> குருத்து: சிசிடிவி - சில குறிப்புகள்

June 19, 2019

சிசிடிவி - சில குறிப்புகள்

சாலைகளில்
அலுவலகங்களில்
பள்ளிகளில்
சூப்பர் மார்க்கெட்டுகளில்
தேநீர் கடைகளில்
எங்கும் கேமராக்கள்
குறுகுறுவென பார்க்கின்றன.

நாம் மறந்து போனாலும்
"சிசிடிவியால்
கண்காணிக்கப்படுகிறீர்கள்"
ஒட்டப்பட்ட வாசகங்கள்
தொல்லை செய்கின்றன.

மாநகரங்களில்
ஐம்பது மீட்டருக்கு
ஒரு சிசிடிவி லட்சியம் என்கிறார் காவல்துறை உயரதிகாரி.
தினந்தோறும்
புதுப்புது இடங்களில்
முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

சிசிடிவி அற்ற உலகம்
பாதுகாப்பற்றது என்ற போதனையை நம்பி
தனது சேமிப்பு பணம் மொத்தத்தையும்
புன்சிரிப்புடன்
ஒப்படைக்கிறாள்
ஒரு சிறுமி.

தீபாவளிக்குள்
திரையரங்குகளில்
சிசிடிவி பொருத்தப்படவேண்டும்.
இல்லையெனில்
புதுப்படம் கிடையாது
என அறிவிக்கிறார்
தயாரிப்பாளர் சங்க தலைவர்.

வழக்குக்கு சம்பந்தமில்லாத
அப்பாவியை
லாக்கப்பில் அடித்தே கொன்றுவிடுகிறது போலீசு.
மக்கள் கொதிப்படைந்ததும்
இரண்டே நாளில்
எல்லா லாக்கப்பிலும்
சிசிடிவி பொருத்தப்படவேண்டும் என்கிறார்
கேரள போலீசு உயரதிகாரி.

வழக்கை விசாரிக்க
துவங்கும் பொழுதே
சிசிடிவி ஏன் பொருத்தவில்லை? என 
கோபித்துக்கொள்கிறார் நீதிபதி.

ராம்குமார் சிறையில்
பத்தடி உயர
மின்கம்பி வயரை
கடித்து 'தற்கொலை'
செய்த பொழுது
மூன்றாவது கண்
குருடாகியிருந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுது
கவனமாய் தீ வைத்த
சமூக விரோத சக்திகள்
துவக்கத்திலேயே
மூன்றாவது கண்ணை
நோண்டிவிட்டனர்.

சமூக செயற்பாட்டாளர்
முகிலன்
ரயில் நிலையத்தில்
காணாமல் போன பொழுது
மூன்றாவது கண்
வேலை செய்யவில்லை என பொறுப்புடன் சொன்னார்கள்.

பாதுகாப்பு குறைபாடால்
இறந்தார் தொழிலாளி.
சிசிடிவி காட்சிகளை
கவனமாக அழித்துவிடுங்கள்
என பதட்டத்துடன்
போன் செய்கிறார்
முதலாளி.

சிசிடிவி வழியே
நமது மாநகரங்களை
அமெரிக்காவிலிருந்து கூட
ஹேக்கர்கள் மூலம்
கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

திருடனை காட்டி
எங்கும்
எப்பொழுதும்
எல்லோரும்
திருடர்களைப்போல கண்காணிக்கப்படுகிறோம்.
ஏதோ
தப்பாகபடவில்லை?

0 பின்னூட்டங்கள்: