> குருத்து: Kill (2023) இந்தி

September 12, 2024

Kill (2023) இந்தி


நாயகன் ஒரு இராணுவத்தில் ஒரு அதிகாரி. ஒரு பெரும் பணக்காரப் பெண்ணை காதலிக்கிறார். அவளுக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையோடு நிச்சயதார்த்தம். நிகழ்வுக்கே நேரே போய் சந்தித்து, ”இப்படியே என்னுடன் கிளம்பி வா கிளம்பலாம்” என்கிறார். ”உன்னைத்தான் கல்யாணம் செய்துப்பேன். இப்ப ரெம்ப சிக்கலாயிடும்! அவசரம் வேண்டாம்” என்கிறார்.


நிச்சயத்தார்த்ததை முடித்துவிட்டு, பெண் குடும்பம் விரைவு ரயிலில் கிளம்புகிறது. நாயகனும், அவருடைய நண்பரும் அதே ரயிலில் கிளம்புகிறார்கள்.

அதே ரயிலில் 40க்கும் மேற்பட்ட திருடர்கள் உள்ளே ஏறுகிறார்கள். குறிப்பாக ஏசி கோச்சில் ஏறுகிறார்கள். மற்ற கோச்சிகளில் இருந்து ஆட்கள் வருவதை கதவடைத்து தடுக்கிறார்கள். மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறிக்கிறார்கள். தடுப்பவர்களை உதைக்கிறார்கள்.

இதில் நாயகனும் நாயகனின் நண்பனும் அந்த கூட்டத்தோடு மோதுகிறார்கள். வழக்கமாக கொள்ளையடித்துவிட்டு போகிறவர்கள், குழுவில் ஒருவன் நாயகியின் அப்பா பெரும் பணக்காரர் என்பதால், கடத்தி பெரும்பணம் கேட்கலாம் என யோசனை சொல்கிறான்.

இந்த களேபரத்தில் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அங்கிருந்து படம் ரத்தக்களறியாக மாறிவிடுகிறது. கொள்ளையர்களிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.
****


இதுவரை ரயிலில் எடுத்த சண்டைப் படங்களில் இந்தப் படம் நிச்சயம் முதல் இடத்திற்கு வந்துவிடும். அவ்வளவு சண்டைகள். அதே போல இந்திய சண்டைப் பயிற்சியாளரோடு, கொரியா சண்டைக்கார்களும் கைகோர்த்திருக்கிறார்கள். ஆகையால் இன்னும் வேகமாகவும், லாவகமாகவும் சண்டைகள் இருக்கின்றன.

ரயில் குறுகிய இடம் எப்படி என யோசித்தால், உண்மையான ரயிலைப் போல ஒரு செட்டை அமைத்து கச்சிதமாக எடுத்திருக்கிறாகள். அதைப் பற்றி ஒரு சின்ன காணொளி யூடியூப்பில் இருக்கிறது.

பொதுவாக தென்கொரியா படங்கள் உணர்வுப்பூர்வமாகவும் படத்தோடு ஒன்றோடு வைப்பதில் தேர்ந்தவர்கள். இந்தப் படமும் அப்படி ஒன்ற வைத்திருக்கிறார்கள்.

துவக்கத்தில் கொள்ளையர்கள் திட்டமிடும் பொழுது, இப்ப ஏறனும், குறிப்பிட்ட நேரத்தில் இறங்கிவிடவேண்டும் என நேரம் எல்லாம் சொல்வார்கள். ஆனால் திட்டமிட்டபடி அங்கு நடப்பதில்லை. ரயில் என்றால், இடையில் மக்கள் ஏறுவார்கள். இறங்குவார்கள். எப்படியாவது நிர்வாகத்திற்கு தெரிந்துவிடும். குறிப்பிட்ட காலம் வரைக்கும் எதுவும் தெரியாத அளவிற்கு இருப்பதாக சொல்வது ஒரு குறை.

இந்தப் படம் டிரெண்ட் செட்டர் போல அமைந்தால், இனி நிறைய இந்த மாதிரி படங்கள் வரும். அது தான் பயமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் நாயகன் லட்சயாவிற்கு முதல் படம் என்கிறார்கள். அப்படி தெரியவில்லை. அந்த கொள்ளையர்களின் தலைவனாக நமக்கெல்லாம் தெரிந்த ஆசிஷ் வித்யார்த்தி வருகிறார். கொள்ளையர்களில் ஒரு ஆளாக கொடூர ஆளாக ஒரு வித அலட்சியத்துடன் வரும் ராகவ் கவர்கிறார். இனி நிறைய படங்களில் பார்க்கலாம் என நினைக்கிறேன். நிகில் ராகேஷ் பட் இயக்கியிருக்கிறார்.

ஹாட் ஸ்டாரில் இருப்பதாக இணையம் சொல்கிறது. சண்டைப் பிரியர்கள் பாருங்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது.

0 பின்னூட்டங்கள்: