> குருத்து

April 25, 2023

சுளுந்தீ நாவல்


எளிய மக்களோடு கலந்த பண்டுவம் படித்த நாவிதன் ஒருவனது வாழ்வைப் பதிவாக்கியிருக்கும் முத்துநாகுவின் முதல் நாவல் ‘சுளுந்தீ’ என்கிறார்கள்.


ஒரு பேரரசு மறையும் நேரத்தில் நாட்டில் நிலவும் நிறைய குழப்பங்கள், ஆட்சியதிகாரப் போட்டிகள் எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு பதிலாய் ‘சுளுந்தீ’ 18 ம் நூற்றாண்டின் பின்னணியில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய, வடுக மக்களின் தமிழக குடியேற்றம், நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் ‘கன்னிவாடி’ எனும் பாளையத்தின் மையம், பாண்டியத் தலைநகரின் மாற்றத்தின் பின்னணி, எதிர்க் கேள்விக் கேட்டவர்கள் ‘குலநீக்கம்’ செய்யப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வனங்களில், மலைகளில் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழும் அவலம் என்கிற பின்புலத்தோடு எழுதப்பட்ட ‘சுளுந்தீ’ , நூலுக்காக மிக அதிகமாக உழைத்திருப்பதை நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறும், நுட்பமாய் சொல்லப்பட்டிருக்கும் பல அம்சங்களும் அதை நிரூபிக்கின்றன.

பொதுவான தமிழிலேயே படித்துவிட்டு, வட்டார வழக்கு என படிக்கும் பொழுது நான் மிகவும் சிரமப்படுவேன். முதன் முதலில் கோபால்ல கிராமத்தில் அதை உணர்ந்தேன். பிறகு ஜெயமோகனின் ஒரு நாவலை படிக்கும் பொழுது ஒரு சோர்வு ஏற்பட்டது. முத்துநாகு அரண்மனையை வியந்து பார்க்கும் பார்வையாக இல்லாமல், எளிய மக்களின் வாழ்க்கையை சொல்வதாக எழுதியிருப்பது வட்டார வழக்காக இருந்தாலும் எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.

நாவலில் சித்தர் ஒருவர் வருகிறார். அவருக்கு உதவும் பாத்திரத்தில் ராமன் வருகிறார். பல இடங்களில் நோய்களுக்கு நிறைய மருத்துவ குறிப்புகள் எழுதியுள்ளார். ஏன் இவ்வளவு விவரிக்கிறார் என தோன்றிக்கொண்டேயிருந்தது. அவர் போகிற போக்கில் அதை கவனமாக எழுதியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலில் குலநீக்கம் செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக இருக்கிறது. அதற்கான பரிகாரம் அதைவிட பயங்கரமாக இருக்கிறது. இப்படி குலநீக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாய் இணைந்து தங்களுக்கு தேவையானதை உழவு செய்வது, அதற்கு தேவையான கிணறு தோண்டுவது, அதற்காக வெடிமருந்தை அரண்மனையில் இருந்து எடுத்து பயன்படுத்தியது தெரிந்ததும் பதறிப்போகிறது. இனி இப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் அடுத்தடுத்த உத்தரவுகள் பறக்கின்றன.

நாவலின் ஓரிடத்தில் பஞ்சம் வருகிறது. அதில் வரும் செய்திகள் எல்லாம் நம்மை உலுக்குகின்றன. புளியங்கொட்டைகளை அரைத்து குடித்து காலத்தை கடத்தியிருக்கிறார்கள். அரண்மனை காவல் படை வசூல் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்திருக்கிறார்கள்.

பாதிரியார், அவர் சார்ந்த மதம் வருகிறது. அவருக்கு வேலை அரண்மனையை எதிர்த்து குல நீக்கம் செய்யப்பட்டவர்கள் அதிகாரத்தை எதிர்த்து போரிட்டு விடக்கூடாது என்ற இலக்கில், அவர்களை ஏசுவின் பெயரால் சாந்தப்படுத்தும் வேலையை பக்காவாக செய்கிறார்.

