> குருத்து: நூறாவது நாள் (1984)

September 8, 2024

நூறாவது நாள் (1984)


ஊட்டியில் படிக்கும் நாயகிக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒருவன் நாயகியின் அக்காவை வீடு புகுந்து கத்தியில் குத்தி கொலை செய்கிறான். பதறி எழுந்து, சென்னையில் இருக்கும் அக்காவிற்கு போன் செய்து சொல்கிறாள். அவள் சமாதானம் சொல்கிறாள். ஆனால், அதற்கு பிறகு காணாமல் போய்விடுகிறாள்.

சில ஆண்டுகள் கழிகின்றன. இப்பொழுது நாயகி, பக்கத்து வீட்டில் இருக்கும் பணக்காரராக இருக்கும் நாயகனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்து... ஒரு கலாட்டாவில் துவங்கி, பின்பு காதல் செய்து, கல்யாணமும் செய்துகொள்கிறார்கள்.

இப்பொழுது அவளுக்கு மீண்டும் கனவு வருகிறது. அதில் அவளுக்கு தெரியாத ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். தன் உறவுக்காரரான மருத்துவரின் உதவியுடன் அந்த கொலையை தடுக்க தன்னளவில் விசாரிக்க துவங்குகிறாள். அதற்கு பிறகு அடுக்கடுக்கான பிரச்சனைகள்.

பிறகு என்ன ஆனது என்பதை சில திருப்பங்களுடன் படத்தை சொல்லி முடிக்கிறார்கள்.
****


படம் நன்றாக ஓடியிருக்கிறது. தனது குருநாதர் எடுத்த சிகப்பு ரோஜாக்கள் போல ஒரு படத்தை மணிவண்ணன் எடுத்திருக்கிறார். கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே எனப் பார்த்தால், 1977ல் வெளிவந்த ஒரு இத்தாலிய படத்தின் அதிகாரப் பூர்வமற்ற தழுவல் என்கிறது விக்கி.

ஆனால் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் கதையை நம் ஆட்களிடம் ஆங்கில திரை நிறுவனம் கேட்டதாகவும், அந்த கதை தான் பிறகு ”மைனாரிட்டி ரிப்போர்ட்” (2002) என வந்ததாக ஆச்சர்யப்பட்டு சொன்னார். அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது மங்கலாக நினைவில் இருக்கிறது.
ஒரு பெரும் பணக்காரன் அவனின் செயல்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. அவனின் உதவியாளராக வரும் ஜனகராஜ் பாத்திரம் எல்லாம் அபத்தமான பாத்திரம். ஆனால் கதையை நகர்த்துவதற்காக வைத்திருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் நாயகன் நாயகிக்கு வந்த அத்தனை பரிசு பொருட்களும் வீட்டில் பயன்படுத்தும் டெலிபோன்கள் என்பது நல்ல கற்பனை. நம்ம ஆட்கள் அப்படித்தான். ஒரு கட்டத்தில் கடிகாரங்களாக கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் இரவு விளக்குகளாக கொடுத்தார்கள். இப்பொழுது நிலைமை மாறியிருக்கிறது என நினைக்கிறேன்.

பெரும் பணக்கார நாயகனாக மோகன், கனவில் வந்த பெண்ணின் கொலையை தடுக்க பதைபதைக்கும் நாயகியாக நளினி, பாய்ந்து பாய்ந்து சண்டை போடும் மருத்துவராக விஜய்காந்த், ஆரம்ப கால சத்யராஜ், ஜனகராஜ், தேங்காய் சீனிவாசன் என சிலரும் வந்து போகிறார்கள். இளையராஜா தான் இந்த மாதிரி திரில்லர் படங்களை தன் பின்னணி இசையால் காப்பாற்றியிருக்கிறார். ”விழியிலே மணி விழியிலே” பாடல் இந்தப் படத்தில் தான்.

அமேசானில் இந்தப் படத்தைப் பார்த்தும் பார்க்கலாமே என பார்க்க துவங்கினேன். யூடியூப்பிலும் இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: