> குருத்து: முகம் - கவிதை!

December 6, 2010

முகம் - கவிதை!

'சின்ட்ரல்லா' கவிதைக்கு பிறகு, மீண்டும் நண்பர் சுக்ரன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த கவிதை. வாசிப்பவர்களின் விமர்சனங்கள் அவருக்கு தேவையாம். பின்னூட்டமிடுங்கள்.
*****

மெளனத்தை பரப்பி விரிந்து கிடக்கும் புல்வெளி
யாவற்றையும் கட்டியணைக்க
எத்தணிக்கும் பின் இரவு
ஆட்களற்றும், ஆடைகளற்றும்
விழுந்து கிடக்கும் நாம்
நிலவொளியை எடுத்து
கொஞ்சம் போர்த்திக்கொள்வோம்.
நம் இறுக்கத்தின் நடுவே
காற்றுக்கு தடையிடுவோம்.
பின்பு நேரிடும் முத்தச் சத்தத்தால்
காதுகளை பொத்திக்கொள்ளட்டும் மேகங்கள்!
நம் அசைவுகளை கண்டு
கண்கள் பொத்தும் விண்மீன்கள்
யாவரும் இவ்வாறாய் கிடக்க,
ஒரு ஓவியம் முற்றுப்பெற்றது.

உன்னை மணக்கத் துடிக்கும் தளர்ச்சியை,
பனித்துளியால் விரட்டிவிடு.
உறங்கி விடாதே! அதற்கான நொடிகள் மீதமில்லை,
தோட்டாக்களைப் போல!
கண்ணீரும், எச்சிலும் தேங்கிக் கிடக்கும்
உன் இதழ்களால்..
என் கரிய நெற்றியில் முத்தமிடு!

பின்னோரு மழை ஓய்ந்த மாலையில்
அது முடியாது போகலாம்.
என் மீதான அன்பை ஒரு பார்வையாக்கி,
சிரித்த என் முகத்தை பிரதியெடு!
நாளை மேற்கு தொடர்ச்சிய மலையடியில்
குண்டடிப்பட்டு
இரத்தமும், மண்ணும் அப்பிய முகத்தால்
அது வாய்க்காது போகலாம்!

எல்லாவற்றையும் எடுத்துச் செல் இங்கிருந்து,
நம் காதலை, கனவுகளை, முத்தங்களை...

மறந்துவிடாதே! பின்பொரு நடுநிசியில்
கண்ணாடிப் பெட்டிக்குள் நான் திரும்ப நேரிட்டால்,
என் முகத்தை அதில் தேடாதே!
இந்திய சோவியத் பள்ளிகளில்
பூக்கும் குட்டிப் புன்னகைகளில் தேடிப்பார்!

- சுக்ரன்

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

சந்திப்பிழை said...

நல்ல முயற்சி...

amrudha said...

உணர்ச்சி பூர்வமான கவிதை. வாழ்த்துக்கள்

குட்டகொழப்பி said...

கவிதை நன்றாக வந்துள்ளது...தோழர் சுக்ரன் தொடர்ந்து எழுத முயற்சிக்கவும்...

ஜோதிஜி said...

இந்த புகைப்படம் கொடுத்த உற்சாகம் வார்த்தைகளால் எழுத முடியாதது.

ஜோதிஜி said...

சுக்ரன் நிறைய எழுதுங்கள்

Desam said...

சிறப்பான இலக்கு, ஆழ்ந்த சொல்லாடல், அழகிய பொருத்தம். தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்களது படைப்பை, வாழ்த்துக்கள் - செங்கதிர்