வண்ணான் தொழில் குறிப்புகளும் நாவலில் வந்து போகின்றன. வெள்ளாவி வைக்கும் பொழுது, துணியை அடுதடுத்து அடுக்கும் பொழுதே, சமூகத்தின் வர்க்க அடுக்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் மேலே உள்ள துணி யாருடையது என்றால்… பார்ப்பனர்களின் துணி. கீழே உள்ளவர்களின் துணி கடுமையாக உழைக்கும் “சூத்திர” மக்களின் துணி.

நாவலாசிரியரிடம் கேள்விகள் கேட்டு, பதில்களையும் அன்பாதவன் பெற்றிருக்கிறார். அதில் சில சுவாரசியமான கேள்விகளும், பதில்களும்.

சுளுந்தீ புதினத்தின் களம் வரலாறும் புனைவும் கலந்தது..எனில் வரலாற்றுக் காலம் எது?

நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கரின் காலமான 1650 முதல் 1680 வரை
இந்த நாவலை எழுத எத்தனை ஊருக்கு அலைந்தீர்கள்..எவ்வளவு காலம் ஆயிற்று?

தமிழகம், கருநாடகம், கேரளம், பகுதிகளுக்கு சென்று வந்தேன். காலம் நான் குறிப்பிட்டால் மிகையாக இருக்கும் என்பதால் பதிலை தவிர்க்கிறேன்.

திண்டுக்கல் தோல் பட்டறைகள் இந்நாவல் நிகழும் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனவா?

ஆம். நாயக்கர் ஆட்சியின் துவக்க காலமான திருமலை நாயக்கர் காலத்திலே தோல் பதனிடும் பட்டறைகள் வந்து விட்டது. மன்னர் சொக்கநாதநாயக்கர் ஆட்சியிலே அது பெருக்கம் கண்டது.

பன்றிமலைச் சித்தர் தங்கியிருந்த குகைதான் கொடைக்கானல் குணா குகையா?

இல்லை. சித்தர் பொடவு என்ற சிறுகுகை பன்றிமலையில் உள்ளது. நீங்கள் குறிப்பிடும் பகுதியில் பிரிட்டீஷார் ஆட்சியிலே மனித நடமாட்டம் ஏற்பட்டது.

இந்த நாவலில் அரசு அதிகாரம், படை, மக்களின் வாழ்க்கை, பண்பாடு என கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. நாவலில் அம்சங்களை எடுத்துக்கொண்டு விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. இப்பொழுது தான் படித்து இருப்பதால், இது தொடர்பாக நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு அசைப் போட்டு நாவல் குறித்த அறிமுகம் ஒன்றை விரிவாக எழுதுவது இன்னும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். மீண்டும் ஒருமுறை பிறகு எழுதுகிறேன்.

பக்கங்கள் : 480

விலை : ரூ. 450 (நான்காம் பதிப்பு)

வெளியீடு : ஆதி பதிப்பகம்.

April 15, 2023

The Pope’s Exorcist (2023)


கணவனை ஒரு விபத்தில் இழந்து, தன் கணவரின் பரம்பரை சொத்தை சரி செய்து, வாழ்க்கைக்கு எதையாவது தேத்தலாம் என ஸ்பெயினுக்கு வருகிறார் அந்த அம்மா. கல்லூரி படிக்கும் பெண்ணுடன், பள்ளி செல்லும் மகனுடன் வருகிறார்.


வீட்டை சரி செய்வதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபடும் பொழுது, நெருப்பு விபத்து ஏற்பட்டு ஒரு தொழிலாலி காயம்பட இனி இங்கு வேலை செய்ய முடியாது என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

அந்த வீட்டில் இருந்த சாத்தான் அந்தப் பையனைப் பிடித்து ஆட்டத் துவங்குகிறான். உள்ளூரில் ஒரு பாதர் வருகிறார். ”இவரெல்லாம் வெத்துவேட்டு பெரிய ஆளை வரசொல்லு” என மிரட்டுகிறது.

இந்த செய்தி உள்ளூர் சர்ச் மூலம் வாடிகனுக்கு வந்து சேர்கிறது. அங்கு இந்த மாதிரி பேய் விரட்டும் ஆட்களில் தலைமை ஆளாக இருக்கிறார் நாயகனான அந்த பாதிரியார். ”கடந்த காலத்திலும் அந்த ஊரில் இருந்து பிரச்சனைகள் வந்தது. அதை உடனடியாக போய் என்னவென்று பார்!” என போப் அவரை அனுப்புகிறார்.

