> குருத்து

January 4, 2022

Taare Zameen Par (2007) மண்ணில் ஒளிரும் நட்சத்திரங்கள்




தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்ற படம்

"சாலமன் தீவுகளில், பழங்குடியினர் காடுகளை துடைத்து வயலுக்கு வழிவகை செய்யும் போது, ​​​​அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை, அவர்கள் வெறுமனே ஒன்றுகூடி அதை சபிக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, மரங்கள் மெல்ல மெல்ல வாட ஆரம்பிக்கின்றன. அது தானே இறக்கிறது.”
- படத்திலிருந்து....

****

அம்மா, அப்பா, பள்ளி படிக்கும் இரண்டு பையன்கள் கொண்ட நடுத்தர வர்க்க குடும்பம் அது. இதில் மூத்தவன் பள்ளியில் நன்றாக படிக்கும் பையன். மூன்றாம் வகுப்பு படிக்கும் இளையவன் படிப்பில் பின் தங்கி இருக்கிறான். அவனால் படிக்க முடியவில்லை. எழுத்துகள் நடனமாடுகின்றன. தேர்வுகள் பயமுறுத்துகின்றன. ஆசிரியர்கள் திட்டி தீர்க்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மற்றபடி வழக்கமான சேட்டைகள் கொண்ட இயல்பான பையன் அவன்.

அவனை உண்டு, உறைவிட பள்ளியில் (Boarding School) சேர்க்கிறார்கள். வீட்டில் அம்மாவும், அண்ணாவும் தான் பெரிய ஆறுதல். இப்பொழுது தனித்துவிடப்படுகிறான். அந்த பள்ளியிலும் வழக்கம் போல ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். தண்டிக்கிறார்கள். யாரிடமும் பேசாமல் மெளனமாகிவிடுகிறான்.

இந்த நெருக்கடியான சமயத்தில்;… கலை ஆசிரியராக புதியவர் வருகிறார். வழக்கமான ஆசிரியராக இல்லாமல், குழந்தைகளின் இயல்பை புரிந்துகொண்டு கையாள்கிறார். அவனுக்கு இருக்கும் சிறப்பு பிரச்சனையையும், சிறப்பான ஆற்றல் எது என்பதையும் கண்டறிகிறார். பெற்றோர்களை சந்தித்து விவாதிக்கிறார். தலைமை ஆசிரியருடன் கலந்து பேசுகிறார்.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அந்த பையன் கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் இறுக்கமாகி கொண்டே, யாரிடமும் பேசாமல் இருப்பதை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. ”என்னைய விட்டுறுங்கடா!” என அவன் கண்ணின் வழியே புரிந்துகொள்ளமுடியும்.

அந்த பையனின் பிரச்சனை என்பது புதிது அல்ல! படத்திலேயே சொல்வது போல அந்த பையனுக்கு உள்ள கற்றல் குறைபாடு பிரச்சனையான டிஸ்லெக்சியா (dyslexia) புகழ்பெற்றவர்களான அறிவியலாளர் ஐன்ஸ்டீன், ஓவியர் லியோனார்டோ டாவின்சி, வால்ட் டிஸ்னி, நடிகர் டாம் க்ரூஸ் நம்மூர் அபிசேக் பச்சன் என பலரும் இருக்கிறார்கள். 2016 டேட்டா படியே இந்தியாவில் 3.5 கோடி குழந்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த குறைபாடுள்ள மாணவனின் பிரச்சனையை அந்த பள்ளியாலும், நேசிக்கும் படித்த பெற்றோர்களாலும் கூட கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம். ஒரு பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பொழுது, ஆசிரியருக்கு இருக்கும் அழுத்தத்தால் ஒவ்வொரு மாணவனின் பிரச்சனையை கண்டறிவது என்பது சாத்தியமில்லை என்பார் தலைமை ஆசிரியர். இது நம்முடைய கல்வி முறையின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு வகுப்பில் 20பேருக்கு மேல் இருக்ககூடாது என்பது தான் சரியானது என்கிறார்கள். ஓடுகிற ஓட்டத்தில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை மிதித்துவிட்டு ஓடுவது தான் வழக்கமாகிவிடுகிறது.

