> குருத்து: Killa (கோட்டை) 2014

April 20, 2024

Killa (கோட்டை) 2014


மராத்தி மண்ணில் கொங்கன் பகுதிக்கு அம்மா தன் மகனுடன் வந்து சேர்கிறார். அவர் வருவாய் துறையில் ஒரு இடைநிலை அதிகாரி. மகன் ஏழாவது படிக்கிறான். அவருடைய கணவன் கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்.

புதிய அலுவலகம். புதிய சக ஊழியர்கள். வளைந்து போகச் சொல்லும் உள்ளூர் பிரமுகர்கள் என புதிய சூழலை சிரமத்துடன் எதிர்கொள்கிறார். புதிய ஊர். புதிய பள்ளி. சுற்றிலும் புதிய மனிதர்கள் அவனால் இயல்பாக அங்கிருக்க முடியவில்லை. அவன் நினைவில் அவன் வாழ்ந்த பூனே இன்னும் நிறைய தங்கியிருக்கின்றன.

புதிய நண்பர்களை கண்டடைந்து, முரண்பட்டு, திரும்ப பேசி…. அந்த பையன் நிலைமையை புரிந்து கொண்டு, இயல்பு நிலைக்கு மாறும் பொழுது, அம்மாவிற்கு அடுத்த மாற்றல் உத்தரவு வந்து சேருகிறது.



அந்த பையன் அவன் வயதுக்குரிய தொல்லைகளுக்கு ஆளாக்காமல், கொஞ்சம் தெளிவாக தான் இருக்கிறான். சூழ்நிலை தான் அவனை இறுக்கமாக்குகிறது.

அம்மா – மகன் முரணுக்கு பிறகான புரிதல், பள்ளி நண்பர்கள் முரணுக்கு பிறகான நெருக்கம் எல்லாம் இயல்பாக இருக்கிறது. அந்த பெண்ணின் மீது அக்கறை கொண்டு, இன்னொரு திருமணத்தை யோசிக்கவில்லையா என கேட்பது அழகு.

கடற்கரையை ஒட்டிய நிலம், மழையும், ஈரமுமாய், அலைகள் சத்தம் எதிரொலிக்கும் கோட்டையுமாய் கொங்கன் நம்மை அத்தனை ஈர்க்கிறது. நம்மூர் நாகர்கோவில் நிலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. அந்த நிலம் தான் அந்த பையனின் மனநிலையை விரைவில் சமநிலைக்கு கொண்டு வந்தது எனலாம். மீண்டும் அந்த ஊரை விட்டு போகும் பொழுது, பூனே நிலம் அவன் நினைவில் மங்கி, கொங்கன் நிலம், அதன் நினைவுகளும் அவனை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றன.

அந்த பையன், அவனின் அம்மா, சக பள்ளி மாணவர்கள் எல்லோரும் படம் முடிந்தும் நினைவில் நிற்கிறார்கள். புகழ்பெற்ற “பாதாள் லோக்” வலைத்தொடர், திரீ ஆப் அஸ் படத்தை எடுத்த இயக்குநர் அவினாஷ் அருணுக்கு இந்தப் படம் முதல்படம்.

ஜீ5ல் இருக்கிறது. அமைதியான, அழகான படத்தை விரும்புவர்கள் மட்டும் முயற்சி செய்யுங்கள்.


0 பின்னூட்டங்கள்: