> குருத்து

May 27, 2021

”வெற்றி நடை போடும் தமிழகமும் மாணவன் ரியாசும்”



மூத்த ஆசிரியர்களும், இளைய ஆசிரியர்களும் நேற்று நீயா நானாவில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். விவாதத்திற்கு இடையே, ஊரடங்கிற்கு பிறகு, மாணவர்கள் சிலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்கள். திரும்பவே இல்லை. அங்கு ஏதாவது வேலையில் சேர்ந்துவிட்டார்கள்.


சென்னையிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி 12ம் வகுப்பு மாணவர்கள் வரை கிடைக்கிற பல வேலைகளில் சேர்ந்துவிட்டனர். பெற்றோர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால், பிள்ளைகளின் வருமானம் குடும்பத்திற்கு பெரிய உதவியாய் இருக்கிறது. தேர்வு மட்டும் எழுதுங்கள். தேர்வாகிவிடுவீர்கள் என சொன்னாலும் வர மறுக்கிறார்கள். பெற்றோர்களும் இனி தன் பிள்ளைகள் வரமாட்டார்கள் என உறுதியாக சொல்கிறார்கள்.

இந்த சமயத்தில் பத்தாம் வகுப்பு வந்த ரியாஸ் நினைவுக்கு வருகிறான். கொரானா தொற்றை முன்வைத்து சமூக ஊரடங்கை அரசு அமுல்படுத்தியது. கார்கள் ஓடவில்லை. ரியாசின் தந்தை வேலை இழந்தார். வருமானம் இல்லை. குடும்பம் பரிதவித்தது. உழைத்தால் தானே இங்கு பலருக்கும் சாப்பாடு. தற்காலிக தீர்வாக, வீட்டில் டீ தயாரித்து, மண்ணடி பகுதியில் விற்க ஆரம்பித்தார். வீட்டில் தானே இருக்கிறேன் என அப்பா தடுத்தும் ரியாசும் டீ கொடுக்க ஆரம்பித்தான்.

கடந்த ஜூலை மூன்றாம் வாரத்தில், மண்ணடி பகுதியில் அரண்மனைகாயர் தெருவில் புதிதாக கட்டப்படும் வரும் ஏழு மாடி கட்டிடத்திற்கு சென்றான். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டீ கொடுத்துவிட்டு, கவனிக்காமல் லிப்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காலை வைக்க, அங்கிருந்து கீழே மல்லாக்க விழுந்து செத்தே போனான். அப்பொழுது அவனுக்கு வயது 15.

சமூக ஊரடங்கை அறிவித்து வீட்டில் சிறை வைத்த அரசு தானே உயிர் வாழ வழியும் செய்திருக்கவேண்டும். கணக்கிற்காக ரூபாய் ஆயிரம் கொடுத்துவிட்டு பொறுப்பிலிருந்து கை கழுவியது. ஆளும் கட்சியை தவிர மற்ற அனைவரும் குடும்பத்திற்கு 7500 கொடுங்கள் என கோரிக்கை வைத்து போராடினார்கள். கண்டுகொள்ளவேயில்லை.

தேர்தல் வந்ததும், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1500 தருகிறேன். வாசிங் மெஷின் தர்றேன் என ”வெற்றி நடைபோடும் தமிழகமே!” என ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வெட்கமே இல்லாமல் விளம்பரம் போடுகிறார்கள். ரியாசை போல எத்தனை குழந்தைகள் தங்கள் படிப்பை, உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தெருவில் விட்டு மக்கள் வெளுக்கவேண்டும்.

முகநூலில்... 05/04/2021 அன்று எழுதியது.

சுவையான மட்டன் கோலா உருண்டை


ஆட்டுக்கறி குழம்பு, ஆட்டுக்கறி தொக்கு எல்லாம் பழசு. மட்டன் கோலா உருண்டை எங்க வீட்டிற்கு புதுசு. யூடியூப்பில் சமையல் கலைஞர் தாமு நான்கு நிமிடங்களில் எளிமையாக கற்றுத்தருகிறார்.

கறியில் கொஞ்சம் மஞ்சள் தூவி, கொஞ்சம் சோம்பு, உப்பு போட்டு, கொஞ்சமாய் தண்ணீர் விட்டு, குக்கரில் நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும். பிறகு எடுத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவேண்டும். நன்றாக வெந்துவிடுவதால், சிரமப்படாமல் எளிதாக அரைந்துவிடுகிறது.


கருவேப்பிலை, தேவையான மிளகாய் தூள், தேவையான சீரகம், அரைச்ச பொட்டுக்கடலை பொடி, அதோடு இஞ்சி, பூண்டு அரவை எல்லாம் சேர்த்தால் பூரிக்கு மாவு திரட்டியது போல வந்துவிடுகிறது.

சின்ன சின்ன உருண்டையாக உருட்டி, கொதிக்கிற எண்ணெயில் போடவேண்டும். அப்படி கொதிக்கும் பொழுது பிரிந்து போககூடாது. அப்படி பிரிந்தால், இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை பொடி போட்டு சரி செய்துகொள்ளவேண்டும்.

நேரடியாக கறி சாப்பிட பழக்கம் இல்லாதவர்கள், குழந்தைகளுக்கு ஏற்றது. சோதனை முயற்சியாக எங்க வீட்டில் முதல் முயற்சியிலேயே வெற்றி.

