> குருத்து: அகதியென்றால் அவமானம் தாங்க பழக வேண்டும்?

July 21, 2013

அகதியென்றால் அவமானம் தாங்க பழக வேண்டும்?

life is beautiful, Schindler's List , The Pianist - நாஜிக்களின் வதை முகாம் பற்றிய படங்களில் இதுவும் முக்கிய படம் தான்

ஜெர்மனி. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். 9 வயது புரூனோ பள்ளி விட்டு சந்தோசமாய் நண்பர்களுடன் வீட்டை நோக்கி ஓடிவருகிறான்.  அப்பா இட்லரின் நாஜிப்படையில் ஒரு முக்கிய அதிகாரி.  பதவி உயர்வு கொடுத்து, வேறு ஊருக்கு மாற்றல் செய்யப்படுகிறார். பள்ளியை, நண்பர்களை விட்டு வர புரூனோவுக்கு மனம் வரவில்லை. அப்பா ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறார்.

போனால், அது ஊருக்கு ஒதுக்குப்புறமான தனியான பங்களா. சுற்றிலும் வீடுகள் இல்லை. பள்ளி இல்லை.  புரூனோவின் அப்பா, புரூனோவிற்கும், அவனின் அக்காவிற்கும் வீட்டில் வந்து சொல்லித்தரும் ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்கிறார்.  பள்ளி இல்லாமல், நண்பர்கள் இல்லாமல் அவனுக்கு எதுவும் பிடிக்கவேயில்லை. தனிமையில் வாடுகிறான்.

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி வேலியிடப்பட்ட நாஜிக்களின் வதைமுகாம் ஒன்று இருக்கிறது.  அங்கு சிறைப்பட்டிருக்கும் யூத மக்களுடன் ஒரு யூத சிறுவனும் வேலை செய்கிறான். அவனக்கும் புரூனோவின் வயது தான்.

வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக ஜன்னலேறி குதித்து, வெளியே செல்லும் புரூனோ முகாம் சிறுவனை எதைச்சையாக சந்திக்கிறான். தொடர்ச்சியாய் பேசி நெருங்குகிறார்கள்.  புரூனோ தின்பண்டங்கள் கொண்டு வந்து அவனுக்கு தருகிறான். நட்பு வளர்கிறது.

வீட்டில் ஒருவர் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு யூத டாக்டர். வீட்டிற்கு வரும் நாஜிஅதிகாரிகள் அவரை மிக மோசமாக நடத்துகிறார்கள்.  புரூனோ இதையெல்லாம் பார்க்கிறான்.  யூதர்கள் கெட்டவர்கள் அவர்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள் என ஆசிரியர் பாடம் பயிற்றுவிக்கும் பொழுது, பரிதாபமான யூத மருத்துவரும், முகாம் நண்பனும் நினைவுக்கு வருகிறார். மனம் ஏற்க மறுக்கிறது.

முகாமில் தொடரும் யூத வதைகள், கொலைகள் புரூனோவின் அம்மாவிற்கு தெரியவர, அவள் பதட்டமாகிறாள். அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல கணவனை வற்புறுத்துகிறாள். கணவனோ மறுக்கிறான்.  தொடர்ந்து போராடுகிறாள்.

(வதை) முகாம்கள் யூதர்களை நல்லபடியாக தான் நடத்துகின்றன என்பதை உலகை நம்ப வைக்க (ராஜபக்சே சொல்லும் பொய்களை போல) ஒரு படம் எடுக்கிறார்கள். அந்த படம் பார்த்து புரூனோ சந்தோஷமடைகிறான். அம்மாவின் தொடர் வற்புறுத்தலால், புரூனோவின் அப்பா மூவரையும் ஜெர்மனுக்கே அனுப்ப முடிவு செய்கிறார்.

கிளம்புவதற்கு முதல்நாள், முகாம் நண்பன் தன் அப்பாவை காணவில்லை என கவலையுடன் தெரிவிக்கிறான். முகாமில் உடுத்தும் ஆடையை போல, எனக்கு ஒன்று நாளை எடுத்துவா! இருவரும் சேர்ந்து தேடலாம் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.

ஊருக்கும் கிளம்பும் நாள். கிளம்புவதற்கான பரபரப்பில், யாருக்கும் தெரியாமல் வெளியேறி நண்பனை சந்திக்க கிளம்புகிறான்.  வேலியை தாண்டி உள்ளே நுழையும் அவன், ஆடையை மாற்றிக்கொண்டு இருவரும் உள்ளே போகிறார்கள்.

