ப திரும்ப பார்த்தாலும் புரியாது தான். 6 மாதங்களுக்கு முன்பு பாட்டருடைய எல்லா நாவல்களும் ஆங்கிலத்தில் பிடிஎப் யாக கிடைத்தன.  எனக்கு ஆங்கிலத்தில் நல்ல‌ நாவல்களை படிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உண்டு. மன்னிக்கவும். சில வருடங்களாக உண்டு.  சரி! பாட்டர் கதைகளிலிருந்து துவங்குவோம் என படிக்க ஆரம்பித்தேன்.  ரெளலிங் எழுத்துக்கள் வேகமாக படிக்கிற அளவிற்கு இல்லை. அதை இப்படியும் சொல்லலாம். எனக்கு ஆங்கில அறிவு குறைவு என்றும் சொல்லலாம்.  ஒருமுறை புத்தகம் சம்பந்தமாக தேடும் பொழுது, தமிழில் பாட்டர் கதைகள் கிடைப்பதாக அறிந்தேன்.  கொஞ்சம் தேடி, முதல் பாகத்தை வாங்கிவிட்டேன். முன்னுரை படித்ததோடு சரி! பிறகு வேலை நெருக்கடியில் தொடரவில்லை.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 50 புத்தகம் சவாலில்  முதல் புத்தகமாக படித்துவிடலாம் என 350 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரு வாரத்திற்குள் படித்துவிட்டேன். நாவல் படிக்கும் பொழுது நேர்கோட்டு தன்மையில் தான் செல்கிறது. வெட்டி சுருக்கியதாலும், திரைக்கதையிலும் படத்தில் சில இடங்கள் புரியாததாக இருக்கின்றன. ஒரு இடம் சொல்லவேண்டுமென்றால்,  ஹெர்மாயினியின் திறமைக்கு நாவலின் இறுதியில் ஒரு பகுதி உண்டு. ஆனால், படத்தில் இல்லை. (ஹெர்மாயினி எவ்வளவு அழுதிருப்பாள்(?))


மொழிபெயர்ப்பு செய்தவர் குமாரசாமி.  அருமையாக செய்திருக்கிறார்.  பாட்டர் படங்களை பார்க்கதாவர்கள் ஒருமுறை பாருங்கள். பிறகு திரும்ப திரும்ப பார்ப்பீர்கள்.

#50Books_Chllenge_1