துவைத்து, அழுது, தேம்பி, தேர்தல் பிரச்சாரம் எல்லாம் முடிவடைந்து ஓய்ந்து இருக்கும் வேளையில்...

இதோ மட்டன் கோலா உருண்டை. 🙂

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!


வழக்கறிஞர் ஸ்ரீஜா மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்னெடுக்கும் மக்கள் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். அவருடைய சகோதரிக்கு திருமணம் என அழைப்பு விடுத்திருந்தார். மணமக்களுக்கு பரிசளிக்க மூன்று புத்தகங்களுடன் நானும் என் பொண்ணும் போயிருந்தோம்.


திருமணம் சில ஆச்சரியங்களை எங்களுக்காக வைத்திருந்தது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் காதல் இணைத்திருக்கிறது. இருவரும் வேறு வேறு சாதி. இருவரும் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால், தாலியை தவிர்த்துவிட்டார்கள். வரதட்சணை இல்லை. சடங்குகள் அற்று சீர்த்திருத்த திருமணமாக நடைபெற்றது ஆச்சர்யம்.

பெண்ணின் கல்லூரி ஆசிரியரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலரும் வாழ்த்திப்பேசினார்கள்.

மணமக்கள் இருவரும் தனித்தனியாக ”இன்னாரின் மகன்/மகளை மனம் உவந்து ஏற்கிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி களைந்துகொள்வோம். பிற்போக்குதனம் இல்லாமல் வாழ்வோம். சுயநலம் இன்றி, பொது நலம் பேணி வாழ்வோம். பிள்ளைகளை சமூக பொறுப்புடன் வளர்க்க உறுதி ஏற்கிறோம்” என அறிவித்தார்கள். வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்கள்.

பெற்றோர்கள் மாலை எடுத்து தர, இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். கீழிருந்து உறவினர்களும், நண்பர்களும் கைத்தட்டி உற்சாகப்படுத்த திருமணம் இனிதே முடிந்தது.

காதலும், சமூக உணர்வும் தான் இப்படிப்பட்ட திருமணங்களுக்கு அடிப்படை. இப்படிப்பட்ட சீர்த்திருத்த திருமணங்களை தான் பா.ஜனதா வெறுக்கிறது. ஒற்றுமையாய் வாழும் மக்களிடையே வெறுப்பு அரசியலை பரப்பி, அதில் குளிர்காய்கிறது.

****

மாணவிகள் உள்ள வகுப்பறைக்குள் நான் நுழைந்த பொழுது ஒரு பெண் இன்னொரு பெண்ணின் தலையை சீவிக்கொண்டிருந்தார்.

பேராசிரியராக நான் நுழைந்த பிறகு கூட, அவர்கள் வேறு திசையில் திரும்பியிருந்ததால், என்னை கவனிக்கவில்லை. நான் உடனே சத்தம் போட்டு "இதென்ன வகுப்பறையா? உங்க வீடா?" என திட்டவில்லை. "வெளியே போங்கள்!" என சொல்லவும் இல்லை.
அவர்களை அழைத்து….

"இந்த கூந்தல் தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது. துவக்கத்தில் ஆணும், பெண்ணும் இருவருமே கூந்தல் வைத்திருந்தார்கள். சமூகம் நவீனம் ஆக ஆக, ஆண்கள் தங்களது கூந்தலை வெட்டிவிட்டனர். பெண்ணுக்கு கூந்தல் அழகு என புகழ்ந்து புகழ்ந்து அடிமைப்படுத்தினார்கள்.

உயிரினங்களில் சேவல் சோம்பேறி. ஆனால் கொண்டையோடு இருக்கும். கோழியோ நல்ல உழைப்பாளி. சிங்கங்களில் கூட பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். பிடரியோடு இருக்கிற ஆண் சிங்கம் சோம்பேறி. வெட்கமில்லாமல் பிடுங்கித் தின்னும். இப்படி எல்லா உயிரிங்களையும் பாருங்கள். மனித இனத்திலும் பெண்கள் கடுமையான உழைப்பாளி. வெளியே போய் வெளியே வேலை செய்து, வீட்டிலும் கடுமையான வேலை செய்கிறாள்.

ஆகையால், பெண் அழகு. கூந்தல் அழகு என சொல்லி சொல்லித்தான் ஆண் பெண்களை அடிமைப்படுத்தினான். இதையெல்லாம் பெண்கள் என்றைக்கு விடுகிறீர்களோ அப்பொழுது தான் விடுதலைக்கான வழிபிறக்கும்” என பொறுமையாக விளக்கினேன்.

வேறு ஏதும் அந்த பெண்கள் சொல்லவில்லை. அமைதியாய் கேட்டுக்கொண்டார்கள்.

அடுத்த நாள் காலையில் கூந்தலை முழுவதும் வகுப்புக்கு சென்றேன்.
அந்த பெண்னிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அவளே புரிந்துகொண்டு சொன்னாள். ”கூந்தலை வெட்டிட்டேன் சார். இப்ப சரியா இருக்கிறேனே?” என கேட்டாள். என்னால் நம்ப முடியவேயில்லை.

அந்த பெண் வேறு யாருமில்லை. சாதி மறுத்து, சடங்குகள் மறுத்து திருமணம் செய்திருக்கிற இந்தப் பெண் தான்! இன்னும் சமூக உணர்வுடன் பயணிக்கவேண்டும். மென்மேலும் வளரவேண்டும். மணமக்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.