> குருத்து: "நீ உதவி செய்பவனாக மாறு"

April 13, 2024

"நீ உதவி செய்பவனாக மாறு"


எப்பொழுதும் எனக்காக யாரிடமும் கேட்க தோன்றியதேயில்லை. ஒருவேளை அப்படி கேட்பதாய் இருந்தால், குறைந்தது ஆயிரம் முறை யோசனை செய்து, முடிந்தமட்டிலும் கேட்பதை தவிர்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் என்னிடம் இருப்பதே போதுமானதாக இருந்தது அல்லது அதற்குள் தான் வாழவேண்டும் என்ற கடுங்கோட்பாட்டில் வாழ்ந்தேன் என்றும் சொல்லலாம். எப்பொழுது தன் தேவைகளை/நேரத்தை தானே சரியாக பாரமரித்து கொள்கிறார்களோ அவர்களால் தான் மற்றவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது. இதைப் பொதுமைப்படுத்தவில்லை. என்னளவில் சொல்கிறேன்.


****

"உலகம் உதவி கேட்பவர்களால் நிறைந்து இருக்கிறது!"என்றார் அவர் சலிப்புடன்.
"நீ உதவி செய்பவனாக மாறு"

"நானா! நான் என்ன உதவி செய்ய முடியும்!" என்று திகைத்தேன்

"எனக்கே உதவிகள் நிறைய தேவைப்படுகின்றன.
நான் முற்றிலுமாக நொறுங்கிப் போய் விட்டேன்."என்றேன்.

"எந்தச் சூழலிலும்
எவராலும் செய்யக்கூடிய
ஒரு சிறிய உதவி
அந்த உதவிக்காகக் காத்திருக்கிற
அதனினும் ஒரு சிறிய கை
உண்டு.
அதைக் கண்டுபிடி!" என்றார் அவர்.

நான் வாழ்நாள் முழுவதும்
ஒரு திசையைப் பார்த்து
அமர்ந்து கொண்டிருந்த
ஒரு பொம்மை
வேறு திசையைப் பார்த்து
திருப்பி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.

இப்போது என் முன்னால் இருந்தது
முற்றிலும் வேறு ஒரு உலகம்.

என்னால் உதவப்படக் கூடியவர்கள் நிறைந்ததொரு உலகம்.
அந்த நாளுக்குப் பிறகு
நான் உதவி என்று
எவரிடமும் கேட்டதில்லை.
உதவாதவர்கள் மீது
கோபம் கொண்டதில்லை.

நான் கொடுக்க ஆரம்பித்ததும்
வினோதமாக
எனக்கு உதவி என்று எதுவும்
தேவைப்படவுமில்லை.

- போகன் சங்கர்

0 பின்னூட்டங்கள்: