> குருத்து: பெயர் தெரியாத பாட்டி!

December 8, 2013

பெயர் தெரியாத பாட்டி!

எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்வீடு.  எங்கள் வீட்டு சாவியை அவர்களிடம் தான் கொடுப்பதும் வாங்குவதுமாய் அவர்கள் உதவுவார்கள்.

அவர்களுடைய வீட்டின் கதவுக்கு அருகே கால்மிதி போடும் இடத்தில் ஒரு பாட்டி பரிதாபமாக அமர்திருப்பார். வயது எப்படியும் 75ஐ தாண்டும். கழுத்தில் பெரிய கட்டி.  அவர் பேசி நான் பார்த்ததில்லை. முகத்தில் ஒருவித இறுக்கத்தோடு இருப்பார்.  எவ்வளவு வெயில் அடித்தாலும் அந்த வெட்கையில் அதே இடத்தில் அமர்ந்திருப்பார்.  வீட்டிற்குள் போக அனுமதியில்லை.

பழகுகிற பக்கத்து வீட்டுக்காரர்கள் உரிமையோடு பெத்த அம்மாவை இப்படி பாடாய்படுத்தாதீர்கள்! என திட்டுவதை கவனித்திருக்கிறேன்.  அந்த வீட்டுக்காரரோஅதையெல்லாம் சட்டையே செய்வதில்லை.  திடீரென அந்த பாட்டி சில மாதங்கள் காணாமல் போய்விடுவார்.  கேட்டால், அண்ணன் வீட்டில் இருக்கிறார் என்பார்கள்.  அண்ணன் ஆறுமாதம்.  தம்பி ஆறுமாதம் கணக்கு போல!

எங்கள் வீட்டில் அப்பாவின் தாயார் 95 வயதுவரை இருந்தார்.  அவருடைய நடுத்தர வயதில் காசு இருந்த பவுசில் ஒரு மோசமான மாமியாராக அம்மாவை நிறைய தொல்லை செய்திருக்கிறார். தன் பெண் பிள்ளைகளுக்கு நிறைய செய்முறைகள், பண உதவி செய்திருக்கிறார்.  ஆனால், அப்பாவிற்கு பெரிதாய் செய்யவில்லை.  அதற்கு பிறகு பெண் பிள்ளைகள் யாரும் வசதியாய் இல்லை. அதனால், வயதான பிறகு மகன் வீட்டில் இருக்க வேண்டிய நெருக்கடி நிலை. கடந்த முப்பது ஆண்டுகளாக எங்கள் வீட்டில் தான் இருந்தார். அம்மா மாமியாரை பாதுகாத்தாலும், இளவயதில் அனுபவித்த தொல்லைகளால் தன் மாமியாரை திட்டிக்கொண்டே இருப்பார். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் பழசையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இப்படி நடக்காதீர்கள் என கடுமையாக சண்டையிடுவேன். அம்மா அமைதியாகிவிடுவார். அதற்கு பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார்.

நம் வீடுகளில் வயதாகிவிட்டால் அவர்களுடைய இருப்பு நமக்கு பயன்படுவதில்லை. தொல்லையாகிவிடுகிறார்கள். பெரும்பாலும் வசதி இருந்தால் தான் மதிக்கிறார்கள். வயதானவர்களுக்கு என்று சமூக பாதுகாப்பு என்று எதுவும் இல்லை. பென்சன் இல்லை. எல்லாம் காசு என்ற இந்த சமுதாயத்தில் உறவுகள் சிக்கலாகிவிடுகின்றன. வயதான பிறகு சுயமரியாதை இல்லாமல் வாழ்வது என்பது பெரிய உளரீதியான சிக்கல் தான்.

இரண்டு நாள்கள் ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்து சாவி கேட்கும் பொழுது, அந்த பாட்டி இறந்துபோன செய்தியை அவர் மகன் சொன்னார்.  ஒரு வாரம் முடியாமல் இருந்தாராம்.  கடைசி இரண்டு நாள் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லையாம். பிள்ளைகள், பேரன்,பேத்திகள் எல்லோரும்  வந்து பார்த்தார்கள்.  இறந்த இறுதிநாளில் பால் தருகிறோம் என எவ்வளவு வறுபுறுத்தினாலும், அந்த பாட்டி குடிக்கவேயில்லையாம். மறுத்துவிட்டார்களாம்.  இறந்துவிடலாம் என முடிவு செய்துவிட்டார் போல!

நீங்கள் எத்தனை பிள்ளைகள் என்றேன்? மொத்தம் 6 பிள்ளைகள். பசங்க மூவர். பெண்கள் மூவர் என்றார்.   இத்தனைப் பிள்ளைகளை பெற்றுமா, கால்மிதி போடும் இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள் என நினைத்த பொழுது, ஓங்கி மூக்கில் குத்தலாம் போல இருந்தது. 

பாட்டிக்கு எனது அஞ்சலிகள்! 

2 பின்னூட்டங்கள்:

ராஜி said...

நமக்கும் நாளை இதே கதி நேரலாம் என்பதை உணராத ஜென்மங்கள்

கும்மாச்சி said...

கொடுமை. வயதானவர்களை மதிப்பதெல்லாம் போய்விட்டது.