ஒரு இடத்தில் ஒரு பாடலை சொல்லி அர்த்தம் கேட்கும் பொழுது, அதைப் புரிந்துகொண்டு அவன் சொந்த வார்த்தைகளில் விளக்குவான். ஆசிரியர் அவனைத் திட்டுவார். புத்தகத்தில் உள்ளதை ஒரு பையன் ஒப்பிப்பான். அவனை பாராட்டுவார். மனப்பாடம் செய்ய முடியாத ஒரு மாணவன் இந்த சிஸ்டத்தில் என்ன ஆவான்?

இப்பொழுது நடைமுறையில் உள்ள ”மெக்காலே” கல்விமுறை சரியில்லை! மாற்றவேண்டும் என கடந்த இருபது வருடங்களாக பல்கலை துணைவேந்தர்கள் முதல், பல பேராசிரியர்கள், கல்வியாளர்கள் திரும்ப ஊடகங்கள் வழியாக, கருத்தரங்கள் வழியாக திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பொழுது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ்காரனுக்கு தேவைப்பட்டது. அறிமுகப்படுத்தினான். இப்பொழுதும் இந்த கல்விமுறையை யாருடைய நலன்களுக்காக கட்டிக்கொண்டு அழுகிறார்கள்?

மற்றபடி, அந்த பையன் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தான் எனலாம். அமீர்கான் எப்பொழுதும் போல சிறப்பு. அமீர்கான் முதன்முதலாய் இயக்கியப்படம் என்பது இன்னும் சிறப்பு. படம் பல விருதுகளை பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை கவனப்படுத்தியிருக்கிறது என்பது இந்தப் படத்தின் சிறப்பு.

படம் வெளிவந்த சமயத்திலேயே பார்த்திருந்தாலும், இப்பொழுது பார்த்தாலும் மனதிற்கு நெருக்கமாக தான் இருக்கிறது. அருமையான படம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

மின்னல் முரளி (2021)


ஒரு சூப்பர் ஹீரோ உதயமாகிறான்.

ஆற்றின் கரையோரம் உள்ள ஒரு கிராமம். சில நூறு தலைக்கட்டுகள் கொண்ட சின்ன ஊர் அது. ஒரு நாள் இரவு மின்னல் இருவரை தாக்குகிறது. பொதுவாக இப்படித் தாக்கப்பட்டவர்கள் இறந்து போவது வழக்கம். ஆனால், இவர்களுக்கு சூப்பர் பவர் வந்துவிடுகிறது. மெல்ல மெல்ல தங்களுக்கு கிடைத்த சக்தியை உணர்கிறார்கள்.


மின்னல் தாக்கும் நாயகன் ஒரு தையற்காரரின் மகன். ஒரு போலீசின் பெண்ணை காதலிக்கிறான். வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறான். அந்த பெண்ணுக்கு வேறு திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பழிவாங்கும் விதமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை தடுத்து வைக்கிறார்கள்.

மின்னல் தாக்கும் இன்னொருவர் ஒரு உணவகத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளி. சிறு வயதில் இருந்து ஒரு பெண்ணை உருக்கமாய் ஒருதலையாய் காதலிக்கிறார். அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார். சில ஆண்டுகள் கழித்து, தன்னுடைய குட்டி பெண்ணுடன் தன் கணவனை விட்டு வந்துவிடுகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். வேறு நபர்கள் அந்த பெண்ணை தொந்தரவு செய்கிறார்கள்.

பிறகு அந்த ஊரில் நடக்கும் உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் கலாட்டாக்களும் தான் முழு நீளக்கதை.
****

