> குருத்து: அவசரம் - இந்த மில்லேனியத்தின் உணர்வு

April 21, 2026

அவசரம் - இந்த மில்லேனியத்தின் உணர்வு


அரவிந்தனைப் பற்றிய நினைவுப் பதிவுகளில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த விஷயம் என்னை யோசிக்க வைத்தது. ( எழுதியது யார் என்று குறித்துக் கொள்ள மறந்து விட்டேன்.)


அரவிந்தன் உடல் நலம் குறித்து மிகுந்த கவனம் உடையவர். பொதுவாக பல இலக்கியவாதிகளுக்கு இருக்கும் எந்த 'உல்லாச 'பழக்கங்களும் இல்லாதவர். அவருக்கு எப்படி இப்படி ஒரு அவசர மரணம் நிகழ்ந்தது என்று அதை எழுதியவர் கேட்டிருந்தார். 


அரவிந்தன் எப்போதுமே ஒரு அவசரத்துடன் காணப்பட்டார் என்றும் அவர் எழுதியிருந்தார். உண்மைதான். அரவிந்தனை எப்போதும் ஒரு அவசரத்துடன்தான் பார்த்திருக்கிறேன். உட்கார்ந்திருக்கும்போது கூட அவரிடம் ஒரு அவசரம் தென்படுவது போலவே இருக்கும். அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர். எதையும் காலக்கெடுவுக்குள்  முடிக்க வேண்டிய அவசரம் அவருக்குள் தொற்றி இருக்கலாம். அவருடன் வேறு சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அவசரம் இல்லாத  கூடுகைக்கு சில முறை முயன்றோம். எங்களது தனித்தனி அவசரங்களால் அது கூடவில்லை. அது இனி ஒருபோதும் கூடாது.


 என்னையும் நான் எப்போதுமே ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பதாக பலர் சொல்லி இருக்கிறார்கள். 'நீ எல்லாவற்றையும் அவசரமாகச் செய்கிறாய் 'என்று சொல்லி இருக்கிறார்கள். அவசரம்  அரவிந்தனின் மொழியில் சொன்னால் இந்த மில்லேனியத்தின் உணர்வு. நாம் மிக வேகமாக வாழ்ந்து மிக வேகமாக செத்துப் போகிறோம்.


 பிரெஞ்சு மொழியில் flaneur என்கிற ஒரு வார்த்தை உண்டு. தமிழில்  சுமாராக இப்படி மொழிபெயர்க்கலாம்' மிக மெதுவாக நடப்பவர் '.


 பொதுவாக பிரெஞ்சு மக்கள் மிக மெதுவாக நடக்கக் கூடியவர்களாகவும் ஆங்கிலேயர்கள் மிக வேகமாக நடக்கக்கூடியவர்களாகவும் சொல்கிறார்கள். இந்தியர்களும் மிக வேகமாக நடக்கக் கூடியவர்கள் தான். இந்தப் பண்பு ஒரு கலாச்சார பண்பும் கூட என்றும் தோன்றுகிறது.


என்னுடைய கனவெல்லாம் இப்போது அவசரம் இல்லாத ஒரு வாழ்க்கை குறித்துதான் இருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாது காலக்கெடுவும் இல்லாது மிக மெதுவாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  நடப்பது. அரவிந்தனுக்கும் இப்படிப்பட்ட கனவுகள் இருந்திருக்கலாம்.


 ஆனால் அது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடிய விஷயம் அல்ல என்றும் தெரிகிறது. நான் /நாம் எப்போதும் விரட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். இருக்கிறோம். அரவிந்தனின் மரணம் மட்டுமல்ல  இறுதிச்சடங்குகள் கூட மிக வேகமாக யாரோ விரட்டியது போல் முடிந்து விட்டது.


 மிக மெதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்கும் பிரெஞ்சு நடை ஒருவேளை நமக்கெல்லாம் மரணத்திற்கு பிறகாவது கிடைக்குமோ என்னவோ?


- போகன் சங்கர்

0 பின்னூட்டங்கள்: