> குருத்து: Lalitham sundharam (2022)

September 8, 2024

Lalitham sundharam (2022)


எளிமையானது அழகு

கேரளத்தின் வண்டிபெரியார் பகுதி. வால்பாறையின் குளிர் கொண்ட நிலமாய் இருக்கிறது. அந்த பெரியவர் சில பசங்களுக்கு வயலின் பயிற்சி தருகிறார். அவருடைய துணைவியார் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிடுகிறார்.

அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் கொச்சியில் சில தொழில்கள் செய்து, நொந்து நூடுல்சாகி இருக்கிறார். மனைவியுடன் பிணக்கு முற்றி, பிரியும் மனநிலையில் இருக்கிறார்.

இரண்டாவது மகள். மும்பையில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக பிசியாக இருக்கிறார். அவருடைய கணவர் கப்பல் துறையில் வேலை செய்து, குடும்பத்துடன் இருப்பதற்காக விருப்ப ஓய்வில் இருக்கிறார்.

மூன்றாவது மகன். பெங்களூரில் ஒரு கணிப்பொறி இன்ஜினியராக இருக்கிறார். ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

பிள்ளைகள் மூவரையும் சொந்த ஊருக்கு அம்மாவின் நினைவு நாளுக்கு அழைக்கிறார். அவர்களுடைய தொழில் நெருக்கடியில்… வந்த மறுநாளே கிளம்பும் மனநிலையில் மூவரும் இருக்கிறார்கள்.

அவர்களின் அம்மா இறப்பதற்கு முன்பு, ”வருடத்திற்கு ஒருமுறை எல்லோரும் வரவேண்டும். இங்கு சில நாட்கள் தங்கவேண்டும்” என கேட்டுக்கொண்டதை நினைவுப்படுத்தி, ”அதன் பிறகு உங்கள் விருப்பம்” என சொல்லிவிடுகிறார்.

அங்கு இருக்கும் சில நாட்களில் அவர்களுக்குள் என்ன நடந்தது? குடும்பத்தின் அருமையை பாசம், நேசம் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

****


பொதுவாக குடும்பத்தின் பெருமையை சொல்கிற பல படங்கள் நெஞ்சை நக்குவதாக அமையும். சில இடங்களில் நெளிய கூட வைக்கும். மலையாள படங்களின் சமகால இயல்பு படி, மூன்று குடும்பங்களையும் அதன் இயல்புக்கு காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. அந்த பெரியவர் தான் நினைப்பதை மெல்ல சொல்வதும் இயல்பு.

தனிநபர் குடும்பமே ஆளுக்கு ஒரு இடமாக சிதறுண்டு வாழும் சூழ்நிலையில், மூன்று குடும்பங்கள் இணைவது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா என இயல்பாய் கேள்வி எழுகிறது.

”பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் பங்காளிகள்” என ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது. நிறைய குடும்பங்களில் நிறைய பிரச்சனைகள். அடுத்தடுத்த தலைமுறைகளையும் இந்த சண்டை கடுமையாக பாதிக்கிறது.

பிள்ளைகளுக்குள் நடக்கும் சண்டைகளை வைத்து, ஓரிடத்தில் தன் பேரப்பிள்ளைகளிடம் சொல்வது போல மற்றவர்களுக்கும் சொல்வார். ”எவ்வளவு வேண்டுமென்றாலும் சண்டைப் போடுங்கள். ஆனால் அதற்கும் அதிகமாக அன்பு செலுத்துங்கள்” என்பார். இந்தப் படம் சொல்லும் செய்தியும் அது தான்.

தோற்ற மனிதனாக பிஜீ, அதிகாரியாக மஞ்சு, அதிகாரியின் கணவராக சஜூ குருப் என படத்தில் எல்லாரும் அளவாக நடித்திருக்கிறார்கள். மஞ்சுவின் சகோதரர் மது இயக்கியிருக்கிறார். மஞ்சு தான் தயாரிப்பாளரும்!

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னியில் வெளிவந்த படம் என இணையம் சொல்கிறது. ஆகையால் டிஸ்னி ஸ்டாரில் இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: