> குருத்து: இன்ஸ்பெக்டர் ரிஷி (2024) முதல் சீசன் 10 அத்தியாயங்கள்

April 11, 2024

இன்ஸ்பெக்டர் ரிஷி (2024) முதல் சீசன் 10 அத்தியாயங்கள்


தேன்காடு என காடுகளோடு இருக்கக்கூடிய ஒரு மலைகிராமம். ஒரு குகையில் வன தேவதையை வணங்கி, மலைவாழ் மக்கள் பூஜை செய்கிறார்கள். 25 அடிக்கு ஒரு பெரிய குழி வெட்டி, அதில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அங்கு வந்த அத்தனை பேரும் குழந்தைகள் உட்பட இரண்டிரண்டு பேராக உள்ளே குதிக்கிறார்கள். இது தான் முதல் காட்சி.


நிற்க. சமகாலத்தில் ஒரு புகைப்படக்காரர் மர்மமான முறையில் காட்டில் இறந்துகிடக்கிறார். மக்கள் வனரட்சி தேவதை ஆங்காங்கே உலாவுவதாக பயத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.

துப்பு துலக்க நாயகனான இன்ஸ்பெக்டர் ரிஷி அந்தப் பகுதிக்கு வருகிறார். இறுக்கமாக இருக்கிறார். முன்பு தன் தொழில் ரீதியான ஒரு துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு ஒரு கண் போய்விடுகிறது. ஒற்றைக்கண்ணொடு தான் சமாளிக்கிறார். அவருக்கு இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உதவிக்கு வருகிறார்கள்.

கொலைகள் எந்த தடயமும் இல்லாமல் நடக்கிறது. எங்கு விசாரணை துவங்கினாலும், ஒரு கட்டத்தில் ஒரு முட்டுச் சந்தில் கொண்டு போய் நிற்கிறார்கள். ஆனால் ஆட்கள் மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது. தொடர்ந்து ஆட்கள் சாவதால், அந்த பகுதியில் நடைபெறும் பல ”வளர்ச்சி” வேலைகள் தடைபடுகிறது.

காட்டை காக்க வனரட்சி தேவதை தான் கொலைகள் செய்கிறதா? அல்லது அதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்பதை காட்டின் பின்னணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

****


காட்டின் பின்னணியில்… அடிக்கிற கன வெயிலுக்கு இதமாக… கண்ணுக்கு குளிர்ச்சியாய் பார்க்கவே அழகாக இருக்கிறது. ஆங்காங்கே சிஜியில் வரும் விலங்குகளும் அருமையாக இருக்கின்றன.

சுற்றுப்புற சூழலில் அக்கறை இல்லாமல், லாபம் என்ற ஒரே நோக்கத்தில் சட்ட ரீதியாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவோ உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதன் பின்னணியில் கதை அமைத்திருக்கிறார்கள். காடுகளோடு அந்த மலை வாழ் மக்கள் எத்தனை ஒன்றி வாழ்கிறார்கள் என்பதையும் உணர்வுப்பூர்வமாக காட்டியிருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் காட்டியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.

திறமையான இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்தினாலும், இயக்குநர் ஒன்பது அத்தியாயம் வரை அவரை கட்டிபோட்டு வைத்திருந்து… கடைசி அத்தியாயத்தில் தான் சரசரவென அதன் புதிர்களை அவிழ்க்கிறார். இந்த மாதிரி வலைத்தொடர்களில் அடுத்த தொடருக்கான ஒரு விதையையும் விட்டு வைப்பார்கள். இதிலும் அப்படியே!

நாயகன் நவீன் சந்திரா (சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்-ல் பார்த்த நினைவு) கொடுத்தப் பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார். இரண்டு உதவி ஆய்வாளராக வருபவர்களும் சிறப்பு. ஒருவர் ரவிகண்ணா சமீபத்தில் சில படங்களில் பார்த்து வருகிறேன். இன்னொருவர் நளினி ஜீவரத்தினம்.

நாயக பிம்பம் என வழக்கமாக திரையில் காட்டுவதை வலைத்தொடர்களில் உடைத்து வருவதை கவனிக்கிறேன். இதில் முதன்மை பாத்திரங்களாக வரும் மூவருடைய தனிநபர் வாழ்க்கையையும் இயல்பாக, சிக்கல்களை எதிர்கொள்பவர்களாக காட்டியிருக்கிறார்கள்.

கொஞ்சம் இளைத்து நாயகி சுனைனா தொடர் முழுவதும் வருகிறார். அவரும் சிறப்பு. மேலும், குமாரவேல், மைம் கோபி, வேல ராமமூர்த்தி என அவர்களும் பொருத்தமாக வருகிறார்கள். தென்னிந்திய மொழிகளில் கூடுதலாக இந்தியில் மொழிமாற்றம் செய்திருப்பதால், பிற மொழி நடிகர்களும் கலந்து கட்டி நடித்திருக்கிறார்கள். சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்களும் நினைவில் நிற்கிறார்கள்.

”திரு திரு துறு துறு” என ஒரு படம். 2009ல் வந்தது. நன்றாக ஓடியதாகவும் நினைவு. அதை இயக்கியவர் நந்தினி. ஆனால் அதற்கு பிறகு காணாமல் போய்விட்டார். இப்பொழுது இந்த தொடர் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் வந்து இருக்கிறார். வாழ்த்துகள்.

இந்தத் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: