> குருத்து: ரசிய சிறையும், இந்திய சிறையும்!

August 29, 2013

ரசிய சிறையும், இந்திய சிறையும்!

நம் சிறையில் உள்ளே போய் வெளியே வந்தால், ஒரு தேர்ந்த கிரிமினலாக வெளிவரக்கூடிய எல்லா தகுதிகளும் நம் சிறைக்கு இருக்கின்றன!

ஸ்டாலின் கால ரசிய சிறையிலோ உள்ளே போய் வெளியே வந்தால் ஒரு தேர்ந்த தொழிலாளியாக வரமுடியும் என்பதை பெரியார் பதிவு செய்கிறார்.


****


பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள் என்ற நூலில், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதியது:

periyar_1.jpg

Leaforthovஜெயில் பார்க்க அழைக்கப்பட்டுப் போனோம். டைரக்டர் அறிமுகம் செய்யப்பட்டு அவர் எல்லாம் காட்டினார். மே First க்கு ஆக ஜெயில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. ஜெயில் என்பது பல பேக்டடரிகள் இருக்கிறது தான்.
பனீன், மொப்ளர் பின்னல் நெசவு பார்த்தோம். டைமன் பட்டில் நல்ல வேலைகள் செய்யப்படுகிறது. மற்றும் கோட்டுகள், ஓவர் கோட்டுகள் முதலியவை செய்யப்படுகின்றன.

சிறைக்கூட அறைகள் பார்த்தோம்; கட்டில் மேஜை நாற்காலி, கம்மோட், தண்ணீர்க் குழாய், பேசின், உஷ்ணம், புஸ்த்தகங்கள் அலமாரி ரேடியோ முதலியவைகள் இருக்கின்றன.

ஒரு ரூமுக்கு 2 அல்லது மூன்று பேர் உண்டு. ஒரு ரூம் 816 அளவு. அவர்களுக்கு க்ஷவரம் செய்யும் சலூன் உண்டு. சையன்சு அறை உண்டு. பத்திரிகைகள் படிக்கும் ரீடிங் ரூம், புஸ்த்தகங்கள் படிக்கும் லைபெரிரி, படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள், சித்திர வேலை கற்பித்தல் முதலியவை உண்டு.

இங்கு டிராமா, சினிமா ஆல்கள் பார்த்தோம். 17 வயது பையன் ஒருவன் பல திருட்டில் அகப்பட்டு 3 1/2  ஆண்டு தண்டனை அடைந்தவனைப் பார்த்து விசாரித்தோம். அவன் 2 ஆண்டு இங்கு இருந்து வேலை பழகி பிறகு தனி பேக்ட்டரிக்கு அனுப்பப்படுவான். இப்போது நெசவு வேலை செய்கிறான். இந்த ஜெயிலில் 600 கைதிகள் உண்டு.

இதை மாதிரி 4 அடுக்கு கட்டடம். இது புரக்ஷிக்கு முன் கட்டப்பட்ட ஜெயில் கட்டடம். சில திருத்தப்பாடு செய்திருக்கிறது. ஆனால், புது ஜெயில்கள் இன்னமும் நன்றாய்க் கட்டப்படுகின்றன. முன் ஒரு அறைக்கு ஒரே கைதி, இவன் எப்போதும் உள்ளேயே இருப்பான்.

முன்னால் இங்கு சர்ச்சு இருந்தது. இப்போது அது ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. ராத்திரி காலத்தில் கைதி சிறைக்குள் இருப்பான். அதுவும் இரவு 12 முதல் 5 மணிவரைதான் இருப்பான்.

ஒரு கைதி 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்; அவர்களுக்கு சாப்பாடு துணி முதலியவை இல்லாமல் ஒரு கைதிக்கு மீ 30 ரூபிள் சம்பளம் உண்டு. அதில் பகுதியை அவன் இஷ்டப்படி செலவு செய்யலாம். அதாவது, இங்கு கடையில் அவனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். மீதி மீ 15 ரூபிள் வீதம் சேர்த்து வைத்து விடுதலை ஆகிப் போகும் போது கையில் கொண்டு போவான். அவர்களுக்கு அடிக்கடி மீட்டிங்குகள் உண்டு.

தொழில் விஷயமான பிரசங்கம், சோஷியலிஸ்ட் பிரசங்கம் செய்வார்கள். 3 மணி நேரம் படிக்கலாம். 6 நாளில் 1 நாள் லீவு. 7 நாள், சிலர் 14 நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம். குடியானவன் கைதி, கூட்டுப் பண்ணையத்துக்காரன் வருடத்தில் மூன்று மீ வீட்டுக்கு வேலைக்குப் போய்வரலாம். தினமும் தாராளமாய் வீட்டுக்குக் கடிதம் எழுதலாம்; பதில் பெறலாம். பத்திரிகை, புஸ்தகம் தாராளமாய்ப் பெறலாம்.

சாப்பாடு 2 வேளை; காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சாப்பாடு டீ வேண்டியது Free யாய் வேண்டிய வரை கிடைக்கும். தொழில்சாலை உடை தவிர மற்ற உடை அவர்கள் சொந்தத்தில் இஷ்டப்படி உடுத்திக் கொள்ளலாம்.