அன்று கொல்வதற்காக கூட்டம் கூட்டமாக யூதர்களை நகர்த்தி ஒரு அறைக்கு கொண்டு செல்கிறார்கள். கூட்டத்திற்கு நடுவே இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் புரூனோவை காணவில்லை என அனைவரும் தேட ஆரம்பிக்க, முகாமிற்குள் உள்ளே புகுந்ததை கண்டுபிடிக்கிறார்கள். வேகவேகமாய் உள்ளே வந்து பார்க்கும் பொழுது, எல்லாமும் முடிந்துவிடுகிறது.

இட்லர் வரலாற்றில் பல லட்சகணக்கான யூதர்களை கொன்றுகுவித்தான். அதன் ரத்த சாட்சிகளாய் நிறைய படங்கள், நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.  இன்னும் வரும்.  அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

வதை முகாமில் கூட்டம் கூட்டமாய் யூதர்களை கொன்று குவிக்கும் பொழுது, தன் பையனுக்காக அந்த அதிகாரி துடிக்கிற காட்சி எத்தனை முரண்!  உங்களுக்கு வந்தா ரத்தம்! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா! என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

புரூனோவின் வழியே கதை பயணிப்பதால் வதை முகாம் சித்ரவதைகள் எதுவும் காண்பிக்கப்படவில்லை.  ஆனால், அதன் தீவிரத்தை படம் முழுவதும் நாம் உணரமுடியும். நாஜிக்களின் அதிகாரிகள், இளம் அதிகாரிகள் எல்லோரும் ஒருவித மன இறுக்கத்துடனே காணப்படுவார்கள்.

படத்தில் அனைவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த இரு சிறுவர்களும் இயல்பாக பொருந்தியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு எல்லாமும் பட்த்தின் சிறப்புக்கு உதவி செய்திருக்கின்றன.

படத்தில் ஒரு காட்சி.  முகாம் சிறுவன் வீட்டில் சாப்பாடு தட்டுக்களை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறான். புரூனோ அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். மேஜையில் தின்பண்டங்கள் நிறைய இருக்கும்.  வேண்டுமா என கேட்டு, புருனோ எடுத்துக்கொடுப்பான். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாஜி இளம் அதிகாரி திடீரென உள்ளே வந்து பார்த்துவிடுவான்.  திருடி தின்கிறாயா என மிரட்டுவான். புரூனோவை எனக்கு தெரியும் அவன் தான் கொடுத்தான் என்பான். புரூனோவோ பயத்தில் இவனை தெரியாது என சொல்லிவிடுவான். அந்த பையன் கடுமையாக தண்டிக்கப்படுவான்.

அடுத்த நாள் புரூனோ அவனை சந்திக்கும் பொழுது, பயத்தில் தெரியாது என சொல்லிவிட்டதற்காக மன்னிப்பு கேட்பான். அகதி என்றால் அவமானத்தை தாங்க பழகி கொள்ள வேண்டும் என்பான்.  உண்மையான வார்த்தைகள். ஈழத்தமிழ அகதிகள் கூட இங்கு தமிழ்நாட்டில் எத்தனையோ அவமானங்களை தாங்கித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகள் இங்கு குடியிருந்தால் கூட குடியுரிமை கிடைக்காது! எப்பொழுதும் சட்டவிரோத குடியேறிகள் தான். ஒரு குற்றப் பரம்பரையை போலத்தான் நடத்தப்படுகிறார்கள். அதனால், தான் உயிருக்கு துணிந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறார்கள்.

மற்றபடி, இந்த படங்கள் எல்லாம் இனத்தூய்மை, சாதித்தூய்மை பேசுபவர்களை எல்லாம் அரசியல் அரங்கில் இருந்து ஒழித்துக்கட்டவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடங்கள். இதோ சிறுபான்மைகளை திட்டமிட்டு கொன்று குவித்த மோடி, இன்று பிரதம வேட்பாளராக முன்நிறுத்தப்படுகிறார்.  சாதித்தூய்மை பேசும் இராமதாசு அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களை சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க முயல்கிறார். நாம் விரைந்து செயல்பட வேண்டிய காலமிது!

1 பின்னூட்டங்கள்:

indrayavanam.blogspot.com said...

அருமையான பதிவு