அந்த சாத்தான் வழக்கமான, சாதாரண பேயாக இல்லாமல், சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. தன்னை விரட்ட வரும் பாதிரியாரின் பலவீனங்களை எல்லாம் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறது. அந்த பாதிரியாரைப் பிடித்துக்கொண்டு, வாடிகனுக்குள்ளேயே நுழைந்து நிறைய காரியங்களை செய்துவிடும் பெரிய திட்டத்துடன் இருக்கிறது. இதெல்லாம் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.

தலைமை பாதிரியாரால் அந்த சாத்தானை விரட்ட முடிந்ததா? அல்லது சக்தி வாய்ந்த சாத்தான் ஜெயித்ததா? என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
****


சாத்தான். வழக்கமான பேய்விரட்டும் படலம். பயமுறுத்தல் என்ற வழக்கமான படமாக இல்லாமல் , மொத்தப் படத்தையும் காப்பாற்றியிருப்பது தலைமை பாதிரியாக வரும் Russel Crowe தான். அவருடைய தடிமனான உடம்பு, எதற்கும் அலட்டிக்கொள்ளாத குணம் எல்லாமும். அதற்கு பிறகு வழக்கமான பேயாக இல்லாமல், வரும் சாத்தான். அதுவும் சக்தி வாய்ந்ததாக இருப்பது. குறைவான பாத்திரங்கள் தான். மற்றவர்கள் கொடுத்த வேலைகளை செய்திருக்கிறார்கள்.

வாடிகனில் உள்ள சாத்தான் விரட்டும் தலைமை பாதிரியாரின் வாழ்க்கையிலிருந்து உண்மை பகுதிகள் என விளம்பரப்படுத்துகிறார்கள். வாடிகன் படத்தை நிறுத்திவிடும் என பயம் வந்துவிட்டதா என தெரியவில்லை. இந்தப் படம் ஒரு கற்பனை கதையே என முதலிலேயே ஜகா வாங்குகிறார்கள்.

மற்றபடி, பேயெல்லாம் உலகத்தில் இல்லை. ஹாலிவுட் துவங்கி, கோலிவுட் வரை தயாரிப்பாளர்கள் கல்லா கட்டுவதற்கு பேய், சாத்தான் எல்லாம் நன்றாக பயன்படுகின்றன. இப்படி கற்பனையான பாத்திரம் ஒன்று கிடைத்துவிட்டால், கதையும், திரைக்கதையிலும் எவ்வளவு புகுந்து விளையாடலாம். ஆனால் அதில் நமது கதையாசிரியர்கள் கற்பனை வறட்சியுடன் இருப்பது தான் இதில் பெரிய சோகம்.

இந்தப் படம் இப்பொழுது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும் வெளியாகியிருக்கிறது. ஓடிடிக்கு விரைவில் வந்துவிடும். பேய் விரட்டும் படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பாருங்கள்.

April 9, 2023

உறவுகள் – மருத்துவர் ருத்ரன்

 


“நட்பையும் காதலையும் புரிந்துகொண்டால்… வாழ்க்கையை சுகமாகவும், வளமாகவும் அமைத்துக்கொள்ள அவை உதவும். உறவுகளில் மிகவும் உதவியானவை நட்பும், காதலும் தான்”

- புத்தகத்திலிருந்து…!

உறவுகள் இல்லாமல் மனிதன் இல்லை. பெற்றோர், குழந்தை, சொந்தம், பந்தம். அலுவலகம், அக்கம் பக்கம், மருத்துவர் என நம்மைச் சுற்றி நிறைய உறவுகள் உணர்வுபூர்வமாக நம் வாழ்வில் தினந்தோறும் குறுக்கும் நெடுக்குமாக வந்து போகிறார்கள். இந்த உறவுகளை நாம் சரியாக கையாள தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், இந்த உறவுகள் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதைவிட துக்கத்தையும் தரக்கூடியது என்பதை நம் அனுபவங்களில் நாமே புரிந்திருக்கிறோம்.

இந்த உறவுகளின் எல்லை, வரம்பு, மனநிலை என ருத்ரன் தன் மன நல மருத்துவம் வழியாகவும், மருத்துவ ஆய்வுகள் வழியாகவும் தன் கருத்துக்களை நமக்கு புரியும் வகையில் சொல்கிறார்.

”பரிச்சயம்” தலைப்பில் இப்படி முடிக்கிறார். உறவின் ஆரம்பம் பரிச்சயம் என்பதால், முதலிலேயே இதில் கவனமாய் இருத்தல் உறவுகள் சுலபமாகவும், சுகமாகவும் அமையும் என 1997ல் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இணையத்தில் ஏற்படும் உறவுகளையும், அதனால் ஏற்படும் பல சிக்கல்களையும் நினைத்துப் பார்த்தால், இதற்கு பொருத்தமாக இருக்கிறது.

”நட்பு” தலைப்பில் நட்பின் தன்மைகளை சொல்லிக்கொண்டே போகும் பொழுது, ”நட்பு நிரந்தமானது மட்டுமல்ல. நிதமும் வளர்வது. முதிர்வது. இப்படி உண்மையான ஆழமான நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை அழகாக, சுகமாக அமையும். பெரும்பாலோருக்கு இது அமைவதில்லை” என முடிக்கும் பொழுது, பெருமூச்சு எழுகிறது.

”திருமணம்” என்ற தலைப்பில் இப்படி துவங்குகிறார். “இருவரும் சேரும் திருமண வாழ்வில் ஏற்படும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. இந்த உறவு தீவிரமானது, நுட்பமானது, நெருக்கமானது, பிரத்யேகமானது, உள்ளம் உடல் இரண்டையும் பகிர்வது, குடும்பமாவது, சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அங்கமாவது, நிரந்தரமாவது, இப்படித்தான் திருமண வாழ்வின் முதல் நிமிடம் கணவனுக்கும் மனைவிக்கும் தோன்றும். தோன்றவேண்டும். இப்படித்தான் தொடரவேண்டும். இவை வெறும் விருப்பங்களல்ல. இந்த உறவுக்கான விசேச விதிகள் – விரும்பி, ஒப்பி, நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளப்படும் விதிகள்.”

உறவுகளின் ஆழ, அகலங்களை ருத்ரன் சொல்ல சொல்ல நாம் இத்தனை ஆண்டுகளில் கடந்த வந்த அத்தனை உறவுகளும், கருப்பு வெள்ளையில் மனக்கண்ணில் வந்து போகிறார்கள். உறவுகளை கையாள்வதில் நாம் எவ்வளவு சரியாக இருந்திருக்கிறோம். எங்கெல்லாம் தவறிழைத்திருக்கிறோம் என பளிச்சென தெரிகிறது.

ருத்ரனின் எழுத்து அத்தனை ஈர்ப்பாக இருக்கிறது. சின்ன சின்ன சொற்றொடர்கள். தொடர்ச்சியாக படிப்பதிலும், புரிந்துகொள்வதிலும் சிக்கலே இல்லாமல், ஒரு தெளிந்த நீரோடை போல நகர்கிறது. அவரின் இலக்கிய வாசிப்பு அவருடைய எழுத்தில் நன்றாக தெரிகிறது. அவர் தொடர்ந்து சில புத்தகங்கள் எழுதினார். பிறகு நிறுத்திவிட்டார். நமக்கு தான் பெரிய இழப்பு. அவர் எழுதிய புத்தகங்களில் இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

இந்தப் புத்தகத்தைப் பல திருமண ஜோடிகளுக்குப் பரிசாக கொடுத்திருக்கிறேன். திடீரென விற்பனைக்கு இல்லை என சொல்லிவிடுவார்கள். 2006 ஏழாம் பதிப்புக்கு பிறகு இப்பொழுது எட்டாவது பதிப்பாக 2022ல் கொண்டு வந்திருக்கிறார்கள். அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்.

வாங்கிப்படியுங்கள். நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உறவுகள் வலுப்படும். வாழ்க்கை சுகமாகும்.

பக்கங்கள் : 112
விலை : ரூ. 85
வெளியீடு : கவிதா பப்ளிகேஷன்

தொடர்புகொள்ள : புத்தகத்தில் இருந்த எண்கள்
044-42161657
7402222787