> குருத்து: சாலமன் பாப்பையா அவர்களுக்கு அஞ்சலி!

September 11, 2026

சாலமன் பாப்பையா அவர்களுக்கு அஞ்சலி!

 


என்னுடைய 15 வயதில், அதாவது 80 களில், மதுரை கோயில் திருவிழாக்கள் நடைபெறும் பொழுது  கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பட்டிமன்றம் நடத்துவார்கள்.  

 

மதுரையில் கோயில்கள் அதிகம். ஆகையால் பட்டிமன்றங்களும் சுற்றி சுற்றி நடக்க துவங்கின. பல இரவுகள் அவருடைய பட்டிமன்றத்தை கேட்டிருக்கிறேன்.

 

ஒருமுறை மதுரை மேலமாசி வீதியில் திரு. குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது.  முதலில் பேசியவர் சில நகைச்சுவைகளைப் பேசி, தன்னுடைய உரையை முடித்துவிட்டார்.   நடுவர் ”பேசிய பேச்சாளர் (பெயரைச் சொல்லி) நன்றாக  விசயம் அறிந்தவர் தான். ஆனால் இன்று அவருடைய பேச்சில் நகைச்சுவை அதிகம் இருந்தது. ஆனால் விசயம் பெரிதாக இல்லை” என மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.  அடுத்தமுறை அந்த பேச்சாளர் தான் எடுத்துக்கொண்ட தலைப்பில் அத்தனை அழுத்தமாக பேசினார். இந்த முறை அவரைப் பாராட்டி பேசினார்.

 

அப்படி இருந்த பட்டிமன்றத்தின் பண்பாட்டை, மக்களுக்கு எளிமையாக புரியவைக்கிறோம் என எடுத்துக்கொள்கிற தலைப்பில் பேசுகிற பேச்சில்  சொல்ல வந்த விசயத்தின் அழுத்தம் குறைவாகவும், நிறைய மொக்கை நகைச்சுவைகள் அதிகமாகவும் துவக்க காலத்தில் கலந்தவர்கள் என சாலமன் பாப்பையா குழுவிற்கு பெரிய பொறுப்பு உண்டு. 

 

அதற்கு பிறகு வந்தவர்கள் பட்டிமன்ற வடிவத்தையே இன்னும் கீழே இறக்கிவிட்டார்கள் என்பதை நாமும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

 

"வாழ்க்கையோட இறுதிப்பயணத்துல இருக்கேன். இந்த வாழ்க்கை ஒரு ரயில் பயணம்போலத்தான். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடும். எனக்கு முன்னாடி போனவங்க இறங்கிட்டாங்க. பின்னாடி இறங்க வேண்டியவங்க உட்கார்ந்திருக்காங்க. நான் பெட்டிப் படுக்கையோட இறங்க தயாரா கேட் பக்கத்துல நின்னுட்டு இருக்கேன். எனக்கு வாழ்க்கை நிறைவா இருக்கு. ஒரேயொரு வருத்தம். இந்த வாழ்க்கையில இன்னும் நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கலாம். இன்னும் நிறைய எழுதியிருக்கலாமுன்னு தோணுது. " என பேசியதாக ஒரு பதிவர் பகிர்ந்திருந்தார்.

 

அவர் சொன்னதோடு. ”இன்னும் ஆரோக்கியமான நல்ல தலைப்புகளில், இன்னும் அழுத்தமாக மக்களிடம் பேசியிருக்கலாம். கொண்டு சேர்த்திருக்கலம்” என்பதை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் அவருக்கும், அவருடைய குழுவிற்கு  பேசுவதற்கு சரக்கோ, ஆற்றலோ இல்லாமல் இல்லை. ஆனால் அதை கவனமாக செய்யவில்லை என்பது தான் குறை.

 

மற்றபடி அவருடைய தமிழ் தொண்டிற்கு எப்பொழுதும் மரியாதை உண்டு. அவருக்கு அஞ்சலி.

 

-         - இரா. முனியசாமி

0 பின்னூட்டங்கள்: