> குருத்து: பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.

April 20, 2024

பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.


சமீப காலங்களில் பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் பல சமயங்களில் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.


பல சமயங்களில் வேலை செய்யவில்லை என்பதால், ஒரு நிறுவன முதலாளி தளம் கொடுக்கும் தாமதத்தை, சிரமத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், "உங்களுடைய கணக்கிற்கு தொகையை அனுப்பிவிடுகிறேன். நீங்கள் கட்டிவிடுகிறீர்களா?" என கேட்கிறார்கள். அதே தளத்தில் தானே நானும் பணம் செலுத்தவேண்டும். சிரமமாய் இருக்கிறது.

தொகையைச் செலுத்துவது கூட பிரச்சனையில்லை. நிறுவனங்களுக்கு வரி செலுத்தும் பொழுது, வரி ஆலோசகர்கள் தங்களுடைய கணக்கில் இருந்து செலுத்துவதைத் தவிருங்கள். நாளை நிறுவனம் ஏதோ ஒரு பிரச்சனையில் அவர்களுடைய வங்கி முடங்கும் போழுது, உடனே நம்ம வங்கிக்கணக்கில் பணத்தை எடுப்பதற்கு உத்தரவிட்டுவிடுவார்கள் என சொன்னதில் இருந்து.... ஒரே திகிலாகவே இருக்கிறது.

தொழிலாளர்களுக்கான பி.எப். தளம் எப்பொழுதுமே தகராறு தான். தொழிலாளர்கள் பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த தளத்தை அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என நினைப்பேன். தளம் தருகிற அத்தனை சிரமங்களையும் தொழிலாளர்கள் எதிர்கொள்கிறார்கள். பாதுகாப்பு அம்சங்களுக்கன என கடந்த சில மாதங்களில் ஆதார் ஓடிபி இருந்தால் தான் உள்ளேயே நுழையமுடியும் என மாற்றிவிட்டார்கள். பி.எப். தளமே எப்பொழுதாவது தான் வேலை செய்யும். அப்படி வேலை செய்யும் பொழுது, ஆதார் தளம் ஓடிபி அனுப்பாமல் தகராறு செய்கிறது.

இதில் இ.எஸ்.ஐ தளமும் அப்படித்தான். இப்படி வேலை செய்யவில்லை என இ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்திற்கு குறிப்பாக தொழில்நுட்ப பிரிவுக்கு போன் செய்தால், கொஞ்சம் கூட கூசாமல், "ஆறு மணிக்கு மேல் வேலை செய்யுமே" என என கூலாக பதில் சொல்வார்கள்.

நாம் வரி ஆலோசகர்கள் ஆறு மணிக்கு மேல் வேலை செய்துவிடுவோம். ஆனால் பல நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் என்ன செய்வார்கள்? இதற்காகவே ஆறு மணிக்கு மேல் வரை இருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

பிஎப். தொழிலாளர்களுக்கான தளத்தை குறித்து ஒரு அனுபவம் :

ஒரு நிறுவனம் சென்னையில் இருக்கிறது. அவர்கள் பக்கத்து மாநிலத்தில் ஒரு
பெரிய கல்லூரியில் கேன்டின் கான்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்கள்.

அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருடைய குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தவேண்டும் என பி.எப்.பில் தன் கணக்கில் கடன் விண்ணப்பித்து தாருங்கள் என கேட்டுள்ளார்.

1. நான் அந்த நிறுவனத்தின் பி.எப். ஆலோசகர் என்பதால் முதலில் என்னைத் தொடர்புகொண்டு எனி டெஸ்கில் இணைத்துகொள்ளவேண்டும். (இது முதல் டாஸ்க். நான் சிஸ்டத்தில் இருக்கும் பொழுது தான் என்னை இணைக்கமுடியும்.)

2. சென்னையில் உள்ள பணியாளர் நேரடியாக அங்கு வேலை செய்யும் அந்த தொழிலாளியிடம் பேசக்கூடாது. கடந்த கால கசப்பான நினைவுகள் இந்த விதிக்கு தள்ளியிருக்கிறது. அங்கு இருக்கும் மேற்பார்வையாளரிடம் தான் ஓடிபி கேட்கவேண்டும். அவர் தன் வேலைகளில் எப்பொழுதுமே ரெம்ப ரெம்ப பிசி. அவர் தான் அந்த தொழிலாளியிடம் ஓடிபி கேட்டுத்தரவேண்டும். இது அடுத்த பெரிய டாஸ்க்.

3. தளத்தில் உள்ளே நுழைவதே பெரிய டாஸ்க். தளம் நம் ”அதிர்ஷ்டத்திற்கு” வேலை செய்து, ஓடிபி கேட்கும் பொழுது ஆதார் தளம் பல சமயங்களில் ஓடிபி தருவதில்லை. அப்படியே ஆதார் ஓடிபி தந்துவிட்டால், மேற்பார்வையாளரிடம் தெரிவித்து, அவருடைய பிசியான வேலையில் நினைவில் வைத்து அவர் அந்த தொழிலாளியை தொடர்புகொள்ளும் பொழுது, (அப்பொழுது தான் பஜ்ஜியோ, போண்டாவோ சுடச்சுட சுட்டுக்கொண்டிருப்பார்) ஓடிபி வாங்கித் தருவதற்குள் அந்த ஓடிபி அநேகமாக காலவதியாகிவிடும். விக்கிரமாதித்தன் போல சற்றும் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து...

இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை முயற்சி செய்தும் பி.எப்பில் முன்பணத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

அந்த தொழிலாளியை அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இணையம் இருக்கும் ஒரு ஜெராக்ஸ் கடையில் விண்ணப்பிக்க சொல்லுங்கள். எளிதாக வேலை முடிந்துவிடும் என சொன்னால்... நிறுவனத்தின் விதி அதை சொல்லக்கூடாது என கறாராக சொல்கிறது. அதிலும் கடந்த கால கசப்பான நினைவுகள் இருக்கின்றன என்கிறார்கள்.

குறிப்பாக அந்த நிறுவனத்தில் விசேச சூழல் ஒரு பக்கம் இருக்கட்டும். பி.எப். தளம் சீரான நிலையில் வேலை செய்து, ஆதார் தளமும் ஓடிபி தந்துவிட்டால், எல்லாம் உடனே முடிந்துவிடும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

நம்மால் சாத்தியமானது எல்லாம், சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டுக்குமான மின்னஞ்சலுக்கு புகார் அனுப்புவது மட்டுமே! அதை செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: