> குருத்து

June 7, 2023

மின்சார கட்டண உயர்வு : ஆண்டுக்கு ஒருமுறை இனி ஷாக் கொடுக்க போகிறார்கள்!


மின்சார வாரியம் ஏகப்பட்ட கடனில் இருக்கிறது. (ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி). கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவே இல்லை. ஆகையால், உயர்த்துகிறோம் என கடந்த ஆண்டு உயர்த்தினார்கள்.


ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, கல்வி கட்டண உயர்வு என பல திசைகளிலிருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டு திணறிக்கொண்டிருந்த மக்கள், மின்சார கணக்கீட்டை மாதம் இருமுறை கணக்கு எடுப்பதால், ஏகப்பட்ட கட்டணம் வருகிறது. மாதம் மாதம் எடுங்கள் என மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் பொழுது தான் இந்த விலை உயர்வையும் அறிவித்து, அதிர்ச்சி தந்தார்கள்.

இப்படி மின்சார கட்டணத்தை உயர்த்தியும், அவர்களுக்கு பெருமளவு வருமானம் வரவில்லையாம். ஆகையால் மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில் ஏற்றிக்கொள்ளலாம் என கடந்த ஆண்டே அனுமதி அளித்துவிட்டது. மக்களின் கூலி என்பது வருடம் வருடம் உயர்வதில்லை. ஆனால், ஒருங்குமுறை ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மக்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அக்கறையும், புரிதலும் இல்லாமல் அறிவித்தார்கள். ”உனக்கென்னப்பா! பைத்தியம். எது வேணா சொல்லுவ!” வசனம் தான் நினைவுக்கு வந்தது.

இப்படித்தான் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கலாம் என ஒன்றிய அரசு மாற்றினார்கள். ஒரு லிட்டர் எண்பது ரூபாய்க்கு இருந்த பெட்ரோலை 103 ரூபாய் வரை விலை ஏற்றி ஒன்றிய அரசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டுக்கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் விலை குறையும் பொழுது, கவனமாய் குறைக்க மறந்து போகிறார்கள்.

ஒன்றிய அரசு சுங்கவரி கட்டணத்தை இப்படி ஒரு உத்தரவுக்கு பிறகு தான், ஆண்டுக்கு இருமுறை உயர்த்திக்கொண்டே போகிறார்கள். அதனால், எல்லா போக்குவரத்து கட்டணமும் உயர்ந்து, விலைவாசியும் எகிறிக்கொண்டே போகிறது.

தமிழக அரசும், மின்சார வாரியமும் உயர்வுக்கு சொல்லும் காரணம் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது என்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த வாரியம் எப்படி ஒரு லட்சத்து, நாற்பதினாயிரம் கடனாகிப்போனது என்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளினால், தனியாரிடம் அநியாய விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தார்கள். அரசு புதிதாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என தடை விதித்தார்கள். அதன் விளைவு தான் மலை போல கடன் சேர்ந்துவிட்டது. இந்த கடனுக்கு பின்னால் உள்ள ஊழலை நேர்மையாக விசாரித்தால், இப்பொழுது உள்ள தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளே தான் இருக்கவேண்டும்.

அப்பொழுது நாம் கேட்கத்தவறியதின் விளைவு தான் அவர்கள் (பெருமளவு அதிமுக) ஊழல் செய்து ஏற்றி வைத்த கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள். இப்படி கடன், நஷ்டம் என சொல்லிக்கொண்டே இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல மின்சார வாரியத்தை தனியார் தரகு முதலாளிகளுக்கு நைசாக கை மாற்றிவிடவும் முயலுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஒன்றாம் தேதி மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற உத்தரவுக்கு எதிராக போராடப் போகிறோமா அல்லது கட்டண உயர்வு தரும் ஷாக்கை எதிர்கொள்ளபோகிறோமா என்பதை நாம் தாம் முடிவு செய்ய வேண்டும்.

June 6, 2023

Hunger (2023)




 "எல்லோரும் பசியுடன் இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொருவரின் பசியும் வித்தியாசமானது."

“உங்கள் சமூக அந்தஸ்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.”
- படத்திலிருந்து…!
****

நாயகி தனது படிப்பை முடித்துவிட்டு, அப்பா நடத்தி வந்த அந்த சிறிய உணவகத்தை, தாய்லாந்தின் ஒரு நகர்ப்புற பகுதியில் பொறுப்பேற்று நடத்தி வருகிறாள். அங்கு சாப்பிட வந்த ஒருவன் ”அருமையாக சமைக்கிறாய். உன் திறமை வெளிப்பட வேண்டுமென்றால் இங்கு வந்து பார்” என ஒரு கார்டை கொடுத்துவிட்டு போகிறான். அவளும் அசிரத்தையாக வாங்கி வைத்துக்கொள்கிறாள்.

அவர்களைப் பற்றி விசாரித்தால், “Hunger” என்ற பெயரில் தாய்லாந்தின் பிரபல சமையல் நிபுணராக (chef) இருக்கிறார். மிகப்பெரிய பணக்காரர்கள் எல்லாம், அவருடைய தேதிக்காகவும், சாப்பிடவதற்காகவும் ”உச்” கொட்டிக்கொண்டு சாப்பிட காத்திருக்கிறார்கள்.