மே First க்கு 100 பேர்களை ஒரு நாள் எல்லாம் வெளியில் போய் வர அனுமதிப்பார்கள். கைதிகளுக்கு என்று தனிப்பத்திரிகை உண்டு. அது மீ 3 முறை 5   கோபக் விலை. லைபெரிரியில் 8000 எட்டு ஆயிரம் புஸ்த்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் வருகின்றன. 100க்கு 82 பேர்கள் ஜெயிலில் பத்திரிகைக்கு சந்தாதாரர்கள். செஸ் முதலிய கேம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கின்றன.

இங்குள்ள கைதிகள் குற்றம் செய்தால் இங்கேயே கைதிகளுக்குள் எலக்ட் செய்த காம்ரேட் கோர்ட் டில் விசாரித்து நீதி செலுத்துவார்கள். அந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜெயில் அதிகாரிகள் 3 நாள் வரை மூடி வைத்திருக்கும் தண்டனை செய்வார்கள்.

12 முதல் 5 வரைதான் ஜெயில் அறை பூட்டி இருக்கும். மற்ற காலங்களில் திறந்தே இருக்கும். பிரரேட் கோர்ட் தண்டனை என்பது குறிப்பிட்ட காலத்துக்கு சில சவுகரியங்கள் இல்லாமல் செய்வது. அவரவர்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புஸ்த்தகம் உண்டு. இது போல் மாஸ்கோவில் 6 ஜெயில் இருக்கின்றன. மொத்தம் 4000 நாலாயிரம் கைதிகள் உண்டு.

பெண்களுக்குத் தனி ஜெயில் உண்டு. (சில கைதிகள் தங்கள் அறைக்குள் ஸ்ட்டவ் வைத்திருந்தார்கள். மே First க்கு தங்கள் தங்கள் அறையை அலங்கரித்துக் கொண்டும் இருந்தார்கள்) மாஸ்கோ ஜில்லா பூராவுக்கும் சுற்றுப்பக்க கிராமங்களும் சேர்ந்து 4000  கைதிகள். இந்த ஜெயிலில் இருந்து போகும் கைதிகள் நல்ல வேலைக்காரர்களாகி விடுகிறார்கள். ஜெயில் காரணத்தினால் ஓட்டுக்கு அருகதை போய்விடாது.

இந்த டைரக்ட்டர், ரிவிலாஷனுக்கு முன் கொல்லு வேலை செய்து கொண்டிருந்தவர், ஜெயில் திருத்தமெல்லாம் அனேகமாய் இவருடைய முயற்சியிலேயே செய்யப்படுகிறது. இவர் பெயர் மவுலின். ரிவிலூஷனில் இவர் தண்டனை அடைந்து சைபேரியாவில் நாடு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்; அரசியல் கைதியாயும் இருந்தவர். தான் போர்ட்சைட் வரை வந்திருப்பதாகச் சொன்னார். இவர் 29 வருடமாக கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்து வேலை செய்தவர். இவர் ஓல்ட் போல்ஸ்விக் மெம்பர். 15000 தொழிலாளிகளின் ஸ்ட்ரைக்கை லீட் செய்தவர்.

EVRகேழ்வி: இங்கு இவ்வளவு தாரளமாய்க் கைதிகள் விடப்படுகிறார்களே , ஓடிப் போவதில்லையா?”
பதில்: இதிலிருந்து ஒரு தடவை 3 பேர் ஓடிப்போனார்கள். பிறகு தானாகவே வந்து விட்டார்கள். சில சமயங்களில் 100 பேர் 200 பேர் சர்க்கஸ் பார்க்க என்று விடப்படுவார்கள். அவர்கள் காவல் இல்லாமலேயே போய் விட்டுத் தாங்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள். காரணம், அவர்களது நல்ல, நடவடிக்கையும் மற்றும் வெளியில் அவர்களுக்கு டிக்கட் இல்லாமல் சுலபத்தில் சாப்பாட்டுச் சாமான், அறைகள் முதலியவை கிடைக்காததுமாகும்.

ரெவிலூஷன்போது இந்த டைரக்ட்டரின் பெண்ஜாதி குழந்தைகள் எதிரிகளால் (ஒயிட்ஸ்களால்) கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர் ஆக்ஷியில் இது உள்பட 4 ஜெயில்கள் மேற்பார்வையில் இருக்கிறது.

இந்த 4 ஜெயிலில் இருந்து வருஷம் 1 க்கு 8 மிலியன் ரூபிள் மீதியாகிறது. 2300கைதிகளின் வேலையால் வருடம் 8000000 ரூபிள் சர்க்காருக்கு லாபம். அதாவது ஒரு கைதியால் மீ275 ரூபிள் மீதியாகிறது. கைதிகளுக்கு அதிகமான சுதந்திரமும் சவுகரியமும் உண்டு. நன்றாய் நடந்து கொள்ளுகின்றவர்களுக்கு அதிக சவுகரிமும் லாபமும் உண்டு
periyar_1.jpg
 -வே. மதிமாறன்
தலித் முரசில் 2001 சூனில் எழுதியது.
 ****

லஞ்சம் விளையாடும் புழல் சிறை!

இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல! புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.

கடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.

இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.



சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.

சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.

வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.

ஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!

சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.

காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.

குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... சாத்தியப்படுவதற்கு வாய்ப்பே அனுஅளவும் இருக்காது.