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் தாக்கத்தில், மலையாளத்தில் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எனக்கென்னவோ மலையாளத்தில் வெற்றி பெற்றது ஆச்சர்யமில்லை. தமிழிலும், தெலுங்கிலும் உள்ள ஹீரோக்கள் பெரும்பாலும் ஏற்கனவே ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பேரை அடித்து துவைத்து, பறக்கவிட்டு, ஏற்கனவே சூப்பர் ஹீரோக்களாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். 🙂
உணர்வுபூர்வமாக கொஞ்சம் கதை, நகைச்சுவை கொஞ்சம், சாகசம் கொஞ்சம் என ஒரு கலைவையாக பார்க்கும்படி வந்திருக்கிறது.
நல்லதும், கெட்டதும் கலந்தவர்கள் தான் மனிதர்கள். முழுவதும் கெட்டவன், முழுவதும் நல்லவனாக காட்டக்கூடியது எல்லாம் பழைய பார்முலாக்கள். நாயகனிடம் உள்ள தவறுகள், நெகட்டிவ்வான கதாப்பாத்திரத்திடம் உள்ள நல்லவைகளையும் காட்டியிருப்பது சரியான விசயங்கள்.
மற்றபடி நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் வரும் ஷிபு நல்லவன் என்கிறார்கள். ஒருவர் இயல்பில் நல்லவனாக இருப்பதை விட, ஒரு அசாத்திய திறன் வந்த பிறகு நிதானமாகவும், நல்லவனாகவும் இருப்பது தான் முக்கியமான பண்பு. ஒரு நெருக்கடியில் தான் ஒருவனை உரசிப்பார்க்கமுடியும் என்பேன்.
மற்றபடி, சூப்பர் ஹீரோக்கள் கதைகள் என்பது சுவாரசியத்திற்காக தானே எடுக்கப்படுகிறது. மக்கள் தான் மகத்தான சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மையான வரலாறுகள். அந்த கதைகளை எல்லாம் எப்பொழுது படமாக்கினாலும் இன்னும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்.
மற்றபடி டெவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் என அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது. பாருங்கள்.

கலாட்டா கல்யாணம் (2021)


நாயகி பீகாரில் உள்ள குடும்பத்தில் வாழ்கிறாள். ஒவ்வொரு முறையும் தன் காதலனைத் தேடி ஓடும் பொழுதும், பிடித்து இழுத்து வந்துவிடுகிறார்கள். இனியும் அவளை நிறுத்தி வைக்கமுடியாது என முடிவு செய்து… தில்லியிலிருந்து அந்த ஊருக்கு சென்ற நாயகனை அலேக்காக தூக்கி சென்று, நாயகிக்கு கட்டாய கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.


இருவரையும் பொறுப்பாக தில்லிக்கு அனுப்பிவைக்கிறார்கள். நாயகன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து, இன்னும் இரண்டு நாளில் நிச்சயத்தார்த்தம் வேறு நடக்க இருக்கிறது. இந்த பெண்ணால் நின்றுவிடுகிறது.

நாயகன் நாயகியை அவள் விரும்பியபடி காதலனுடன் அனுப்பிவைத்தானா? அல்லது இருவருக்குள்ளும் புரிதல் வந்து இணைந்து வாழ்ந்தார்களா? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

பொதுவாக பல தெலுங்கு படங்களில் லாஜிக்கை மதிக்கமாட்டார்கள். அது போல இந்தப் படத்தையும் அந்த பட்டியலில் சேர்த்துவிடலாம். வழிப்போக்கன் ஒருவனை தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து வைப்பதெல்லாம் ஓவர். அதை கூட மன்னிக்கலாம். நாயகன், நாயகி இருவருக்கும் ஒரு புரிதலோ, அன்போ வருவதற்கு அடிப்படையான காட்சிகளே எதுவுமே இல்லாமல், மேலே மேலே உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அமைப்பது எல்லாம் வீணாகிவிட்டது. பார்வையாளர்களால் ஒன்றவே முடியவில்லை.

விளையாட்டாக ஒரு கதை சொல்வார்கள். ஒரு நாள் ஒரு குழு வந்து சாலையோரம் பொறுப்பாய் ஒரு சீரான இடைவெளியில் குழி தோண்டிக் கொண்டே சென்றார்களாம். அடுத்தநாள், யாரும் வரவில்லை. அதற்கு அடுத்த நாள் ஒரு குழு வந்து தோண்டிய குழிக்களை எல்லாம் பொறுப்பாக மூடிக்கொண்டே சென்றார்களாம். என்னவோ தப்பா இருக்கே என விசாரித்தால், முதல்நாள் குழிகளுக்குள் செடிகளுக்கான விதையை வைப்பதற்கான குழு வரவில்லையாம்.

அது போல தான் படம் இருக்கிறது. தனுஷ், அக்சய் குமார், சாரா அலிகான் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நல்ல ஒளிப்பதிவு. ஏஆர் ரகுமானின் இசை. ஆனால் கதை, திரைக்கதை ஊத்திக்கிச்சு.. Tumbbad படத்தின் தயாரிப்பாளரும் Raanjhaanaa பட இயக்குநர் தான் இயக்கியுள்ளார். ஆச்சர்யம்.

இன்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளிவந்திருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள். நான் சொல்வது சரி தானா என்பதை சொல்லுங்கள்.