இந்த துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவள் அவரைப் போய் பார்க்கிறாள். சோதனைத் தேர்வில் வெற்றி பெற்று குழுவில் இணைந்துகொள்கிறாள். அந்த நிபுணரோ மிக மிக கறாராகவும், கண்டிப்பாகவும் நடந்துகொள்கிறார். தவறிழைத்தால் கடுமையாக தண்டனையும் தரக்கூடிய ஆளாகவும் இருக்கிறார்.

பணக்கார்களுக்காக சமைக்கும் பொழுது, அந்த நிபுணர் வளைந்து கொடுத்து போகிறார். உதாரணமாக சட்டத்திற்கு புறம்பாக ஒரு பறவையை வேட்டையாடி ஒரு பணக்காரர் சமைக்க சொன்னால், மறுப்பு இல்லாமல் சமைத்து தருகிறார். அவரிடம் எந்தவித தயக்கமும் இல்லை. ”தவறும் இல்லை” என்கிறார்.

இப்படி சில அம்சங்கள் பிடிக்காமல், அவரின் குழுவில் இருந்து வெளியேறுகிறார் நாயகி. இன்னொரு பணக்காரன் நாயகியின் திறனறிந்து, ஒரு பெரிய உணவகத்தை உருவாக்கித் தருகிறான்.

இந்த தொழிலில் உள்ள “நெளிவு சுழிவுகள் கழுத்தறுப்புகள்” எல்லாம் அவளைத் தொந்தரவு செய்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அந்த உணவைப் பெற சமூக உற்பத்தியில் அவன் ஈடுபடுவது அவசியம். ஈடுபடுகிறான். அதில் கிடைத்ததை வைத்து உணவை உண்கிறான். இங்கு பெரும்பாலான மக்கள் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்தாலும், அவர்களுக்கு ”நல்ல” உணவு, பல சமயஙக்ளில் உணவே கிடைப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. பசி ஒவ்வொரு வேளையும் அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. குடும்பத்தை விட்டு நகரங்களை நோக்கி, பெரும் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறான். மாநிலங்கள் கடக்கிறான். நாடுகள் கூட பறந்து செல்கிறான்.

சமூக உற்பத்தியில் எல்லோரும் உழைத்தாலும், பெரும்பாலான மக்களுக்கு ”உயிர் வாழ்வதற்கு மட்டும்” சொற்பத்தை கொடுத்துவிட்டு, உற்பத்தியில் கிடைக்கும் பெரும்பலனை சிறுபான்மையினர் மலை போல பல தலைமுறைகளுக்கு சொத்தைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்களை பசி துரத்திக்கொண்டே இருக்க, இவர்களுக்கு பசி என்பதே உணர முடியாத நிலையில் வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு வேளைக்கும் விதவிதமாய் சாப்பிடுகிறார்கள். புதிது புதிதாய் தேடித்தேடி தின்கிறார்கள். பல மணி நேரம் அது பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். தின்பதற்காகவே, மாநிலங்கள், நாடுகள் பறந்து செல்கிறார்கள். தின்று தின்று பல மடங்கு உடல் வீங்குகிறார்கள். படத்தில் சொல்வது போல “உங்கள் சமூக அந்தஸ்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.”

படத்தில் இந்த சமூக ஏற்றத்தாழ்வையும், பசி குறித்த அரசியலையும் பளிச்சென நேரடியாக சொல்லாவிட்டாலும், பார்க்கிற நம்மால் நன்றாக உணர முடிகிறது.

படத்தின் ஒரு காட்சியில், பெருங்கடனில் சிக்கிய ஒரு பணக்காரன், அந்த சமையல் நிபுணரை வரவழைத்து, விருந்து சமைத்து, நன்றாக சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியில் தன் மனைவி, சின்ன குழந்தையையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வான்.

மார்க்ஸ் ஓரிடத்தில் சொல்கிறார். ஒரு பெரும் பணக்காரன் தன் வீட்டின் உணவு டேபிளில் அமர்ந்தால், விதவிதமான உணவு, பழரசங்கள், பால் என பலவும் இருக்கும். அவனுக்கு அன்றைக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டு நகர்வான்.

சோசலிச சமூகம் உலகம் முழுவதும் பரவி, கம்யூனிச சமூகம் நிலவும் பொழுது, அப்பொழுதும் சமூகம் மொத்தமும் உழைப்பில் ஈடுபடும். அந்த பணக்காரன் சாப்பிடுவது போல மொத்த சமூகமும் தனக்கு பிடித்தமானதை, ஆரோக்கியமானதை சாப்பிடும் என்கிறார்.

பசிக்காக நாம் ஓடிக்கொண்டே இருந்தால், வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே தான் இருக்கும். சமூக ஏற்றத்தாழ்வுகளை களையும் போராட்டத்தை முன்னெடுத்தால் தான், இங்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

படத்தில் நடித்த நாயகி, நிபுணராக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உப பாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். Sitisiri Mongkolsiri நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். அவருடைய மற்ற படங்களையும் தேடிப்பார்க்கவேண்டும்.நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.

இவர் ரெம்ப தொல்லை பண்றார்!


இவர் மேலே வழக்கு போட முடியுமா?


வயது 40+ல் இருக்கிறேன். வாழ்க்கையிலே ஒரு குண்டுமணி தங்கம் வாங்கனது இல்லை.

ஆனால் தினம் செய்தி கேட்கும் பொழுது, ஐந்து நிமிசத்துக்கு ஒருமுறை தங்கம் விளம்பரம் செய்து டார்ச்சர் தருகிறார்.